எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

பிரிவு வார்த்தைகள்

ஜான் பெர்கின்ஸ், மரிப்பதற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கிறார். இன நல்லிணக்கத்தின் போராளியாக அறியப்பட்ட பெர்கின்ஸ், “மனந்திரும்புதலே தேவனிடம் திரும்புவதற்கான ஒரே வழி. நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்கள்” என்று தன் கடைசி வார்த்தைகளை பதிவுசெய்கிறார். 

இதே வார்த்தைகளை வேதாகமத்தில் இயேசுவோடு சேர்த்து அநேகர் பயன்படுத்தியிருக்கின்றனர். இயேசு, “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” (லூக்கா 13:3) என்று சொல்லுகிறார். பேதுரு, “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:20) என்று சொல்லுகிறார். 

வேதாகமத்தில் வெகுகாலத்திற்கு முன்பாகவே அனைத்து ஜனங்களின் மனந்திரும்புதலை விரும்பிய ஒரு மனிதர் இருக்கிறார். தீர்;க்கதரிசியும், ஆசாரியனும், நியாயாதிபதியுமாயிருக்கிற சாமுவேல், “இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி” (1 சாமுவேல் 12:1) சொன்னது என்னவென்றால், “பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பெல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்” (வச. 20) என்று சொல்லுகிறார். தீமையிலிருந்து விலகி முழுஇருதயத்தோடும் தேவனை தேடச்செய்வதே அவருடைய மனந்திரும்புதலின் செய்தி. 

நாமெல்லாரும் பாவம் செய்து தேவனை விட்டு வழிவிலகிப்போனோம். நாமெல்லாருக்கும் மனந்திரும்புதல் அவசியப்படுகிறது. அதாவது, பாவத்தை விட்டு வழிவிலகி, நம்மை மன்னித்து வழிநடத்தும் இயேசுவிடம் திரும்புவது. தேவன் தன்னுடைய நாமத்தை கனப்படுத்தும் மனிதர்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்தும் மனந்திரும்புதலின் வல்லமையை அறிந்த ஜான் பெர்கின்ஸ் மற்றும் சாமுவேல் என்னும் இந்த இரண்டு மனிதர்களுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுப்போம்.

நட்சத்திரங்களை ஆராய்தல்

2021 ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டு முயற்சியானது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை ஏவுவதற்கு வழிவகுத்தது. இது பிரபஞ்சத்தை சிறப்பாக ஆராய பூமியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல்கள் தூரம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விசித்திரமான தொலைநோக்கியானது, ஆழமான விண்வெளியில் ஊடுருவி நட்சத்திரங்களையும் மற்ற வான அதிசயங்களையும் ஆராய்ச்சி செய்யும். 

இது உண்மையில் ஆச்சரியமான ஒரு வானியல் தொழில்நுட்பம். இது நேர்த்தியாய் வேலை செய்தால், அற்புதமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை நமக்குக் கொடுக்கும். ஆனால் அதன் பணி புதியது அல்ல. ஏசாயா தீர்க்கதரிசி நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்து, “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசாயா 40:26) என்று விவரிக்கிறார். “இரவுக்கு இரவு” (சங்கீதம் 19:2) அவைகள் அனைத்தும் இந்த ஆச்சரியமான அண்டசராசங்களை சிருஷ்டித்த தேவனுடைய புகழையும், இரவு வானத்தை ஒளிரச்செய்யும் ஒளிக்கீற்றுகளைக் குறித்தும் விவரித்துக்கொண்டிருக்கின்றன (வச. 3). 

