தேவனின் மறக்காத நினைவுகள்
ஒரு நபர் 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான பிட்காயின் என்னும் ஒருவகையான ஆன்லைன் பணத்தை வைத்திருந்தார். ஆனால் அவரால் அதில் ஒரு சதவீதத்தை செலவழிக்க முடியவில்லை. அவருடைய அந்த தொகையை சேமித்துவைக்கும் கருவியின் பாஸ்வேர்டை மறந்துவிட்டார். அதில் சரியான பாஸ்வேர்டை பதிவேற்றம் செய்யும் பத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டால், அந்த கருவி தானாகவே அழிந்துவிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவருடைய அதிர்ஷ்டம் அவருடைய கைக்கு எட்டாத ஒன்றாய் மாறிவிட்டது. ஒரு தசாப்தமாக, அவன் அந்த பாஸ்வேர்டை நினைவுகூர முயற்சித்து, மிகவும் வேதனையடைந்தார். அவர் எட்டு முறை பாஸ்வேர்டை பதிவேற்றம் செய்து எட்டு முறையும் தோல்வியடைந்தார். 2021ஆம் ஆண்டில், தன்னிடத்திலிருக்கும் அனைத்தும் மறைந்துபோவதற்கு தனக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது என்று புலம்பினார்.
மறதி, நம்முடைய இயல்பான குணாதிசயம். சிலவேளைகளில் சிறிய காரியங்களை மறக்கிறோம் (சாவியை தொலைப்பது போல), சிலவேளைகளில் பெரிய காரியங்களை மறந்துவிடுகிறோம் (பாஸ்வேர்ட் தெரியாமல் பெரிய பணத்தொகையை இழப்பது). ஆனால் தேவன் நம்மைப் போலில்லை. அவருக்கு பிரியமான காரியங்களையோ அல்லது மக்களையோ அவர் மறப்பதேயில்லை. கடினமான போராட்டங்களுக்கு மத்தியில் தேவன் நம்மை மறந்துவிட்டாரோ என்று இஸ்ரவேலர்கள் அஞ்சினர்: “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்” (ஏசாயா 49:14). தேவன் நம்மை எப்போதும் நினைவில் வைத்திருக்கக்கூடியவர் என்று ஏசாயா தன் ஜனத்தை எச்சரிக்கிறான். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?” என்று தீர்க்கதரிசி கேட்கிறான். ஒரு தாய் தன் பாலகனை மறக்கமாட்டாள். அவளே, மறந்தாலும் தேவன் நம்மை மறப்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம் (வச. 15).
“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் நம்முடைய பெயர்களை அவருடைய உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார். அவர் நேசிக்கிறவர்களை அவர் என்றுமே மறப்பதில்லை என்பதை நாம் நினைவில்கொள்வோம்.
ஆவியாலே ஆகும்
ஜெர்கன் மோல்ட்மேன் என்ற தொண்ணூற்று நான்கு வயதான ஜெர்மானிய இறையியலாளர் எழுதிய பரிசுத்த ஆவி பற்றிய புத்தகத்தின் விவாதத்தின் போது, பேட்டியெடுப்பவர் அவரிடம், “நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியை செயல்படுத்துகிறீர்கள்? மாத்திரை சாப்பிட்டால் செயல்படுமா? மருந்து நிறுவனங்கள் ஆவியானவரை உற்பத்திசெய்கின்றனவா?” என்று கேலியாகக் கேட்டார். மோல்ட்மேனின் புருவம் உயர்ந்தது. தலையை மெல்லமாக அசைத்து, “நான் என்ன செய்யமுடியும்? எதுவும் செய்யாதீர்கள். ஆவியில் காத்திருங்கள், ஆவியானவர் வருவார்” என்று பதிலளித்தாராம்.
