நான் அவர்கள் பெயர்களை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். மாணவர் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களையும் புகைப்படங்களையும், பார்ப்பதில் நேரம் செலவிட்டு அவற்றை எனக்குப் பழக்கப்படுத்திக் கொண்டேன். எனவே அவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்பொழுது, “ஹலோ ஜெஸிகா” அல்லது “ட்ரெவோர் வரவேற்கிறேன்” என்று கூறுவேன். பெயர் சொல்லி ஒருவரை அழைப்பது எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் உண்மையாகவே ஒருவரைப்பற்றி அறிய வேண்டுமானால் அவர் பெயரை மாத்திரம் அறிந்து கொண்டால் போதாது. அதற்கும் அதிகமாக அவர்களைப்பற்றி அறிய வேண்டியது உள்ளது. நல்ல மேய்ப்பனாகிய இயேசு, நம்மீது அன்பும், கரிசனையும் உடையவராய், “அவர் தம்முடைய ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.” என்று யோவான் 10:3ல் வாசிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நமது பெயரை மாத்திரம் அல்ல. இன்னும் அதிகமாய் நம்மைப்பற்றி அவருக்குத் தெரியும். நமது சிந்தனைகள், ஏக்கங்கள், பயங்கள், தவறுகள் மற்றும் நமது அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். நமது ஜீவனை நமக்கு அவர் தந்திருப்பதால் நமது உள்ளான தேவைகளை அறிந்திருக்கிறார். தம்மையே அவர் விலைக்கிரயமாகக் கொடுத்து நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். 11ம் வசனத்தில் அவர் கூறுவதுபோல “ஆடுகளுக்காக தமது ஜீவனைக் கொடுத்திருக்கிறார்”.

பாருங்கள், நம்முடைய பாவம் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்துவிட்டது. எனவே நல்ல மேய்ப்பனாகிய இயேசு நம் பாவங்களை தம்மேல் சுமந்த ஆட்டுக்குட்டியாய் தம்மையே பலியாகத் தந்தார். அவர்தம் ஜீவனை நமக்காகத் தந்து, பின் உயிர்த்தெழுந்து, நம்மை மீட்டுக்கொண்டார். அதன் விளைவாக விசுவாசத்தின் மூலமாய் அவரின் இரட்சிப்பாகிய ஈவை நாம் ஏற்றுக்கொள்ளும்பொழுது நாம் இனி ஒருபோதும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டவர்களாகக் காணப்பட மாட்டோம்.

உங்கள் பெயரையும், உங்கள் தேவைகளையும் தேவன் அறிந்திருக்கிறார்! இயேசுவுக்கு நன்றி கூறுங்கள்!