வகை  |  odb

என்ன அருமையான சிநேகிதன்!

என்னுடைய நீண்டகால நண்பனும் நானும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய சிநேகிதன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தார். அவருடைய ஊருக்கு எதிர்பாராதவிதமாய் செல்லவேண்டியிருந்ததினால் அவரை சந்திக்க நேரிட்டது. நாங்கள் இருவரும் உணவுவிடுதிக்குள் நுழையும்போது எங்கள் இருவருடைய கண்களும் கண்ணீரால் ததும்பியது. பல வருடங்களுக்கு முன்பாக அதே ஓட்டல் அறையில் நாங்கள் உட்கார்ந்து உணவு அருந்தியிருக்கிறோம். ஆனால் இப்போது மரணம் அருகாமையில் நின்று, வாழ்க்கையின் சொற்பத்தன்மையை எங்களுக்கு விளங்கச் செய்தது. சாகசங்கள், குறும்புகள், சிரிப்பு, இழப்பு, காதல் போன்ற உணர்வுகள் நிறைந்த நீண்ட நட்பிலிருந்து எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது. நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டபோது எங்கள் கண்களின் ஓரத்திலிருந்து அன்பு சிந்தியது.

இயேசுவும் கண்ணீர் சிந்தியிருக்கிறார். “ஆண்டவரே, வந்து பாரும்” (யோவான் 11:34) என்று யூதர்கள் இயேசுவிடம் சொன்னமாத்திரத்தில், தன்னுடைய நெருங்கிய சிநேகிதனான லாசருவின் கல்லறைக்கு முன்பாக இயேசு வந்து நிற்கிறார். இயேசு மனுஷீகத்தோடு மாம்சத்தை பகிர்ந்துகொண்டார் என்பதற்கு “இயேசு கண்ணீர்விட்டார்” (வச.35) என்றும் இரண்டு வார்த்தைகள் மிகுந்த ஆதாரமாய் அமைகிறது. யோவான் பதிவுசெய்யாத சில காரியங்கள் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடுமோ? ஆம். ஆகிலும் அங்கே நின்றிருந்த யூதர்கள், “இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” (வச. 36) என்று சொல்லுகிறார்கள். இந்த வரிகள், நம்முடைய எல்லா பெலவீனங்களையும் நன்கு அறிந்த ஒரு சிநேகிதரை நின்று ஆராதிக்க போதுமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இயேசு மாம்சமும் இரத்தமும் கண்ணீரும் உடையவராயிருந்தார். இயேசு நம்மை நேசித்து புரிந்துகொள்ளும் இரட்சகர்.

வெளிப்படையான தயாளகுணம்

மரிக்கும் எவரும் “நான் சுயநலமாகவும், என்னுடைய தேவையை மட்டும் சந்தித்துக்கொண்டதற்காகவும், என்னை மட்டும் சரியாய் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்ததற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மகிழ்ச்சியடைவதில்லை” என்று பார்க்கர் பாமர் பட்டம்பெறும் விழாவில் மாணவர்களுக்கு அறிவித்தார். ஆகையால் “திறந்தமனதுடன் கூடிய தயாளகுணத்தை உலகிற்கு அர்ப்பணியுங்கள்” என்று வலியுறுத்தினார்.

ஆனால் பார்க்கர் தொடர்ந்து, இந்த வாழ்க்கைமுறையை நீங்கள் தத்தெடுத்துக்கொள்வது என்பது, “உங்களுக்கு எவ்வளவு குறைவாய் தெரிந்திருக்கிறது என்பதையும் தோல்வியடைவது எப்படி” என்பதையும் கற்றுக்கொள்வதைக் குறிக்கிறது என்கிறார். “இந்த உலகத்தின் சேவைக்காய் தன்னை அர்ப்பணிக்கிறவர்கள், அறியாத ஒரு பாதையில், மீண்டும் மீண்டும் விழுந்து, மீண்டும் மீண்டும் எழுந்து, மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ளும் ஒரு சிறுபிள்ளையின் சிந்தையை பிரஸ்தாபப்படுத்தவேண்டும்.

