வகை  |  odb

காத்திருக்க விரும்புதல்

காத்திருத்தல் என்பது நம் அமைதியை திருடும் திருடனாய் இருக்கலாம். ரமேஷ் சீதாராமன் என்னும் கணிணி விஞ்ஞானியின் கூற்றுப்படி, “இணையதளங்களில், சில வலைதளங்கள் தோன்ற ஏற்படும் தாமதம் மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் பிறப்பிக்கிறது” என்று கூறுகிறார். ஆன்லைனில் ஒரு காணொலியை காண்பதற்கு, அதிகபட்சம் ஒருவர் இரண்டு விநாடிகள் மட்டுமே காத்திருக்க விரும்புவதாக அவர் கூறுகிறார். ஐந்து விநாடிகள் கடந்தவுடன் இருபத்தைந்து சதவிகித மக்கள் பதிவிறக்கும் முயற்சியை கைவிடுகின்றனர், பத்து விநாடிகள் கழித்து ஏறத்தாழ பாதிபேர் அணைத்து முயற்சிகளையும் கைவிடுகின்றனர். நாம் பொறுமையேயில்லாத ஜனங்கள்.  

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும் விசுவாசிகளுக்கு, அந்த நம்பிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டாம் என்று யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவத்தின் மத்தியிலும், ஒருவரையொருவர் நேசிக்கவும், கனப்படுத்தவும் கிறிஸ்துவின் வருகையைக் குறித்த இந்த நம்பிக்கை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார் (யாக்கோபு 5:7-10). அவருடைய இந்த கருத்தை வலியுறுத்துவதற்கு பயிரிடுகிற விவசாயியை உதாரணமாக்குகிறார். பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் (வச. 7) ஒரு விவசாயி காத்திருப்பது போல, இயேசுவின் வருகை வரும்வரை உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். அவர் வரும்போது, கோணலானவைகளை செவ்வையாக்கி, இளைப்பாறுதலை உண்டுபண்ணுவார். 

அவருக்காய் காத்திருக்கும்போது சிலவேளைகளில், அவரை நாம் மறுதலிக்க தூண்டப்படுகிறோம். ஆனால் காத்திருக்கும் வேளையில், “விழித்திருங்கள்” (மத்தேயு 24:42), உண்மையாய் இருங்கள் (மத்தேயு 25:14-30), அவருடைய வழியில் நடந்து, அவருடைய சுபாவத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோசெயர் 3:12). கிறிஸ்துவின் வருகை எப்போது என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் வரும்வரை நாம் பொறுமையோடே காத்திருப்போம். 

ஜெபத்தில் கட்டப்பட்ட நாவு

என் சிறிய தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், நான் கவலையுற்றேன். அவன் பிறவியிலே நாக்கு கட்டப்பட்ட (ankyloglossia) நிலையில் இருந்ததால், அவன் சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும் கடினமாயிருக்கும் என, என் தாயார் விளக்கினார். இன்று, வார்த்தைகள் இல்லாமல் திணரும் நிலையையும், பேசுவதற்கு கூச்சப்படும் நிலையையுமே நாக்கு கட்டப்பட்ட நிலை என கூறுகிறோம்.

சிலநேரம், நம் ஜெபங்களில் என்ன பேசுவது என அறியாமல் நாக்கு கட்டப்படுகிறோம். நம்முடைய நாக்கு அர்த்தமில்லா ஆவிக்குரியச் சொற்களையும், திரும்பத்திரும்ப ஒரே வாக்கியத்தையும் உச்சரிக்கும். நம் உணர்வுகளை பரலோகத்தை நோக்கி அம்பாக எய்கிறோம். அது கர்த்தருடைய செவியைச் சென்றடையுமா என தெரியவில்லை. நம்முடைய சிந்தனைகள் இங்கும் அங்குமாய் அலைபாய்கிறது. 

ஜெபிக்கத் திணரும் வேளைகளில், என்ன செய்வதென்று தெரியாத முதலாம் நூற்றாண்டு ரோம விசுவாசிகளிடம், பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடும்படி பவுல் அப்போஸ்தலன் அழைக்கிறார். “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26). இங்கே, “உதவி” என்பது அதிக எடையை சுமந்து செல்வதாகும். “வாக்குக்கடங்காத பெருமூச்சுகள்” என்பது நம் சார்பில், நம் தேவைகளை ஆவியானவர், தேவனிடத்தில் எடுத்துசெல்கிறார் என்பதைக் குறிக்கிறது.

நாம் ஜெபத்தில் வாய்கட்டப்படுகையில், கர்த்தருடைய ஆவியானவர் நம் குழப்பங்கள், வேதனைகள், கவனச்சிதறல்கள் ஆகியவற்றை நேர்த்தியான விண்ணப்பமாய் மாற்றி, நம் இருதயத்திலிருந்து அவைகளை தேவனுடைய செவிக்கு எட்டும்படி செய்கிறார். அவர் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுக்கிறார். அவரை வேண்டிக் கொள்ளும்படிக்கு நாம் அவரை அனுமதிக்கும்வரை, நமக்கு தேவையான சரியான ஆறுதலை நாம் அறிந்திருக்கமாட்டோம். 

