எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

துண்டுகளை ஒன்றாக்குதல்

தொற்றின் நிமித்தம் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் அடைபட்டிருக்கும்போது, எங்களுடைய குடும்பம் ஒரு உத்வேகமான முயற்சியை ஏறெடுத்தோம். பதினெட்டாயிரம் துண்டுகளை ஒன்றிணைக்கும் ஒரு புதிர் விளையாட்டை மேற்கொண்டோம். அந்த விளையாட்டை ஒவ்வொரு நாளும் நாங்கள் விளையாடினாலும், அது முடிவடைவதாக தெரியவில்லை. நாங்கள் அதைத் துவங்கி ஐந்து மாதங்கள் ஆன பின்பு, ஒன்பதுக்கு ஆறடி அளவுள்ள அந்த படத்தின் கடைசி துண்டை இணைத்தோம். அது எங்கள் உணவு அறையின் தளம் முழுவதையும் நிரப்பிற்று. 

சிலவேளைகளில் என்னுடைய வாழ்க்கை இந்த பெரிய புதிரின் துண்டுகளைப் போல் தளத்தில் சிதறியிருக்கிறது. தேவன் என்னை முற்றிலும் இயேசுவைப் போல் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்னும் நிஜத்தை நான் தெரிந்துகொள்ளும்போதும், அது ஒழுங்காய் நிறைவுபெறாததுபோலவே தெரியும். 

பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபத்தில் பவுல், அவர்கள் செய்த நல்ல கிரியையின் காரணமாக அவர்களுக்காக மகிழ்ச்சியுடன் ஜெபிப்பதாகக் கூறி அவர்களை ஊக்குவித்தது எனக்கு ஆறுதலளித்தது (1:3-4). ஆனால் அவருடைய நம்பிக்கை அவர்களுடைய திறமைகளில் அல்ல, “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று” (வச. 5) நம்புகிறார். 

தேவன் அவருடைய கிரியையை நமக்குள் நிறைவாக்குவார் என்று வாக்களித்திருக்கிறார். அந்த புதிரைப் போல நம்முடைய வாழ்க்கையில் அதிக கவனம் தேவைப்படுகிற காரியங்கள் இருக்கலாம். சிலவைகள் எந்த வளர்ச்சியும் இல்லாமல் தேங்கியிருக்கலாம். ஆனால் நம்முடைய உண்மையுள்ள தேவன் நம்முடைய சிதறிய துண்டுகளை நிச்சயமாய் ஒன்று சேர்த்து நம்மை நிறைவாக்குவார் என்று நாம் உறுதியாய் நம்பலாம். 

அன்பான தலைமைத்துவம்

ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது. 

ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும். 

நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம். 

செந்நீர்

ஸ்காட்டிஷ் தேசிய ஓவிய கண்காட்சி வழியாக நடந்து செல்லும்போது, டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோக் வரைந்த பல ஒலிவ மர ஓவியங்களில் ஒன்றின் அழகு என்னை வெகுவாய் ஈர்த்தது. பல வரலாற்று நிபுணர்கள், இந்த வேலைப்பாடு ஒலிவ மலையில் உள்ள கெத்செமனே தோட்டத்தில் இயேசுவுக்கு உண்டான அனுபவத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்புகிறார்கள். அந்த ஓவியத்தில் என்னை அதிகமாய் ஈர்த்தது என்னவென்றால், அந்த பழைய ஒலிவ மரங்களின் மீது சில சிறிய சிவப்பு தீற்றல்கள். 