ஒளிரக்கூடிய இதுபோன்ற நட்சத்திரங்கள் அனைத்தையும் அவர் தொகையிடுகிறார்: “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்” (சங்கீதம் 147:4). சில நேர்த்தியான கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்து அவற்றை ஆகாயத்திற்கு ஆராய்ச்சி செய்யும்பொருட்டு அனுப்பிவைப்பதின் மூலம், வசீகரிக்கும் ஆச்சரியங்களை அறிய நேரிடுகிறது. அவைகள் அனைத்தும் அவற்றை உண்டாக்கியவரின் மகிமையை விளங்கப்பண்ணுகிறது. ஆம்! “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது” (19:1), நட்சத்திரங்களும் வெளிப்படுத்துகிறது. 

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி. 

மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார். 

இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம். 

இதை ஏன் செய்ய வேண்டும்?

எனது ஆறாம் வகுப்பு பேரன் மோகனுக்கு சில கடினமான கணக்கு வீட்டுப்பாடங்களில் நான் உதவி செய்து கொண்டிருந்தபோது, பொறியியலாளராக வேண்டும் என்ற தனது கனவை என்னிடம் கூறினான். அவனது பாடத்தில் உள்ள அச்சு ரேகைகளை உபயோகிக்கக் கற்றுக்கொண்ட பின்னர் அவன், "நான் எப்போது இந்த பொருட்களைப் பயன்படுத்தப் போகிறேன்?" என்றான்.

என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை, "சரி, மோகன் நீ ஒரு பொறியியலாளராக மாறினால், நீ பயன்படுத்தப் போகும் பொருட்கள் இவைதான்" என்றேன். கணிதத்திற்கும் அவன் எதிர்பார்க்கும் எதிர்காலத்திற்கும் உள்ள தொடர்பை அவன் உணரவில்லை.

சில சமயங்களில் நாம் வேதத்தை அப்படித்தான் பார்க்கிறோம். நாம் பிரசங்கங்களைக் கேட்கும்போதும், வேதத்தின் சில பகுதிகளைப் படிக்கும்போதும், “இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று நாம் நினைக்கலாம். சங்கீதக்காரன் தாவீதிடம் சில பதில்கள் உண்டு. வேதாகமத்தில் காணப்படும் தேவனின் சத்தியங்கள் "ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதும்", "பேதையை ஞானியாக்குகிறதும்" மற்றும் "இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதும்" (சங்கீதம் 19:7-8) போன்ற ஆற்றலுள்ளவை என்றார். சங்கீதம் 19ல் குறிப்பிடப்பட்டுள்ள வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களில் (மேலும் வேதாகமத்தின் அனைத்து பகுதிகளிலும்) காணப்படும் வேதத்தின் ஞானம், நம்மை ஆவியானவரின் வழிநடத்துதலை அனுதினமும் நம்பியிருக்க நமக்கு உதவுகிறது (நீதிமொழிகள் 2:6).

மேலும் வேதவசனங்கள் இல்லாவிடில் அவரை அனுபவிக்கவும், அவருடைய அன்பையும் வழிகளையும் நன்றாக அறிந்துகொள்ளவும் தேவன் நமக்கு அளித்திருக்கும் இன்றியமையாத வழியை நாம் இழந்துவிடுவோம். வேதத்தை ஏன் படிக்க வேண்டும்? ஏனென்றால், "கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது." (சங்கீதம் 19:8).

மிகவும் தனிமையானவன்

கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். ஆதியாகமம் 39:21

ஜூலை 20, 1969 இல், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் இறங்கும் விண்ணூர்தியிலிருந்து வெளியேறி, சந்திரனின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர்கள் ஆனார்கள். ஆனால் அப்பல்லோ 11க்கான கட்டளை பிரிவின் ஊர்தியில் பறந்து கொண்டிருந்த அவர்களின் குழுவில் மூன்றாவது நபரான மைக்கேல் காலின்ஸைப் பற்றி நாம் நினைப்பதில்லை.

