இராணுவத்தில் டோனி வக்காரோவுக்கு புகைப்படக் கலைஞராக வாய்ப்பு கிடைக்கவில்லை,  ஆயினும் அது அவருக்குத் தடையில்லை. பீரங்கி குண்டுகளும் வெடிகளும் மரங்களிலிருந்து மழை பொழிவது போல் தோன்றும் திகிலூட்டும் தருணங்களுக்கு இடையில், அவர் எப்படியாயினும் படங்களை எடுத்தார். பின்னர், அவரது நண்பர்கள் தூங்கும்போது, ​​​​அவர்களது தலைக்கவசங்களைப் பயன்படுத்தி ரசாயனங்களைக் கலந்து தனது நிழற்படங்களை உருவாக்கினார். இரவு நேரக் காடு நிழற்படத்துக்குரிய இருட்டறையாக மாறியது, அதில் வக்காரோ இரண்டாம் உலகப் போரின் பொது ஹர்ட்ஜென் வனப் போரின் காலத்தைக் கடந்திருக்கும் நினைவுகளை உருவாக்கினார்.

தாவீது ராஜாவும்  தனது பங்குக்கு யுத்தங்களிலும், இருட்டான நேரங்களிலும்  வாழ்ந்தார். இரண்டு சாமுவேல் 22 கூறுகிறது, “கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது” (வ.1). தாவீது அந்த அனுபவங்களைப் பயன்படுத்தி தேவனுடைய உண்மைத்தன்மையைப் பதிவு செய்தார். அவர், “மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது” (வ.5) என்றார்.

தாவீது விரைவிலேயே விரக்தியிலிருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்தார்: “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்” (வ.7) என்று நினைவுபடுத்திக்கொண்டார். தாவீது தேவனின் தவறாத உதவிக்காக அவரைப் புகழ்வதை உறுதிப்படுத்திக்கொண்டார். “கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்” (வ.29-30) என்றார்.

தாவீது, உலகிற்குத் தனது உண்மையுள்ள தேவனைப் பற்றிச் சொல்லத் தனது கஷ்டங்களை ஒரு வாய்ப்பாக மாற்றினார். நாமும் அதையே செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இருளை ஒளியாக மாற்றும் ஒருவரை நாம் சார்ந்துள்ளோம்.