ஒலிவ மலையில் ஒலிவ மரங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்பதை அறிந்திருந்த இயேசு, அந்த இரவில் ஜெபிப்பதற்காய் அங்கு கடந்த சென்றார். தன் சீஷர்களில் ஒருவனான யூதாஸ் தன்னை காட்டிக்கொடுப்பான் என்பதையும் முன்னறிவித்தார். அந்த காட்டிக்கொடுக்கப்படுதல் சிலுவையில் அறையப்படுதலுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த இயேசு கவலையினால் நிரப்பப்பட்டார். அவர் ஜெபிக்கும்போது, “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44). அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையில், தன்னுடைய அடிக்கப்படுதலுக்கும் பாடுகளுக்கும் இயேசு ஆயத்தமாயிருந்தார் என்பதற்கு அவருடைய அந்த கெத்சமெனே ஜெபமே ஆதாரமாயிருக்கிறது. 

வான் கோக் வரைந்த ஓவியத்தில் சிதறியிருந்த அந்த இரத்தத் துளிகள், “மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு... ஆகாதவனென்று தள்ளப்பட்டு” (மாற்கு 8:31) உபத்திரவத்தை அனுபவிப்பார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உபத்திரவம் அவருடைய பாதையில் அனுமதிக்கப்பட்டாலும், அது அவருடைய வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. மரணத்தின் மீது இயேசு கொண்ட ஜெயமானது, நம்முடைய உபத்திரவத்தை மேற்கொள்ளச் செய்து, தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கும் அழகான வாழ்க்கைக்கு நம்மை தகுதிப்படுத்துகிறது. 

தேவனின் வல்லமையுள்ள பிரசன்னம்.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் பெண்கள் ஓட்டளிப்பதற்கான வாக்குரிமை கொடுக்கப்பட்ட நூறாவது வருஷ நினைவாண்டு கொண்டாடப்பட்டது. அதற்காகப் பேரணியில் சென்றவர்கள் "ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி" (சங்கீதம் 68:11) என்று எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்துச் செல்வது பழைய புகைப்படங்களில் காண முடிந்தது.

சங்கீதம் 68இல் தாவீது, தேவன் கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் (வ.6), சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணி; இளைத்துப்போன அவரது  சுதந்தரத்தைத் திடப்படுத்தி,  தம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறார் (வ.9,10) என்றும் குறிப்பிடுகிறார். முப்பத்தியைந்து வசனங்கள் கொண்ட இச்சங்கீதத்தில் 'தேவன்' என்ற சொல் நாற்பத்திரண்டு முறை கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் எப்போதும் அவர்களோடிருப்பார், அவர்களை அநீதியிலிருந்தும், பாடுகளிலிருந்தும் மீட்க உதவி செய்கிறார் என்பதற்காகவும் அப்படி உபயோகிக்கப்பட்டுள்ளது. அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி (வ. 11‌).             

ஓட்டுரிமை கிடைத்ததற்காகப் பேரணி சென்ற பெண்கள் சங்கீதம் 68ல் உள்ள வசனத்தைப் புரிந்திருந்தார்களா என்பதை‌விட, பதாகைகளிலிருந்த வசனங்கள் காலத்தை வென்ற தேவனுடைய உண்மையை வெளிக்காட்டியது. திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் தகப்பனாகிய தேவன் (வ.5‌) அவர்களுக்கு முன்னே சென்று, அவர்களை வழிநடத்தி ஆசீர்வாதமும், நிம்மதியும், சந்தோஷமும் பெற்றுக்கொள்ள உதவுகிறார்.                   

தேவனுடைய பிரசன்னம் அவருடைய ஜனங்களுடன் எப்பொழுதுமிருந்து, அவர்களைச் சிறந்த வழியில் நடத்தி, ஆபத்துக்கும், துன்பங்களுக்கும் விலக்கிக் காக்கிறதென்பதை நினைக்கும் போது  இன்று நாம் ஊக்கமடைவோமாக‌. தமது ஆவியானவர் மூலமாகத் தேவன் இன்றும் நம்முடன் கடந்த காலத்தைப்போலவே வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

