எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

சரியான இயேசு

குழுவினர் விவாதிக்கவேண்டிய நாவலைக் குறித்து புத்தக கழகத் தலைவர் சொன்ன மாத்திரத்தில், அறையின் அமைதி மறைந்து சலசலப்பு ஏற்படத் துவங்கியது. என் சிநேகிதி ஜோன் உன்னிப்பாக படித்தாள். ஆனால் அந்த நாவலின் முக்கிய திருப்பத்தை அடையாளம் காண அவளால் இயலாமல்போனது. கடைசியில் பார்த்தால், அவள் அதே தலைப்பு கொண்ட வேறொரு புத்தகத்தை வாசித்திருக்கிறாள் என்பது தெரியவந்தது. அவள் தவறான புத்தகத்தை ஆர்வத்தோடு படித்து மகிழ்ந்தாலும், சரியான புத்தகத்தை படித்த மற்ற குழுவினரோடு விவாதத்தில் இணைய அவளால் இயலாமல் போனது. 

கொரிந்திய திருச்சபை விசுவாசிகள் “வேறொரு” இயேசுவை விசுவாசிப்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பவில்லை. கள்ளப் போதகர்கள் திருச்சபையில் ஊடுருவி தவறான இயேசுவை அவர்களுக்கு போதித்திருந்தால், அந்த பொய்யை நீங்கள் நம்பியிருப்பீர்கள் என்று அவர்களை பவுல் எச்சரிக்கிறார் (2 கொரிந்தியர் 11:3-4). 

இந்த கள்ளப் போதகர்களின் போதனைகளை பவுல் கண்டித்தார். அவர் கொரிந்திய திருச்சபைக்கு எழுதிய முதல் நிருபத்தில், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துவைக் குறித்து அவர் விளக்கினார். இந்த இயேசுவே “நமது பாவக்களுக்காக மரித்து... மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து... பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்,” இறுதியில் பவுலுக்கும் தரிசமானார் (1 கொரிந்தியர் 15:3-8). இந்த இயேசு தன்னுடைய தெய்வீகத்தை நிரூபிக்கும்பொருட்டு கன்னி மரியாளின் மூலம் இப்பூமியில் அவதரித்து, இம்மானுவேல் (தேவன் நம்மோடு) என்று பெயரிடப்பட்டார் (மத்தேயு 1:20-23).

இது நீங்கள் அறிந்த இயேசுவைப்போல் இருக்கிறதல்லவா? அவரைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியங்கள் அனைத்தையும் புரிந்து ஏற்றுக்கொள்வது என்பது பரலோகத்திற்கு செல்லும் பாதையில் நாம் சரியாய் நடக்கிறோம் என்பதற்கான ஆதாரம். 

கிறிஸ்துமஸின் அற்புதம்

விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பைக் கண்டேன். அதிலிருந்த குழந்தை இயேசுவின் சிற்பத்தில், குழந்தையின் வடிவம் அச்சசலாக செதுக்கப்பட்டிருந்தது. இந்த புதிதாய் பிறந்த குழந்தை, துணியால் சுற்றப்பட்டு, கண்கள் மூடியது போலில்லாமல், அதின் கண்கள் திறந்தும், கைகளை விரித்து சற்றே துணிகளை அகற்றியும், கரங்கள் அகற்றி, விரல்கள் நீட்டப்பட்டிருந்தது. "இதோ இங்கே இருக்கிறேன்" என்று சொல்வது போலிருந்தது.

இந்தச் சிறிய சிலை கிறிஸ்துமஸின் அற்புதத்தைப் பறைசாற்றியது. தேவன் தமது குமாரனை மனு உருவில் உலகத்திற்கு அனுப்பினார். குழந்தையான இயேசு வளருகையில் அவருடைய சிறு கைகள் பொம்மைகளோடு விளையாடினது, பின்பு வேதத்தை ஏந்தினது, பின்னர் ஊழியம் செய்யும் வரைக்கும் மரச்சாமான்களை உருவாக்கியது. அவர் பிறந்தபோது மிருதுவான பூரணமான அவருடைய கால்கள், ஓரிடம் விட்டு வேறிடம் சென்று போதிக்கவும், சுகமாக்கவும் அவரை சுமந்தது. அவருடைய வாழ்வின் முடிவிலே, இந்த கைகளும் கால்களும் ஆணிகளால் கடாவப்பட்டு, அவருடைய உடலைச் சிலுவையில் சுமந்தது.

