ஒரு பயண நிர்வாகியாக, ஷான் சீப்லர் என்பவர் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் போராடினார். ஹோட்டல் அறைகளில் எஞ்சியிருக்கும் சோப்பு கட்டிகளை என்ன செய்வது? என்பதே அந்த கேள்வி. தூக்கியெறியப்படும் சோப்புத் துண்டுகளை மறுசுழற்சி செய்வதின் மூலம் அதற்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்று சீப்லர் நம்பினார். எனவே அவர் “கிளீன் தி வேர்ல்ட்” என்ற மறுசுழற்சி அமைப்பைத் தொடங்கினார். அது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றில் நிராகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பவுண்டுகள் சோப்புத் துண்டுகளை கிருமி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட சோப்புகளாக மாற்ற உதவியது. அந்த சோப்புத் துண்டுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேவையுள்ள மக்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சோப்புகள் சுகாதாரம் தொடர்பான வியாதிகள் மற்றும் மரணங்களிலிருந்து மக்களை பாதுகாக்கிறது குறிப்பிடத்தக்கது. 

சீப்லர் சொல்லும்போது, “இது கேட்பதற்கு விகற்பமாய் தெரியலாம், ஆனால் நீங்கள் தங்கியிருக்கும் அறையில் எஞ்சியிருக்கும் சிறிய சோப்பு துண்டானது ஒருவருக்கு வாழ்க்கைக் கொடுக்கலாம்” என்று சொல்லுகிறார். 

பயன்படுத்தப்பட்டு தூக்கியெறிப்பட்ட ஒன்றிற்கு வாழ்க்கைக் கொடுத்து புதிதாக்குவது நம்முடைய இரட்சகரான இயேசுவின் முக்கியமான ஒரு செய்கை. ஐந்து அப்பத்தினாலும் இரண்டு சிறிய மீன்களினாலும் ஐயாயிரம்பேரை இயேசு போஷித்த பின்பு, சீஷர்களைப் பார்த்து, “ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள்” (யோவான் 6:12) என்று சொல்லுகிறார். 

நம்முடைய வாழ்க்கையில் நாம் தூக்கியெறிப்படும்போது, இயேசு நம்மை வீணானவர்களாய் பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையை அற்புதமாய் பார்;க்கிறார். அவருடைய பார்வையில் நாம் எப்போதும் தூக்கியெறிப்படுவதில்லை. அவருடைய இராஜ்யத்திற்கு பயன்படும் திறனை நமக்குள் புகுத்துகிறார். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” (2 கொரிந்தியர் 5:17). எது நம்மை புதிதாக்குகிறது? கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுவதே நம்மை புதியவர்களாய் மாற்றுகிறது.