களிகூரும் அன்பு

ரவியும் பானுவும் ஒருவரையொருவர் பார்த்து முகமலர்ந்தனர். அவர்கள்  அகமகிழ்ச்சியைப் பார்க்கும்போது, ​கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களது திருமணத் திட்டங்கள் பல தலைகீழாய் மாற்றப்பட்டிருந்ததை உங்களால் யூகிக்கவே முடியாது. இருபத்தைந்து குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோதும், இருவரிடமிருந்தும் மகிழ்ச்சியும் சமாதானமும் ஒளிர்ந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பினிமித்தம் திருமண உடன்படிக்கை செய்து, தங்களைத் தாங்கிய தேவனின் அன்புக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

தேவன் தம் ஜனங்கள் மீது கொண்டிருக்கும் மகிழ்ச்சி மற்றும் அன்பை விவரிக்க ஏசாயா தீர்க்கதரிசி, மணவாளனும் மணவாட்டியும் ஒருவர் மீதொருவர் கொண்டிருக்கும் களிப்பை உருவகமாக வடிக்கிறார். தேவனின் வாக்குப்பண்ணப்பட்ட  விடுதலையை  விளக்க அழகான கவிதை நடையில், ஏசாயா தமது வாசகர்களுக்குத் தேவன் அவர்களுக்கு வழங்கிய இரட்சிப்பானது உருக்குலைந்த உலகில் வாழும் யதார்த்தத்தில் பிரதிபலிக்கிறது என்று நினைவுபடுத்தினார். அது இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதல், துயரப்படுபவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அவரது ஜனங்களின் தேவைகளுக்கான ஏற்பாடு (ஏசாயா 61:1-3). தேவன் தம் ஜனங்களுக்கு உதவினார், ஏனென்றால் மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பில் களிப்பதுபோல, "உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்" (62:5).

தேவன் நம்மில் களிகூருகிறார் மற்றும் நம்முடனான உறவை விரும்புகிறார் என்பது வியத்தகு உண்மை. உருக்குலைந்த உலகில் வாழ்வதன் விளைவுகளால் நாம் போராடும்போது கூட, நம்மை நேசிக்கும் தேவன் ஒருவருண்டு. அதிருப்தி கொள்ளாமல், களிப்புடன் "என்றென்றும் நிலைத்திருக்கும்" (சங்கீதம் 136:1)  நீடித்த அன்புடன் நேசிக்கிறார்.

மன்னிக்கும் அன்பு

80 ஆண்டுகால திருமண வாழ்க்கை. மே 31, 2021 அன்று எனது கணவரின் மாமா பீட் மற்றும் அத்தை ரூத் அதைக் கொண்டாடினர். 1941இல் ரூத் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட சந்திப்பு திருமணம் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தி, பள்ளியிலிருந்து பட்டம்பெற்ற பின்னர் இருவரும் தங்களுடைய சுயவிருப்பத்தின் பிரகாரம் திருமணம் செய்துகொண்டனர். தேவனே அவர்களை இணைத்ததாகவும் இத்தனை ஆண்டுகளாக அவர்களை வழிநடத்தினார் என்றும் அவர்கள் நம்புகின்றனர். 

இந்த 80 ஆண்டுகள் திருமண வாழ்வில் பீட்டும் ரூத்தும் மன்னிப்பை தேர்ந்தெடுத்து தங்கள் திருமண வாழ்க்கையை பலப்படுத்த முயற்சித்தனர். ஆரோக்கியமான உறவில் இருப்பவர்கள் அனைவரும் நாம் மற்றவர்களை காயப்படுத்துகிற சுபாவங்களில் மன்னிப்பின் அவசியத்தை அறிந்திருப்பர். அது தவறான வார்த்தைகள், நிறைவேற்றத் தவறின வாக்குறுதிகள், செய்ய மறந்த பொறுப்புகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாய் வாழவேண்டும் என்று பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்தும் வேதப்பகுதியில் மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும்” (கொலோசெயர் 3:12) தரித்துக்கொள்ளுமாறு விசுவாசிகளுக்கு வலியுறுத்திய பின்னர், “ஒருவரையொருவர் தாங்கி... ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:13) என்று ஊக்கப்படுத்துகிறார். அவர்களுடைய அனைத்து பேச்சுகளும் அன்பினால் ஊன்றப்பட்டிருக்கவேண்டும் என்பதை முக்கியமாய் வலியுறுத்துகிறார் (வச. 14). 

