Sheridan Voysey | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

உதவிக்காய் தாழ்மையுடன் அணுகுதல்

எங்கள் விருந்துக்கு நாள் நெருங்கியதும், நானும் என் மனைவியும் திட்டமிட ஆரம்பித்தோம். நிறைய பேர் வருவதால், சமையல்காரரிடம் பணம் கொடுத்து சமைக்க வேண்டுமா? சமையலை நாமே செய்தால் பெரிய அடுப்பு வாங்க வேண்டுமா? அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், நாம் கூடாரம் ஏதும் போட வேண்டியிருக்குமா? விரைவில் எங்கள் விருந்தின் செலவு உயர்ந்தது. எல்லாவற்றையும் நாமே வழங்க முயற்சிப்பதால், மற்றவர்களின் உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்கிறோம்.

சமூகத்தைப் பற்றிய வேதாகமத்தின் தரிசனம், கொடுக்கல் வாங்கல் இரண்டியும் உடையதாகும். பாவத்தில் விழுவதற்கு முன்பே, ஆதாமுக்கு உதவி தேவைப்பட்டது (ஆதியாகமம் 2:18). மற்றவர்களின் ஆலோசனையைப் பெறவும் (நீதிமொழிகள் 15:22) மற்றும் நமது சுமைகளைப் பகிர்ந்து கொள்ளவும் (கலாத்தியர் 6:2) நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆதித்திருச்சபை “சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்” (அப்போஸ்தலர் 2:44-45). சுயநலமாய் வாழ்வதற்குப் பதிலாக, அழகான ஒன்றையொன்று சார்ந்து பகிர்ந்து கொண்டார்கள், பெற்றுக்கொண்டனர், கொடுத்தனர். 

எங்கள் விருந்துக்கு ஒரு பலகாரம் அல்லது இனிப்பை கொண்டு வரும்படி விருந்தினர்களிடம் கேட்டோம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் பெரிய அடுப்பைக் கொண்டு வந்தார்கள், ஒரு நண்பர் கூடாரம் போட உதவிசெய்தார். உதவி கேட்பது நெருங்கிய உறவுகளை உருவாக்க எங்களுக்கு உதவியது, மேலும் மக்கள் செய்த உணவு வகைகளையும் மகிழ்ச்சியையும் தந்தது. நம்மைப் போன்ற ஒரு காலத்தில், தன்னிறைவு பெற்றிருப்பது பெருமைக்குரியதாக இருக்கும். ஆனால் தேவனிடத்தில் தாழ்மையோடு உதவிகேட்பவர்களுக்கு, தேவன் தம்முடைய கிருபையை கொடுக்கிறார் (யாக்கோபு 4:6).

 

ஞானமான கரிசனை

அந்தக் காட்சி மனதைக் கனக்கச் செய்தது. ஐம்பத்தைந்து பைலட் திமிங்கிலங்கள் ஸ்காட்லாந்தின் கடற்கரையில் சிக்கித் தவித்தன. ஆர்வலர்கள் அவற்றைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் இறுதியில் அவை இறந்தன. இதுபோன்ற திரளான மரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இது திமிங்கிலங்களின் வலுவான சமூக பிணைப்பு காரணமாகக் கூட இருக்கலாம். ஒன்று சிக்கலில் சிக்கும்போது, ​​மீதமுள்ளவை உதவிக்கு வரும், ஒரு அக்கறையுள்ள உள்ளுணர்வு தான் ஆனாலும் முரண்பாடாகத் தீங்கு விளைவிக்கிறது.

