மரத்தால் செய்யப்பட்ட ஒரு குலதெய்வ விக்கிரகத்தைக் காணவில்லை என்று ஒரு பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தாள். அவர்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி, அடையாளம் காண்பிப்பதற்காக அவளை வரச்சொன்னார்கள். இது உங்களுடைய குலதெய்வமா? என்று அவளைக் கேட்க, அவள் வருத்தத்துடன் “இல்லை, என்னுடைய தெய்வம் இதைக்காட்டிலும் பெரியதும் அழகானதுமாய் இருக்கும்” என்று பதிலளித்தாளாம். 

மக்கள் அவர்களுடைய கரங்களால் செய்யப்படும் தெய்வங்கள் அவர்களை பாதுகாக்கும் என்று நம்பி அவர்கள் விரும்பின வடிவத்தை அதற்கு கொடுக்கிறார்கள். அதினால் தான் யாக்கோபின் மனைவி ராகேல், லாபானிடத்திலிருந்து மறைமுகமாய் புறப்பட்டபோது “தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்” (ஆதியாகமம் 31:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் அந்த சுரூபங்களுக்கு மத்தியில் தேவன் யாக்கோபை பாதுகாத்தார் (வச. 34). 

யாக்கோபுடைய பயணத்தில் யாக்கோபு இரவு முழுவதும் ஒரு மனிதனோடு போராடுகிறான் (32:24). அந்த மனிதன் சாதாரண மனுஷீகத்திற்கு உட்பட்டவன் இல்லை என்பதை யாக்கோபு அறிந்ததினால் தான் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (வச. 26) என்று சொல்லுகிறான். அந்த மனிதன் இவனுடைய பெயரை இஸ்ரவேல் (“தேவன் யுத்தம்செய்கிறார்”) என்று மாற்றி ஆசீர்வதிக்கிறார் (வச. 28-29). “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல்” (வச. 30) என்று யாக்கோபு பேரிட்டான்.

இந்த தேவனே ஒருவரால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரியவரும் அழகானவருமாகிய தேவன். அவரை செதுக்கவோ, திருடவோ, மறைக்கவோ முடியாது. ஆனாலும், அன்றிரவு யாக்கோபு கற்றுக்கொண்டபடி, நாம் அந்த தேவனை அணுகலாம்! இந்த தேவனை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்க இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:9).