விசுவாச மரபு

2019இல், அமெரிக்காவிலுள்ள இயேசுவின் விசுவாசிகளின் மத்தியில் காணப்பட்ட ஆவிக்குரிய பாரம்பரியத்தை குறித்த ஆய்வின்படி ஆவிக்குரிய முன்னேற்றத்தில் தாய்மார்களும், பாட்டிகளும் பெரும்பங்காற்றுவதாக அறிக்கை கூறுகிறது. ஆவிக்குரிய பின்னணியை சேர்ந்தவர்களில் மூன்றில் இருவர் தங்கள் விசுவாசத்திற்கு தங்கள் தாயை காரணமாகவும், மூன்றில் ஒருவர் தங்கள் தாத்தா பாட்டிகளை (பெரும்பாலும் பாட்டிகள்) காரணமாக கூறுகின்றனர்.

"மீண்டுமீண்டுமாக ஆவிக்குரிய வளர்ச்சியில் தாயின் நிலையான பங்களிப்பை இந்த ஆய்வு காட்டுகிறது" என அந்த ஆய்வின் ஆசிரியர் வியக்கிறார். வேதத்திலும் இதுபோன்ற தாக்கத்தை பார்க்கிறோம்.

தனது சீடனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் பவுல், தீமோத்தேயுவின் விசுவாசமானது அவனுடைய பாட்டியாகிய லோவிசாலினாலும் தாயாகிய ஐனிக்கேயாவாலும் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 1:5). ஆதித்திருச்சபை தலைவர் ஒருவரின் வாழ்விலிருந்த இரு பெண்களின் தாக்கத்தை குறித்த தனிப்பட்ட குறிப்பு எவ்வளவு இனிமையானது. "'நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு..பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்."' (3:14–15) என்று தீமோத்தேயுவை ஊக்குவிக்க பவுல் கூறுவதிலும் அவர்களின் தாக்கத்தை காணமுடியும்.

வலிமையான ஆவிக்குரிய மரபு ஒரு வரமாகும். ஆயினும் தீமோத்தேயுவின் விசுவாசத்தை வடிவமைத்த நல்ல தாக்கங்கள் நமது வளர்ப்பில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமது ஆவிக்குரிய வளர்ச்சியை வடிவமைக்கும் உன்னதமான தாக்கங்களை உண்டாக்கும் அநேகர் நமக்குண்டு. அனைத்திற்கும் மேலாக, நம்மை சுற்றிலுமிருப்பர்களுக்கு உண்மையான விசுவாசத்திற்கு ஒரு மாதிரியையும், நிலைத்திருக்கும் மரபையும் விட்டுச்செல்லும் வாய்ப்பும் நமக்குண்டு.

கிறிஸ்துமஸ் ஒளி

எனது பார்வைக்கு அந்த கிறிஸ்துமஸ் மரம் பற்றியெரிவது போலிருந்தது. இது செயற்கை விளக்குகளின் அலங்காரத்தால் உண்டாகும் வெளிச்சம் அல்ல மாறாக நிஜமான நெருப்பு. எனது ஜெர்மானிய நண்பரின் பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு நாங்கள் குடும்பமாக அழைக்கப்பட்டோம், "பழைய ஜெர்மானிய முறை" எனும் அந்த கொண்டாட்ட முறையில் கிறிஸ்துமஸ் மரத்தைப் பாரம்பரிய இனிப்பு வகைகளாலும், எரியும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரித்திருந்தனர் (பாதுகாப்பு காரணமாக ஒரு இரவு மட்டுமே அந்த புதிதாய் வெட்டப்பட்ட மரத்தை எரியும்படி செய்தனர்).