பிறருக்கு உதவும்படி வேதாகமம் தெளிவாக நம்மை அழைக்கிறது, ஆனால் நாம் எப்படிச் செய்கிறோம் என்பதில் ஞானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பாவத்தில் சிக்கிய ஒருவரை மீட்டெடுக்க நாம் உதவும்போது, ​​​​அந்த பாவத்தால் நாமே இழுக்கப்படாமல் கவனமாக இருக்க வேண்டும் (கலாத்தியர் 6:1), மேலும் நாம் நம் அண்டை வீட்டாரை நேசிக்கும்போது, ​​​​நாம் நம்மையும் நேசிக்க வேண்டும் (மத்தேயு 22:39). நீதிமொழிகள் 22:3, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறது,  பிறருக்கு உதவுகையில் நமக்குத் தீங்கு உண்டாகலாம் என்ற எச்சரிப்பான நினைவூட்டல் இது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் தேவையோடிருந்த இருவர் எங்கள் சபைக்கு வரத் தொடங்கினர். விரைவில், கரிசனைகொண்ட சபையார் அவர்களுக்கு உதவியதால் நோந்துகொண்டனர். தீர்வாக அந்த  தம்பதியரை ஒதுக்காமல், ஆனால் உதவி செய்பவர்கள் பாதிக்கப்படாத வகையில் எல்லைகளை வகுத்துக் கொள்வதென்று முடிவானது. ஆதிகாரண உதவியாளரான இயேசுவும் இளைப்பாற நேரம் ஒதுக்கிக் கொண்டார் (மாற்கு 4:38) மேலும் தம் சீடர்களின் தேவைகள் பிறரின் தேவைகளால் மறைக்கப்படாமல் பார்த்துக் கொண்டார் (6:31). ஞானமான அக்கறைக்கு அவரே  முன்மாதிரி. நமது சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு நாம் அதிக அக்கறை செலுத்த முடியும்.

 

முதலாவது ஆராதனை

வயது வந்தோருக்கான நட்பைப் பற்றி ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைத் தொடங்க நான் ஒருபோதும் திட்டமிடவில்லை. அவ்வாறு செய்ய நான் அழைக்கப்பட்டபோது, எனக்குள் பல கேள்விகள் இருந்தன. தொண்டு நிறுவனம் எவ்வாறு நிதியளிக்கப்படும், அதை உருவாக்க எனக்கு யார் உதவ வேண்டும்? இந்த விஷயங்களில் எனக்கு வணிகப்புத்தகத்தைக் காட்டிலும் வேதாகமத்திலிருந்தே அதிக உதவிகள் கிடைத்தது. 

எதையாவது கட்டியெழுப்ப தேவனால் அழைக்கப்பட்ட எவருக்கும் எஸ்றா புத்தகம் இன்றியமையாத வாசிப்பாகும். இப்புத்தகம் யூதர்கள் சிறையிருப்பிற்கு பின்பு தங்கள் எருசலேம் நகரத்தை மீண்டும் எவ்வாறு கட்டியெழுப்பினார்கள் என்பதையும் அதை கட்டுவதற்கு தேவையான பொருளாதார தேவைகளை தேவன் எவ்வாறு சந்தித்தார் என்பதையும் விவரிக்கிறது (எஸ்ரா 1:4-11; 6:8-10). மேலும் தன்னார்வலர்களும் ஒப்பந்தக்காரர்களும் எவ்வாறு வேலையைச் செய்தார்கள் (1:5; 3:7) என்பதையும் விவரிக்கிறது. இது ஆயத்தமாகும் நேரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. யூதர்கள் சிறையிருப்பிலிருந்து மீண்டு திரும்பி, இரண்டு ஆண்டுகளாய் தங்கள் கட்டுமானப்பணியை துவக்கவில்லை (3:8). எதிர்ப்பு எவ்வாறு வரக்கூடும் என்பதை இது காட்டுகிறது (அதி. 4). ஆனால் கதையில் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. எந்தவொரு கட்டிடமும் தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, யூதர்கள் பலிபீடத்தை கட்டியெழுப்பினர் (3:1-6). “கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை” என்றாலும் ஜனங்கள் தேவனை ஆராதித்தனர் (வச. 6). முதலாவது ஆராதனை நடைபெற்றது. 

