ஜே. ஆர். ஆர். டோல்கியேன் இன் “தி  ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்ஸ்” புத்தகத்தில், பில்போ பக்கின்ஸ் எனும் கதாபாத்திரம் ஆறு தசாப்தங்களாக, இருளான தீயசத்தியைக் கொண்ட ஒரு மந்திர மோதிரத்தைச் சுமந்து செல்வதன் விளைவுகளைக் காட்டுகிறது. அதன் மெதுவாக அழிக்கும் தன்மையால் சோர்ந்து, அது மந்திரவாதி கந்தால்ஃபிடம், “உனக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால், நான் ரொட்டியின் மீது அதிகமாகத் தடவப்பட்ட வெண்ணெய்யைப் போல, தேவையில்லாமல் இழுக்கப்பட்டும், வலுவிழந்தும் ஏன் உணர்கிறேன்?” என்று கேட்கிறது. எங்கேயாவது  “அமைதியையும், நிம்மதியையும், அறிமுகமானவர்களின் இரைச்சல் இல்லாத” இளைப்பாறுதல் தேடி தனது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான் பில்போ.

டோல்கினின் கதையின் இந்த அம்சம் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி ஒருவரின் அனுபவத்தை எனக்கு நினைவூட்டுகிறது. யேசபேலிடமிருந்து தப்பி, கள்ள தீர்க்கதரிசிகளுடன் மோதிய பின்னர், எலியாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. சோர்வுற்ற அவர், “போதும் கர்த்தாவே” (1 இராஜாக்கள் 19:4) என்று கூறி, தன்னை சாக அனுமதிக்குமாறு தேவனிடம் கேட்டார். அவர் தூங்கிய பிறகு, தேவதூதன் அவரை எழுப்பினார், அதனால் அவர் சாப்பிடவும் குடிக்கவும் செய்தார். அவர் மீண்டும் தூங்கினார், பின்னர் தேவதூதன் வழங்கிய உணவை மேலும் சாப்பிட்டார். புத்துயிர் பெற்ற அவர், தேவபர்வதத்திற்கு செல்ல நாற்பது நாட்களின் நடைப்பயணத்திற்கு போதுமான ஆற்றலைப் பெற்றார்.

நாம் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருக்கையில், ​​உண்மையான புத்துணர்ச்சிக்காக நாமும் தேவனை நோக்கலாம். அவருடைய நம்பிக்கை, சமாதானம் மற்றும் இளைப்பாறுதலால் நம்மை நிரப்பும்படி அவரிடம் கேட்கும் அதே வேளையில், நாம் நம் உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். தேவதூதன் எலியாவை உபசரித்தது போல , தேவன் தம்முடைய புத்துணர்ச்சியூட்டும் பிரசன்னத்தை நம்மீதும் பொழிவார் என்று நாம் நம்பலாம் (பார்க்க மத்தேயு 11:28).