தமது குமாரனை நமது பாவங்கள் போக்கும் பலியாகத் தேவன் அருளி,  நம்மீதிருந்த பாவத்தின் ஆளுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று ரோமர் 8:3 சொல்கிறது. நாம் இயேசுவின் பலியை நமது பாவங்களுக்கான பிராயச்சித்தமாக ஏற்றுக்கொண்டு, நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்கையில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைவோம். தேவ  குமாரன் நமக்காகக் குழந்தையாகப் பிறந்ததால், நாம் தேவனோடு ஒப்புரவாக வழியுண்டு, அவரோடு நித்தியகாலம் வாழும் நிச்சயமும் உண்டு.

உம்முடைய சத்தத்தைப் பயன்படுத்தி

எட்டு வயதிலிருந்தே, லிசா திக்குவாயுடன் போராடினாள். மக்களோடு பேச வேண்டிய சமுதாய சூழலை துணிச்சலாய் எதிர்கொள்ளத் தயங்கினாள். ஆனால் பேச்சு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்பு, அது அவளுடைய எதிர்காலத்திற்கு உறுதுணையாயிருந்தது. லிசா மற்றவர்களுக்கு உதவ தனது குரலைப் பயன்படுத்த முடிவு செய்தாள். உணர்வு ரீதியாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் ஆலோசனை வழக்கும் சேவையை அவள் செய்தாள். 

சிறைப்பட்ட இஸ்ரவேலர்களை அவர்களின் சிறையிருப்பிலிருந்து மீட்பதற்கு பேச வேண்டிய அவசியத்தைக் குறித்து மோசே கவலைப்பட்டான். தேவன் மோசேயை, பார்வோனை எதிர்கொள்ளும்படிக்கு கேட்டார். ஆனால், மோசே தான் திக்குவாயன் என்பதினால் அதை ஏற்க மறுத்தான் (யாத்திராகமம் 4:10). தேவன் அவரிடம், “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?” என்று தேவன் மோசேக்கு சவால் விட்டு, “நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்” (வச. 11-12) என்று வாக்களித்தார். 

தேவனுடைய இந்த பதிலானது, நம்முடைய பெலவீனங்களிலும் தேவன் கிரியை நடப்பிக்க முடியும் என்று உறுதியளிக்கிறது. இதை நாம் இருதயத்தில் நம்பினாலும், அதின் படி வாழ்வது கடினம். மோசே தனக்கு பதிலாய் வேறு யாரையாவது அனுப்பும்படிக்கு தேவனிடத்தில் கேட்டுக்கொண்டான் (வச. 13).  எனவே மோசேயின் சகோதரன் ஆரோனை அவனுடன் வர தேவன் அனுமதித்தார் (வச. 14).

மற்றவர்களுக்கு உதவும்படிக்கு நம்மிடம் குரல் வளம் இருக்கிறது. நாம் பயப்படலாம். நாம் தகுதியற்றவர்களாயிருக்கலாம். நமக்கு சரியான வார்த்தைகள் கிடைக்காமல் இருக்கலாம். 

நம்முடைய சிந்தனைகளை தேவன் அறிவார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்பொருட்டு, மற்றவர்களுக்கு நாம் ஊழியம் செய்வதற்கு ஏதுவான வார்த்தைகளை அவர் அருளுவார்.