புதிதாக ஏதாவது தொடங்க தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினாலும், ஒரு வேதப்பாட படிப்பைத் தொடங்கினாலும், ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தொடங்கினாலும் அல்லது ஏதேனும் ஒரு புதிய வேலையைத் தொடங்கினாலும் எஸ்றாவின் கொள்கையானது முக்கியத்துவம் வாய்ந்தது. தேவன் கொடுத்த திட்டம் கூட நம் கவனத்தை அவரிடமிருந்து விலக்கிவிடலாம். எனவே முதலில் தேவன் மீது கவனம் செலுத்துவோம். நாம் வேலை செய்வதற்கு முன், அவரை ஆராதனை செய்வோம். 

 

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப்  பலர் கருதுகின்றனர். 

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை   நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது.  ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம்   கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், ​​வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக.

 

முத்தத்தோடு திருத்துதல்

ஜார்ஜ் மெக்டொனால்ட் “ஞானமுள்ள ஸ்திரீ” என்ற தனது உவமையில் இரண்டு சிறுமிகளின் கதையைக் கூறுகிறார். அவர்களின் சுயநலம் அவர்கள் உட்பட அனைவருக்கும் துன்பத்தைத் தருகிறது. ஓர் ஞானமுள்ள பெண் அவர்களை மாற்றுவதற்கு தொடர்ச்சியான சோதனைகளை கொடுத்து அவர்களை மீண்டுவரச் செய்கிறாள். 

அந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு நேரிட்ட ஒவ்வொரு சோதனையிலும் தோல்வியடைந்து அவமானம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆளான பிறகு, அவர்களில் ஒருவரான ரோசாமண்ட், தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதை இறுதியாக உணர்ந்தாள். “உன்னால் எனக்கு உதவ முடியவில்லையா?” என்று அறிவுள்ள பெண்ணிடம் கேட்கிறாள். “இப்போது நீ என்னிடம் கேட்டால் ஒருவேளை என்னால் முடியலாம்” என்று அந்தப் பெண் பதிலளிக்கிறாள். புத்திசாலித்தனமான பெண்ணால் கிடைக்கப்பட்ட தெய்வீக உதவியால், ரோசாமண்ட் மாறத் தொடங்குகிறார். அப்போது அந்தப் பெண் தான் செய்த எல்லாப் பிரச்சனைகளையும் மன்னிப்பாளா என்று கேட்கிறாள். “நான் உன்னை மன்னிக்கவில்லை என்றால், உன்னை தண்டிக்க நான் ஒருபோதும் சிரமப்பட்டிருக்க மாட்டேன்” என்று அந்த பெண் கூறுகிறாள்.

தேவன் நம்மை சிட்சிக்கும் தருணங்கள் உள்ளன. ஏன் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அவரது சிட்சையானது பழிவாங்குதல் மூலம் இயக்கப்படவில்லை, மாறாக நம் நலனில் தகப்பனின் அக்கறையால் இயக்கப்படுகிறது (எபிரெயர் 12:6). அவருடைய “பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டும்”, “நீதியாகிய சமாதான பலனை” (வச. 10-11) அடையும்பொருட்டும் அவர் விரும்புகிறார். சுயநலம் துன்பத்தைத் தருகிறது, ஆனால் பரிசுத்தம் நம்மை முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும், அவரைப்போல் “அழகாகவும்” மாற்றுகிறது.

தன்னைப் போன்ற சுயநலமிக்க பெண்ணை எப்படி நேசிக்க முடியும் என்று அந்த புத்திசாலியான பெண்ணிடம் ரோசாமண்ட் கேட்கிறாள். அவளை முத்தமிட குனிந்து, “நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை நான் பார்த்தேன்" என்று இவள் பதிலளித்தாள். தேவனுடைய சிட்சையானது அன்போடும், எதிர்காலத்தில் நாம் யாராக இருக்கப்போகிறோம் என்ற புரிதலோடும் வருகிறது.

 

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.

