அந்த மின்னஞ்சல் சுருக்கமாயும், அவசரமாயும் இருந்தது. “எனக்கு இரட்சிப்பு வேண்டும். நான் இயேசுவை அறிய விரும்புகிறேன்.” என்ன வியத்தகு வேண்டுகோள்! இயேசுவை ஏற்றுக்கொள்ள தயங்கும் நம் சிநேகிதர்கள் மற்றும் உறவினர்களைப் போன்று இந்த நபரை நாம் மனமாற்றம் செய்வதில் சிரமமில்லை. என்னுடைய அறிவிற்குட்பட்ட சில முக்கியமான காரியங்கள், வேதப்பகுதிகள், நம்பத்தக்க தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த மனிதனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே என்னுடைய வேலை. அதிலிருந்து, விசுவாசத்தினால் அவனை தேவன் வழி நடத்துவார். 

எத்தியோப்பியாவின் மந்திரி ஊருக்குத் திரும்பும் பாலைவன வழியில், ஏசாயா ஆகமத்தை சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கையில், அவரைச் சந்தித்த பிலிப்பு அதேபோன்று எளிமையான சுவிசேஷத்தை பகிர்ந்தார். “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” (அப்.8:30) என்று பிலிப்பு கேட்க. “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” (வச. 31) என்று அவன் பதிலளிக்கிறான். அந்த அழைப்பாக ஏற்ற பிலிப்பு, “இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்” (வச.35).

ஜனங்கள் எதிர்பார்க்கிற இடத்திலிருந்து, எளிமையாக சுவிசேஷத்தை பிலிப்பை போல் பிரசங்கிப்பது, கிறிஸ்துவை பகிர பயனுள்ள முறை. அவர்கள் இருவரும் போன வழியில் தண்ணீரை கண்டு, “இதோ, தண்ணீர் இருக்கிறதே” (வச.36) என்று காண்பித்து தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்க, பிலிப்பு சம்மதித்தான். பின்னர் மந்திரி, “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (வச.39). அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் பின்பு, தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகவும், திருச்சபை ஒன்றில் சேர்ந்ததாகவும், தன்னுடைய மறுபிறப்பை நம்புவதாகவும் எனக்கு மீண்டும் எழுதிய பதிலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என்ன ஒரு அழகான துவக்கம்! தேவன் அவரை மேன்மேலும் உயர்த்தட்டும்.