புதிய பயணத்திற்கு முன்னானக் காத்திருப்பை பற்றிப் பேசுவோமென்றால்; இடியுடன் கூடிய மழையால் தாமதமான விமானத்தில் ஏறுவதற்கு அருண் பதினெட்டு மணிநேரம் காத்திருந்தார். இருப்பினும் அவரது பொறுமையும் விடாமுயற்சியும் பலனளித்தன. அவர் செல்ல வேண்டிய இடத்திற்குப் பறந்து சென்று முக்கியமான வியாபார கூட்டங்களுக்குச் சரியான நேரத்தில் சென்றது மட்டுமல்லாமல், விமானத்தின் ஒரே பயணியும் அவர் மட்டுமே. மற்ற பயணிகள் அனைவரும் பின்வாங்கினர் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர். விமானப் பணிப்பெண்கள் அவர் விரும்பிய உணவுப் பொருட்களை அவருக்குக் கொடுத்தனர், மேலும் அருண், “நான் நிச்சயமாக முன் வரிசையில் தான் அமர்ந்தேன். முழு விமானமும் உங்களுக்காக இருக்கும்போது தடையென்ன? ” என்கிறார். இது மதிப்புமிக்க காத்திருப்பாக முடிவில் விளங்கியது.
ஆபிரகாமும் நீண்ட தாமதமாகத் தோன்றின ஒன்றைச் சகித்துக்கொண்டார். அவர் ஆபிராம் என்று அறியப்பட்டபோது, தேவன் அவரை “பெரிய ஜாதியாக்கி”, ” பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்று கூறினார் (ஆதியாகமம் 12:2-3). எழுபத்தைந்து வயது முதியவருக்கு ஒரே ஒரு பிரச்சனை (வ. 4): வாரிசு இல்லாமல் அவர் எப்படி பெரிய தேசமாக மாற முடியும்? அவருடைய காத்திருப்பு சில சமயங்களில் தேவையற்றதாக இருந்தபோதிலும் (அவரும், மனைவி சாராயும் தேவனின் வாக்கை சில தவறான யோசனைகளின் மூலம் நிறைவேற்ற “உதவி” செய்ய முயன்றார்; பார்க்க 15:2-3; 16:1-2), அவர் “தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்” (21:5). அவரது விசுவாசம் பின்னர் எபிரேய ஆக்கியோனால் போற்றப்பட்டது (11:8-12).
காத்திருப்பது கடினமாகத் தோன்றலாம். மேலும், ஆபிரகாமைப் போல நாம் அதைச் சரியாகச் செய்யாமல் போகலாம். ஆனால் நாம் ஜெபித்து, தேவனின் திட்டங்களில் இளைப்பாறுகையில், விடாமுயற்சியுடன் இருக்க அவர் நமக்கு உதவுவார். அவரில், காத்திருப்பு எப்போதும் பலனளிக்கும்.
எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? தேவனின் பலத்தில் நீங்கள் எவ்வாறு இளைப்பாறி, விடாமுயற்சியுடன் இருக்க முடியும்?
அன்பு தேவனே, உம்மில் காத்திருக்கவும் நிலைத்திருக்கவும் எனக்கு உதவும்.
