இதுவே காலம்
எனது நண்பர்களான அல் மற்றும் கேத்தி ஷிஃபர் அவர்களின் இரண்டாம் உலகப் போரின் காலகட்ட விமானத்தை கண்காட்சியில் பறக்கவிட்டபோது, வயதான போர் வீரர்களின் உணர்ச்சிகள்தான் அவர்களுக்கு முக்கியமாய் தோன்றியது. தாங்கள் பணியாற்றிய போர்கள் மற்றும் அவர்கள் பறந்த விமானங்கள் பற்றி பேசுவதற்காக அவர்கள் முன்வந்தனர். அவர்களின் பெரும்பாலான போர்க் கதைகள் கண்ணீருடன் சொல்லப்பட்டன. பலர் தங்கள் நாட்டுக்கு சேவை செய்யும்போது பெற்ற சிறந்த செய்தி, “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது” என்பதாகும்.
முந்தைய தலைமுறையினரின் இந்த வார்த்தைகள், பிசாசோடு விசுவாச யுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களோடு தொடர்புடையது. பேதுரு “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8) என்று நம்மை எச்சரிக்கிறார். அவன் பல்வேறு வழிகளில் நம்மை தூண்டி, துன்பத்திலும் துன்புறுத்தலிலும் ஊக்கமின்மையைப் பயன்படுத்தி, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து நம்மை விலக்க முயற்சிக்கிறான். பேதுரு தனது முதல் வாசகர்களுக்கும் இன்று நமக்கும் “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்” (1 பேதுரு 5:8) என்று சவால் விடுக்கிறார். நாம் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து இருக்கிறோம். எனவே சத்துரு நம்மை யுத்தத்தில் சரணடையச் செய்து நம்மை வீழ்த்த அனுமதிக்கமாட்டோம்.
ஓர் நாள் இயேசு திரும்பி வருவார் என்பதை நாம் அறிவோம். அவர் வரும்போது, அவருடைய வார்த்தைகள் அந்த போர்க்கால வீரர்கள் உணர்ந்ததைப் போன்ற விளைவை ஏற்படுத்தும். நம் கண்களில் கண்ணீரையும், நம் இதயங்களில் மகிழ்ச்சியையும் வரவழைக்கும்: “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது."
இடமாற்றம்
2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது.
ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது.
அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.
தூதர் துணை
பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன் கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)
அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது.
நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.
கிறிஸ்துவின் சமூகமாய்
பஹாமாஸின் தெற்கில் ராக்ட் தீவு என்று அழைக்கப்படும் ஒரு சிறிய நிலப்பகுதி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது ஒரு செயலில் உப்புத் தொழிலைக் கொண்டிருந்தது, ஆனால் அந்தத் தொழிலில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, பலர் அருகிலுள்ள தீவுகளுக்கு குடிபெயர்ந்தனர். 2016 ஆம் ஆண்டில், எண்பதுக்கும் குறைவான மக்கள் அங்கு வாழ்ந்தபோது, தீவில் மூன்று மதப் பிரிவுகள் இருந்தன. ஆனால் மக்கள் அனைவரும் ஒவ்வொரு வாரமும் கடவுளை வழிபடுவதற்கும் ஐக்கியங்கொள்ளுவதற்காகவும் ஒரே இடத்தில் கூடினர். மிகக் குறைவான குடியிருப்பாளர்கள் இருந்ததால், சமூக ஐக்கியம் அவர்களுக்கு முக்கியமாக தெரிந்தது.
ஆதித்திருச்சபையின் விசுவாசிகள் ஐக்கியத்தில் பலப்படுவதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலால் சாத்தியமாக்கப்பட்ட புதிய விசுவாசத்தைப் பற்றி அவர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அவர் சரீரப்பிரகாரமாக அவர்களுடன் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் மற்றவர்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்திருந்தனர். அவர்கள் அப்போஸ்தலர்களின் போதனைகளுக்கும், ஐக்கியத்திற்கும், ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதற்கும் தங்களை அர்ப்பணித்தார்கள் (அப்போஸ்தலர் 2:42). அவர்கள் வழிபாடு மற்றும் உணவுக்காக வீடுகளில் கூடி, மற்றவர்களின் தேவைகளை கவனித்துக்கொண்டனர். அப்போஸ்தலர் பவுல் திருச்சபையை, “விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்” (4:32) என்று விவரிக்கிறார். பரிசுத்த ஆவியில் நிரம்பியவர்களாய் தேவனைத் துதித்து, திருச்சபையின் விண்ணப்பங்களை ஜெபத்தில் தேவனுக்குத் தெரியப்படுத்தினர்.
