அந்த உயர்நிலைப் பள்ளி பாடகர்கள் அர்ஜென்டினா பாடலான “எல் சியோலோ கான்டா அலெக்ரியா” பாடியபோது அவர்களின் குரல்களில் மகிழ்ச்சி பொங்கியது. அதை ரசித்தேன், ஆனால் எனக்கு ஸ்பானிஷ் தெரியாததால் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாடகர் குழு “அல்லேலூயா!” என்று மகிழ்ச்சியுடன் பிரகடனப்படுத்த  தொடங்கியதும், எனக்கு பரீட்சயமான அந்த வார்த்தையை விரைவிலேயே என் செவியில் விழுந்தது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மொழிகளில் ஒரே மாதிரியாக ஒலிக்கும் தேவனுக்கான துதிப் பிரகடனமான “அல்லேலூயா” என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். பாடலின் பின்னணியை அறிய ஆவலுடன், நிகழ்ச்சிக்குப்பின் இணையத்திற்குச் சென்றேன், “பரலோகம் சந்தோஷத்தால் பாடுகிறது” என்று மொழிபெயர்க்கப்பட்டதைக் கண்டுபிடித்தேன்.

வெளிப்படுத்துதல் 19 இல் உள்ள ஒரு கொண்டாட்டம் நிறைந்த பத்தியில், அந்தப் பாடலில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைநிலையின் ஒரு துளி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; பரலோகம் முழுவதும் மகிழ்ச்சி! புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்தில் அப்போஸ்தலன் யோவானின் எதிர்காலத்தைப் பற்றிய தரிசனத்தில், தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் மகத்தான ஜனத்திரள் மற்றும் தேவதூதர்கள் பரலோகத்தில் கூடியிருந்ததைக் கண்டார். தீமையையும் அநீதியையும் வென்ற தேவனின் வல்லமையையும், முழு பூமியின் மீதும் அவருடைய ஆளுகையையும், அவருடன் என்றென்றும் வாழும் நித்திய வாழ்க்கையையும் அந்த பாடல் குழுவின் குரல்கள் கொண்டாடுகிறது என்று யோவான் எழுதினார். மீண்டும் மீண்டும், பரலோகவாசிகள் அனைவரும் “அல்லேலூயா!” அல்லது “தேவனைத் துதியுங்கள்!” என்று அறிவிக்கிறார்கள் (வ. 1, 3, 4, 6).

ஒரு நாள்  “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” (5:9)  வரும் மக்கள் தேவனின் மகிமையை அறிவிப்பார்கள். மேலும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு மொழியிலும் நம் குரல்கள் அனைத்தும் ஒன்றாக “அல்லேலூயா!” என்று முழங்கும்.