சந்திரனின் மேற்பரப்பைச் சோதிக்க அவரது அணியினர் ஏணியில் இறங்கிய பிறகு, காலின்ஸ் சந்திரனின் தொலைதூரப் பக்கத்தில் தனியாகக் காத்திருந்தார். அவர் நீல், பஸ் மற்றும் பூமியில் உள்ள அனைவருடனும் தொடர்பில் இல்லை. நாசாவின் பணிக் கட்டுப்பாடு, "ஆதாமிற்குப்பின் மைக் காலின்ஸ் போலத் தனிமையை எவருமே அறிந்திருக்கவில்லை" என்று கூறியது.

நாம் முற்றிலும் தனியாக உணரும் நேரங்கள் உள்ளன. உதாரணமாக, யாக்கோபின் மகன் யோசேப்பு, இஸ்ரவேலிலிருந்து எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ​​அவனுடைய சகோதரர்கள் அவனை விற்றபின் எப்படி உணர்ந்தான் என்று கற்பனை செய்து பாருங்கள் (ஆதியாகமம் 37:23-28). பின்னர் அவன் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தள்ளப்பட்டதன் மூலம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டான். (39:19-20).

அருகில் எங்கும் குடும்பம் இல்லாத அந்நிய தேசத்தில் யோசேப்பு சிறையில் எப்படி உயிர் பிழைத்தான்? இதைக் கவனியுங்கள்: "அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து" (வச. 20-21). ஆதியாகமம் 39ல் உள்ள ஆறுதலான இந்த உண்மையை நான்கு முறை நினைவுபடுத்தப்படுகிறோம்.

நீங்கள் தனியாக உணர்கிறீர்களா அல்லது மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறீர்களா? "நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசுவால் வாக்குப்பண்ணப்பட்ட தேவனின் பிரசன்னத்தின் உண்மையைப் பற்றிக் கொள்ளுங்கள். இயேசு உங்கள் இரட்சகராக இருப்பதால், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை.

ஏழு நிமிட திகில்

பிப்ரவரி 18, 2021 அன்று செவ்வாய் கிரகத்தின் பெர்சிவரன்ஸ் என்ற ரோவர் வாகனம் அங்கு தரையிறங்கியபோது, அதின் வருகையை கண்காணித்தவர்கள் “ஏழு நிமிட திகிலை” அனுபவிக்கவேண்டியிருந்தது. விண்கலம் 292 மில்லியன் மைல் பயணத்தை முடித்து, அது வடிவமைக்கப்பட்டபடி தானே தரையிறங்கும் சிக்கலான செயல்முறையை மேற்கொண்டது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு சிக்னல்கள் வந்துசேருவதற்கு சில நிமிடங்கள் ஆகும். ஆகையினால் அந்த ரோவர் வாகனத்திலிருந்து எந்த தகவலையும் நாசா விஞ்ஞானிகளால் கேட்க முடியவில்லை. பல உழைப்புகளையும் பொருட்செலவையும் விரயமாக்கி அந்த பிரம்மாண்ட கண்டுபிடிப்பைச் செய்தவர்கள் அத்துடன் தொடர்பை இழப்பது திகிலடையச்செய்யும் ஒரு அனுபவம். 

நாம் சிலவேளைகளில் தேவனுடைய சத்தத்தைக் கேட்கத் தவறும்போது இதுபோன்று உணருவதுண்டு. நாம் ஜெபிக்கிறோம் ஆனால் பதில் கிடைக்கவில்லை. வேதாகமத்தில் ஜெபத்திற்கு உடனே பதிலைப் பெற்றுக்கொண்டவர்களையும் (பார்க்க. தானியேல் 9:20-23), வெகு நாட்கள் கழித்து பதிலைப் பெற்றுக்கொண்டவர்களையும் (அன்னாளுடைய சம்பவம் 1 சாமுவேல் 1:10-20) நாம் பார்க்கமுடியும். ஆனால் வெகு தாமதமாய் பதில் கிடைத்த ஜெபத்திற்கான உதாரணம், தங்கள் வியாதிப்பட்ட சகோதரன் லாசருவுக்காக இயேசுவிடத்தில் ஜெபித்த மரியாள்-மார்த்தாள் சம்பவம் (யோவான் 11:3). இயேசு தாமதிக்கிறார். அவர்களின் சகோதரன் மரித்துப்போனான் (வச. 6-7, 14-15). ஆகிலும் நான்கு நாட்கள் கழித்து அவர்களின் ஜெபத்திற்கு இயேசு பதிலளிக்கிறார் (வச. 43-44). 