வாழ்க்கையின் அடையாளங்கள்

என்னுடைய மகள் இரண்டு நண்டுகளைப் பரிசாகப் பெற்றாள். ஒரு கண்ணாடிப் பெட்டியை உண்டாக்கி, அதில் மணலைப் போட்டு, அதில் அந்த நண்டுகள் வாழ்வதற்கு ஏதுவான அமைப்பை ஏற்படுத்தினாள். அது உயிர்வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், புரதச்சத்து, காய்கறிகள் ஆகியவற்றை அதில் வைத்தாள். அவைகள் மகிழ்ச்சியாய் இருப்பதுபோல தெரிந்தது. ஆனால் ஒரு நாள் அந்த நண்டுகள் காணாமல் போய்விட்டது. எங்கே என்று தேடினோம். கடைசியில் அது தன்னை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது என்று கண்டறிந்தோம். அப்படியே இரண்டு மாதங்கள் அது மண்ணுக்குள்ளேயே புதைந்து, தன்னுடைய ஓட்டை மட்டும் வெளியே காண்பித்தவண்ணம் இருந்தது.
மூன்று மாதங்கள் கடந்துபோனது. அது மரித்துவிட்டதோ என்று நாங்கள் கவலைகொள்ள ஆரம்பித்தோம். காத்திருந்து பொறுமையிழந்தோம். கடைசியில் அது உயிரோடிருப்பதற்கான அடையாளங்களைப் பார்த்தோம். மண்ணுக்குள்ளிருந்து எண்ணற்ற நண்டு குஞ்சுகள் வெளியேறியது.
இஸ்ரவேலர்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்த நாட்களில் தேவனுடைய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுமா என்று சந்தேகித்திருக்கக்கூடும் என்று நான் எண்ணுகிறேன். அவர்கள் சோர்வுற்றிருந்தார்களோ? அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிருப்பிலேயே முடிந்துவிடுமோ என்று அஞ்சினார்களோ? எரேமியாவின் மூலம் தேவன் அவர்களுக்கு, “நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் (எருசலேமுக்கு) திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்” (எரேமியா 29:10) என்று சொல்லுகிறார். எழுபது ஆண்டுகள் கழித்து, பெர்சிய மன்னன் கோரேசின் மூலம், யூதர்கள் தங்கள் சுதேசம் திரும்பி, ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படி செய்தார் (எஸ்றா 1:1-4).
எந்த மாற்றங்களும் நிகழாமல் காத்திருக்கும் நாட்களில், தேவன் நம்மை மறந்துவிடுவதில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மில் பொறுமையை உண்டாக்கும்போது, அவர் நம்பிக்கையின் காரணர், வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர், எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தக்கூடியவர் என்பதை நாம் அறியக்கூடும்.

எங்கே திரும்புவது?

அந்தப் பள்ளியில் அஷோக்கின் விளையாட்டு திறமையையும், எளிதில் உணர்ச்சி வசப்படாத அமைதியையும் பாராட்டாதவரே இல்லை. விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு அலாதி சந்தோஷம்.

தன் வீட்டினருகே இருந்த ஒரு சபைக்குச் சென்றதால் அவன் இயேசுவைப் பின்பற்ற முடிவுசெய்தான். அதுவரைக்கும், அவன் அநேக குடும்ப நெருக்கடிகளைச் சந்தித்தான், அதற்கு ஆறுதலாகப் போதைப் பொருட்களையும் பழகிக்கொண்டான். அவனுடைய மனமாற்றத்திற்குப்பின் சிலகாலம் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது, ஆனால் சிலவருடங்கள் கழிந்து மீண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கினான். முறையான ஆலோசனையும், சிகிச்சையும் இல்லாத காரணத்தால், போதைப் பழக்கம் எல்லை தாண்டவே அவன் மரித்தான்.

நெருக்கடியின்போது நாம் பழைய பாவத்திற்குத் திரும்புவது சுலபம். இஸ்ரவேலர்கள் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த அசீரியர்களின் தாக்குதலுக்குத் தப்பிக்க, உதவிக்காக தங்கள் பழைய எஜமானர்களான எகிப்தியர்களிடம் திரும்பினர் (ஏசாயா 30:1–5). இது அழிவுக்கேதுவானது என்று தேவன் முன்னறிவித்திருந்தாலும், இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையின் மத்தியிலும், அவர்களுக்காகத் தொடர்ந்து அக்கறை கொள்கிறார். தேவனின் இதயத்தை ஏசாயா, "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்" (வ.18). என்று வெளிப்படுத்தினார்.

