திரைக்குப் பின்னால்!
என் மகள் தன்னுடைய கேள்விக்கு விரிவானதொரு பதிலை எதிர்பார்த்து அவளுடைய தோழிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள். அதை அவள் தோழி வாசித்துவிட்டாள் என்பதை குறுஞ்செய்தி சேவை மூலம் அறிந்துகொண்டு எதிர்பார்ப்போடு பதிலுக்காக காத்திருந்தாள். சில நிமிடம்தான் கடந்திருக்கும், ஆனால் அதற்குள் பொறுமையிழந்து அத்தாமதத்தை எண்ணி எரிச்சலோடு புலம்ப ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்தில் எரிச்சல் கவலையாக மாறியது. இன்னும் பதில் வராததால் ஒருவேளை தங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என எண்ண ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வழியாக பதில் வந்ததும், அவர்களுடைய நட்பில் எப்பிரச்சனையும் இல்லை என்பதை உணர்ந்து என் மகள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அவ்வளவு நேரம் அவளுடைய தோழி அக்கேள்விக்கு வேண்டிய பதிலை அனுப்புவதில்தான் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான தானியேலும் கூட ஓர் பதிலை எதிர்பார்த்து கவலையோடு காத்திருந்தான். ஒரு மகா பெரிய யுத்தத்தை குறித்து பயங்கரமான தரிசனத்தை கண்டதும் தேவனைத் தாழ்மையோடு நோக்கி, உபவாசித்து ஜெபத்தில் தரித்திருந்தான் (வச. 10:3,12). மூன்று வாரங்களாக ஒரு பதிலையும் அவன் பெறவில்லை (வச. 2,13). இறுதியாக ஒரு தேவதூதன் வந்து, “முதல் நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது,” என தானியேலுடைய ஜெபத்தை குறித்து உறுதியளித்தான் (வச. 12). அதாவது 21 நாட்களும் தானியேலுடைய ஜெபத்தின் சார்பில் அத்தேவதூதன் போராடிக்கொண்டிருந்தான். இதைக் குறித்து ஒன்றையும் தானியேல் அறியாதிருந்தபோதிலும், முதல் நாள் தான் ஏறெடுத்த ஜெபம் துவங்கி தேவதூதன் பதில் கொண்டு வந்த 21வது நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் தேவன் கிரியை செய்து கொண்டுதான் இருந்தார்.
தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்கிற நிச்சயம், நாம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது, பதில் வரவில்லை என்றால் மிகுந்த கவலைக்குள்ளாவோம். ஆனால் நாம் அறியாதபொழுதும் தேவன் தாம் அன்புகூருகிறவர்களுக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை தானியேலின் அனுபவம் நமக்கு நினைவூட்டுகிறது.
பாதுகாப்பான அரவணைப்பில்
பிறந்து நான்கே நாளான தனதருமை மகளை ஏந்திக்கொள்ளும் பாக்கியத்தை என்னை நம்பி என் தோழி என்னிடம் தந்தாள். குழந்தையை நான் கையில் ஏந்திக்கொண்ட சிறிது நேரத்திலேயே அவள் அழத்தொடங்கினாள். அவளை நெருக்கமாக அணைத்து, அவளது தலையில் என் கன்னத்தை வைத்து அழுத்தி, லேசாக அசைத்து, மெல்லிய பாடலை பாடி அவளை அமைதிப்படுத்த முயன்றேன். அக்கறையுடன் நான் செய்த எந்த முயற்சியும் எடுபடவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக பெற்றோராக இருந்த எனது அனுபவம் கைகொடுக்கவில்லை. அவளை என்னால் சமாதானப்படுத்த முடியாமல் போகவே, ஆவலுடன் காத்திருந்த அவளது தாயாரின் கரத்திற்குள் அவளை வைத்தேன். அந்த நிமிடமே அமைதியானாள். அவளது அழுகுரல் ஓய்ந்தது, புதிதாய் பிறந்த அவளது பிஞ்சு உடலும் கலக்கம் மறந்து, பாதுகாப்பான இடத்திற்குள் வந்ததினால் தளர்ந்து நிம்மதியடைந்தது. தனது மகளை எப்படி சரியாக பிடித்து, தட்டிக்கொடுத்து தேற்றுவது என்று எனது தோழிக்கு நன்றாக தெரிந்திருந்தது.