நம்முடைய ஜெபத்திற்கான பதிலுக்காய் காத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று. “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரெயர் 4:16), அப்போது தேவன் நமக்கு உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார். 

நம் புகலிடம் விரைதல்

சிறுவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். அணிகளிலிருந்த சிறுவர்களின் இளைய தம்பி, தங்கையினர் எல்லாரும் அந்தப் பள்ளியின் தாழ்வாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென அபாய சங்கு ஒலிக்க, உடற்பயிற்சி கூடத்தில் விளக்குகள் ஒளிர்ந்தன. தாழ்வாரத்திலிருந்த சிறுபிள்ளைகள் பயத்துடன் உடனே உடற்பயிற்சி அறைக்கு விரைந்து, தங்கள் பெற்றோரைத் தேடினர்.

தீ விபத்து ஏற்படவில்லை, ஆனால் எச்சரிக்கை மணி எதேச்சையாக இயக்கப்பட்டிருந்தது. ஒரு ஆபத்து என்றவுடன் அந்தப் பிள்ளைகள் சற்றும் தயக்கமின்றி, தங்கள் பெற்றோரின் அரவணைப்பிற்கு ஓடியது என்னைச் சிந்திக்க வைத்தது. பயப்படும் நேரத்தில் பாதுகாப்புணர்வையும், உத்தரவாதத்தையும் அருளுபவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை ஒருக் காட்சியாகவே கண்டேன்.

தாவீது மிகவும் பயந்த நேரத்தை வேதாகமம் பதிவிடுகிறது. சவுலும், திரளான சத்துருக்களும் அவரை விரட்டி வந்தபோது (2 சாமுவேல் 22:1), தேவன் அவரைப் பாதுகாத்தார், தேவனின் உதவிக்காக தாவீது நெகிழ்ச்சியாகத் துதிப்பாடல் பாடினார். அவர் தேவனை, " என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.'' (வ.2). என்றழைக்கிறார். "பாதாளக் கட்டுகள்" மற்றும் "மரணக்கண்ணிகள்" (வ.6 ) அவரை வேட்டையாட, தாவீதோ தேவனை நோக்கி அபயமிட்டார், அவருடைய கூப்பிடுதல் தேவனின் செவிகளில் ஏறிற்று (வ.7). இறுதியில் தாவீது, அவர் என்னை  விடுவித்தார் (வ.18, 20, 49) என அறிவிக்கிறார்.

பயமும், குழப்பமும் சூழும் நேரத்தில் நாமும் நம் கன்மலையிடம் விரையலாம் (வ.32). நாம் தேவனுடைய நாமத்தில் அபயமிடுகையில், அவர் மட்டுமே நமக்குத் தேவையான புகலிடத்தையும் அடைக்கலத்தையும் (வ.2–3) அருளுகிறார்.

நண்பர்களின் நட்பு

1970களில் நான் உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியராகவும் கூடைப்பந்து பயிற்சியாளராகவும் இருந்தபோது அவரைச் சந்தித்தேன். அவர் ஒரு உயரமான, தெளிவான நபராக இருந்தார். அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டு, அவர் எனது கூடைப்பந்து அணியிலும் எனது வகுப்புகளிலும் இருந்தார். என்னுடன் பல வருடங்கள் சக ஆசிரியராகப் பணியாற்றிய அதே நண்பர், எனது பணி ஓய்வு விழாவில் என் முன் நின்று, எங்களின் நீண்ட கால நட்பைக் குறித்து விமரிசையாக பகிர்ந்து கொண்டார்.