நமது ஆற்றலும் நிபுணத்துவமும்தான் காரியங்களைச் செய்ய வைக்கும் என்ற நம்முடைய தவறான நம்பிக்கையை மோல்ட்மேன் சுட்டிக்காட்டினார். தேவன் காரியங்களைச் செய்கிறார் என்பதை செயல்கள் வெளிப்படுத்துகின்றன. திருச்சபையின் துவக்கநாட்களில், மனித யுக்திகளினாலோ அல்லது திறமையான தலைவர்களோ அது சாத்தியமாகவில்லை. மாறாக, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,” அறையில் அமர்ந்திருந்த அனைவரையும் ஆவியானவர் நிரப்பினார் (2:2). அடுத்து, ஒரு புதிய சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டுவதின் மூலம் அனைத்து இன மேன்மைகளையும் ஆவியானவர் ஒன்றுமில்லாமல் சிதைத்தார். தேவன் தங்களுக்குள் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு சீஷர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை, “அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்(டனர்)” (வச. 4).
திருச்சபையோ அல்லது பகிர்ந்து செய்யப்படும் எந்த ஊழியமோ நம்முடைய திறமையினால் சாத்தியமாகக்கூடியது அல்ல. ஆவியானவரால் என்ன செய்யமுடியுமோ அதை மாத்திரமே நாம் முழுமையாய் சார்ந்துகொள்கிறோம். இது நம்மை துணிகரமாகவும் இளைப்பாறவும் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளை அநுசரிக்கிற இன்று, ஆவியானவருக்குக் காத்திருந்து செயல்படுவோம்.
நான் யார்?
1859ஆம் ஆண்டில், ஜோஷ்வா ஆப்ரஹாம் நார்டன் தன்னை அமெரிக்காவின் பேரரசனாக அறிவித்தார். நார்டன், சான் பிரான்சிஸ்கோ ஷிப்பிங்கில் தனது அங்கீகாரத்தை ஏற்படுத்தி தோற்றுபோயிருந்தார். ஆனால் அமெரிக்காவின் பேரரசராக தன்னுடைய புதிய அங்கீகாரத்தை ஸ்தாபிக்க விரும்பினார். சான் பிரான்சிஸ்கோ மாலை செய்தித்தாளில், “பேரரசர்” நார்டனின் அறிவிப்புகள் என்று பிரசுரமாகியிருந்தது. மக்கள் அதைப் பார்த்ததும் சிரித்துவிட்டனர். நார்டன் சமூகத்தின் தீமைகளை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். தனது சொந்த நாணயத்தை அச்சிட்டார். மேலும் பிரிட்டிஷ் பேரரசின் ராணி விக்டோரியாவுக்கு கடிதம் எழுதி, அவர் தன்னை திருமணம் செய்துகொண்டு அதின் மூலம் தங்கள் ராஜ்யங்களை ஒன்றிணைக்குமாறு கேட்டுக் கொண்டார். உள்ளுர் தையல்காரர்களால் வடிவமைக்கப்பட்ட அரச இராணுவ சீருடைகளை அவர் அணிந்திருந்தார். “நார்டன் ஒவ்வொரு அங்குலத்திலும் ராஜாவாகவே இருக்கிறார்” என்று ஒரு பார்வையாளர் வர்ணித்தார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படி இருந்ததில்லை. நாம் யாராக இருக்க விரும்புகிறோமோ அவ்வாறு நாம் மாறுவதில்லை.
நம்மில் பலர் பல ஆண்டுகளாக தங்களை யார் என்றும் தங்களின் மதிப்பு என்னவென்றும் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய அங்கீகாரத்தையோ பெயரையோ வைத்து நம்மால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. தேவன் மாத்திரமே நம்மை யார் என்று அடையாளப்படுத்தமுடியும். ஆச்சரியவிதமாய் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் அவர் நம்மை குமாரனாகவும் குமாரத்தியாகவும் அழைப்பு விடுத்து, அவருடைய இரட்சிப்பை அருளினார். “அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் சொல்லுகிறார். இந்த அங்கீகாரமானது நமக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. நாம், “இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (வச. 13).
தேவன் நமக்கு பெயரையும் கிறிஸ்துவில் அங்கீகாரத்தையும் கொடுக்கிறார். அவர் நம்மை யார் என்று நமக்கு அறிவிப்பதினால் நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்திவிடுவோம்.