இரக்கத்தின் அடித்தளத்தில் நம் வாழ்வு கட்டமைக்கப்படும் போதுதான், அச்சமற்ற “திறந்த இதயம் கொண்ட தாராள மனப்பான்மை” போன்ற ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தைக் காணலாம். பவுல் தனது உடன்ஊழியர் தீமோத்தேயுவுக்கு சொன்னதுபோல, தேவன் நமக்கு அளித்த கிருபைவரத்தை அனல்மூட்டி எழுப்பிவிட்டு (2 தீமோத்தேயு 1:5), தேவனுடைய கிருபையே நம்மை இரட்சித்து, நோக்கமுள்ள வாழ்க்கை வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது (வச. 9) என்பதை அறிவோம். அவர் நம்முடைய சோதனைகளை மேற்கொள்ள “பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியை” (வச. 7) நமக்குக் கொடுக்கிறார். நாம் இடறிவிழும்போது அவருடைய அன்பு நம்மை தாங்கி, வாழ்நாள் முழுதும் நம்மை நடத்துகிறது (வச. 13-14).

சாட்சிகள்

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோ (1807-1882) என்ற கவிஞரின் “சாட்சிகள்” என்ற கவிதைத் தொகுப்பில், மூழ்கிய அடிமைக் கப்பலை குறித்து விவரிக்கிறார். “சங்கிலியில் உள்ள எலும்புக்கூடுகள்" பற்றி அவர் எழுதியது போல், லாங்ஃபெலோ அடிமைத்தனத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட எண்ணற்ற பெயர் தெரியாத நபர்களுக்காய் இரங்கல் தெரிவித்தார். கடைசி சரணத்தில், “இவை அடிமைகளின் துயரங்கள், அவைகள் ஆழத்திலிருந்து அலறுகிறது; அறியப்படாத கல்லறைகளிலிருந்து கதறுகிறது; நாங்களே அதற்கு சாட்சிகள்!” என்று முடிக்கிறார்.

ஆனால் இந்த சாட்சிகள் யாரிடம் பேசுகிறார்கள்? அத்தகைய மௌன சாட்சியம் வீண் இல்லையா?

அவையெல்லாவற்றையும் பார்க்கும் சாட்சி ஒருவர் இருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றபோது, எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்தான். “ என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று தேவனிடம் கேட்டான். ஆனால் தேவன் “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்” (ஆதியாகமம் 4:9-10) என்று சொன்னார்.

காயீனின் பெயர் இன்றும் ஒரு எச்சரிப்பின் சத்தமாகவே திகழ்கிறது. “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்” என்று சீஷனாகிய யோவான் எச்சரிக்கை விடுக்கிறார் (1 யோவான் 3:12). ஆபேலின் பெயரும் இன்றும் நிலைநிற்கிறது. ஆனால் வித்தியாசமான வழியில்! “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்... அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்” (எபிரெயர் 11:4) என்று எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் ஆபேலைக் குறித்து சாட்சிகொடுக்கிறார்.

ஆபேல் இன்னும் பேசுகிறார். அதுபோல மரித்து வெகுநாளாய் ஆன அடிமைகளின் அந்த எலும்புக்கூடுகளும் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அநீதி தழைத்தோங்குகிறதோ அங்கெல்லாம் நாம் எதிர்த்து நின்று அவர்களுக்காய் குரல்கொடுப்போம். தேவன் அனைத்தையும் பார்க்கிறார். அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

