எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

எதிரிகள் மீது எரிகிற தழல்களை குவித்தல்

சிறைக் காவலரிடம் இருந்து தினமும் அடிவாங்குவதை டான் சகித்துக் கொண்டார். அப்படிப்பட்ட கடினமான மனிதனை நேசிக்கும்படிக்கு கிறிஸ்துவால் உணர்த்தப்பட்டதால், ஒரு நாள் காலை நேரத்தில் அவரிடத்தில் அடிவாங்கும்போது, “ஐயா, என் வாழ்நாள் முழுவதும் நான் தினமும் உங்களைப் பார்க்கப் போகிறேன் என்றால், நாம் நண்பர்களாக மாறலாமே” என்று கூறினார். அந்த சிறைக்காவலாளியோ, “இல்லை! நாம் எப்போதும் நண்பர்களாக மாறவே முடியாது” என்றார். ஆனால் டான் வற்புறுத்தி தன் கையை அவரிடமாய் நீட்டினார். 

அந்த சிறை அதிகாரி உறைந்து நின்றார். அவர் அவருடைய கையைக் குலுக்க, அந்த அதிகாரி அவருடைய கையை உறுதியாய் பற்றிக்கொண்டார். அவருடைய கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர் “டான், என்னுடைய பெயர் ரொசாக். நான் உன் சிநேகிதனாயிருக்க விரும்புகிறேன்” என்று சொன்னாராம். அதற்கு பின்பு, அந்த சிறையதிகாரி, டானை அடிக்க தன் கையை ஓங்கியதேயில்லையாம். 

வேதம், “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்” (நீதிமொழிகள் 25:21-22) என்று சொல்லுகிறது. இந்த எரிகிற தழல் உருவகமானது, எகிப்தியர்களின் சடங்காச்சாரத்தை நினைவுகூருகிறது. அங்கு குற்றவாளி தனது தலையின் மீது சூடான நிலக்கரியின் கிண்ணத்தை சுமந்து கொண்டு தனது மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அதுபோலவே, நம்முடைய இரக்கம் நம் எதிரிகளை வெட்கத்தால் முகம் சிவக்கச் செய்யலாம், ஆனால் அது அவர்களை மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும்.

உங்கள் சத்துரு யார்? யாரை நீங்கள் வெறுக்கிறீர்கள்? டான் தன்னுடைய இருதயத்தையும் தன்னுடைய எதிரியின் இருதயத்தையும் மாற்றும் வல்லமை கிறிஸ்துவின் இரக்கத்திற்கு உண்டு என்று நம்பினார். நாமும் அவ்வாறு நம்ப முடியும்.

இப்போது இது வெறுமையாயிருக்கிறது

எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 

எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது. 

ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது. 

இயேசுவே பதில்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் போதனையை நன்கு செவிகொடுத்து கேட்ட அவரது ஓட்டுநர், அவர் பேசிய அனைத்தையும் நன்கு கேட்டுவிட்டு, அவரே சொற்பொழிவாற்றுவதற்கு போதுமான தகவல் இருப்பதாக அறிவித்தார். அப்போது ஐன்ஸ்டீன், அடுத்த கல்லூரியில் சொற்பொழிவாற்றும்போது, அவர்கள் என்னை நேரில் கண்டதில்லை என்பதினால் நாம் இருவரும் ஆள்மாறாட்டம் செய்து உரையாற்றுவோம் என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதில் கேள்வி-பதில் நேரம் வந்தது. அதில் மிகவும் ஆக்ரோஷமான ஒரு கேள்விக்கு, ஓட்டுநர் அந்த நபரைப் பார்த்து, “நீங்கள் ஒரு சிறந்த பேராசிரியர் என்பதை நான் பார்க்கிறேன், ஆனால் என் ஓட்டுநர் கூட பதிலளிக்கக்கூடிய ஒரு எளிய கேள்வியை நீங்கள் கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று சொல்ல, ஓட்டுநர் வேடத்தில் இருந்த ஐன்ஸ்டீன் அந்த கேள்விக்கு பதிலளித்தாராம். வேடிக்கையான ஆனால் கற்பனையான கதை இங்கே முடிகிறது.

தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் மிகவும் இக்கட்டான தருணத்தில் சிக்கிக்கொள்கின்றனர். தான் உருவாக்கின பொற்சிலையை அவர்கள் வணங்காவிட்டால், அவர்களை அக்கினி சூளையில் போடுவதாக நேபுகாத்நேச்சார் பயமுறுத்தினான். “உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?” (தானியேல் 3:15) என்று கேட்கிறான். தானியேலின் நண்பர்கள் பணிந்துகொள்ள மறுத்ததினால், ஏழு மடங்கு சூடேற்றப்பட்ட அக்கினி சூளையில் அவர்களை தூக்கிப்போட்டான். 

