மாலதி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், குறிப்பாக விசேஷங்களுக்கு அலங்கரித்துக் கொள்ளும்போது, அம்மா கவலையுடன், கட்டாயமாக முகத்தில் எங்காவது ஒரு கரும்புள்ளி வைப்பாள். அவளுடைய அம்மா தொடர்ந்து அவளைக் கவனித்து, “வன்கண்ணை” தடுக்க சடங்குகளைச் செய்தார். தமிழில் த்ரிஷ்டி அல்லது ஹிந்தியில் நாசர் என்று அழைக்கப்படும் “வன்கண்” இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் அஞ்சப்படுகிறது. மாலதியின் அம்மாவைப் போலவே, யாராவது தங்களைப் பொறாமையுடன் பார்க்கும் போதெல்லாம், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரிடும் என்று பலர் பயப்படுகிறார்கள்.
அறியாத பயம் நம்மை முடக்கும் போது, மூடநம்பிக்கையின் அடிப்படையிலான விரைவான தீர்வுகளைத் தேடலாம். ஆனால், தீமோத்தேயுவின் ஆசிரியர் இவை பிசாசுகளின் உபதேசம் என்கிறார் (வ.1). விசுவாசிகளுக்கும் “கட்டுக்கதைகளுக்கும்” (வ.7) சம்பந்தமில்லை என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். மூடநம்பிக்கைகள் மற்றும் கதைகள் போன்ற நமக்குப் பயத்தை ஏற்படுத்தும் இந்த விஷயங்கள் இயேசுவை விசுவாசிக்கும் நம்மில் எவ்வளவேனும் இருக்கக்கூடாது (வ.3-7). மாறாக, நாம் தேவபக்தியுடன் இருக்கவும், தேவனைச் சார்ந்திருக்கவும் நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும் (வ.7). ஏனெனில், கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் சாத்தானை வென்றபோது, அவர் இருளின் வல்லமைகளை என்றென்றும் தோற்கடித்தார். நாம் பயப்பட வேண்டியதில்லை, “ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” (வ11).
எனவே, எபேசியரில் பவுல் சொல்வது போல், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் நம்மைப் பாதுகாக்கும் விசுவாசத்தின் கேடகம் உட்பட, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (எபேசியர் 6:14-17) அணிவோம். சத்துரு நம்மை வெல்ல முடியாது, நிச்சயமற்ற எதிர்காலத்தைக் குறித்தும் நாம் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் சத்துருவை வென்ற இயேசுவே வெற்றியாளர் (1 யோவான் 5:18).
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை அல்லது தீமையை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள்? உங்கள் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ள நீங்கள் என்ன செய்ய முடியும்?
ஆண்டவரே, தீமை என்னைப் பயமுறுத்தினாலும், எல்லா தீமைகளிலிருந்தும் என்னை நீர் இரட்சிப்பீர் என்பதை நினைவில் கொள்ளத் தைரியம் தாரும்.