 

ஐந்து நற்காரியங்கள்

தங்களிடம் இருப்பவைகளுக்காக நன்றிசொல்லும் குணம்கொண்டவர்கள் நல்ல தூக்கம், குறைவான நோயின் அறிகுறிகள், மற்றும் அதிக மகிழ்ச்சியை சுதந்தரிக்கின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஈர்க்கக்கூடியவைகள். உளவியலாளர்கள் நமது நல்வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு வாரமும் நாம் நன்றி செலுத்தவேண்டிய ஐந்து காரியங்களை ஒரு “நன்றி செலுத்தும் குறிப்பில்” எழுதும்படிக்கு பரிந்துரைக்கின்றனர்.

வேதம் நீண்ட காலமாக நன்றியுணர்வு நடைமுறையை ஊக்குவித்துள்ளது. உணவு மற்றும் திருமணம் முதல் (1 தீமோத்தேயு 4:3-5) படைப்பின் அழகுகள் (சங்கீதம் 104) வரை, இதுபோன்ற விஷயங்களை வரமாகப் பார்க்கவும், அவற்றை நமக்கு அருளும் தேவனுக்கு நன்றி செலுத்தவும் வேதம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சங்கீதம் 107, நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடிய ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறது: வனாந்திரத்திலிருந்து அவர்களை மீட்டதற்காய் (வச. 4-9), சிறையிருப்பிலிருந்து விடுவித்ததற்காய் (வச. 10-16), நோயிலிருந்து குணப்படுத்தியதற்காய் (வச. 18-22), செங்கடலிலிருந்து பாதுகாத்ததற்காய் (வச. 23-32), மற்றும் வறண்ட நிலத்தில் அவர்களை செழிப்பாய் வாழச்செய்ததற்காய் (வச. 33-42). “கர்த்தரைத் துதியுங்கள்” என்று சங்கீதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இவை அனைத்தும் தேவனுடைய “மாறாத அன்பின்” அடையாளங்கள் (வச. 8, 15, 21, 31).

உங்கள் கைகளில் சிறிய நோட்டு கைவசம் இருக்கிறதா? இப்போது நீங்கள் நன்றி செலுத்த விரும்பும் ஐந்து நல்ல விஷயங்களை ஏன் எழுதக்கூடாது? அவை நீங்கள் இப்போது சாப்பிட்ட உணவாக இருக்கலாம், உங்கள் திருமணமாக இருக்கலாம் அல்லது இஸ்ரேலைப்போல் இன்றுவரை உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய மீட்பு கிரியைகளாய் இருக்கலாம். வெளியே பாடும் பறவைகளுக்கும், உங்கள் சமையலறையிலிருந்து வரும் வாசனைக்கும், உங்கள் நாற்காலியின் வசதிக்கும், அன்புக்குரியவர்களின் முணுமுணுப்புகளுக்கும் நன்றி சொல்லுங்கள். அவைகள் ஒவ்வொன்றும் நமக்கருளப்பட்ட வரங்கள்; தேவனுடைய மாறாத அன்பின் அடையாளங்கள்.

சங்கீதம் 72 தலைவர்கள்

ஜூலை 2022 இல், பிரிட்டனின் பிரதம மந்திரி நேர்மை தவறிவிட்டதாக பலர் கருதியதால் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது (புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் சில மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!). நாட்டின் சுகாதார அமைச்சர் வருடாந்திர பாராளுமன்ற காலை உணவு பிரார்த்தனையில் கலந்துகொண்டு, பொது வாழ்க்கையில் நேர்மையின் அவசியத்தை உணர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்த செயலே இந்த நிகழ்வுக்கு காரணமாய் அமைந்தது. அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தபோது, பிரதமரும் தான் வெளியேற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். இது ஓர் அமைதியான பிரார்த்தனை கூட்டத்தில் இருந்து உருவான ஓர் குறிப்பிடத்தக்கத் தருணம்.