அவர்கள் தனியே செல்லவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே ஒரு தூதனாக அவர்களோடு அக்கினியில் உலாவி, அவர்கள் சேதமடையாமல் காத்து, ராஜாவின் கேள்விக்கு மறுக்கமுடியாத வகையில் பதிலளித்தார் (வச. 24-25). அப்போது நேபுகாத்நேச்சார், “உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே” என்று தேவனை துதித்து, “இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்” (வச. 28-29). 

சில சமயங்களில், சூழ்நிலை நம் கைமீறிப் போவதாக நாம் உணரலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு அவர் துணை நிற்கிறார். அவர் நம்மை சுமந்துசெல்வார். 

போகட்டும் விடு

புனித அகஸ்டினின் “அறிக்கைகள்” என்று வெளியிடப்பட்ட அவருடைய சுயசரிதையானது இயேசுவுடனான அவருடைய நீண்ட பயணத்தை பிரதிபலிக்கிறது. ஒரு சமயம், பேரரசரை புகழ்ந்து பேசுவதற்காக அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் அரசரைப் பார்த்து புகழ்ந்து பேசும்போது, அவருடைய அந்த முகஸ்துதி வரிகளை கேட்டு குடிபோதையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் கைதட்டி கேலிசெய்வதைப் பார்த்தார். அந்த குடிபோதையில் இருந்த மனிதன் இப்படிப்பட்ட முகஸ்துதிகள் மூலம் வரும் மேன்மைகளை தன்னுடைய வாழ்க்கையில் பார்த்து பழக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து, அன்றிலிருந்து உலக வெற்றிகளுக்காகவும் மேன்மைகளுக்காகவும் பிரயாசப்படுவதை நிறுத்திக்கொண்டார். 

ஆகிலும் அவர் இச்சைக்கு அடிமையாயிருந்தார். பாவத்திற்கு அடிமையாயிருக்கும் வரையில் இயேசுவிடத்தில் திரும்பமுடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தாலும், விபச்சார பாவத்தில் அவர் தரித்திருந்தார். ஆகையால் அவர் “எனக்கு இச்சையடக்கம் தாரும்... ஆனால் உடனே வேண்டாம்” என்று ஜெபிக்க ஆரம்பித்தாராம். 

அகஸ்டின், போதுமான அளவிற்கு பாவத்திற்கும் இரட்சிப்பிற்கும் இடையில் சிக்கித் தவித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையினால் உந்தப்பட்டவராய், ரோமர் 13:13-14ஐ எடுத்து வாசித்தார். “களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும்… உள்ளவர்களாய் நடவாமல்... துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.”

அவருடைய வாழ்க்கையில் மாற்றம் வந்தது. தேவன் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அகஸ்டினுடைய வாழ்க்கையில் இருந்த இச்சையின் சங்கிலிகளிலிருந்து அவரை விடுவித்து, “தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு…” கொண்டுவந்தார். “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:13-14). அகஸ்டின் ஒரு போதகரானார். ஆனாலும் அவர் இச்சையினால் சோதிக்கப்பட்டார். ஆகிலும் அவ்வாறு சோதிக்கப்படும்போது யாரை நோக்கவேண்டும் என்பதை தற்போது நன்கு அறிந்திருந்தார். அவர் இயேசுவிடம் தஞ்சமடைந்தார். நீங்கள் தஞ்சமடைய ஆயத்தமா?

நாம் தனியாக இல்லை

ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான "நாக்" இல், அவர் எழுதினார், "பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.

நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.

நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார்.  ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், "ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்" (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.

உன் பெயர் என்ன?

முதல் கணவர் இறந்த பிறகு ஜீனா மறுமணம் செய்து கொண்டார். அவளுடைய புதிய கணவரின் குழந்தைகள் அவளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது அவரும் இறந்துவிட்டதால், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவ வீட்டில் தங்கியதற்காக அவளை வெறுக்கிறார்கள். அவளுடைய கணவன் அவளுக்காக ஒரு சிறிய தொகையை விட்டுச் சென்றான்; அவள் தங்கள் ஆஸ்தியைத் திருடுகிறாள் என்று அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள். ஜீனா மிகவும் சோர்ந்துவிட்டாள், மேலும் அவள் வெறுத்தும் போனாள்.