இயேசுவுடன் வீட்டில் தங்கியிருத்தல்
பல ஆண்டுகளுக்கு முன்பு, விலங்குகள் பராமரிக்கும் இடத்திலிருந்து ஜூனோ என்ற வயது வந்த கருப்பு பூனையை வீட்டிற்கு கொண்டு வந்தோம். எங்கள் வீட்டிலிருக்கும் எலிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே நான் அதை கொண்டுவந்தேன். ஆனால் எங்கள் வீட்டிலிருப்பவர்கள், செல்லப்பிராணியை விரும்பினர். எங்கள் வீடு தான் ஜூனோவின் வீடு என்றும், தன் உணவிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இங்கே தான் திரும்பிவரவேண்டும் என்றும் அது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அதற்கு கற்றுக்கொடுப்பதற்கு முதல் வாரத்தில் நாங்கள் அதிக பிராயாசம் ஏறெடுத்தோம். அதன் பிறகு ஜூனோ எங்கு சுற்றித் திரிந்தாலும், அது வீட்டிற்கு சரியாய் வந்து சேரும்.
நம்முடைய மெய்யான வீட்டை அறியாதபட்சத்தில், நாம் நன்மை, அன்பு, மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி அலைந்துகொண்டேயிருப்போம். மெய்யான வாழ்க்கையை நாம் அடையவேண்டுமாகில், “என்னில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:4) என்று இயேசு சொல்லுகிறார். வேதாகம நிபுணரான ஃபிரடெரிக் டேல் ப்ரூனர், நிலைத்திருத்தல் என்னும் வார்த்தையானது குடும்பம் மற்றும் வீடு பற்றிய எண்ணத்தைத் தூண்டுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். எனவே புரூனர் இயேசுவின் வார்த்தைகளை “என்னோடு வீட்டில் தங்கியிருங்கள்” என்று மொழிபெயர்க்கிறார்.
வீட்டைக் குறித்த அந்த சிந்தையை தூண்டுவதற்கு இயேசு, திராட்டைச் செடியில் நிலைத்திருக்கும் கிளைகளை உதாரணமாய் பயன்படுத்துகிறார். கிளைகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதின் வீடாகிய செடியில் நிலைத்திருக்கவேண்டும்.
நம்முடைய பிரச்சனைகளை சரிசெய்வதற்கு அல்லது சில புதிய “ஞானத்தை” அல்லது மகிழ்ச்சியான எதிர்காலத்தை வழங்குவதற்கு வெற்று வாக்குறுதிகளுடன் பல குரல்கள் நம்மை அழைக்கின்றன. ஆனால் நாம் உண்மையாக வாழ வேண்டுமானால், நாம் இயேசுவில் நிலைத்திருக்க வேண்டும். நாம் வீட்டில் இருக்க வேண்டும்
தேவன் நம்மை அறிவார்
சமீபத்தில் மைக்கெல் ஏஞ்சலோவின் சிற்பகலைப் புகைப்படத்தை நோக்கிய போது, அதிலுள்ள மோசேயின் வலது கையில் தசைகள் வீங்கி இருப்பதைக் கண்டேன். அந்தத் தசை முன்னங்கையில் உள்ள ஒரு மெல்லிய தசையாகையால் அதை ஒருவர் உற்று நோக்கினால் இன்றி அதை கண்டறிய முடியாது. புரிந்துகொள்ளக் கடினமான குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளும் கலைஞராகிய மைக்கேல் ஏஞ்சலோ, மனிதர்களை உற்று நோக்கித் தனது சிற்பக் கலைகளைச் செதுக்குவார். அக்கலையுணர்வு அவருக்கே உரியதாகும். மைக்கேல் ஏஞ்சலோ கிரானைட்டுகளில் மனிதனின் உள்ளான ஆத்துமாவை வெளிப்படுத்துவதற்கு எடுத்த முயற்சி, முழுமையாக வெற்றி பெறவில்லை.