பற்றியெரிவதைப் போலக் காட்சியளித்த அம்மரத்தை நான் காண்கையில், எரியும் செடியில் தேவன் மோசேயை சந்தித்ததை நினைத்தேன். வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசே, அங்கே பற்றியெரிந்தும், கருகாமலிருக்கும்  முட்செடியின் காட்சியினால் வியந்தான். அதை ஆராயச் சற்றே அருகில் சென்றபோது, தேவன் அழைத்தார். முட்செடியிலிருந்து வெளிவந்த செய்தி நியாயத்தீர்ப்புக்கானது அல்ல மாறாக இஸ்ரவேலர்களின் மீட்புக்கானது. எகிப்தில் அடிமைகளாய் இருந்த தன் ஜனத்தின் உபத்திரவத்தைப் பார்த்து, அவர்களிடும் கூக்குரலைக் கேட்டு, அவர்களை மீட்கத் தேவன் இறங்கினார் (யாத்திராகமம் 3:8).

இஸ்ரவேலர்களை எகிப்தியரிடமிருந்து தேவன் மீட்டிருக்க, இந்த ஒட்டுமொத்த மனிதக்குலத்திற்குமே மீட்பு தேவையாயிருந்தது. வெறும் சரீர ரீதியான உபத்திரவங்களிலிருந்து மட்டுமல்ல மாறாகத் தீமையும் மரணமும் இந்த உலகத்தில் ஏற்படுத்தின பாதிப்புகளிலிருந்து மீட்பு தேவை. இதற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து தேவன் பதிலளித்தார், தம்முடைய குமாரனாகிய இயேசு எனும் ஒளியை அனுப்பினார் (யோவான் 1:9–10). உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்ல, அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் ((3:17).

கால்பதித்தல்

“கால் பதித்தல்”(Walk On) என்பது பென் மால்க்கம்சன் என்பவருடைய நினைவுப் பதிவு. கால்பந்து விளையாட்டில் கொஞ்சமும் அனுபவமில்லாத இவன், தன்னுடைய அனுபவத்தைத் தானே பகிர்கிறான். அவனுடைய எதிர்பார்ப்புக்கு முரணாக, அவன் கல்லூரியின் கால்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டான்.
அந்த அணியில் சேர்ந்தபின்பு, இந்த எதிர்பாராத வாய்ப்பைக் கொண்டு தேவன் தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தூண்டப்பட்டான். ஆனால் அவனுடைய சக வீரர்களின் மாறுபட்ட கருத்துக்கள் அவனைச் சோர்வுறச் செய்தது. தேவனுடைய வழிநடத்துதலுக்காய் மால்க்கம்சன் ஜெபித்தபோது, “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும்...நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்ற ஏசாயாவுக்கு தேவன் நினைவுபடுத்திய வார்த்தைகளைத் தேவன் நினைப்பூட்டினார். ஏசாயாவின் வார்த்தைகளினால் உந்தப்பட்ட மால்க்கம்சன் தன் சகவீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேதாகமத்தைப் பரிசளித்தான். அவர்கள் அதை மீண்டும் புறக்கணித்தனர். ஆனால் ஆண்டுகள் கழிந்த பின்பு அவருடைய அணியில் இருந்த ஒருவர் அந்த வேதாகமத்தைத் திறந்து வாசித்து, தேவன் மீதான தன்னுடைய தாகத்தை அவனுடைய மரணத்திற்கு முன்பாக பிரதிபலித்தான் என்பதை அறிந்துகொண்டான்.
நம்மில் பலரும், நம்முடைய நண்பர்களுடனோ அல்லது குடும்ப நபர்களுடனோ இயேசுவைப் பகிர்ந்துகொண்டதினால் புறக்கணிப்பைச் சந்தித்திருக்கலாம். நாம் உடனடி மாற்றத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையானது குறித்த காலத்தில் பலன் கொடுக்கும் என்பதை விசுவாசிப்போம்.