
மிக அழகான
என்னுடைய சிறுபிராயத்தில், நர்சரி மருத்துவமனை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது,புதிதாகப் பிறந்திருந்த குழந்தையை முதன்முறையாகப் பார்த்தேன். தலையில் முடி இல்லாத, கூம்பு வடிவ தலையுடன் ஒரு சிறிய, சுருக்கமான தோலுடன் இருந்த அந்த பிறந்த குழந்தையைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். என் அருகாமையில் நின்றிருந்த அந்த குழந்தையின் அம்மா, எல்லோரையும் பார்த்து, “குழந்தை அழகா இருக்கா?” என்ற மகிழ்ச்சியுடன் கேட்டார். மேலும் வேறொரு குழந்தையின் அப்பா, அவருடைய மகளைப் பார்த்து, “நீ மிகவும் அழகாயிருக்கிறாய்” என்று பாடல் பாடிய காணொலி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த அப்பாவுக்கு அவருடைய மகள் தான் உலகத்திலேயே அழகான விஷயம்.
தேவன் நம்மை அப்படித்தான் பார்க்கிறாரா? எபேசியர் 2:10, நாம் அவருடைய “செய்கையாயிருக்கிறோம்”- அவருடைய தலைசிறந்த படைப்பு என்று கூறுகிறது. நம்முடைய தோல்விகளை கருத்தில்கொள்ளும்போது, அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதையும், அவருடைய பார்வையில் நாம் எந்த அளவிற்கு மதிப்புள்ளவர்கள் என்பதையும் நம்புவதற்கு கடினமாயிருக்கலாம். ஆனால் நாம் அன்பிற்கு பாத்திரவான்கள் என்பதினால் தேவன் நம்மை நேசிக்கவில்லை (வச. 3-4); மாறாக, அவர் அன்பாகவே இருப்பதினால் (1 யோவான் 4:8) நம்மை நேசிக்கிறார். அவருடைய அன்பானது ஒருவகையான இரக்கம். நாம் நம்முடைய பாவங்களுக்கு மரித்தவர்களாயிருந்தபோது, அவர் இயேசுவின் தியாகத்தின் மூலம் நம்மை அவரோடே இருக்கப்பண்ணி, அந்த அன்பின் ஆழத்தை நமக்கு வெளிப்படுத்தினார் (எபேசியர் 2:5,8).
தேவனின் அன்பு மாறக்கூடியது அல்ல, அது நிலையானது. அவர் குறைவுள்ளவர்களையும், உடைந்தவர்களையும், பலவீனமானவர்களையும், குழப்பவாதிகளையும் நேசிக்கிறார். நாம் விழும்போது, நம்மை உயர்த்துவதற்கு அவர் நம்மோடு இருக்கிறார். நாம் அவருடைய பொக்கிஷம். அவருடைய பார்வைக்கு நாம் அழகானவர்கள்.

ஆசீர்வாதமான மனந்திரும்புதல்
கிரேடி, கேட்பவர்கள் எல்லோருக்கும் தன்னை “உடைந்தது” (BROKE) என்று தன்னுடைய தெருப் பெயரை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்வான். அவனுடைய அடையாள அட்டையிலும் அதைப் பொறித்திருந்தான். அவன் சூதாட்டம், விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நடுத்தர வயது கொண்டவன். அவன் உடைக்கப்பட்டவனாகவும், தேவனை விட்டு தூரமாகவும் வாழ்ந்தான். ஆனால் ஒரு மாலை நேரத்தில் ஒரு ஹோட்டல் அறையில், தேவனுடைய ஆவியானவரால் ஏற்பட்ட உணர்த்துதலினால், அனைத்தும் மாறியது. “நான் இரட்சிக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று தன் மனைவியிடம் கூறினான். அன்று மாலை அவன் பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்காக இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தான். நாற்பது வயதை தாண்டமாட்டோம் என்று எண்ணிய இவன், அடுத்த முப்பது வருடங்கள் விசுவாசியாக மாறி, தேவனுக்கு ஊழியம் செய்தான். அவரது ஓட்டுனர் உரிமத்தில், “உடைந்தது” என்ற வாசகம், “மனந்திரும்பு” (REPENT) என்று மாற்றப்பட்டது.
“மனந்திரும்பு.” அதைத் தான் கிரேடி செய்தான். அதைத்தான் இஸ்ரவேலர்கள் செய்யவேண்டும் என்று ஓசியா 14:1-2 சொல்லுகிறது. “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு... வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்;.” சிறியதோ, பெரியதோ, நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாயிருப்பினும், அது நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது. ஆனால் பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசுவின் மரணத்தின் மூலம் சாத்தியமாக்கப்பட்ட மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த பிரிவு மாற்றப்படுகிறது. நீங்கள் போராட்டத்தை மேற்கொள்ளுகிறவரோ, அல்லது கிரேடியைப் போன்ற வாழ்க்கை வாழ்பவரோ, யாராக இருப்பினும், உங்களுக்கான மன்னிப்பை ஒரு ஜெபத்தின் மூலம் சாத்தியமாக்கலாம்.