தேவன் ஒருவராலேயே மனிதனின் ஆழ்ந்த மனதின் உண்மைத்தன்மையை அறிய முடியும். எவ்வளவுதான் நாம் மனிதர்களை உற்று நோக்கினாலும், கவனித்தாலும், அவையெல்லாம் நிழலேயாகும். ஆனால் தேவன் நிழலுக்கு அப்பாற்பட்டதைப் பார்க்கிறார். அதைத்தான் தீர்க்கதரிசியாகிய எரேமியா "நீர் என்னை அறிந்திருக்கிறீர்", "என்னைக் காண்கிறீர்" எனக் குறிப்பிடுகிறார் (வ.12: 3). தேவனுடைய ஞானம் என்பது தத்துவம் சார்ந்தது அல்லது அறிவு சார்ந்ததோ அல்ல. அவர் நம்மை தூரத்தில் இருந்து கவனிப்பவர் அல்ல, அவர் நமது மனதின் உண்மையான நிலையைக் காண்கிறவராய் இருக்கிறார். நம்மாலேயே புரிந்து கொள்ளமுடியாத ஆழங்களையும் தேவன் அறிகிறவராயிருக்கிறார்.
நம்முடைய போராட்டங்கள் எதுவாயிருந்தாலும், நம்முடைய இதயங்களில் என்ன நடந்தாலும், தேவன் அதைக் காண்கிறார், அதை உண்மையிலேயே அறிந்திருக்கிறார்.
-வின் கோலியர்
தேவனின் இரக்கத்தைப் பிரதிபலித்தல்
ரஷ்யாவுடனான மூன்று மாத குளிர்காலப் போரில் (1939-1940) பின்லாந்தைச் சேர்ந்த ஒரு வீரர் போர்க்களத்தில் காயமடைந்து கிடந்தார். ஒரு ரஷ்ய வீரர் தனது துப்பாக்கியை அவருக்கு நேரே நீட்டியபடியே அவர் அருகே சென்றார். காயமடைந்தவர், தான் மரிக்கப்போவதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், ரஷ்யர் ஒரு மருத்துவப் பொருட்கள் கொண்ட பெட்டியை அவரிடம் கொடுத்தார், அது அவரது உயிரைக் காப்பாற்றியது. ஆச்சரியப்படும்படி, முன்னர் காயமடைந்த இந்த வீரர் பின்னர் இதேபோன்ற சூழ்நிலையில் தன்னைக் கண்டார், கதாபாத்திரங்கள் மட்டுமே தலைகீழாக மாறி இருந்தது; ஒரு ரஷ்ய வீரர் காயமடைந்து உதவியற்ற நிலையில் போர்க்களத்தில் கிடக்க. இப்போது காயமடைந்த எதிரிக்கு உதவ இவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தது.
இயேசுவானவர் நம் வாழ்க்கைக்கு மையமானதும் வழிகாட்டுவதுமான ஒரு நியமத்தைக் கொடுத்தார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7:12). விசுவாசிகள் இந்த ஒரு எளிய கொள்கையைக் கடைப்பிடித்தால், நம் உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ? நாம் அனைவரும் இயேசுவின் ஞான ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தால் எவ்வளவு அடக்குமுறை முடிவுக்கு வரும் என்று கணிக்க முடிகிறதா? அவர் நம்மை வழிநடத்தினால் மாத்திரமே, நாம் பெறுவோம் என்று நம்புகிற அதே இரக்கத்தையும் கருணையையும் நாம் பிறருக்கும் கொடுப்போம். நாம் பிறருக்கு "நல்ல ஈவுகளை" கொடுக்கும்போது, தாம் நேசிக்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுக்கும் பரலோகத்திலிருக்கிற நமது பிதாவின் (வ.11) இருதயத்தையே பிரதிபலிக்கிறோம்.
பிறரை வெறும் சத்துருக்களாகவோ அல்லது அந்நியர்களாகவோ அல்லது உடைமைகளுக்காகவும் வாய்ப்புகளுக்காக நாம் போட்டியிடும் நபர்களாகவோ பார்க்காமல் இருப்பது அவசியம். மாறாக, நம்மைப்போன்றே அவர்களுக்கும் வேண்டிய கருணை மற்றும் இரக்கத்தின் தேவையை நாம் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நமது அணுகுமுறையும் கண்ணோட்டமும் மாறும். பின்னர், தேவன் வழங்குவதற்கேற்ப அவர் நமக்கு இலவசமாக அருளிய அன்பை நாம் அவர்களுக்கும் இலவசமாக அருள முடியும்.