மென்மையாக, நம்பகத்தன்மையுடனும், அக்கறையுடனும் ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தையை தேற்றுவாளோ, அதைப்போல்தான் தமது பிள்ளைகளை ஆறுதல்படுத்த தேவனும் தமது உதவிக்கரத்தை நீட்டுகிறார். சோர்ந்து போய் வருத்தத்துடன் இருக்கும்போது, அவர் நம்மை தமது கைகளில் அன்புடன் ஏந்திக்கொள்கிறார். நம் பிதாவும் சிருஷ்டிகருமான அவர் நம்மை முற்றிலும் அறிந்திருக்கிறார். ஆதலால், அவரை “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் (அவரையே) நம்பியிருக்கிறபடியால், (அவர்) அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்” (ஏசா. 26:3).
இந்த உலகத்தின் பிரச்சனைகள் நமது இருதயத்தை போட்டு அழுத்தும்பொழுது, ஒரு அன்பான தகப்பனாக இருக்கும் அவர், தம் பிள்ளைகளான நம்மைக் காத்து, நமக்காக யுத்தம் செய்து நம்மை வழிநடத்துகிறார் என்பதை அறிந்து, அவருக்குள் ஆறுதலடைவோமாக.
விரல்களின் ஊடாக வழிந்து
உணவக பணம் செலுத்துமிடத்தில் அஜாக்கிரதையாக என் கையிலிருந்த குவளையை தவறவிட்ட பொழுது, அதில் இருந்த பானம் மேஜையில் சிந்தி, வழிந்தோடி கீழே கொட்ட ஆரம்பித்தது. தர்மசங்கடத்துடன் என்ன செய்வது என்று புரியாமல் என் இரண்டு கைகளையும் கூப்பி, அந்நீர்வீழ்ச்சியை பிடிக்க முயன்றேன். ஆனால் என் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏனென்றால் என் கரங்களில் ஒரு தேக்கரண்டி அளவு பானத்தைத் தவிர மற்றவை என் கால்களைச் சுற்றி சிறுசிறு குட்டைகளாக கொட்டிக்கிடந்தன.
என் வாழ்க்கையும் கூட சில நாட்கள் இப்படித்தான் இருக்கும். பிரச்சனைகளைத் தீர்க்க திணறிக் கொண்டிருப்பேன், அனைத்தையும் மேற்பார்வை செய்யவும் சூழ்நிலைகளை என் கட்டுப்பாட்டில் வைக்கவும் தடுமாறிக் கொண்டிருப்பேன். நான் எவ்வளவு தான் முயன்றாலும் எல்லாவற்றையும் நேர்த்தியாக நிர்வகிக்க இயலாமல் என் கரங்கள் தளர்ந்து போகும். எப்படியோ ஏதாவதொன்று என் விரல்களின் ஊடாய் நழுவி தரையிலே என் காலருகே கொட்டி, என்னை திணறச் செய்துவிடும். என் கைகளை வளைத்து, என் விரல்களை நெருக்கமாக்கினாலும் என்னால் சமாளிக்க முடிவதில்லை.
ஆனாலும் இவை தேவனால் கூடும். அவர் இப்பூமியின் தண்ணீர்களை, அதாவது சமுத்திரங்கள், ஆறுகள் மற்றும் மழையையும் தன்னுடைய கைப்பிடியினால் அளக்கிறார் என்று ஏசாயா கூறுகிறார் (40:12). அது எப்படி சாத்தியம் என்றால், அவருடைய கரங்கள் அவ்வளவு பெரிதாக உள்ளது. அப்படியென்றால், ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீருக்கு மேலாக நம்முடைய கரங்களில் நாம் ஏந்தும்படி தேவன் நம்மை சிருஷ்டிக்காததால், அதற்கும் மேலாக எந்த முயற்சிக்கத் தேவையில்லை. சமாளிக்க முடியாமல் திணற நேரிட்டால், நாம் நம்முடைய கவலைகளையெல்லாம் அவருடைய வல்லமையான கரங்களில் ஒப்படைத்து விடுவோமாக.