நம்பிக்கையோடு சகித்தல்
நான்கு வயதான சாலமனுக்கு தசைநார் சிதைவு என்னும் தசை சிதைவு நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஒரு வருடம் கழித்து, மருத்துவர்கள் குடும்பத்துடன் சக்கர நாற்காலிகளைப் பற்றி விவாதித்தனர். ஆனால் சாலமன் அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தான். குடும்பத்தினரும் நண்பர்களும் அவனுக்காக ஜெபம் செய்தனர். அவனை முடிந்தவரை சக்கர நாற்காலியிலிருந்து வெளியே வைத்திருக்க எண்ணி, பயிற்சி பெற்ற நாய் ஒன்றினை உதவிக்கு வைப்பதற்கு நிதி திரட்டினார்கள். கேல்லி என்ற தன்னுடைய நாயினை பயிற்றுவித்த டெய்ல்ஸ் ஃபார் லைஃப் என்ற அந்த நிறுவனம், தற்போது சாலமனுக்காக ஒரு நாயை பயிற்றுவிக்கிறது.
சாலமன் தற்போது அவனுடைய சிகிச்சையை ஏற்றுக்கொண்டாலும், சில கடினமான நாட்களைக் கடக்கும்போது, தேவனைத் துதித்து பாடிக்கொண்டேயிருப்பான். சாலமன் தனது அம்மாவைக் கட்டிப்பிடித்து, “பரலோகத்தில் தசைநார் சிதைவு இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொன்னான்.
வியாதியின் விளைவுகள் இந்த தற்காலிக பூமியில் வசிக்கும் அனைவரையும் பாதிக்கின்றன. இருப்பினும், சாலமனைப் போலவே, அந்த தவிர்க்க முடியாத கடினமான நாட்களில் நம்முடைய தீர்மானத்தை பலப்படுத்தக்கூடிய நிலையான நம்பிக்கை நமக்கு இருக்கிறது. “புதிய வானமும் புதிய பூமியும்” (வெளிப்படுத்துதல் 21:1) என்ற வாக்குறுதியை தேவன் நமக்குத் தந்திருக்கிறார். நம்முடைய சிருஷ்டிகரும் பாதுகாவலருமாகிய தேவன் நம்மோடு வாசம்பண்ணுவார் (வச. 3). நம் கண்களிலிருந்து வரும் “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” (வச. 4). காத்திருத்தல் “மிகவும் கடினமாக” அல்லது “மிகவும் நீளமானதாக” உணரும்போது, தேவன் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர் என்பதினால் நாம் இளைப்பாறுதலை உளமாற அனுபவிக்கலாம்.

நம்பிக்கைகளும் ஏக்கங்களும்
நான் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்ற நாட்களில், அமெரிக்காவின் நன்றிசெலுத்தும் விடுமுறை நாளானது வேறொரு வியாக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த வாரத்தின் இறுதியில் நான் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தினாலும், அந்த குறிப்பிட்ட நாளில் என்னுடைய குடும்பத்தினருடனும் சிநேகிதர்களுடனும் இருக்கமுடியவில்லையே என ஏங்கினேன். ஆனாலும் என் ஏக்கங்கள் எனக்கு மட்டும் உரியது இல்லை என்பதை புரிந்துகொண்டேன். விசேஷமான தருணங்களிலும் விடுமுறை நாட்களிலும் நமக்குப் பிரியமானவர்களுடன் இருக்க நாம் அனைவரும் ஏங்குகிறோம். நாம் கொண்டாடும் போது கூட, நம்முடன் இல்லாத ஒருவரை நாம் இழக்க நேரிடலாம் அல்லது நமது உடைந்த குடும்பம் நிம்மதியாக இருக்க ஜெபிக்கலாம்.
இதுபோன்ற சமயங்களில், வேதத்தின் ஞானத்தைப் பற்றி ஜெபிப்பதும் சிந்திப்பதும் எனக்கு உதவியது. அதில் சாலெமோனின் நீதிமொழியும் உள்ளடங்கும்: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்” (நீதிமொழிகள் 13:12). இந்த வார்த்தையில், சாலெமோன் “தாமதிக்கிற நம்பிக்கை" ஏற்படுத்தக்கூடிய விளைவை குறிப்பிடுகிறார். அதிக ஏக்கமான ஒன்றை தாமதப்படுத்துவது, கவலை மற்றும் வேதனையை விளைவிக்கும். ஆனால் அது கிடைக்கும்போது, அது ஜீவ விருட்சம் போலிருக்கும் என்று குறிப்பிடுகிறார். அது நம்மை புத்துணர்ச்சியுடனும், துடிப்புடனும் உணர அனுமதிக்கிறது.
நம்முடைய சில நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். சிலவைகளை நம்முடைய மரணத்திற்கு பின்பும் தேவன் நிறைவேற்றலாம். நம்முடைய ஏக்கம் எதுவாக இருந்தாலும், அவர் நம்மை இடைவிடாமல் நேசிக்கிறார் என்பதை அறிந்து, நாம் அவரை விசுவாசிக்கலாம். அத்துடன் ஒருநாள் நம்முடைய அன்புக்குகந்தவர்களோடு அவருடைய பரம விருந்தில் பங்கேற்போம் (வெளி. 19:6-9, பார்க்க).
