ஒன்றாக நேரம் செலவழித்தல்!
இரண்டு மணிநேர பயணம் செய்து எங்கள் உறவினரின் திருமணதிற்கு சென்று திரும்பும் பொழுது, மூன்றாவது முறையாக என்னுடைய தாய் என் வேலையைக் குறித்து விசாரித்தார். நான் கூறும் வார்த்தைகள் விசேஷவிதமாக அவர்கள் மனதில் எவ்வாறு பதியவைப்பது என எண்ணியவாறு, முதல் முறை பதிலளிப்பதுபோல நான் சில விவரங்களை மறுபடியும் அவரிடம் கூறினேன். என் தாயார் அல்ஸைமர் (alzheimer) வியாதியினால் தாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழந்து கொண்டிருந்தார். அவ்வியாதி ஒருவருடைய செயல்பாட்டுத் திறனை பாதித்து, இறுதியில் பேச்சுத்திறன் முற்றிலும் அற்று போகவும் இன்னும் அநேக பாதிப்புகள் ஏற்படவும் செய்கிறது.
என் தாயாருக்கு ஏற்பட்ட வியாதியினால் எனக்கு மிகுந்த மனவேதனை இருந்தாலும், அவரோடு நான் நேரம் செலவிடவும், அவரோடு பேசவும் அவர் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி, நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அவர்களை காணச் செல்லும்பொழுதெல்லாம், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு, “அலிசன்(alyson) என்னவொரு இன்ப அதிர்ச்சி,” என்று கூறுவார். நாங்கள் ஒன்றாக சேர்ந்து செலவிடும் நேரங்கள் எங்கள் இருவருக்குமே பிடிக்கும் சில சமயம் என்ன கூறுவதென்று தெரியாமல் அவர் மவுனமாயிருக்கும் பொழுதும் நாங்கள் உரையாடிக்கொள்வோம்.
தேவனோடுள்ள நம் உறவை விவரிப்பதற்கு, இது ஒரு சிறிய, சாதாரண உருவகம் தான். “தமக்குப் பயந்து, தமது கிருபைக்காகக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியாமாயிருக்கிறார்”, என வேதம் கூறுகிறது (சங். 147:11). இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட அனைவரையும், தேவன் தம்முடைய பிள்ளைகள் எனக் கூறுகிறார் (யோ. 1:12). ஒரு வேளை நாம் திரும்பத்திரும்ப அதே விண்ணப்பங்களை எறெடுத்தாலும், அல்லது அவரிடம் என்ன கூறுவது என தெரியாமல் விழித்தாலும், அவர் நம்மிடம் பொறுமையாகவே இருப்பார். ஜெபத்திலே அவரிடம் நாம் என்ன பேசுவது என தெரியாமல் மவுனமாயிருக்கும் பொழுதும் அவர் நம்மைக்குறித்து மகிழ்ந்திருக்கிறார்.
பொறாமைக்குரிய மருந்து
நான் என் பேரக்குழந்தைகளோடு சந்தோஷமாக ஒரு சாயங்கால வேளையைக் கழிக்க நேர்ந்தது. அவர்களுடைய பெற்றோர் அன்று வெளியே சென்றதால், அவர்களை என்னுடைய பொறுப்பில் விட்டுச் சென்றார்கள். சந்தோஷத்தோடு அவர்களை கட்டி அனணத்து முத்தம் கொடுத்த பிறகு, கடந்த வார விடுமுறை நாளை எப்படிக் கழித்தார்கள் எனக் கேட்டேன். உடனே மூன்று வயதாகிய பிரிட்ஜர் (Bridger) தன் அத்தை, மாமாவுடன் இருந்ததைக் குறித்து விவரித்தான். அவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதையும் இராட்டினத்தில் சுற்றியதையும், சினிமா பார்த்ததைக் குறித்தும் மூச்சுவிடாமல் உற்சாகமாய் நினைவுகூர்ந்தான்! அடுத்து ஐந்து வயது நிரம்பிய சாமுவேலை பார்த்து நீ என்ன செய்தாய் எனக் கேட்ட பொழுது, “காம்பிங்” (Camping) என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்தான். “குதுகலமாக இருந்ததா?” என்று நான் கேட்டதற்கு, “அவ்வளவாக இல்லை”, என சோகமாகக் கூறினான்.
தன்னுடைய தம்பி அவனுடைய அனுபவங்களை உற்சாகமாக கூறியதைக் கேட்ட சாமுவேல் தன் தந்தையோடு அவன் காம்பிங் சென்றபொழுது அனுபவித்த சந்தோஷத்தை மறந்து போனான். அப்பொழுது பொறாமை என்னும் பழமையான உணர்வு அவனை ஆட்கொண்டது.
நாம் அனைவருமே பொறாமைக்கு இரையாகக்கூடும். “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்”, என்று தன்னைக் காட்டிலும் தாவீதை அதிகமாய் போற்றிப் புகழ்ந்த பொழுது ராஜாவாகிய சவுல் பொறாமையினால் ஆட்கொள்ளப்பட்டான் (1 சாமூ. 18:7). ஆத்திரமடைந்த சவுல், “அந்நாள் முதற்கொண்டு தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்” (வச. 9). தாவீதை கொல்ல முயற்சிக்கும் அளவிற்கு சவுல் சீற்றமடைந்தான்!
பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்தனமானது மட்டுமன்று, அது சுய அழிவிற்கும் வித்திடும். எப்பொழுதும் நம்மிடம் இல்லாத ஒன்றை வேறு யாராவது வைத்திருப்பார்கள் அல்லது நாம் அனுபவிக்காத நல்ல அனுபவங்களை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். ஆனால் தேவன் நமக்கு அநேக ஆசீர்வாதங்களை ஏற்கனவே அளித்துள்ளார். அதில் இம்மைக்குரிய வாழ்வு மாத்திரம் அன்றி, தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனுக்குரிய வாக்குத்தத்தத்தினால் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே, அவருடைய உதவியைப் பெற்று, எல்லாவற்றிலும் நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துவோமானால் நாம் பொறாமையை மேற்கொள்ளலாம்.