அடையாளம் காணும் தேவன்
நான் இந்தியாவிற்கு முதல்முறையாகச் சென்றேன், நள்ளிரவு கடந்து பெங்களூரு விமான நிலையம் அடைந்தேன். அநேக மின்னஞ்சல்கள் எனக்கு வந்தபோதிலும், நான் யாரைச் சந்திக்க வேண்டுமென்றும் என்னை அழைத்துச் செல்பவர் யாரென்றும் அறியாதிருந்தேன். திரளான ஜனக்கூட்டத்தைப் பின்தொடர்ந்து, என் உடைமைகளைப் பெற்றுக்கொண்டு, சுங்கத்துறை சோதனைகளை முடித்து, சமுத்திரம் போன்ற மக்கள் கூட்டத்தில் எனக்கு யாராகிலும் பரிச்சயப்படுவார்களா என்று தேடினேன். கூட்டத்திற்கு முன்பாக அங்கும் இங்கும் சுமார் ஒரு மணிநேரம் நடந்து யாராகிலும் என்னை அடையாளம் காண்பார்கள் என்று எதிர்பார்த்தேன். கருணை நிறைந்த ஒருவர் முன்வந்து, “நீங்கள் தான் வின்னா?” எனக் கேட்டு, “என்னை மன்னியுங்கள், நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நான் நினைத்தேன், நீங்களோ எனக்கு முன்னாக நடந்துகொண்டே இருந்தீர்கள். ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல உங்கள் தோற்றம் இல்லை” என்றார்.
நாம் அடிக்கடி குழப்பமடைந்து, நாம் அறியவேண்டிய மனிதர்களையும் இடங்களையும் அடையாளம் காணத் தவறுகிறோம். தன்னை அடையாளம் காண, தேவன் ஒருபோதும் தவறாத வழியொன்றை ஏற்படுத்தினார், நமது உலகிற்கு இயேசுவாகவும் அவர் வந்தார், இவரே “அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிரு(க்கிறார்)ந்து” (எபிரேயர் 1:3). கிறிஸ்துவே தேவனின் சரியான பிரதிநிதித்துவம், நாம் அவரை காண்கையில் நாம் தேவனைக் காண்கிறோம் என்கிற முழு நிச்சயம் நமக்குண்டு.
தேவன் எப்படி இருப்பார், என்ன பேசுவார், எப்படி நேசிப்பார் என்று நாம் அறிய விரும்பினால்; நாம் பார்க்கவேண்டிய, செவிகொடுக்கவேண்டிய ஒருவர் இயேசுவே. அவர் மூலமாய் திருவுளம்பற்றினதற்கு (வ.2) நாம் உண்மையாகச் செவிகொடுக்கிறோமா? நாம் அவருடைய சத்தியத்தைத் தான் பின்பற்றுகிறோமா? நாம் தேவனை அடையாளம் காண்கிறோம் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள, நாம் குமாரன் மீது நம் கண்களைப் பதித்து அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
பாழானவற்றிற்கு அப்பாலான தேவனின் வாக்குத்தத்தம்
"லாரா புயல்" மெக்சிகோ வளைகுடா வழியாக அமெரிக்காவின் லூசியானா கடற்கரையை நோக்கி வீசியதால், தீவிர எச்சரிக்கை விடப்பட்டது. மணிக்கு 150 மைல் வேகத்தில் காற்று வீசுவதை ஒரு ஷெரிப் குறிப்பிட்டு, இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டார்: “தயவுசெய்து வெளியேறுங்கள். ஆனால் நீங்கள் இங்கேயே இருந்தால், எங்களால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள எண் மற்றும் நெருக்கமானவர்களின் பெயரை எழுதி பத்திரமாக உங்கள் சட்டைப் பையில் வைக்கவும். அது இங்கே வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். லாரா புயல் நிலத்தைத் தாக்கியவுடன், அதின் அழிவுகரமான விளைவை அவர்களால் பார்க்க மட்டுமே முடியும் என்று மீட்புக் குழுவினருக்குத் தெரியும். அதன் வீரியத்திற்குமுன் உதவியற்றவர்களாய் இருப்பர்.
