Archives: ஜனவரி 2025

அடையாளம் காணும் தேவன்

நான் இந்தியாவிற்கு முதல்முறையாகச் சென்றேன், நள்ளிரவு கடந்து பெங்களூரு விமான நிலையம் அடைந்தேன். அநேக மின்னஞ்சல்கள் எனக்கு வந்தபோதிலும், நான் யாரைச் சந்திக்க வேண்டுமென்றும் என்னை அழைத்துச் செல்பவர் யாரென்றும் அறியாதிருந்தேன். திரளான ஜனக்கூட்டத்தைப் பின்தொடர்ந்து, என் உடைமைகளைப் பெற்றுக்கொண்டு, சுங்கத்துறை சோதனைகளை முடித்து, சமுத்திரம் போன்ற மக்கள் கூட்டத்தில் எனக்கு யாராகிலும் பரிச்சயப்படுவார்களா என்று தேடினேன். கூட்டத்திற்கு முன்பாக அங்கும் இங்கும் சுமார் ஒரு மணிநேரம் நடந்து யாராகிலும் என்னை அடையாளம் காண்பார்கள் என்று எதிர்பார்த்தேன். கருணை நிறைந்த ஒருவர் முன்வந்து, “நீங்கள் தான் வின்னா?” எனக் கேட்டு, “என்னை மன்னியுங்கள், நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நான் நினைத்தேன், நீங்களோ எனக்கு முன்னாக நடந்துகொண்டே இருந்தீர்கள். ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல உங்கள் தோற்றம் இல்லை” என்றார்.

நாம் அடிக்கடி குழப்பமடைந்து, நாம் அறியவேண்டிய மனிதர்களையும் இடங்களையும் அடையாளம் காணத் தவறுகிறோம். தன்னை அடையாளம் காண, தேவன் ஒருபோதும் தவறாத வழியொன்றை ஏற்படுத்தினார், நமது உலகிற்கு இயேசுவாகவும் அவர் வந்தார், இவரே “அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிரு(க்கிறார்)ந்து” (எபிரேயர் 1:3). கிறிஸ்துவே தேவனின் சரியான பிரதிநிதித்துவம், நாம் அவரை காண்கையில் நாம் தேவனைக் காண்கிறோம் என்கிற முழு நிச்சயம் நமக்குண்டு.

தேவன் எப்படி இருப்பார், என்ன பேசுவார், எப்படி நேசிப்பார் என்று நாம் அறிய விரும்பினால்; நாம் பார்க்கவேண்டிய, செவிகொடுக்கவேண்டிய ஒருவர் இயேசுவே. அவர் மூலமாய் திருவுளம்பற்றினதற்கு (வ.2) நாம் உண்மையாகச் செவிகொடுக்கிறோமா? நாம் அவருடைய சத்தியத்தைத் தான் பின்பற்றுகிறோமா? நாம் தேவனை அடையாளம் காண்கிறோம் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள, நாம் குமாரன் மீது நம் கண்களைப் பதித்து அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

 

சோதனைகளின் பரிசு

மனிதர்களும் பறக்கலாம் என்று இருவர் கண்டுகொண்டனர். ஆனால், ரைட் சகோதரர்களின் வெற்றிக்கான பாதை அவ்வளவு எளிதல்ல. எண்ணற்ற தோல்விகள், அவமானங்கள், பண நஷ்டங்கள், இருவரில் ஒருவருக்குக் கடுமையான காயம் என்று எல்லாம் இருந்தபோதிலும், சோதனைகள் இந்த சகோதரர்களைத் தடுக்க இயலவில்லை. “அமைதியிருக்கையில் எந்த பறவையும் உயரே எழும்பாது” என்று ஆர்வில் ரைட் உணர்ந்தார். இவர்களின் சுயசரிதை ஆசிரியரான டேவிட் மெக்கலோ இந்த கருத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “பொதுவாகவே எதிர்ப்பு தான் நாம் உயரே எழும்புவதற்கான உந்துதலைத் தரும்” என்றார். மேலும் மெக்கலோ, “அவர்களின் சந்தோஷம் மலையுச்சியை அடைவதிலல்ல, மாறாக மலை ஏறுவதே அவர்களின் சந்தோஷம்” என்றார்.

அப்போஸ்தலன் பேதுருவும், உபத்திரவப்பட்ட ஆதி திருச்சபைக்கு இதேபோன்ற ஒரு ஆவிக்குரிய கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களிடம், “உங்களைச்சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்” (1 பேதுரு 4:12) இருக்கும்படி சொன்னார். இது பாடுகளின் வேதனையை மறைப்பது அல்ல. கிறிஸ்துவிலான எதிர்பார்ப்பு தேவனுக்குள்ளான நமது நம்பிக்கையை வளரச்செய்யும்.

குறிப்பாக, ஆதி கிறிஸ்தவர்களைப் போல இயேசுவின் விசுவாசிகளாக இருப்பதற்கு நாமும் துன்பப்படுகையில் இது நன்றாகப் பொருந்தும். அவர்களுக்கு பேதுரு, “கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” (வ.13) என்றெழுதினார். மேலும், “நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்” (வ.14) என்றார்.

ரைட் சகோதரரின் குணாதிசயம் அவர்களின் சுயசரிதை ஆசிரியரால் போற்றப்பட்டதுபோல, தேவ அன்பின் சுபாவம் நம்மில் செயல்படுவதைப் பிறர் காணட்டும். நமக்கு எதிரானதை வைத்தே நாம் புதிய மைல்கற்களை  எட்டச்செய்வார்.

