பல ஆண்டுகளாக, ஒரு தாய் வியாதிப்பட்டிருந்த தனது வாலிப மகளுக்கு மருத்துவ ரீதியாக உதவி, நல்ல ஆலோசனை மற்றும் சிறந்த மருந்துகளைப் பெற்றுத் தந்து, அவளுக்காக ஜெபித்துக் கொண்டுமிருந்தாள். மகளுடைய சரீரத்தின் ஏற்ற தாழ்வான நிலையற்ற தன்மை, அம்மாவின் இதயத்தை  நாளுக்கு நாள் கணமூட்டியது. அடிக்கடி சோகத்தால் சோர்வடைந்து, தனக்கும் பராமரிப்பு வேண்டும் என்பதை உணர்ந்தாள். ஒரு நண்பர் அவளது கவலைகளையும், தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களையும் சிறிய காகிதத் துண்டுகளில் எழுதி, “தேவனுடைய தட்டில்” வைத்து அவளது படுக்கையில் வைக்குமாறு பரிந்துரைத்தார். இந்த எளிய நடைமுறை அனைத்து மன அழுத்தத்தையும் அகற்றவில்லை, ஆனால் அந்தத் தட்டைப் பார்க்கும்போது அவளுக்கு அந்த கவலைகள் தேவனுடைய தட்டில் இருப்பதை நினைவூட்டுகிறது, அவை அவளுடையது அல்ல.

ஒரு விதத்தில், தாவீதின் பல சங்கீதங்கள் அவனுடைய உபத்திரவங்களைப்  பட்டியலிட்டு, அவற்றை ‘தேவனுடைய தட்டில்’ வைப்பதற்கான வழியாக இருந்தன (சங்கீதம் 55:1, 16-17). அவரது மகன் அப்சலோமின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது இங்கே விவரிக்கப்பட்டிருக்குமானால், தாவீதின் “நெருங்கிய நண்பன்” அகித்தோப்பேலும் உண்மையில் அவருக்குத் துரோகம் செய்து அவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபட்டான் (2 சாமுவேல் 15-16). எனவே “அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் (தாவீது) கூக்குரலிட்டார்”  தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டார் (சங்கீதம் 55:1-2, 16-17). அவர் “கர்த்தர்மேல் பாரத்தைவைத்துவிட” தெரிந்துகொண்டார் மற்றும் அவரது பராமரிப்பை அனுபவித்தார் (வ. 22).

கவலைகளும் பயங்களும் நம் அனைவரையும் பாதிக்கின்றன என்பதை நாம் உண்மையாக ஒப்புக் கொள்ளலாம். தாவீதைப் போன்ற எண்ணங்கள் நமக்கும் இருக்கலாம்: “ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்” (வ. 6). தேவன் அருகில் இருக்கிறார், சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றல் உள்ளவர் அவரே. அனைத்தையும் அவரது தட்டில் வையுங்கள்.