நான் ஓட்டுநர் மட்டுமே
"அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?" பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். "கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்" என்றேன்.
"நான் ஓட்டுநர் மட்டுமே" என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு "வாகன ஓட்டுநராக" இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.
மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் "வெறும் ஓட்டுநர்" என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது.

கிறிஸ்துவில் முடிப்பவர்களாக இருத்தல்
கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. "நிறைவு செய்பவர்கள்" எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும், தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. "நிறைவு செய்பவர்கள்" துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.
தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு "நிறைவு செய்பவரை" நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின் உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.
எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா "அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்" (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது.
இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற "நிறைவு செய்பவர்களை" தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.

ஒரு குழந்தையின் நம்பிக்கை
என் பேத்தி இலியானா ஏழு வயதாக இருந்தபோது, குவாத்தமாலாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தைப் பற்றிய காணொளியை அவள் பள்ளியில் பார்த்தாள். அவள் அம்மாவிடம், "அவர்களுக்கு உதவ நாம் அங்குச் செல்ல வேண்டும்" என்றாள். அவள் பெரியவளான பின் அதைப் பற்றி யோசிப்போம் என்று அவளுடைய அம்மா பதிலளித்தார்.
இலியானா ஒருபோதும் மறக்கவில்லை, அவளுடைய பத்தாம் வயதில் அவளுடைய குடும்பம் அனாதை இல்லத்திற்கு உதவச் சென்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் திரும்பிச் சென்றனர், இந்த முறை இலியானாவின் பள்ளியிலிருந்து மற்ற இரண்டு குடும்பங்களையும் அழைத்துச் சென்றனர். இலியானாவுக்கு பதினைந்தாம் வயதில், அவளும் அவளுடைய அப்பாவும் மீண்டும் குவாத்தமாலாவுக்குச் சேவை செய்யச் சென்றனர்.
சிறுபிள்ளைகளின் ஆசைகளும் கனவுகளும், பெரியவர்களின் சிந்தனையின் பாரத்தைச் சுமந்திருக்காது என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால் வேதம் அத்தகைய வேறுபாட்டைக் காட்டவில்லை. சாமுவேலைப் போலவே தேவன் சிறுபிள்ளைகளை அழைக்கிறார் (1 சாமுவேல் 3:4). சிறுபிள்ளைகளின் விசுவாசத்தை இயேசு கனப்படுத்துகிறார் (லூக்கா 18:16). மேலும் பவுல், ஜனங்கள் "இளமையைக்குறித்து" (1 தீமோத்தேயு 4:12) அசட்டைபண்ணாதபடிக்கு இளைய விசுவாசிகள் இருக்கவேண்டும் என்று கூறினார்.
எனவே, நாம் நம் பிள்ளைகளை வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளோம் (உபாகமம் 6:6-7; நீதிமொழிகள் 22:6), அவர்களின் விசுவாசம் நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி என்பதை உணர்ந்து (மத்தேயு 18:3) அவர்களுக்கு இடறல் செய்வதைக் குறித்து கிறிஸ்து எச்சரித்துள்ளார் (லூக்கா 18:15) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளிடம் நம்பிக்கையின் தீப்பொறியைக் கண்டால், பெரியவர்களாகிய நம் வேலை அதைத் தூண்டும்படி உதவுவதாகும். தேவன் நம்மை நடத்துவதுபோல, இயேசுவை நம்புவதற்கும் அவருக்காகச் சேவை செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை நோக்கி அவர்களை ஊக்குவிக்கலாம்.

