அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.

விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, ​​யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் “ஏன் நான்?” என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன்  அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.

யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.

யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக.