கடைசியில் ஒன்றுசேர்க்கப்படுதல்
1960 ஆம் ஆண்டில், ஓட்டோ ப்ரீமிங்கர் தனது “எக்ஸோடஸ்” திரைப்படத்தின் மூலம் சர்ச்சையைத் தூண்டினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்த யூத அகதிகளின் கற்பனைக் கதையை இந்தத் திரைப்படம் தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்ட ஒரு இளம் யூதப் பெண் மற்றும் ஒரு அரேபிய மனிதனின் உடல்கள் விரைவில் இஸ்ரவேல் தேசமாக இருக்கும் நாட்டின் அதே கல்லறையில் புதைக்கப்படுவதுடன் படம் முடிவடைகிறது.
பிரேமிங்கர் முடிவை நம்மிடத்தில் விட்டுவிடுகிறார். இது விரக்தியின் உருவகமா, என்றென்றும் புதைக்கப்பட்ட கனவா? அல்லது வெறுப்பும் குரோதமும் கொண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு மக்கள் - இறப்பிலும் வாழ்விலும் ஒன்று சேர்வதால் அது நம்பிக்கையின் அடையாளமா?
ஒருவேளை சங்கீதம் 87-ஐ எழுதியதாகக் கருதப்படும் கோராகின் புத்திரர்கள் இந்தக் காட்சியின் பிந்தைய பார்வையை எடுத்திருக்கலாம். நாங்கள் இன்னும் காத்திருக்கும் ஒரு அமைதியை அவர்கள் எதிர்பார்த்தனர். எருசலேமைப் பற்றி, “தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்” (வச. 3) என்று சொல்லுகிறது. யூத மக்களுக்கு எதிராகப் போரிட்ட வரலாற்றைக் கொண்ட தேசங்கள் ஒரே உண்மையான கடவுளை ஒப்புக்கொள்ள ஒன்றுசேரும் ஒரு நாளைப் பற்றி அவர்கள் பாடினர்: ராகாப் (எகிப்து), பாபிலோன், பெலிஸ்தியர்கள், தீரு, எத்தியோப்பியர்கள் (வச. 4). அனைவரும் எருசலேமிடமும், அதின் தேவனிடத்திற்கும் இழுக்கப்படுவார்கள்.
சங்கீதத்தின் முடிவு கொண்டாட்டமானது. எருசலேமில் உள்ள மக்கள், “எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது” (வச. 7) என்று பாடுவார்கள். அவர்கள் யாரைப் பாடுகிறார்கள்? ஜீவத் தண்ணீராக இருப்பவர், எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார் (யோவான் 4:14). நிலையான சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவரக்கூடியவர் இயேசு ஒருவரே.
காட்டிலுள்ள இருட்டறை
இராணுவத்தில் டோனி வக்காரோவுக்கு புகைப்படக் கலைஞராக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆயினும் அது அவருக்குத் தடையில்லை. பீரங்கி குண்டுகளும் வெடிகளும் மரங்களிலிருந்து மழை பொழிவது போல் தோன்றும் திகிலூட்டும் தருணங்களுக்கு இடையில், அவர் எப்படியாயினும் படங்களை எடுத்தார். பின்னர், அவரது நண்பர்கள் தூங்கும்போது, அவர்களது தலைக்கவசங்களைப் பயன்படுத்தி ரசாயனங்களைக் கலந்து தனது நிழற்படங்களை உருவாக்கினார். இரவு நேரக் காடு நிழற்படத்துக்குரிய இருட்டறையாக மாறியது, அதில் வக்காரோ இரண்டாம் உலகப் போரின் பொது ஹர்ட்ஜென் வனப் போரின் காலத்தைக் கடந்திருக்கும் நினைவுகளை உருவாக்கினார்.
தாவீது ராஜாவும் தனது பங்குக்கு யுத்தங்களிலும், இருட்டான நேரங்களிலும் வாழ்ந்தார். இரண்டு சாமுவேல் 22 கூறுகிறது, "கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது" (வ.1). தாவீது அந்த அனுபவங்களைப் பயன்படுத்தி தேவனுடைய உண்மைத்தன்மையைப் பதிவு செய்தார். அவர், “மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது” (வ.5) என்றார்.
தாவீது விரைவிலேயே விரக்தியிலிருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்தார்: "எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்” (வ.7) என்று நினைவுபடுத்திக்கொண்டார். தாவீது தேவனின் தவறாத உதவிக்காக அவரைப் புகழ்வதை உறுதிப்படுத்திக்கொண்டார். "கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்” (வ.29-30) என்றார்.
தாவீது, உலகிற்குத் தனது உண்மையுள்ள தேவனைப் பற்றிச் சொல்லத் தனது கஷ்டங்களை ஒரு வாய்ப்பாக மாற்றினார். நாமும் அதையே செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இருளை ஒளியாக மாற்றும் ஒருவரை நாம் சார்ந்துள்ளோம்.
ஒரு தேசிய முகாம்
மேற்கு ஆப்பிரிக்க வானத்துக்கும் எங்களுக்கும் இடையில் எதுவும் இல்லாதபடிக்கு, நட்சத்திரங்களின் கீழ் நாங்கள் முகாமிட்டோம். வறண்ட காலங்களில் கூடாரம் தேவையில்லை. ஆனால் நெருப்பு முக்கியமானது. “நெருப்பை அணைய விடாதே” என்று அப்பா ஒரு குச்சியால் மரக்கட்டைகளைத் தூண்டினார். நெருப்பு வனவிலங்குகளை எங்களுக்கு அருகாமையில் வரவிடாமல் தூரத்தில் வைத்திருந்தது. தேவனுடைய படைப்புகள் அற்புதமானவைகள் தான். ஆனால் உங்கள் முகாமில் சிறுத்தை அல்லது பாம்பு வந்துபோவதை நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீhர்கள்.
அப்பா கானாவின் மேல் பிராந்தியத்தில் ஒரு மிஷனரியாக பணியாற்றினார். அவருக்கு அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் பாடத்தை கற்றுக்கொடுக்கும் திறன் இருந்தது. அந்த முகாமும் விதிவிலக்கல்ல.
தேவன் தம் ஜனங்களுக்கும், முகாம்களை போதிக்கிற ஒரு ஸ்தலமாகவே அனுமதித்திருந்தார். வருடத்திற்கு ஒருமுறை, ஒரு வாரம் முழுவதும், இஸ்ரவேலர்கள் “பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும்” (லேவியராகமம் 23:40) வைத்து தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர். அதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தது. தேவன் அவர்களிடம், “நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்” (வச. 42-43) என்று சொல்லுகிறார். ஆனாலும், அந்த நாட்கள் பண்டிகையாய் ஆசரிக்கப்படவேண்டும். “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்” (வச. 40).
முகாமிடுவது என்பது உங்கள் வேடிக்கையான யோசனையாக இருக்காது. ஆனால் தேவன் தனது நன்மையை நினைவுகூர ஒரு மகிழ்ச்சியான வழியாக இஸ்ரவேலருக்கு ஒரு வார முகாமை ஏற்படுத்தினார். விடுமுறை நாட்களின் அர்த்தத்தை நாம் எளிதில் மறந்து விடுகிறோம். நம் பண்டிகைகள் நம் அன்பான தேவனின் தன்மையை நமக்கு வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான நினைவூட்டல்களாக இருக்கலாம். அவர் அதில் நமக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.
செப்னாவின் கல்லறை
தமிழ் அரசியல்வாதியான கருணாநிதி, சென்னை மெரினா கடற்கரையில் தனது ஆசான் சி.என்.அண்ணாதுரையின் அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். அவரது பகுத்தறிவு நம்பிக்கை காரணமாக, எந்த மதச் சடங்குகளும் செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை.
ஒரு பெரிய நினைவுச்சின்னம் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உண்டு என்றாலும் அவரது நம்பிக்கையானது அவரை மரணம் என்ற யதார்த்தத்திலிருந்து விலக்கி விடவில்லை என்பதுதான் உண்மை. நாம் இறந்தாலும் வாழ்க்கை கடந்து செல்கிறது என்பதே கசப்பான உண்மை.
யூதாவின் வரலாற்றில் ஒரு இக்கட்டான நேரத்தில், "அரமனை விசாரிப்புக்காரனான" செப்னா, மரணத்திற்குப் பிறகு தனக்கான மரபை நிலைநாட்ட, தனக்கென ஒரு கல்லறையை ஏற்படுத்தினான். ஆனால் தேவன், அவனுடைய தீர்க்கதரிசி ஏசாயா மூலம், "உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?" (ஏசாயா 22:16) என்றார். மேலும் தீர்க்கதரிசி, "அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்" (வ.18) என்றார்.
செப்னா தவறாகப் புரிந்துகொண்டான். நாம் எங்கே புதைக்கப்பட்டோம் என்பதல்ல, நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதே முக்கியம். இயேசுவைச் சேவிப்பவர்களுக்கு இந்த அளவிட முடியாத ஆறுதல் உண்டு: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்.. பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 14:13). நமது "மரணத்தை" ஒருபோதும் அலட்சியப்படுத்தாத தேவனை நாம் சேவிக்கிறோம். அவர் நமது வருகையை எதிர்பார்த்து நம்மை தமது வீட்டிற்கு வரவேற்கிறார்!
ஓர் தனிக் குரல்
முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.
நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12).
அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).
மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.
தேவனுடைய சமாதானத் தூதுவர்கள்
நோரா, நியாயத்தின் தேவையை உறுதியாய் அறிந்திருந்ததினால், அறப்போராட்டத்திற்குச் சென்றாள். திட்டமிட்டபடி, ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் டவுன்டவுன் என்ற பகுதியில் சத்தமேயில்லாமல் அமைதியான முறையில் ஊர்வலமாய் சென்றனர்.
அப்போது இரண்டு பேருந்துகள் திடீரென்று கொண்டுவரப்பட்டது. வெளியூர்களில் இருந்து போராட்டக்காரர்கள் வந்திருந்தனர். சடுதியில் ஓர் கலவரம் வெடித்தது. மனம் உடைந்தவளாய் நோரா அங்கிருந்து வெளியேறினாள். அவர்களின் நல்ல எண்ணம் பலனளிக்கவில்லை என்று அவளுக்கு தோன்றியது.
அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றபோது, பவுலை எதிர்த்தவர்கள் அவரை அங்கே பார்த்தனர். அவர்கள் ஆசியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் (அப்போஸ்தலர் 21:27). அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்கு இயேசுவை அச்சுறுத்தலாகக் கருதினர். பவுலைப் பற்றிய பொய்களையும் வதந்திகளையும் கூச்சலிட்டு, அவர்கள் துரிதமாய் பிரச்சனையைக் கிளப்பினார்கள் (வச. 28-29). ஒரு கலவரக் கூட்டத்தினர் பவுலை ஆலயத்திலிருந்து இழுத்து சென்று அடித்தது. காவலாளிகள் துரிதமாய் ஓடிவந்தனர்.
பவுல் கைதுசெய்யப்படுகையில், மக்களிடத்தில் பேச முடியுமா என்று ரோம தளபதியிடம் அனுமதி கேட்டார் (வச. 37-38). அனுமதி கிடைத்ததும், அவர் கூட்டத்தினரிடம் அவர்களின் சொந்த மொழியில் பேசி, அவர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்களை ஈர்த்தார் (வச. 40). பெரிய கலகத்தை, தான் எவ்விதம் பிரயோஜனமற்ற ஓர் மதத்திலிருந்து மீட்கப்பட்டேன் என்னும் இரட்சிப்பின் சாட்சியைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக பவுல் மாற்றிக்கொண்டார் (22:2-21).
சிலர் வன்முறை மற்றும் பிரிவினையை விரும்புகிறார்கள். சோர்ந்துபோகாதிருங்கள். அவர்கள் ஜெயங்கொள்ளமாட்டார்கள். இந்த அவநம்பிக்கையான உலகத்தில் தம் ஒளியையும் அமைதியையும் பிரதிபலிக்க தைரியமான விசுவாசிகளை தேவன் தேடுகிறார். ஓர் நெருக்கடியான சூழ்நிலை, தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அழகான வாய்ப்பாக இருக்கக்கூடும்.
ஒரே ஒரு தொடுதல்
ஒரு சாதாரண தொடுதல் தான். ஆனால், அது காலினின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் விசுவாசிகளுக்கு அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கும் பகுதிக்குச் சென்று, தொண்டு செய்யும்படி அவனுடைய குழுவினர் ஆயத்தப்படுகையில், அவனுடைய மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது. அவன் தன் கவலைகளை, அக்குழுவிலுள்ள ஒருவரோடு பகிர்ந்தான். அந்த நண்பன் நின்று, தன் கையை அவன் தோள் மீது வைத்து, அவனை ஊக்கப்படுத்தும் சில வார்தைகளைப் பகிர்ந்து கொண்டான். காலின் ,அந்த தொடுதலை, தன் வாழ்வின் திருப்பு முனையாக நினைத்துப் பார்க்கின்றான். தேவன் அவனோடு இருக்கிறார் என்ற உண்மை வல்லமையாக அவனுக்குள் கிரியை செய்தது.
இயேசுவுக்கு மிக அன்பான சீடனான யோவான், சுவிசேஷத்தைப் பரப்பியதற்காக நாடு கடத்தப்பட்டு, பத்மு தீவில் தனித்து விடப்பட்டான். அப்பொழுது அவன், “எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்” கேட்டான் (வெளி. 1:10). அதனைத் தொடர்ந்து தேவனுடைய தரிசனத்தைக் கண்டான். அப்பொழுது யோவான், “செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தான்” பயந்து நடுங்கிய அந்த வேளையில், ஆறுதலையும், தைரியத்தையும் பெற்றுக்கொண்டு, எழுத ஆரம்பிக் கின்றான். “அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;” (வச. 17) என்றெழுதினான்.
தேவன் நம்முடைய வசதியான வாழ்விலிருந்து நம்மை வெளியே எடுத்து, புதிய காரியங்களைக் காண்பிக்கின்றார், நம்மை வளைய வைத்து, வளரச் செய்கின்றார். நமக்கு தைரியத்தையும், ஆறுதலையும் தந்து எல்லா சூழ்நிலைகளின் வழியாகவும் கடந்து செல்லப் பண்ணுகின்றார். நம் சோதனைகளின் மத்தியில், நம்மை அவர் தனியே விடுவதில்லை. எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்துகின்றார், நம்மை அவருடைய கரங்களில் வைத்துள்ளார்.
மாயக்காரரைக் குறித்து தேவன்
“என்னுடைய குழுவிலுள்ள நபர் ஒருவர் இதைச் செய்திருந்தால் நான் மிகவும் வருத்தப் பட்டிருப்பேன்’’ என்று ஒரு கிரிக்கெட் வீரர், 2016 ஆம் ஆண்டு நடை பெற்ற ஒரு போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்வீரர் ஒருவர் ஏமாற்றியதைக் குறித்து இப்படிச் சொன்னார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே கிரிக்கெட் வீரர், இதே போன்ற மற்றொரு ஏமாற்று வேலையைச் செய்தமைக்காகப் பிடிபட்டார்.
இப்படிப்பட்ட மாய்மாலமான செயல்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன .ஆதியாகமம் 38ல் குறிப்பிடப் பட்டுள்ள யூதாவின் மாய்மாலம் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தாமாரைத் திருமணம் செய்த தனது இரு மகன்களும் மரித்த பின்பு, யூதா அவளுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருந்து விடுகிறான் (வச. 8-11). ஏமாற்றமடைந்த தாமார் தன்னை மறைத்து, ஒரு வேசியைப் போல முக்காடிட்டுக் கொண்டு யூதாவைச் சந்தித்து, அவனோடு சேருகின்றாள் (வச. 15-16).
ஆனால் கைம்பெண்ணான தன்னுடைய மருமகள் கர்ப்பவதியானாள் என்று கேள்வி பட்டபோது ,அவன் அவளைக் கொலை செய்யும்படி எழும்புகின்றான். “அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்கின்றான் (வச. 24). ஆனால், யூதாவே அதற்குக் காரணமானவன் என்பதற்கு அவள் சான்று வைத்திருந்தாள் (வச. 25).
அங்கு யூதா உண்மையை மறைத்திருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இரட்டை வேடத்தை ஒத்துக்கொண்டான். அவளுடைய எதிர்காலத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றான். என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்கின்றான் (வச. 26).
யூதா மற்றும் தாமாரின் இருண்ட பகுதியை தேவன் பிணைத்து நமக்கான மீட்பின் கதையை உருவாக்குகின்றார். தாமாரின் பிள்ளைகள், இயேசுவின் முன்னோர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் (மத். 1:2-3).
ஆதியாகமம் 38ஆம் அதிகாரம் ஏன் வேதாகமத்தில் இடம் பெற்றது? ஒன்று, மனிதனின் திருக்குள்ள இருதயத்தைக் காட்டவும் ,மற்றொன்று தேவனின் அன்பும், கிருபையும்,கருணையும் நிறைந்த இருதயத்தைக் காட்டவுமே.
நான் யார் ?
டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப் படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.
அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.
டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.
தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.
நம்மை பெலவீனனாக காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.
நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.