வகை  |  odb

நற்கிரியை

சார்லஸ் ஸ்பர்ஜன் தன் பதின் பருவத்தில் தேவனோடு போராடினார். சபையிலேயே வளர்ந்தபோதும், பிரசங்கங்கள் அவருக்கு பயனற்றதும், அர்த்தமற்றதுமாய் தோன்றின. தேவனை நம்புவதென்பது பெரும்பாடாகவே இருந்தது. “தேவனை எதிர்த்து கலகம் செய்தேன்” என்று அவரே கூறுகிறார். ஒரு இரவின் கடும்பனிக்காற்று, தொடர்ந்து நடக்க பயணிக்க முடியாத பதினாறு வயது ஸ்பர்ஜன், அங்கிருந்த சிறிய மெத்தடிஸ்ட் ஆலயம் ஒன்றிற்குள் அடைக்கலம் புகுந்தார். அந்த போதகரின் பிரசங்கம் இவரையே குறிவைத்தது போலிந்தது. அத்தருவாயில், தேவன் அந்த போராட்டத்தில் வெற்றிபெற, சார்லஸ் தன்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தார்.

ஸ்பர்ஜன் பின்னர், “நான் கிறிஸ்துவோடு வாழ ஆரம்பிக்கும் முன்னரே, அவர் என்னோடு வாழ ஆரம்பித்துவிட்டார்" என்றெழுதுகிறார். மெய்யாகவே நாம் தேவனோடு வாழும் வாழ்க்கை என்பது நாம் இரட்சிக்கப்பட்ட நொடிலியிலிருந்து துவங்குவதில்லை. சங்கீதக்காரன், “தேவன் நம் உள்ளார்ந்த மனிதனை படைத்து, தாயின் கருவில் வைத்து உருவாக்குகிறார்” (சங்கீதம் 139:13) என குறிப்பிடுகிறார். அப்போஸ்தலன் பவுல், “நான் பிறவாததற்கு முன்னரே, தேவன் என்னை தெரிந்துகொண்டு, தம்முடைய ஆச்சரியமான கிருபையால் அழைத்தார்” (கலாத்தியர் 1:15) என்கிறார். நாம் இரட்சிக்கப்பட்ட உடனே தேவன் நம்மில் தம் கிரியையை நிறுத்திக்கொள்வதில்லை. “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலிப்பியர் 1:6)

நாம் அனைவருமே ஒரு அன்பான தேவனின் கரங்களில் முடிவடையா கிரியைகளாய் இருக்கிறோம். நம் முரட்டாட்டத்திலிருந்து, தம்முடைய இதமான அரவணைப்புக்குள் அவர் நம்மை நடத்துகிறார். ஆனால் நம்மேல் அவர் கொண்டிருக்கும் நோக்கம் வெறும் ஆரம்பமே. “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). நாம் எந்த பருவத்தினராய் இருந்தாலும், வாழ்வில் எந்த நிலையிலிருந்தாலும், நாம் அவருடைய நல்ல கிரியையாய் இருக்கிறோம் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

ஞானமான ஆலோசனை

நான் வேதாகம கல்லூரியில் பயிலும்போது, முழுநேர வேலையிலும் ஈடுபட்டிருந்தேன். அதேவேளையில் பகுதி நேர போதகராக, சுற்றுமுறையில் ஒரு சபையிலும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் பரபரப்பாக இருந்தேன். என் தந்தை என்னை சந்தித்தபோது, “நீ முடங்கிடுவாய்” என்றார். அவர் அந்த காலத்தை சேர்ந்தவர் என்றும், இலக்கை நிர்ணயிப்பதைக் குறித்து அறியாதவர் என்றுமெண்ணி, அவர் எச்சரிப்பை உதறித் தள்ளினேன்.

நான் முடங்கவில்லை. ஆனால் கடும் வறட்சியான, கடினமான காலகட்டத்தில் மன அழுத்ததில் வீழ்ந்தேன். அன்றிலிருந்து, எச்சரிப்புகளுக்கு செவிசாய்க்கக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக என்னை நேசிக்கிறவர்களிடமிருந்து அது வரும்போது அவற்றை கவனமாகக் கேட்பேன்.

அது எனக்கு மோசேயின் சம்பவத்தை நினைப்பூட்டுகிறது. அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக, விடாமுயற்சியுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார் (யாத்திராகமம் 18:13). எனினும், தன் மாமனாரின் எச்சரிப்புக்கு செவிகொடுத்தார் (வச. 17–18). எத்திரோ, செய்வதற்கு அநேக வேலைகள் அவருக்கில்லை. ஆனால், அவர் மோசேயையும் அவனுடைய குடும்பத்தையும் நேசித்ததால், வரப்போகும் பிரச்சனையை முன்னறிந்தார். ஒருவேளை மோசே எத்திரோக்கு செவிசாய்த்து, அவர் ஆலோசனையைக் கேட்க இதுவும் காரணமாயிருக்கலாம். மோசே, சிறிய பிரச்சனைகளைத் தீர்க்க “ஜனங்களுக்குள் விசேஷித்தவர்களை” தெரிந்துகொண்டு, பெரிய பிரச்சனைகளை தானே கையாளுகிறார் (வச. 21–22). அவர் எத்திரோவின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, தன் பாரத்தை தானே சுமக்காமல், மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்ததினால் அவருக்கு எதிர்படவிருந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடிந்தது.
தேவனுக்கு செய்யும் ஊழியமோ, அல்லது குடும்ப காரியங்களோ அல்லது மற்ற காரியங்களைச் செய்வதற்கு இன்று நம்மில் அநேகர் ஆர்வம் காண்பிக்கிறோம். ஆனால் நம்மை நேசிக்கும் நம்பிக்கைக்குரிய நபர்களின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, நாம் செய்யும் அனைத்திலும் தேவனின் ஞானத்தையும், வல்லமையையும் சார்ந்துகொள்ள வேண்டும்.