நமது வளர்ச்சிக்கும் ஆதரவுக்கும் சமூக ஐக்கியம் அவசியம். தனியாக செல்ல முயற்சிக்காதீர்கள். உங்கள் போராட்டங்களையும் சந்தோஷங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போதும், ஒன்றாக அவரை நெருங்கும்போதும் தேவன் அந்த சமூக உணர்வை வளர்க்க உதவுவார்.
சாகசம்
“கிறிஸ்தவம் எனக்கானது அல்ல. அது சலிப்பு தட்டுகிறது. நான் சாகசம் செய்ய விரும்புகிறேன். அதுதான் எனக்கு வாழ்க்கை” என்று ஒரு இளம் பெண் என்னிடம் கூறினார். இயேசுவைப் பின்தொடர்வதன் மூலம் வரும் நம்பமுடியாத மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அவள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. இந்த ஆச்சரியமான சாகசம் வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. இயேசுவைப் பற்றியும் அவரில் உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் அவளிடம் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டேன்.
தேவகுமாரனாகிய இயேசுவை அறிந்து, அவருடன் நடந்த ஆச்சரியமான சாகசத்தை விவரிக்க வெறும் வார்த்தைகள் போதாது. ஆனால் எபேசியர் 1ல், அப்போஸ்தலனாகிய பவுல், அவருடனான வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த காட்சியை நமக்குத் தருகிறார். தேவன் நமக்கு நேரடியாக பரலோகத்திலிருந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருகிறார் (வச. 3), தேவனுடைய பார்வையில் பரிசுத்தம் மற்றும் குற்றமற்ற தன்மை (வச. 4), மற்றும் அவருடைய சொந்த குடும்பத்தின் அங்கத்தினராய் நம்மை தெரிந்துகொள்ளுதல் (வச. 5). அவருடைய மன்னிப்பு மற்றும் கிருபை (வச. 7-8), அவருடைய சித்தத்தின் மர்மத்தைப் புரிந்துகொள்வது (வச. 9) மற்றும் “அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு” (வச. 12) ஒரு புதிய நோக்கத்துடன் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்தவும் வழிநடத்தவும் நமக்குள் கிரியை நடப்பிக்கிறார் (வச. 13). மேலும் அவர் தேவனுடைய பிரசன்னத்தில் நித்தியவாழ்விற்கு நமக்கு உத்தரவாதம் அளிக்கிறார் (வச. 14).
இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் பிரவேசிக்கும்போது, அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதும், அவரைப் பின்தொடர்வதும் மிகப்பெரிய சாகசமாகும். மெய்யான வாழ்க்கை வாழுவதற்கு நாம் ஒவ்வொருநாளும் அவரை தேடுவோம்.
எது சிறப்பாக இருக்கும்?
எரிக் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் இயேசுவின் அன்பைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் தேவாலயத்திற்குச் செல்லத் தொடங்கினார், அங்கு அவர் கிறிஸ்துவை நன்கு அறிந்துகொள்ள உதவிய ஒருவரைச் சந்தித்தார். எரிக்கின் வழிகாட்டி அவரை தேவாலயத்தில் ஒரு சிறுவர் குழுவிற்கு போதிக்கும்படி கேட்டுக்கொண்டார். பல ஆண்டுகளாக, தனது நகரத்தில் ஆபத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவவும், முதியவர்களைச் சந்திக்கவும், அண்டை வீட்டாருக்கு விருந்தோம்பல் காட்டவும் தேவன் எரிக்கை ஏவினார். இப்போது ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் எரிக் தனக்கு சேவை செய்ய ஆரம்பத்திலேயே கற்றுக் கொடுத்ததற்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை விளக்குகிறார்: “இயேசுவிடம் நான் கண்ட நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள என் இதயம் நிரம்பி வழிகிறது. அவருக்குச் சேவை செய்வதைவிடச் சிறந்தது எது?” என்று சொல்லுகிறார்.