தேவனுடைய நித்திய திருச்சபை

“சபை முடிந்துவிட்டதா?” ஞாயிறு ஆராதனை முடிவடையும்போது, இரண்டு குழந்தைகளுடன் எங்கள் தேவாலயத்திற்கு வந்த ஒரு இளம் தாய் கேட்டார். ஆனால் வரவேற்பில் நின்றிருந்தவர், அருகாமையில் ஒரு திருச்சபை இருக்கிறது; அங்கே இரண்டு ஆராதனைகள் நடைபெறுகிறது. நீங்கள் அங்கே கடந்துசெல்லலாம் என்று அவளை வழிநடத்தினார். அங்கு செல்ல வாகன வசதியை விரும்புகிறீர்களா? என்று கேட்க, அந்த இளம் தாய் ஆம்! அந்த திருச்சபைக்கு என்னை கொண்டுபோய்விட்டால் நான் நன்றியோடிருப்பேன் என்றாள். அவள் போன பின்பு, அவளை வரவேற்ற அந்த நபர், “சபை முடிந்துவிட்டதா?” என்ற அவளுடைய கேள்வியை மனதிற்குள் தியானித்து, “தேவனுடைய சபை முடிவில்லாமல் எப்போதும் தொடரக்கூடியது” என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாராம்.

திருச்சபை என்பது உடைந்துபோகக்கூடிய ஒரு கட்டிடம் இல்லை. ஆகையால் பவுல் திருச்சபையைக் குறித்து பதிவிடும்போது, “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்” (எபேசியர் 2:19-22) என்று எழுதுகிறார்.

இயேசு தன்னுடைய திருச்சபையை நித்தியத்திற்காய் ஸ்தாபித்திருக்கிறார். திருச்சபை இன்று சந்திக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18) என்று அறிக்கையிடுகிறார்.

இந்த ஊக்கப்படுத்தும் கண்ணாடி வழியாக, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாகும்பொருட்டு திருச்சபையையும் அதிலுள்ள அங்கத்தினர்களையும் நாம் பார்க்கலாம்.

ஊக்குவிக்கும் வரம்

“உங்கள் தேனீக்கள் மொய்க்கின்றன!” என் மனைவி கதவின் உள்ளே தலையை நுழைத்து எந்த தேனீ வளர்ப்பவரும் கேட்க விரும்பாத செய்தியை என்னிடத்தில் கூறினாள். ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டிலிருந்து உயரமான பைன் செடியின் உச்சிக்கு பறப்பதைப் பார்க்க நான் வெளியே ஓடினேன். அவைகள் ஒருபோதும் திரும்பிவரப்போவதில்லை.

தேன் கூடு மொய்க்கப்போகிறது என்பதைக் குறித்து தெரிந்துகொள்வதில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். ஒரு வாரத்திற்கும் மேலாக வீசிய புயல்கள் எனது ஆய்வுகளுக்கு இடையூறாக இருந்தன. புயல் வீசிமுடிந்த அன்று காலையில், தேனீக்கள் வெளியேறின. அந்த கூடு புதியதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால் தேனீக்கள் ஒரு புதிய கூட்டை உருவாக்க முயற்சிக்கின்றன. எனது ஏமாற்றத்தைக் கண்டு, “சோர்ந்துபோகாதே, இது யாருக்கும் நடக்கலாம்!” என்று அனுபவம் வாய்ந்த தேனீ வளர்ப்பவர் மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறினார்.

ஊக்கப்படுத்துதல் என்பது மிகப்பெரிய வரம். சவுல் தாவீதை கொல்ல வகைதேடினபோது, சவுலின் குமாரனாகிய யோனத்தான் தாவீதை உற்சாகப்படுத்தினான். “நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்” என்று யோனத்தான் அறிவுறுத்துகிறான் (1 சாமுவேல் 23:17).

அரியணைக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த ஒருவரிடமிருந்து வியக்கத்தக்க தன்னலமற்ற வார்த்தைகள் அவை. தேவன் தாவீதோடு இருக்கிறார் என்பதை யோனத்தான் அறிந்திருந்ததினால் தாழ்மையான இருதயத்தில் விசுவாசத்துடன் பதிலளித்தான்.

நம்மைச் சுற்றிலும் ஊக்கம் தேவைப்படுகிற மக்கள் நிறைய இருக்கின்றனர். நாம் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நம் மூலம் அவர்களை நேசிக்கும்படி அவரிடம் கேட்கும்போது அவர்களுக்கு நம் மூலம் நன்மைகள் உண்டாக அவர் நமக்கு உதவிசெய்வார்.