தெய்வீக அன்பினால் இணைக்கப்பட்ட சிநேகிதன் நம்மை ஊக்குவித்து இயேசுவிடம் நெருங்கி வரச் செய்வது எப்படியிருக்கும்? நட்பில் இரண்டு ஊக்கமளிக்கக்கூடிய விஷயங்கள் உள்ளதாக நீதிமொழிகளின் ஆசிரியர் அறிந்திருந்தார்: முதலாவதாக, உண்மையான நண்பர்கள் எளிதில் கொடுக்க முடியாத நல்ல ஆலோசனைகளை வழங்குவர் (27:6): “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” என்று சொல்லுகிறார். இரண்டாவதாக, இக்கட்டு நேரங்களில் அருகில் இருக்கும், அணுகக்கூடிய ஒரு நண்பர் முக்கியம்: “தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி” (வச. 10). 

வாழ்க்கையில் நாம் தனித்து பறப்பது நல்லதல்ல. சாலெமோன் குறிப்பிட்டது போல், “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்” (பிரசங்கி 4:9). வாழ்க்கையில், நமக்கு நண்பர்கள் இருக்க வேண்டும், நாமும் மற்றவர்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும். “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” (ரோமர் 12:10). மேலும், “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து” (கலாத்தியர் 6:2), மற்றவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களை கிறிஸ்துவுக்குள் நெருங்கச் செய்ய பிரயாசப்படுவோம். 

காபிக்கொட்டை கிண்ணம்

நான் காபி பிரியனில்லை, ஆனால் காபிக்கொட்டையின் வாசனை எனக்கு ஆறுதலையும், ஆசையையும் உண்டாக்கியது. எனது வாலிபமகள் மெலிசா தன் படுக்கை அறையை அலங்கரிக்கையில், ஒரு கிண்ணத்தில் காபிக்கொட்டைகளை நிரப்பி அதின் இதமான வாசனை அறையெங்கும் வீசும்படி செய்வாள்.

அவள் பதினேழு வயதில் ஒரு சாலை விபத்தில் மரித்து, சுமார் இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னமும் அந்த காபிக்கொட்டை கிண்ணம் எங்களிடம் உள்ளது. எங்களுடன் மெலிசாவின் வாழ்க்கையை நினைவூட்டும் நறுமணமாக இன்றும் தொடர்கிறது.

நறுமணத்தை ஞாபகக்குறியாக வேதமும் பயன்படுத்துகிறது. உன்னதப்பாட்டில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பைக் குறிக்க நறுமணம் அடையாளமாய் உள்ளது (பார்க்கவும் 1:3; 4:11, 16). ஓசியாவின் புத்தகத்தில், இஸ்ரவேலை தேவன் மன்னிப்பது, "லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்" (ஓசியா 14:6) என்றுள்ளது. இயேசுவின் பாதத்தை மரியாள் நளதத்தால் பூசுகையில், மரியாளும் அவள் உடன்பிறந்தவர்களும் வாழ்ந்த அந்த வீடு முழுவதும் "தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது" (யோவான் 12:3), இது இயேசுவை அடக்கம்பண்ணுதலுக்கு ஏதுவாய் இருந்தது (பார்க்கவும். வ.7)

பரிமளவாசனை நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் நமக்கிருக்கும் சாட்சியை நினைப்பூட்டுகிறது. இதைப் பவுல், "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15) என்று நமக்கு விளக்குகிறார்.

காபிக்கொட்டையின் வாசனை எனக்கு மெலிசாவை நினைப்பூட்டுவதுபோல, இயேசுவையும் அவரது அன்பையும் நமது வாழ்க்கை வெளிப்படுத்தி, அனைவருக்கும் அவர் தேவை என்பதைப் பிறருக்கு நினைப்பூட்டும்படி வாழ்வோம்.