தீமோத்தேயுவின் தாயும் அவனுடைய பாட்டியும் அவன் குழந்தையாயிருந்தபோதிலிருந்து அவனை விசுவாசத்தில் வளர்த்தார்கள் ( 2 தீமோத்தேயு 1:5). மேலும் அவன் அப்போஸ்தலனாகிய பவுலைச் சந்தித்தபோது இளைஞனாக இருந்திருக்கலாம். தீமோத்தேயு தேவனுக்கு ஊழியம் செய்யும் அவனுடைய பாரத்தை பவுல் கண்டு, அவருடைய ஊழிய பயணத்தில் அவனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் (அப்போஸ்தலர் 16:1-3). பவல் தீமோத்தேயுவுக்கு ஊழியத்திலும் வாழ்க்கையிலும் வழிகாட்டியாக ஆனார். அவனைப் படிக்கவும், தவறான போதனைகளை எதிர்கொண்டபோது தைரியமாக இருக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்வதில் தனது திறமைகளைப் பயன்படுத்தவும் பவுல் தீமோத்தேயுவை ஊக்கப்படுத்துகிறார் (1 தீமோத்தேயு 4:6-16).
தீமோத்தேயு தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்யவேண்டும் என்று பவுல் ஏன் விரும்பினார்? அவர் “ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” (வச. 10) என்று எழுதுகிறார். இயேசுவே நம்முடைய நம்பிக்கையும் உலகத்தின் இரட்சகராகவும் திகழ்கிறார். அவருக்கு ஊழியம் செய்ய அதைக்காட்டிலும் வேறென்ன காரணம் தேவை?
பாதையில் சுதந்திரம்
பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் விளையாடும் “பீப்” ஓசையிடும் பேஸ்பாலில், அதின் சத்தத்தைக் கேட்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் எங்கு செல்லவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றனர். கண்கள் மூடப்பட்ட பந்தை அடிக்கும் நபரும், அதைத் தடுக்கும் பார்வையுள்ள நபரும் ஒரே அணியில் இடம்பெற்றிருப்பர். ஒரு நபர் மட்டையை சுழற்றி, பீப் பந்தை அடிக்கும்போது, அவர்கள் சலசலக்கும் தளத்தை நோக்கி ஓடுவார்கள். அவர் ஓடிவருவதற்கும் அந்த பந்தை யாரேனும் பிடித்துவிட்டால், பந்தை அடித்தவர் தோற்றுவிடுவார். இல்லையெனில், அவருக்கு ரன் கொடுக்கப்படும். “தெளிவான ஓடுபாதையும் திசையும் இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால், “ஓடுவதில் ஒரு பெரிய சுதந்திரம்” அவர்களுக்கு இருக்கிறது என்று ஒரு விளையாட்டு வீரர் குறிப்பிடுகிறார்.
ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம், “மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்” (26:7) என்று தேவனைக் குறித்து அறிவிக்கிறது. இந்த வாக்கியம் உரைக்கப்பட்டபோது, இஸ்ரவேலர்களின் பாதை செம்மையாயிருந்தது. ஆனால் அவர்களின் கீழ்ப்படியாமையினிமித்தம் அவர்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பை அனுபவிக்க நேரிட்டது. “உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும்” (வச. 8) அவர்களின் இருதயத்தின் நோக்கங்களாய் இருந்துள்ளது என்று சொல்லுகிறார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது, தேவனைக் குறித்து அறிகிற அறிவில் தேறவும் அவருடைய சுபாவங்களின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் செய்கிறோம். நம்முடைய வாழ்க்கைப் பாதையின் வழிகள் எப்போதும் செம்மையானதாய் தெரியாது. ஆனால் நாம் தேவனை நம்பும்போது, தேவன் நம்மோடு நடந்துவந்து நமக்கு வழியை உண்டுபண்ணுவார். நாமும் தேவனுக்கு கீழ்ப்படிந்து, சுதந்திரமாய் அவருடைய சிறந்த பாதையில் நடப்போம்.
புகழுக்கு உரியவர் யார்?