இயேசுவின் காணக்கூடிய தடயங்கள்
தனிப்பட்ட அலைபேசி பயனர்களின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை இனம் காண அவர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் மூலக்கூறுகளை ஒரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அலைப்பேசி பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தும் சோப்புகள், குழைமங்கள், சாம்புகள் மற்றும் ஒப்பனை போன்றவற்றையும் அவர்கள் உட்கொள்ளும் உணவுகள், பானங்கள் மற்றும் மருந்துகளின் வகை; மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடை வகை போன்றவற்றையும் ஆராய்ந்தனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையிலிருந்தும் அவர்களுக்கான சுயவிவரத்தை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடிந்தது.
பாபிலோனிய அதிகாரிகளும் ஏதேனும் எதிர்மறையான குணாதிசயங்கள் அல்லது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கண்டுபிடிக்கும்படி, தீர்க்கதரிசி தானியேலின் வாழ்க்கையைப் பரிசோதிக்கும்படி ஒருவகையில் "ஆராய்ந்தனர்". ஆனால் அவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாகப் பேரரசை உண்மையாகச் சேவித்தார், "அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை (தானியேல் 6:4). உண்மையில் தீர்க்கதரிசி, தரியு ராஜாவால் தனது பல பிரபுக்களின் மேலாக "மூன்று நிர்வாகிகளில்" ஒருவராகப் பதவி உயர்வு பெற்றார் (வ. 1-2). ஒருவேளை பொறாமையின் காரணமாக, மற்ற அதிகாரிகள் தானியேலிடம் குற்றத்திற்கான தடயங்களைத் தேடியிருப்பார்கள் அதனால் அவர்கள் அவரை பதவிநீக்கம் செய்ய முடியும். இருப்பினும், அவர் தனது உத்தமத்தில் நிலைத்திருந்து, மேலும் "அவர் முன்பு செய்தது போலவே" (வ. 10) தேவனிடம் ஜெபித்து, சேவை செய்தார். இறுதியில், தீர்க்கதரிசி தனது பொறுப்பில் வெற்றி பெற்றார் (வ. 28).
நாம் யார், யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும் வெளிப்படையான தடயங்களை நம் வாழ்க்கை விட்டுச் செல்கிறது. நாம் போராடிக்கொண்டிருந்தாலும், குறையுள்ளவர்களாய் இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம் வாழ்க்கையை "பரிசோதிக்கும்போது" அவர்கள் உத்தமம் மற்றும் தேவபக்தியின் தடயங்களைக் காணும்படி இயேசு நம்மை வழிநடத்துவாராக.

அழகான ஒருவர்
130 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈஃபிள் கோபுரம் பாரிஸ் நகரத்தின் மீது கம்பீரமாக நிற்கிறது. இது கட்டிடக்கலையின் மேன்மையாகவும் அழகின் அடையாளமாகும் திகழ்கிறது. நகரம் அதன் மகத்துவத்தின் முக்கிய அங்கமாக கோபுரத்தை பெருமையுடன் ஊக்குவிக்கிறது.
இருப்பினும், அது கட்டப்படும்போது, பலர் அதைப் பற்றி கொஞ்சம் யோசித்தார்கள். உதாரணமாக, பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசண்ட், இது “தொழிற்சாலை புகைபோக்கி போன்ற அபத்தமான மெல்லிய வடிவம் கொண்டது" என்று விமர்சித்தார். அவனால் அதன் அழகைப் பார்க்க முடியவில்லை.
இயேசுவை நேசிப்பவர்களும், தம் இரட்சகராக அவரிடம் இதயங்களை ஒப்படைத்தவர்களும், அவர் யார், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். ஆயினும், ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார்: “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (53:2).
ஆனால் அவர் நமக்காகச் செய்தவற்றின் உன்னதமான மகத்துவம், மனிதர்கள் எப்போதும் அறிந்த மற்றும் அனுபவிக்கும் அழகின் உண்மையான, தூய்மையான வடிவமாகும். அவர் “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (வச. 4). “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (வச. 5).
சிலுவையில் நமக்காக பாடுபட்டு, நம் பாவங்களின் சொல்லொணாத் தண்டனையை சுமந்துகொண்ட அவரைப் போல் அழகானவர், அருமையானவர் எவரையும் நாம் ஒருபோதும் அறிய முடியாது.
அதுதான் இயேசு. அழகான ஒருவர். அவரைப் பார்த்து வாழ்வோம்.