பாதுகாப்பான கரங்கள்

ஒரு கயிறு அறுபடுவது போல, டக் மெர்க்கியின் வாழ்க்கைக் கயிறு ஒன்றன்பின் ஒன்றாக அறுபட்டுக் கொண்டிருந்தது. “புற்றுநோயுடன் போராடி என் தாயார் தோற்றுப் போனார்; வெகுநாளாய் இருந்த என்னுடைய காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது; என் வருமானம் தடைபட்டது; என் வேலை மந்தமாக சென்றது... என்னைச் சுற்றியிருந்த இந்த பிரச்சனைகளினால் என்னுடைய ஆவிக்குரிய இருள் மிகவும் ஆழமாயிருந்தது” என்று போதகரும், சிற்பியுமான டக் மெர்க்கி எழுதுகிறார். இந்த கூட்டுநிகழ்வுகளும் அவருடைய இறுக்கமான வாழ்க்கையும் இணைந்து, “மறைவிடம்” என்ற ஒரு சிற்பத்தை அவர் செதுக்க நேர்ந்தது. கிறிஸ்துவின் ஆணியடிக்கப்பட்ட கரங்கள் இரண்டும் அதற்குள் ஏதோ ஒன்றை பாதுகாப்பதுபோல மூடியிருக்கும்படி அந்த சிற்பத்தை வடித்திருந்தார். 

அந்த சிற்பம் “தனக்குள் வந்து ஒளிந்துகொள்ளும்படிக்கு கிறிஸ்து கொடுக்கும் அறைக்கூவல்” என்று டக் தன்னுடைய சிற்பத்திற்கு விளக்கமளிக்கிறார். சங்கீதம் 32ல், தாவீது தேவனையே தன்னுடைய சிறந்த புகலிடமாய் கண்டுபிடித்ததாக பாடுகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு அருளுகிறார் (வச. 1-5). குழப்பங்களின் மத்தியில் ஜெபிக்கும்படிக்கு நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 6). 7ஆம் வசனத்தில், சங்கீதக்காரன் தேவன் மீதான தன்னுடைய நம்பிக்கையை பிரதிபலிக்கிறார்: “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.”

பிரச்சனைகள் வரும்போது நீங்கள் யாரிடமாய் திரும்புகிறீர்கள்? நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை உடைந்து கேள்விக்குள்ளாகும் போது, இயேசுவின் மன்னிப்பின் மூலம் நித்தியப் பாதுகாப்பை அருளும் தேவனிடத்தில் நாம் மறைந்துகொள்ளலாம். 

அசையாத விசுவாசம்

தன் தகப்பனுடைய மரணத்திற்குபின், அவருடைய உடைமைகளைத் திரும்பப் பெற அருண், அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்திற்குச் சென்றான். அதின் பணியாளர், அவனிடம் இருப் பெட்டிகளை ஒப்படைத்தார். மகிழ்ச்சியாய் இருப்பதற்கு அதிக சொத்துத் தேவையில்லை என்பதை அன்றுணர்ந்தேன் என அருண் கூறினான். 

அவன் தந்தை சதீஷ், எவரையும் புன்னகையுடன் வரவேற்று, கவலையற்ற எளிய வாழ்வு வாழ்ந்தவர். மற்றவர்களை எப்போதும் ஊக்கப்படுத்துகிறவர். அவருடைய மகிழ்ச்சிக்கு காரணம், அந்த பெட்டிக்குள் வைக்க முடியாது வேறொரு "சொத்து" அவரிடம் இருந்தது: அவருடைய மீட்பராகிய இயேசுவின் மீதான அசைக்க முடியாத விசுவாசமே அது. 

“பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” (மத்தேயு 6:20) என்று, இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார். வீடு, வாகனம் மற்றும் ஆஸ்தி ஆகியவைகளை நாம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய இருதயத்தின் நோக்கம் அவைகளையே பற்றியிருக்கக் கூடாது என்கிறார். சதீஷின் பற்று எதிலிருந்தது? மற்றவர்களை நேசிப்பதின் மூலம் தேவனை நேசிப்பதில் இருந்தது. அவர் வசித்த அந்த அறைக்குள் மேலும், கீழுமாக நடந்துச்சென்று பார்ப்பவர்களையெல்லாம் வாழ்த்தி உற்சாகப்படுத்துவாராம். யாரேனும் அழுதுகொண்டிருந்தால், அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்கும், அவர்களின் மனக்குமுறலைக் கேட்பதற்கும், அவர்களுக்காய் ஜெபிப்பதற்கும், இவர் அங்கேயிருப்பாராம். தேவனை மகிமைப்படுத்துவதிலும், மற்றவர்களுக்கு உதவிசெய்வதிலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். 

தேவனையும், மற்றவர்களையும் நேசிப்பதிலிருந்து நம்மை திசைத்திருப்பும் அற்பமான உலககாரியங்களால் நாம் மகிழ்ச்சியடைய முடியுமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 21). நாம் எதை அதிகமாக மதிக்கிறோம் என்பதை நாம் வாழும் விதமே பிரதிபலித்துவிடும்.