என்னுடைய பேத்தி எலிசாவும் நானும் குட் பை சொல்லும்போது, ஒரு பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புயங்களால் அணைத்து சத்தமாக ஓலமிட்டு, போலியாக ஏங்கிக் கொண்டு சுமார் இருபது நொடிகள் இருப்போம். பின்னர் நாங்கள் சற்று பின் நகர்ந்து “பார்ப்போம்” என்று கூறி திரும்பி விடுவோம். இந்த முட்டாள்தனமான செயலைச் செய்தாலும், நாங்கள் மீண்டும் சீக்கிரத்தில் சந்திப்போம் என்பதும் தெரியும்.

சில வேளைகளில் நாம் மிகவும் நேசிக்கும் சிலரின் பிரிவு வேதனையைத் தரும். அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு சபையின் மூப்பரிடம் பிரியாவிடை பெற்றபோது அவர்களெல்லாரும் மிகவும் அழுது, “என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்க மாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக் குறித்து அதிகமாய் துக்கப்பட்டு” பவுலின் கழுத்தைக் கட்டிக் கொண்டார்கள் (அப். 20:37-38).

மிக அதிக துக்கம் என்பது சாவினால் பிரிக்கப்படும்போது தான் வரும். ஏனெனில் அவர்களுக்கு வாழ்வில் கடைசியாக பிரியாவிடையளிக்கிறோம். அத்தகைய பிரிவை நினைத்துப் பார்க்க முடியாது. நாம் துக்கிப்போம், அழுவோம். நாம் நேசித்த ஒருவரை மீண்டும் அணைக்கவே முடியாது என்ற இருதயத்தை நொறுக்கும் துக்கத்தை நம்மால் எதிர்கொள்ள முடியாது.

ஆனாலும் நாம் நம்பிக்கையற்ற மற்றவர்களைப் போல துக்கிப்பதில்லை. எதிர்காலத்தில் மீண்டும் இணைவோம் என பவுல் எழுதுகிறார். இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே (1 தெச. 4:13-18). மேலும் அவர் சொல்லுகிறார், ‘‘கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்”. இயேசுவுக்குள் மரித்தவர்களும், உயிரோடிருக்கிறவர்களும் தேவனோடு இணைந்து கொள்வோம். எத்தனை இன்பமான இணைப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் இயேசுவோடு எப்பொழுதும் இருப்போம். இதுவே நம்முடைய நித்திய நம்பிக்கை.