நகோமியின் கணவர், குடும்பத்தை மோவாபுக்கு மாற்றினார். அங்கு அவரும் அவர்களது இரண்டு மகன்களும் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நகோமி தம் மருமகள் ரூத்தைத் தவிர, வெறுங்கையுடன் பெத்லகேமுக்குத் திரும்பினார். நகரமே கலங்கி, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள் (ரூத் 1:19). "எனது இனிமையானவள்" என்று பொருள்படும் அந்தப் பெயரை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அவள் சொன்னாள். அவர்கள் அவளை "மாரா" என்று அழைக்க வேண்டும், அதன் அர்த்தம் "கசப்பு" ஏனெனில், "நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்" (வ. 20–21) என்றாள்.

உங்கள் பெயர் கசப்பாக இருக்க வாய்ப்பு உள்ளதா? நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உடல்நலக் குறைவால் நீங்கள் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். நீங்கள் சிறப்பாகத் தகுதி பெற்றீர்கள். ஆனால் அத்தகுதிக்குரிய நன்மையைப் பெறவில்லை. இப்போது நீங்கள் கசப்பாக இருக்கிறீர்கள்.

நகோமி கசந்துபோய் பெத்லகேமுக்குத் திரும்பி வந்தார், ஆனால் அவர் திரும்பி வந்தார். நீங்களும் திரும்ப வீட்டுக்கு வரலாம். பெத்லகேமில் பிறந்த ரூத்தின் வம்சாவளியான இயேசுவிடம் வாருங்கள். அவருடைய அன்பில் இளைப்பாறுங்கள்.

காலப்போக்கில், தேவன் நகோமியின் கசப்பிற்குப் பதிலாக தம் பரிபூரணத் திட்டத்தின் நிறைவேற்றத்தின் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் (4:13-22). அவரால் உங்கள் கசப்பையும் மாற்ற முடியும். அவரிடம் வீட்டிற்கு வாருங்கள்.

மகிழ்ச்சியை தேர்வுசெய்!

ஜனவரி 15, 1919 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மூல சர்க்கரை பாகை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் வாகனம் வெடித்தது. 75 லட்சம் லிட்டர் மூல சர்க்கரை பாகு, பதினைந்து அடி அலையாய் 30 மைல் வேகத்தில் தெருவில் பாய்ந்து, ரயில் வண்டிகள், கட்டிடங்கள், மக்கள் மற்றும் விலங்குகளை மூழ்கடித்தது. இந்த மூல சர்க்கரை பாகு அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று 21 பேரின் உயிரைக் குடித்து, 150 பேருக்கு மேலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்த மூல சர்க்கரைப் பாகைப் போன்று, சில நல்ல விஷயங்கள் கூட நம்மை எதிர்பாராத விதமாய் முழ்கடிக்கலாம். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணிய தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே அவர்களைப் பார்த்து, தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது அது தங்களுடைய சாமர்த்தியத்தினால் வந்தது என்று சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்: “நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி... உன் இருதயம் மேட்டிமையடையாமலும்… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்” இருக்கும் படிக்கும் இந்த ஐசுவரியத்திற்கு அவர்களின் சாமர்த்தியம் காரணம் என்று சொல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:12-14, 17-18) என்று அறிவுறுத்துகிறார். 

நம்முடைய சரீர ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார தேவைகள் போன்ற அனைத்து காரியங்களும் தேவனுடைய கரத்தினால் அருளப்பட்ட ஈவுகள். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், அவரே நம்மை தாங்குகிறவர். திறந்த கைகளோடு நம்முடைய ஆசீர்வாதத்தை பற்றிக்கொண்டு, நம் மீதான அவருடைய இரக்கங்களுக்காய் அவரை துதிப்போம். 

ஹின்னோமிலிருந்து நம்பிக்கை

1979 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேப்ரியல் பார்கே இரண்டு சிறிய வெள்ளி சுருள்களைக் கண்டுபிடித்தார். அந்த உலோகச் சுருளை நுணுக்கமாக அவிழ்க்க பல ஆண்டுகள் ஆனது. அதில் ஒவ்வொரு சுருள்களிலும், எண்ணாகமம் 6:24-26லிருந்து ஆசீர்வாதம் எபிரெய மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.” அச்சுருள்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதுவே கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான வேதாகம ஆதாரங்களில் ஒன்று. 