பழைய ஏற்பாட்டிலிருந்த தேவஜனங்கள் இயற்கையான அல்லது ஆவிக்குரிய பேரழிவை எதிர்கொண்ட போதெல்லாம், அவருடைய வார்த்தைகள் மிகவும் உறுதியானதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தன, அழிவின் மத்தியிலும் அவருடைய பிரசன்னத்தை வாக்களித்தன. “அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து.. அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்” (ஏசாயா 51:3) என்றார். மேலும், தேவன் எப்பொழுதும் தம்முடைய மக்களுக்கு மீட்பையும் குணமாகுதலையும் உறுதியளித்தார். அவர்கள் அவரை மட்டுமே நம்பும்போதே அது அவர்களை நிச்சயமாகப் பின்தொடரும். "வானம் புகையைப்போல் ஒழிந்துபோம்" என்றாலும், தேவன் கூறினார் அவருடைய "இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்" (வ. 6) என்று. பாதிப்பு எப்படிப்பட்டதாயினும், அவர்களுக்கான அவரது உறுதியான நன்மை ஒருபோதும் தடைப்படாது.
தேவன் நம்மைக் கஷ்டங்களுக்கு விலக்குவதில்லை, ஆனால் அவருடைய சீர்பொருத்தும் குணமாக்குதலானது, பேரழிவிற்கு மேம்பட்டது என்று அவர் வாக்களிக்கிறார்.
அன்பு மரணத்தைப் போல வலியது
நெதர்லாந்தின் ரோர்மாண்டில் உள்ள புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க கல்லறைகளுக்கு இடையில் நீண்டு கிடக்கும் பழைய செங்கல் சுவரை சுற்றி நீங்கள் உலாவினால், ஒரு வினோதமான காட்சியைக் காண்பீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும், சுவருக்கு எதிராக ஒரே மாதிரியான இரண்டு உயரமான கல்லறை தலைக்கற்கள் நிற்கின்றன, ஒன்று புராட்டஸ்டன்ட் கணவருக்கும் மற்றொன்று அவரது கத்தோலிக்க மனைவிக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலாச்சார விதிகளின்படி அவர்கள் தனித்தனி கல்லறைகளில் புதைக்கப்பட வேண்டும். இருப்பினும், அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டவிதியை ஏற்கவில்லைபோல; அவர்களின் வழக்கத்திற்கு மாறான தலைக்கற்கள் வேலியிடப்பட்ட தடைக்கு மேலே செல்லும் அளவுக்கு உயரமாக இருப்பதால், மேலே ஒரு அல்லது இரண்டு அடி காற்று இடைவெளி மட்டுமே அவர்களைப் பிரிக்கும். ஒவ்வொன்றின் மேலுள்ள ஒரு கை சிற்பம் மற்றொன்றைத் தொடும், ஒருவருக்கொருவர் கரம் பிடித்துக் கொள்கின்றன. மரணத்திலும் தம்பதிகள் பிரிந்து வாழ மறுத்தனர்.
உன்னதப்பாட்டு அன்பின் வலிமையை விளக்குகிறது. "நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது" (8:6) என்று சாலொமோன் கூறுகிறார். மெய்யான அன்பு ஆற்றல் வாய்ந்தது, மூர்க்கமானது. "அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது" (வ.6). மெய்யான அன்பு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, ஊமையாக்கப்படாது, அழிக்கப்படவும் முடியாது. சாலொமோன் எழுதுகிறார்: “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது" (வ.7).
"தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:16). நமது வலிமையான அன்பு, அவர் நம்மீது கொண்ட கொடிதான அன்பின் உடைந்த பிம்பம் மட்டுமே. உண்மையான எந்த அன்பிற்கும், பற்றிப்பிடிக்கும் எந்த அன்பிற்கும் அவர்தான் மெய்யான ஆதாரம்.