நமது வேதனைக்கு வேறெங்கிலும் ஆறுதலைத் தேட நாம் முயலுகையில், தேவன் இப்படியே நம்மையும் அணுகுகிறார். நமக்கு உதவ விரும்புகிறார். நம்மை அடிமைப்படுத்தும் பழக்கங்களால் நம்மை நாமே காயப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. சில பொருட்களும், பழக்கங்களும் நமக்கு உடனடி தீர்வை தருமென்று நாம் ஈர்க்கப்படலாம். ஆனால் தம்மோடு நெருக்கமாக நடக்கையில் உண்டாகும், அதிகாரப்பூர்வமான நிரந்தர தீர்வை நமக்குத் தரவே, தேவன் விரும்புகிறார்.

இரும்பைப் போல் வலிமையான

இரும்பொறை வண்டுகள் என்று அழைக்கப்படும் வண்டுகளின் கடினமான வெளிப்புற அமைப்பு அதை மற்ற உயிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட வகை, மிக அதிகமான அழுத்தத்தையும் தாங்கக்கூடியவை. அந்த வண்டுகளின் வெளிப்புற ஓடானது, அதிக அழுத்தத்தின் போது உடைந்து நொறுங்காமல் விரிவடையக்கூடிய தன்மையுடையது. அதனுடைய தட்டையான அடிப்பக்கம், விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனுடைய உடல் எடையைக் காட்டிலும் 40,000 மடங்கு அதிக அழுத்தத்தை அதனால் தாங்க முடியும் என அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.  

இந்த பூச்சியினத்தை தேவன் எந்த அளவிற்கு பாதுகாப்பாய் வடிவமைத்தாரோ, அதே அளவிற்கு எரேமியாவையும் பாதுகாப்போடு தேவன் நடத்தினார். இஸ்ரவேலுக்கு பிரியமில்லாத செய்தியை அறிவிக்கப்போகும் இந்த தீர்க்கதரிசி அதிகபட்சமான அழுத்தத்தை சகிக்கவேண்டியுள்ளதால், தேவன் அவரை “இரும்புத்தூணும், வெண்கல அலங்கமும்” (எரேமியா 1:18) ஆக்குவேன் என்று வாக்குப்பண்ணினார்.

தீர்க்கதரிசியை யாரும் வீழ்த்தவோ, செயலிழக்கசெய்யவோ, மேற்கொள்ளவோ முடியாது. தேவனுடைய பிரசன்னத்தினாலும் பாதுகாப்பினாலும் அவருடைய வார்த்தை உறுதியாய் ஸ்தாபிக்கப்படும். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எரேமியா, தவறாய் குற்றஞ்சுமத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, கிணற்றில் தூக்கி எறியப்பட்டு துன்பங்களை அனுபவித்தாலும், அவன் ஜீவித்தான். தன்னுடைய மன ரீதியான அழுத்தத்தையும் மேற்கொண்டு எரேமியா ஜெயமெடுத்தான். சந்தேகமும் துயரமும் அவனை ஆட்கொள்ள நேரிட்டது. தொடர்ந்த நிராகரிப்பும், பாபிலோனிய படையெடுப்பைக் குறித்த பயமும் அவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. எரேமியாவின் ஆவியும் சாட்சியும் உடைக்கப்படாவண்ணம் தேவன் எரேமியாவுக்கு தேவன் தொடர்ந்து உதவி செய்தார்.  

தேவன் நமக்கு கொடுத்த பணியில் நாம் சோர்வுற்றாலோ அல்லது பின்வாங்கினாலோ, எரேமியாவின் தேவன் நம் தேவன் என்பதை நினைவில் கொள்வோம். அவர் நம்மை இரும்புத்தூணாய் மாற்றி, நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலனை விளங்கச் செய்வார் (2 கொரிந்தியர் 12:9).

