என் மகன் ஜெஃப் ஒரு கடையை விட்டு வெளியே வந்தபோது, அங்கே தரையில் ஒரு நடைப்பயிற்சி சட்டகம் (வாக்கர்) கிடந்ததைப் பார்த்தான். யாரோ அதை தவறவிட்டிருக்கிறார்கள் என்று ஊகித்து, அங்கே யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்படுமோ என்று அந்தக் கட்டிடத்திற்கு பின்னால் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆதரவற்ற நபர் நடைபாதையில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தான். 

ஜெஃப் அவரை எழுப்பி நன்றாக இருக்கிறாரா என்று விசாரித்தான். “நான் இறந்து போவதற்காகக் குடித்தேன். என்னுடைய கூடாரம் புயலில் சிதைந்துவிட்டது. எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். நான் வாழ விரும்பவில்லை” என்று அவர் வேதனையுடன் கூறினார். 

ஜெஃப் ஒரு கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தை தொடர்புகொண்டான். தன் வீட்டிற்கு உடனே ஓடிப்போய் தன்னுடைய முகாமிடும் கூடாரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அந்த மனிதரிடம் “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டபோது, அவரும் “ஜெஃப்ரி” என்றார். ஜெஃப் தன்னுடைய பெயரும் அதுதான் என்பதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால் “அப்பா, அது நானாகக் கூட இருக்கலாம்” என்று பின்பு என்னிடம் கூறினான். 

ஜெஃப் ஒரு காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாயிருந்தவன். தேவனிடமிருந்து அவன் பெற்ற இரக்கத்தினால் தான் அந்த மனிதருக்கு உதவி செய்ய முன்வந்தான். ஏசாயா தீர்க்கதரிசி “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்,” (ஏசாயா 53:6) என்று தேவன் நம்மீது வைத்த இரக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். கிறிஸ்து நம் மீட்பர்; நம்மை விரக்தியில் தொலைந்து போகவோ, தனிமையாகவோ, நம்பிக்கை இழக்கவோ அனுமதிக்கவில்லை. அவர் நம்மை அடையாளங்கண்டு தம்முடைய அன்பிலே தூக்கியெடுத்து, நாம் மீட்பைப் பெற்று அவருக்குள் புதிதான வாழ்க்கையைத் தொடர நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை விட பெரிய பரிசு வேறெதுவும் இல்லை.