தனிப்பட்ட அலைபேசி பயனர்களின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை இனம் காண அவர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் மூலக்கூறுகளை ஒரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அலைப்பேசி பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தும் சோப்புகள், குழைமங்கள், சாம்புகள் மற்றும் ஒப்பனை போன்றவற்றையும் அவர்கள் உட்கொள்ளும் உணவுகள், பானங்கள் மற்றும் மருந்துகளின் வகை; மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடை வகை போன்றவற்றையும் ஆராய்ந்தனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையிலிருந்தும்  அவர்களுக்கான சுயவிவரத்தை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடிந்தது.

பாபிலோனிய அதிகாரிகளும்  ஏதேனும் எதிர்மறையான குணாதிசயங்கள் அல்லது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கண்டுபிடிக்கும்படி, தீர்க்கதரிசி தானியேலின் வாழ்க்கையைப் பரிசோதிக்கும்படி ஒருவகையில் “ஆராய்ந்தனர்”. ஆனால் அவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாகப் பேரரசை   உண்மையாகச் சேவித்தார்,  “அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை (தானியேல் 6:4). உண்மையில் தீர்க்கதரிசி, தரியு ராஜாவால் தனது பல பிரபுக்களின் மேலாக “மூன்று நிர்வாகிகளில்” ஒருவராகப் பதவி உயர்வு பெற்றார் (வ. 1-2). ஒருவேளை பொறாமையின் காரணமாக, மற்ற அதிகாரிகள் தானியேலிடம் குற்றத்திற்கான தடயங்களைத் தேடியிருப்பார்கள் அதனால் அவர்கள் அவரை பதவிநீக்கம் செய்ய முடியும். இருப்பினும், அவர் தனது உத்தமத்தில் நிலைத்திருந்து, மேலும் “அவர் முன்பு செய்தது போலவே” (வ. 10) தேவனிடம் ஜெபித்து, சேவை செய்தார்.  இறுதியில், தீர்க்கதரிசி தனது பொறுப்பில் வெற்றி பெற்றார் (வ. 28).

நாம் யார், யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும் வெளிப்படையான தடயங்களை நம் வாழ்க்கை விட்டுச் செல்கிறது. நாம் போராடிக்கொண்டிருந்தாலும், குறையுள்ளவர்களாய் இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம் வாழ்க்கையை “பரிசோதிக்கும்போது” ​​அவர்கள் உத்தமம் மற்றும் தேவபக்தியின் தடயங்களைக் காணும்படி ​​இயேசு நம்மை வழிநடத்துவாராக.