 

என் ஜனங்களைப் போக விடு

ஏரன் டக்ளசின் பிரசித்திபெற்ற ஓவியம் “என் ஜனங்களைப் போக விடு”, இதில் அவர் கண்கவர் வர்ணங்களான இளஞ்சிவப்பு நீலம், பச்சை மற்றும் தங்க நிறம் ஆகியவற்றோடு பாரம்பரியமான ஆப்பிரிக்கப் பின்னணியத்தையும் பயன்படுத்தி, வேதாகமத்தின் மோசேயின் கதையோடு கருப்பு அமெரிக்கர்கள் விடுதலையும் நீதியும் பெற்றிடப் பட்ட பாடுகளை இணைத்து நமக்குச் சொல்லியிருப்பார்.

எரியும் முட்செடியில் மோசேக்குத் தேவன் வெளிப்பட்டு, எகிப்தில் இஸ்ரவேலர்கள் இடும் கூக்குரலைத் தான் கண்டதாக அவர் சொன்னதே இந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. தேவனையும், “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” (யாத்திராகமம் 3:10) என்ற அவரது செய்தியையும் ஒரு ஒளிவட்டத்தில் இதன் ஓவியர் அடையாளப்படுத்தியிருப்பார்.

“என் ஜனங்களைப் போக விடு” எனும் ஓவியத்தில், தேவனின் அறிவுறுத்தல்களுக்கு மோசே கீழ்ப்படிதலுடன் மண்டியிட்டிருப்பார், ஆனால் அவரது கண்களோ தன்னை சூழ்ந்திருக்கும் இருளின் பேரலைகளையும், யுத்த குதிரைகளையும் பார்க்கின்றன. இது இஸ்ரவேலர்கள் எக்பித்திலிருந்து வெளியேறுவதற்கு எதிர்கொள்ளக்கூடும் போராட்டங்களைப் பார்வையாளர்களுக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால்,

ஒளிவட்டம் பிரகாசமாக ஒளிர்ந்து இஸ்ரவேலர்களோடே தேவன் இருப்பதையும் நினைவூட்டுகிறது. இந்த ஓவியம் உண்டாக்கிய உணர்ச்சிகளின் தாக்கம் இன்றும் எதிரொலிக்கின்றன, காரணம் அநீதிக்கு எதிரான போராட்டம் இன்றும் தொடர்கின்றது. உலகெங்கும், அநேகர் தங்கள் வலிமையை உபயோகித்து ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் ஒடுக்குகின்றனர். இவ்வாறு துன்பப்படுபவர்கள், “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்” (சங்கீதம் 9:9) என்று தேவனை நோக்கி அபயமிடுகின்றனர். தேவன் அவர்களின் கூக்குரலுக்கு உதவும்படி அவர்களுக்காக நாமும் மன்றாடலாம். மேலும், மோசேயை போல ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக விருப்பத்துடன் செயலாற்றலாம்.

 

தேவனுக்கென்று இன்னும் கனிகொடுத்தல்

ஒரு பழைய நாட்டுப்புறக் கதையில், ஒரு பெண் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவாள், ஒரு நீளமான குச்சியின் இருமுனைகளிலும் இருவாளிகள் இருக்கும், ஒன்று புதிய உறுதியான வாளி, மற்றொன்று விரிசலுள்ள பழைய வாளி. அவள் வீட்டுக்கு வருகையில், புதிய வாளி நிறைந்திருக்கும், ஆனால் பழைய வாளியோ கிட்டத்தட்ட காலியாக இருக்கும். பழைய வாளி குற்ற உணர்ச்சியோடு அவளிடம் மன்னிப்பு கேட்டது. அதைத் திரும்பிப் பார்த்த அந்த பெண், அவளுடைய வழிப்பாதையை அதற்குச் சுட்டிக்காட்டி, “நீ இருக்கும் திசையில், இந்த வழியெங்கும் பூத்திருக்கும் பூக்களைக் கண்டாயா? நீ அவற்றிற்குத் தினமும் நீர்பாய்ச்சுகிறாய், நதிக்குப் போகும் என் பயணத்தையே நீ அழகாக்கிவிட்டாய்” என்றாள்.

இளமையைப் போற்றி புகழும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். இது இளையது, உறுதியானது, வடுக்களற்ற புதியதும், திறனுள்ளதாயும் இருக்கிறது. எனினும் வேதாகமம்; விரிசலுள்ளதும், தண்ணீர் நிற்காததுமான பழையவற்றிலிருந்தும் வலுவற்றதிலிருந்தும் வெளிப்படும் நீதி நிறைந்த ஒரு அழகைக்குறித்து நமக்குச் சொல்கிறது. முதிர்ந்த பாடல் எழுத்தாளர், "நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்" (சங்கீதம் 92:12) என்றார்.

இப்படியிருக்க, முதுமை என்றால் ஞானம் என்று எப்போதும் அர்த்தமாகாது. ஆனால், இளமை நம் வாழ்க்கைக்குத் தர இயலாத படிப்பினைகளை முதுமை கற்றுத்தரும். காரணம், முதியவர்கள் கொஞ்சம் அதிக காலம் வாழ்ந்துள்ளனர், கொஞ்சம் அதிக அனுபவம் கொண்டுள்ளனர், மேலும் தேவனுக்குள் செழிக்கும்படியான விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் கொஞ்சம் ஆழமாய் வேரூன்றியுள்ளனர். இத்தகைய முதியோர், “முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (வ.14).

நமது வாழ்க்கையில், முதியவர்கள் தொடர்ந்து அற்புதமான கனி தருகின்றனர். அதனைக் கவனிக்கவும், அவர்களுக்காக அக்கறைப்படவும் நேரம் ஒதுக்குவோமாக.