கிறிஸ்தவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களுக்காக ஜெபிக்க உந்தப்படுகிறார்கள் (1 தீமோத்தேயு 2:1-2). அதிகாரிகளின் கடமையையும் அதனை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஜெபம் தேவை என்பதை சங்கீதம் 72 உணர்த்துகிறது. அவை நீதியும் நேர்மையும் கொண்ட (வச. 1-2), பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பாற்றக்கூடிய (வச. 4), தேவையிலுள்ளவர்களுக்கு உதவிசெய்கிற (வச. 12-13), அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிற (வச. 14) ஓர் இலட்சிய தலைவனைக் குறித்து விவரிக்கிறது. அவர் அலுவலக நேரத்தில் “வெளியின்மேல் பெய்யும் மழையைப்போல” (வச. 6) நிலத்திற்கு செழிப்பைக் கொண்டுவருகிறார்கள் (வச. 3, 7, 16). மேசியாவால் மட்டுமே அத்தகைய பாத்திரத்தை முழுமையாக நிறைவேற்றமுடியும் (வச. 11). வேறு யாரால் அந்த தரத்தைக் கொடுக்க முடியும்?

ஓர் நாட்டின் ஆரோக்கியம் அதன் அதிகாரிகளின் நேர்மையால் நிர்வகிக்கப்படுகிறது. நம் தேசங்களுக்காக சங்கீதம் 72 குறிப்பிடும் தலைவர்களை தேடுவோம். மேலும் அவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம் இந்த சங்கீதத்தில் காணப்படும் குணங்களை உருவாக்க அவர்களுக்கு உதவுவோம்.

 

சிருஷ்டிகரை நினை

தனக்கு இறுதிநிலை புற்றுநோய் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு நாவலை சமீபத்தில் படித்தேன். நிக்கோலாவின் கோபமடைந்த நண்பர்கள் அவளை யதார்த்தத்தை எதிர்கொள்ளும்படி வற்புறுத்தும்போது, ​​​​அவளுடைய மறுப்புக்கான காரணம் வெளிப்படுகிறது. "நான் என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன்," என அவர்களிடம் சொல்கிறாள். திறமையோடும் செல்வத்தோடும் பிறந்தாலும், “நான் என் வாழ்க்கையில் எதையும் செய்யவில்லை. நான் மெத்தனமாக இருந்தேன். நான் எதிலும் ஈடுபாடுகாட்டவில்லை” என்றவள், இப்போது உலகை விட்டு வெளியேறும் நிலை, அவள் அற்பமாக சாதித்துவிட்டதாக உணர்கிறாள், சிந்தித்து பார்க்கவே நிக்கோலாவுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

நான் அதே நேரத்தில் பிரசங்கியை படித்துக் கொண்டிருந்தேன், அதில் இதற்கு மாறுபாடு அப்பட்டமாக இருந்தது. "நீ போகிற பாதாளத்திலே" (9:10) என்ற கல்லறையின் யதார்த்தத்தைத் புறக்கணிக்கும்படி அதன் ஆசிரியர் நம்மை அறிவுறுத்தவில்லை. இதை எதிர்கொள்வது கடினமாக இருந்தாலும் (வ.2), நாம் இப்போது இருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் மதிப்பளிக்க இது நம்மை வழிநடத்தும் (வ.4), இஷ்டப்பட்டு நம் உணவிலும், குடும்பத்திலும் மகிழ்விது (வ.7–9), விருப்பத்தோடு வேலை செய்வது (வ.10), சாகசங்கள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்வது (11:1,6), மற்றும் அனைத்தையும் செய்தாலும் தேவனுக்கு முன்பாக நாம் ஒருநாள் பதிலளிப்போம் (வ.9;12:13-14).

நிக்கோலாவின் நண்பர்கள், அவளது உண்மைத்தன்மையும், தாராள மனப்பான்மையும் அவளுடைய வாழ்க்கை வீணாகவில்லை என்பதை நிரூபிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.  ஆனால், "உன் சிருஷ்டிகரை நினை" (12:1) அவர் வழிகளில் நட, இன்று அவரளித்திடும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்து நேசித்து வாழுங்கள் என்ற பிரசங்கியின் அறிவுரையே நம் வாழ்நாளின் முடிவில் இத்தகைய நெருக்கடியிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றும்.