அவைகள் கண்டெடுக்கப்பட்ட இடமும் சுவாரஸ்யமானது. ஹின்னோம் பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குகையில் பார்கே அதை தோண்டிக் கண்டுபிடித்தார். அதே இடத்தில்தான், தங்கள் பிள்ளைகளை நரபலியிட்டால் தேவன் உங்களை அழித்துவிடுவார் என்று எரேமியா தீர்க்கதரிசி மக்களை எச்சரித்தார் (எரேமியா 19:4-6). அதுபோன்ற அக்கிரமங்கள் நடந்தேறிய பள்ளத்தாக்கு அது என்பதினால், இயேசு அதை “கெஹென்னா” ("ஹின்னோம் பள்ளத்தாக்கு" என்ற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம்) என்ற வார்த்தையை நரகத்தைக் குறிக்க பயன்படுத்தினார் (மத்தேயு 23:33).

இந்த இடத்தில், எரேமியா தனது தேசத்தின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பை அறிவிக்கும் தருணத்தில், யாரோ ஒருவர் தனது எதிர்கால ஆசீர்வாதத்தை வெள்ளி சுருள்களில் பொறித்திருக்கிறார். இது அவர்களின் வாழ்நாட்களுக்குள் நடக்காது. ஆனால் பாபிலோனிய சிறையிருப்பைக் கடந்து, தேவன் அவர்கள் பக்கமாய் தம்முடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடுவார். 

நமக்கு போதிக்கப்படுகிற பாடம் தெளிவாக உள்ளது. நமக்கு சம்பவிக்கப்போகிறவைகளுக்கு நாம் பாத்திரவான்களாய் இருந்தாலும், நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோம். தேவனுடைய இருதயம் அவருடைய ஜனங்களுக்காய் எப்போதும் ஏங்குகிறது.

பலவீனம் பலமாகும்போது

நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன? எரேமியா 20:18

ட்ரூ, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ததற்காய் இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். சிறைச்சாலையில் அடைபட்டு மகிழ்ச்சியாயிருந்த பல மிஷனரிகளின் வாழ்க்கை சரிதையை அவன் படித்திருக்கிறான். ஆனால் தன்னுடைய அனுபவம் அதுபோலில்லை என்று அவன் சொன்னான். தேவன் அவருக்காய் பாடனுபவிக்கும்பொருட்டு தவறான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அவன் மனைவியிடத்தில் சொன்னான். அவனது மனைவியோ, “இல்லை, அவர் சரியான நபரையே தெரிந்தெடுத்திருக்கிறார்; அது ஏதேச்சையானது அல்ல” என்று சொன்னாள்.

யூதேயா ஜனங்கள் பாவம் செய்ததினிமித்தம் அவர்களைத் தேவன் தண்டிப்பார் என்று எச்சரித்த எரேமியா தீர்க்கதரிசியோடு ட்ரூவை ஒப்பிடலாம். எரேமியா முன்னறிவித்த நியாயத்தீர்ப்பு இன்னும் தேசத்தின் மீது வரவில்லை. ஆனால் அவனைச் சிறையிலடைத்தனர். “கர்த்தாவே, நீர் என்னை இணங்கப்பண்ணினீர்” (வச.7) என்று எரேமியா தேவனைக் குற்றப்படுத்துகிறான். தேவன் தன்னை விடுவிக்கத் தவறிவிட்டார் என்பதைத் தீர்க்கதரிசி நம்ப நேரிட்டது. “நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று” (வச.8) என்று கூறுகிறான். “நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக” (வச.14) என்று சலித்துக்கொள்கிறான். “நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?” (வச.18).

ட்ரூ, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஆனால் அவனுடைய மிகுந்த பாடுகளின் மூலம், அவன் பலவீனமானவன் என்பதினால் தேவன் அவனை எரேமியாவைப் போலவே தெரிந்தெடுத்திருக்கிறார். ட்ரூவும் எரேமியாவும் இயல்பில் பலவான்களாக இருந்திருப்பார்களாகில், அவர்களுடைய வெற்றிக்கு அவர்களுடைய திறமை பாராட்டப்பட்டிருக்கும். அவர்கள் பலவீனர்களாயிருந்தபடியினால் அவர்களின் பொறுமையினால் உண்டான மகிமை தேவனுக்கே போகிறது (1 கொரிந்தியர் 1:26-31). அவனுடைய பெலவீனமே, இயேசுவுக்காய் பயன்படும் நேர்த்தியான மனிதனாய் அவனை மாற்றியது.