பலத்த புயலினால் எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதை அறிந்திருந்தும் (நம்மைச் சுற்றிப் பொதுவாக நடைபெறுகின்ற அசோகரியங்கள்) எப்பொழுதும்போல் நான் அறைக்குள் நுழைந்ததும் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்தேன். மின்விளக்கு வெளிச்சம் தரவில்லை. மின்விளக்கு வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நான் இருட்டுக்குள்தான் இருந்தேன்.

மின்சாரம் இல்லாமல் இருந்தும் வெளிச்சத்தை எதிர்பார்த்த அந்த அனுபவம் எனக்கு ஓர் ஆவிக்குரிய உண்மையை தெளிவாக நினைவூட்டியது. நாம் ஆவியானவரைச் சார்ந்திருக்கத் தவறினாலும், பல நேரங்களில் நாம் அவருடைய வல்லமையை எதிர்பார்க்கின்றோம்.

1தெசலோனிக்கேயரில் பவுல் எப்படியாக சுவிசேஷ செய்தியை தேவன் வரப்பண்ணினார் என்பதை எழுதுகிறார்: “வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது” (1:5). நாம் தேவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளும்பொழுது விசுவாசிகளாகிய நம் வாழ்வில் அவருடைய ஆவியின் வல்லமையை உடனடியாக அனுபவிக்க முடியும். அவ்வல்லமையானது அன்பு, சந்தோஷம், சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை நம்மில் வளர்க்கிறது (கலாத்தியர் 5:22-23). மேலும் வரங்களினால் நம்மைத் தகுதிப்படுத்தி சபைக்கு ஊழியம் செய்யவும், போதிக்கவும், உதவவும், வழி நடத்தவும் செய்கிறது (1 கொரிந்தியர் 12:28).

பவுல் தனது வாசகர்களுக்கு “ஆவியை அவித்து போடுதல்” என்பது சாத்தியமே என எச்சரித்தார் (1 தெசலோனிக்கேயர் 5:19). நாம் தேவனுடைய பிரசன்னத்தையும், அவருடைய எச்சரிப்பையும் புறக்கணித்து, அவருடைய ஆவியின் வல்லமையை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன (யோவான் 16:8). ஆனால் தேவனுக்குள்ளான நம் தொடர்பிலிருந்து பிரிந்து நாம் இருக்கத் தேவையில்லை. தேவனின் வல்லமை அவருடைய பிள்ளைகளுக்கென்று எப்போதும் இருக்கிறது.