நான் என்னுடைய வாழ்க்கையின் கடினமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலையின் ஊடாய் கடந்துசென்றபோது, திருச்சபைக்குப் போவதை நிறுத்தக்கொள்வது எளிதாயிருந்திருக்கும் (சில வேளைகளில் “நான் ஏன் கவலைப்படவேண்டும்” என்று யோசித்ததுண்டு). ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருச்சபைக்கு செல்வது எனக்கு அவசியமாய் தோன்றியது. 

பல வருடங்களாக என்னுடைய நிலைமை மாறாமல் அப்படியே இருந்தபோதிலும், மற்ற விசுவாசிகளுடன் இணைந்து ஆராதனை செய்வது, ஜெபக்கூட்டங்கள், வேதபாட கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதின் மூலம் நான் ஊக்கம்பெற்றேன். பல வேளைகளில் ஆறுதலான வார்த்தைகள் கேட்கவும், என்னுடைய குமுறலை அவர்கள் கேட்கவும், அவர்களின் அரவணைப்பை அவ்வப்போது பெறவும் இது வழிவகுத்தது. 

எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” (எபிரெயர் 10:25) என்கிறார். நாம் கடினமான வாழ்க்கை அனுபவங்களுக்குள் கடந்துசெல்லும் வேளைகளில் நமக்கு மற்றவர்களின் ஆதரவும், அவர்களுக்கு நம்முடைய ஆதரவும் அவசியப்படும் என்பதை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். ஆகையால், “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்றும் “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்” (23-24) தாங்கும்படியாகவும் ஆசிரியர் நமக்கு அறிவுறுத்துகிறார். இதுவே ஆரோக்கியமான ஓர் ஊக்கமாகும். ஆகையினால் தான் தேவன் நமக்கு அவ்வப்போது சபையோடு ஐக்கியங்களை ஏற்படுத்தித் தருகிறார். யாரேனும் ஒருவருக்கு உங்களுடைய ஊக்கம் தேவைப்படலாம், மற்றவர்களின் ஊக்கமான வார்த்தைகள் உங்களுக்கு ஆச்சரியமானதாய் இருக்கும்.