தேவனின் பேரன்பு

என் தோழி, வாலிப பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பரிசுத்தத்தைக் குறித்து பேசுமாறு என்னை கேட்க, நான் மறுத்துவிட்டேன். என் வாலிப பிராயத்தில் என் வீட்டை விட்டு வெளியேறிய நான், பல ஆண்டுகளாக என் ஒழுங்கீனத்தால் காயப்பட்டிருந்தேன். திருமணத்தின் பின், முதல் குழந்தை கருச்சிதைவுற்ற வேளையில், தேவன் என் கடந்தகால பாவங்களுக்காக என்னை தண்டிக்கிறார் என எண்ணினேன். இறுதியாக முப்பதாம் வயதில், என் வாழ்வை கிறிஸ்துவிடம் அர்பணித்தபோது, என் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பினேன். இருப்பினும், குற்றமனசாட்சியும் அவமானமும் என்னைத் தொடர்ந்தது. தேவனின் மகா அன்பின் ஈவை நானே முழுமையாக பெற்றுக்கொள்ளாதபோது, அவரின் கிருபையைக் குறித்து பிறரோடு நான் எப்படி பேசுவது? ஆண்டுகள் நகர, என்னை என் குற்றமனசாட்சியில் கட்டிவைத்திருந்த என்னுடைய பழைய பாவங்களைக் குறித்த பொய்களை தேவன் மாற்றினார். கிருபையாக மன்னிப்பைப் பெற்றுக்கொண்டேன்.

நம்முடைய பாடுகளினாலும், கடந்தகால பாவங்களின் விளைவுகளினாலும் நாம் புலம்புவதை தேவன் அறிவார். எனினும், தம் ஜனங்கள் விரக்தியிலிருந்து மீண்டு, பாவங்களிலிருந்து திரும்பி, அவரின் மகா கிருபை, இரக்கம், மற்றும் உண்மைத்துவத்தில் (புலம்பல் 3:19-23) நம்பிக்கை வைக்க பெலன் தருகிறார். தேவனே நம் பங்கும், நம் நம்பிக்கையும், இரட்சிப்புமாய் உள்ளார் என்று (வச. 24-26) வேதம் சொல்கிறது. அவர் நல்லவர் என்பதை நாம் நம்பப் பழகுவோம்.
உருக்கமான நம் தகப்பன் தன் வாக்குறுதிகளை நம்ப நமக்கு உதவுகிறார். அவருடைய பெரிதான அன்பை நாம் ருசிக்கையில், அவருடைய கிருபையின் நற்செய்தியை நாம் பறைசாற்றலாம்.

சேவைக்கென ஒன்றாகக் கட்டப்பட்டோம்

கிராமங்களில், களஞ்சியம் கட்டுதல் என்பது ஒரு கூட்டுமுயற்சி. விவசாயி தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்தோ அதைக் கட்ட பல மாதங்கள் ஆகும். ஆனால் கிராம மக்கள் ஒன்றாய் கூடும்போது, வேலை விரைவாக முடியும். முன்னரே மரச்சாமான்களை ஆயத்தப்படுத்தி, கருவிகளை தயார் செய்துகொள்வார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில், மொத்த கிராம மக்களும் காலமே இணைந்து வந்து, வேலைகளை பிரித்துக்கொண்டு, ஒரு களஞ்சியத்தைக் கட்டியெழுப்ப முழுவீச்சில் செயல்படுவர். சிலசமயம் ஒரே நாளில் வேலை முடிந்துவிடும்.
திருச்சபையைக் குறித்தும், அதில் நம்முடைய பங்களிப்பைக் குறித்தும் தேவனுடைய பார்வையை விளக்க இது ஒரு நல்ல உதாரணம். “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 12:27) என வேதம் கூறுகிறது. குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை செயல்படுத்துவதற்கு, தேவன் நம் எல்லாரையும் தனித்தனியே தெரிந்துகொண்டு, நம்முடைய விசேஷமான திறமைகளில் நம்மை ஈடுபடச் செய்து, ஒன்றாய் இசைந்திருக்கும் சரீரத்தின் (எபேசியர் 4:16) பாகங்களாக வடிவமைக்கிறார். சமுதாயத்தில், நாம் “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க” (கலாத்தியர் 6:2) ஊக்குவிக்கப்படுகிறோம்.

இருப்பினும் நாம் பெரும்பாலும் தனித்தே செயல்படுகிறோம். நமக்கு தேவையானவைகளை நாமே வைத்துக்கொள்கிறோம், சூழ்நிலைகளை நாமே கையாளப் பார்க்கிறோம். அல்லது பாரத்தோடு இருக்கும் மற்றவரின் தேவையை சந்தித்து தோள் கொடுக்கத் தவறுகிறோம். ஆனால் நாம் மற்றவர்களோடு இணைந்திருப்பதையே தேவன் விரும்புகிறார். நாம் பிறர் உதவியை கேட்கும்போதும், பிறர் தேவைக்காக ஜெபிக்கும்போதும் அற்புதமான காரியங்கள் நடக்குமென தேவன் அறிந்துள்ளார்.
நாம் ஒருவரையொருவர் சார்ந்துகொள்ளும்போதே நமக்கென தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியும். மேலும் ஒரே நாளில் களஞ்சியத்தைக் கட்டுவதுபோல, நம்முடைய வாழ்க்கையைக் குறித்த அவருடைய ஆச்சரியமான திட்டத்தை நிறைவேற்ற முடியும்.