வீட்டு முகவர் ஒருவர், சுழல் படிக்கட்டு முதல் விரிந்த படுக்கையறை வரை, பளிங்கு தரையிலிருந்து பட்டு விரிப்பு வரை, பிரமாண்டமான சலவை அறை முதல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அலுவலகம் வரை இளம் தம்பதியினருக்கு ஏற்ற ஒரு வீட்டைக் காட்டினார். அவர்கள் திரும்பிய ஒவ்வொரு மூலையிலும் அவ்வீட்டின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “எங்களுக்கு சிறந்த இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தீர்கள். இந்த வீடு மிகவும் நன்றாக இருக்கிறது!” என்றனர். அதற்கு வீட்டு முகவர், “உங்கள் பாராட்டுக்களை நான் இதை கட்டினவருக்கு தெரிவிக்கிறேன். வீட்டைக் கட்டியவராகிய அவர்தான் பாராட்டுக்குரியவர், வீடோ அதைக் காட்டின நானோ அல்ல” என பதிலளித்தார். இது சற்று விசித்திரமாக இருந்தாலும், அது தான் உண்மை
வீட்டு முகவரின் இந்த வார்த்தைகள் எபிரெய எழுத்தாளரை எதிரொலித்தது. “வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்”. (வ.3.3). எபிரெய நிருபத்தின் எழுத்தாளர் தேவ குமாரனாகிய இயேசுவின் உண்மைத்தன்மையை, தீர்க்கதரிசியாகிய மோசேயுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் (வவ. 1-6). மோசே தேவனிடம் நேருக்கு நேர் பேசுவதற்கும், அவருடைய உருவத்தைக் காண்பதற்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் (எண்ணாகமம்12:8), அவர் தேவனுடைய வீட்டில் “ஒரு பணிவிடைக்காரனாய்" மட்டுமே இருந்தார் (எபிரெயர் 3:5). கிறிஸ்துவே படைப்பாளர் (1:2, 10). ஆவிக்குரிய "எல்லாவற்றையும் கட்டுபவர்" மற்றும் "தேவனின் வீட்டில்" குமாரன் (3:4, 6) என்ற மரியாதைக்குத் தகுதியானவர். தேவமக்களாகிய நாம்தான் அவருடைய வீடு.
நாம் தேவனை உண்மையாகச் சேவிக்கும் போது, நமது ஆவிக்குரிய ஜீவியத்தைக் கட்டி எழுப்பிகிறவராகிய இயேசுவே அந்த கனத்திற்குத் தகுதியானவர். தேவனின் வீடாகிய நாம் பெறும் எந்தப் புகழும் அவருக்கே உரியதாகும்.
உள்ளான சுகத்திற்கான வேட்டை
அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் கார்சன், வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, பைக்குகள் ஓட்டுவது மற்றும் ஸ்கேட்போர்டில் செல்வது என்று எப்போதும் மும்முரமாகவே செயல்படுவார். அவர் வெளியே பொழுதைக் கழிப்பதில் அதிக பிரியப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி விபத்திற்குள்ளானதால், அவருடைய மார்புக்கு கீழ் அனைத்தும் செயலிழந்துபோனது. விரைவில் மனச்சோர்வுக்குள் மூழ்கினார். அவருடைய எதிர்காலம் இருண்டுபோனது. அவனுடைய சிநேகிதர்களில் சிலர் அவனை மீண்டும் வேட்டைக்கு கூட்டிச்சென்றனர். அந்த தருணத்தில் தன்னுடைய துயரங்கள் அனைத்தையும் மறந்து சுற்றியிருக்கும் அனைத்து அழகையும் ரசித்தான். இந்த அனுபவம் அவனுக்கு உள்ளான இருதய சுகத்தை ஏற்படுத்தி, அவனுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவனைப் போல் இருப்பவர்களும் அந்த அனுபவத்தை பெறும் நோக்கத்தோடு, “வேட்டையிலிருந்து சுகத்துக்கு” (ர்ரவெ 2 ர்நயட) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். அவன், “என்னுடைய விபத்தானது எனக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது... நான் எப்போதும் செய்ய விரும்பியதை இப்போது மற்றவர்களுக்கு செய்வதின் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லுகிறான். மிகவும் கடுமையான சரீர குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தேவையான இடவசதியை ஒழுங்குசெய்து அவர்களுக்கு உள்ளான சுகத்தை கொடுப்பதில் இப்போது அவர் மும்முரமாய் செயல்பட்டு வருகிறான்.
நொருங்குண்ட இருதயங்களை காயங்கட்டும் ஒருவரின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார் (ஏசாயா 61). அவர் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்” கிரியை செய்வார் (வச. 1-2). இயேசு இந்த வேத வாக்கியங்களை தேவாலயத்தில் வாசித்த பின்பு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்றார். இயேசு நம்மை இரட்சிக்கவும் பூரணப்படுத்தவும் வந்தார்.
உங்களுக்கு உள்ளான சுகம் அவசியப்படுகிறதா? இயேசுவிடம் வாருங்கள், அவர் “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையை” (ஏசாயா 61:3) உங்களுக்குக் கொடுப்பார்.