தேவனுக்கு தெரியும்

ஒரு ஓவிய கண்காட்சியில் வரையப்பட்டிருந்த ஒரு பெரிய ஓவியத்தை ஒரு தம்பதியினர் பார்வையிட்டனர். அதின் அருகில் பெயிண்ட் கேன்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள், அந்த ஓவியம் இன்னும் வரைந்து முடிக்கப்படவில்லை என்றும், பார்வையாளர்கள் தான் அதை நிறைவுசெய்யவேண்டும் என்று எண்ணி, தங்களுடைய பங்கிற்கு சில வர்ணங்களை பூசிவிட்டு கடந்து சென்றனர். ஆனால் அந்த ஓவியம் சமீபத்தில் வரையப்பட்டது என்பதை பிரதிபலிப்பதற்காய், ஓவியர்கள் அவற்றை அங்கே விட்டுச் சென்றிருந்தனர். அந்த சம்பவத்தின் காணொலிகளை பரிசோத்தி பின்னரே, நிர்வாகத்தினர் தங்கள் தவறை உணர்ந்தனர். 

யோர்தானின் கிழக்கே வாழ்ந்த இஸ்ரவேலர்கள் நதிக்கு அருகில் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியபோது, தவறான புரிதலை உருவாக்கினர். தேவனை ஆராதிப்பதற்கு ஆசரிப்புக் கூடாரம் மட்டுமே என்றிருந்த நிலையில், மேற்கத்திய கோத்திரத்தார்கள் இதை தேவனுக்கு எதிரான முரட்டாட்டமாய் கருதினர் (யோசுவா 22:16).

கிழக்கத்திய கோத்திரத்தார், தேவனின் பலிபீடத்தின் மாதிரியை மட்டுமே உருவாக்க நினைத்த எண்ணத்தை விளக்கும் வரை பதட்டம் அதிகரித்தது. தங்கள் சந்ததியினர் அதைக் காணவும், தங்களின் முற்பிதாக்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்ளும் எண்ணத்திலும் அதை அரங்கேற்றினர் (வச. 28-29). “தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்” (வச. 22) என்று கூச்சலிட்டனர். அவர்கள் சொன்னதை மற்றவர்களும் காது கொடுத்து கேட்டு, அங்கே நடப்பதைக் கண்டு, தேவனைத் துதித்துவிட்டு வீடு திரும்பினர்.

“கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்” (1 நாளாகமம் 28:9). ஒவ்வொருவரின் நோக்கங்களும் அவருக்கு தெளிவாக தெரியும். குழப்பமான சூழ்நிலைகளை சரிசெய்ய உதவுமாறு நாம் அவரிடம் கேட்டால், அதை தெளிவுபடுத்தும் வாய்ப்பையும், நமக்கு விரோதமான செய்கைகளை மன்னிக்கும் கிருபையையும் அவர் நமக்கு அருளுவார். நாம் மற்றவர்களுடன் ஒற்றுமையாய் வாழும் எண்ணத்தோடு, அவரிடத்திற்கு திரும்புவோம். 

அசாத்தியமான துணிச்சல்

1478ஆம் ஆண்டு இத்தாலி தேசத்தின் ப்ளோரன்ஸ் மாகாணத்தை ஆட்சிசெய்த லோரென்ஸோ டி மெடிசி, எதிரிகளின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தார். அவர் மீது நடத்தப்பட்ட அந்த தாக்குதலினிமித்தம் கோபம் கொண்ட அவருடைய தேசத்து மக்கள் எதிர் தாக்குதல் நிகழ்த்தினர். நிலைமை மோசமாக, கொடூர மன்னனான முதலாம் ஃபெரான்டே, லோரென்ஸோவின் எதிரியானான். ஆனால் லோரென்ஸோவின் துணிச்சலான செயல் சூழ்நிலையை தலைகீழாக மாற்றியது. அவன் அந்த கொடூர மன்னனை எந்த யுத்த ஆயுதமுமில்லாமல் நேரில் போய் சந்தித்தார். இவரின் இந்த வீரமும், துணிச்சலுமான செயல் அந்த கொடூர மன்னனின் மனதை மாற்றி, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. 

தானியேலும் ராஜாவின் மனதை மாற்றக்கூடிய காரியத்தை செய்தான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு விளக்கமளிக்கக்கூடிய நபர் பாபிலோனில் யாருமில்லை. அது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், பாபிலோனில் இருந்த ஞானிகளையும், தானியேல் மற்றும் அவன் நண்பர்களையும் கொல்லக் கட்டளையிட்டான். தானியேலைக் கொல்ல கட்டளையிட்ட ராஜாவின் சமுகத்திற்கு, தானியேல் துணிச்சலாய் வருகிறான் (தானியேல் 2:24).

நேபுகாத்நேச்சாருக்கு முன், அந்த சொப்பனத்தை வெளிப்படுத்திய தேவனுக்கு மகிமை செலுத்துகிறான் (வச. 28). தானியேல் அந்த சொப்பனத்திற்கு விளக்கமளித்தபோது, நேபுகாத்நேச்சார், தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவருமாகிய தேவனுக்கு மகிமையை செலுத்துகிறான் (வச. 47). தேவன் மீதான விசுவாசத்தில் ஊன்றப்பட்ட தானியேலின் இந்த அசாத்தியமான துணிச்சல், அவனையும் அவனுடைய சிநேகிதர்களையும், மற்ற பாபிலோனிய ஞானிகளையும் அன்றைய தினம் உயிரோடே காத்தது. 

நம் வாழ்விலும் சில முக்கியமான செய்திகளை சொல்ல துணிச்சலும், தைரியமும் நமக்கு அவசியம். தேவன் நமக்கு ஞானத்தை அருளி, என்ன சொல்ல வேண்டும் என்பதையும், அதை நேர்த்தியாய் சொல்லக்கூடிய தைரியத்தையும் அருளி நம்மை வழிநடத்துவாராக. 

பாதுகாப்பிற்கு இழுக்கப்படுதல்

அந்த சிறுபெண் ஆழமில்லா அந்நீரோடையில் தடுமாறி நடப்பதை அவள் தந்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவள் தன் முட்டி வரைக்கும் காலணி அணிந்திருந்தாள். கீழ்நோக்கி பாய்ந்த நீரோடையில் அவள் சறுக்குகையில், தண்ணீர் ஆழமாகி, அவளால் மேற்கொண்டு நடக்ககூடாதபடி பாய்ந்தது. தன்னால் அடுத்த அடி வைக்கமுடியாதபோது, “அப்பா, நான் சிக்கிக்கொண்டேன்” என்று அலறினாள். மூன்றே அடிகள் தான், அவள் தந்தை அவளருகே நின்றார், அவளை கரையில் இழுத்துவிட்டார். அவள் சிரித்துக்கொண்டே தன் காலணியை உதறி கழட்ட, அதிலிருந்த தண்ணீர் கீழே கொட்டியது.

தேவன், சங்கீதக்காரன் தாவீதை தன்னுடைய சத்துருக்களிடமிருந்து மீட்ட பிறகு, அவரும் இப்படி சற்று நேரமெடுத்து அமர்ந்து, “தன் காலணிகளை கழற்றி,” தன் ஆத்துமா விடுதலையில் நனைய அனுமதித்தார். தன் உணர்வுகளை வெளிப்படுத்த பாடலொன்றையும் எழுதினார். “ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்” (2 சாமுவேல் 22:4) என்றார். தேவன் தன்னுடைய கன்மலை, கோட்டை, கேடகம் மற்றும் உயர்ந்த அடைக்கலம் என்று துதிக்கிறார் (வச. 2–3). பின்பு தேவன் பதிலளித்த விதத்தை பாடல்நடையில் வர்ணிக்கிறார், “பூமி அசைந்து அதிர்ந்தது; வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார். ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (வச. 8, 10, 13–15, 17).

இன்றைக்கு உங்களைச் சுற்றிலும் எதிர்ப்பை நீங்கள் உணரலாம். ஆவிக்குரிய ரீதியில் முன்னேறக்கூடாதபடி பாவத்தில் நீங்கள் சிக்கியிருக்கலாம். தேவன் கடந்த காலத்தில் உங்களுக்கு உதவிய விதத்தை நினைத்துப்பாருங்கள். அவரைத் துதித்து, மீண்டும் அதை செய்யுமாறு அவரைக் கேளுங்கள். விசேஷமாக உங்களை தமது ராஜ்யத்திற்குட்படுத்தி விடுவித்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள் (கொலோசெயர் 1:13).