எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கென்னத் பீட்டர்சன்கட்டுரைகள்

தெய்வீக அன்பு

1917 ஆம் ஆண்டில், கலிபோர்னியா தொழிலதிபரான ஃபிரடெரிக் லெஹ்மன், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டார். அப்போது, “தேவனின்; அன்பு” என்ற பாடலுக்கான வரிகளை எழுதினார். அவரது உத்வேகம் அவரை முதல் இரண்டு சரணங்களை விரைவாக எழுத வழிவகுத்தது, ஆனால் அவர் மூன்றாவது சரணத்தில் சிக்கிக்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறைச்சாலையின் சுவர்களில் ஒரு கைதியினால் எழுதப்பட்ட ஒரு கவிதை வரிகளை அவர் நினைவு கூர்ந்தார். தேவனுடைய அன்பின் ஆழமான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், அந்த கைதி அதை அங்கே கல்லினால் கீறியிருந்தார். லெஹ்மனின் பாடலுடைய  அதே ஸ்ருதிக்கு அந்த வரிகள் பொருந்தியது. அவர் அதை தனது பாடலின் மூன்றாவது சரணமாக மாற்றினார்.

சிறைச்சாலையில் இருந்த அந்த கைதியைப் போலவும்,  லெஹ்மன் என்னும் கவிஞரைப் போலவும் நாமும் கடினமான பின்னடைவை வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். இதுபோன்ற கடினமான தருணங்களின்போது, “உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (சங்கீதம் 57:1) என்னும் சங்கீதக்காரனுடைய வார்த்தைகளை நாம் எதிரொலிக்கலாம். நம்முடைய பிரச்சனைகளின்போது தேவனை நோக்கிக் கூப்பிடுவதும் (வச. 2), சிங்கங்களின் நடுவில் இருக்கும்போது (வச. 4), அவரிடம் முறையிடுவதும் நல்லது. கடந்த நாட்களில் தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, “நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்... அதிகாலையில் விழித்துக்கொள்வேன்” (வச. 7–8) என்ற தாவீதின் வரிகளை எதிரொலிப்போம்.

“உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது” (வச. 10) என்று இந்த பாடல் சித்தரிக்கிறது. நம்முடைய தேவைகளின் போது தேவனை சார்ந்துகொள்வோமாகில், அவருடைய அன்பு வானபரியந்தம் உயர்ந்தது என்பதை நினைவில் கொள்வோம்.

வாழ்க்கையின் எதிர்பார்ப்பு

1990ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆய்வாளர்களின் கணினி பிரச்சனை: ஜீன் காலமென்ட்டின் வயதைப் பதிவேற்றும்போது, பிழைகள் குறுக்கிட்டது. அவருடைய வயது 115. அந்த கணினியின் வரையறையில் அந்த அதிகப்படியான எண்ணிக்கை இடம்பெறவில்லை. அதை வடிவமைத்தவர்கள் அத்தனை ஆண்டுக்காலம் யாரும் வாழ்வது சாத்தியமில்லை என்று எண்ணியிருந்தனர். ஆனால் ஜீன், 122 வயது வரை உயிர் வாழ்ந்தார்.
சங்கீதக்காரன், “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷம்” (சங்கீதம் 90:10) என்று சொல்லுகிறான். இந்த உலகத்தில் எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தாலும், ஜீன் போன்று 122 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தாலும்கூட, இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கை நிலையில்லாததே. நம்முடைய வாழ்க்கை சர்வவல்லமையுள்ள ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது (வச.5). ஆவிக்குரிய உலகத்தில் தேவனுடைய காலம் என்பது “ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது” (சங்கீதம் 90:4).
“குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்” (யோவான் 3:36) என்று இயேசுவின் ஆளத்துவம் ஆயுசுக்காலத்தின் நீளத்திற்கு புதிய அர்த்தம் கொடுக்கிறது. “உடையவனாயிருக்கிறான்” என்பது நிகழ்காலத்தைக் குறிக்கிறது. நம்முடைய நிகழ்கால பிரச்சனைகள் மற்றும் கண்ணீரை மாற்றி, நம்முடைய எதிர்காலம் ஆசீர்வாதமாகவும் நம்முடைய நாட்கள் முடிவில்லாததாயும் இருக்கும் என்று அறிவிக்கிறது.
இதில் நாம் களிகூர்ந்து, சங்கீதக்காரனோடு சேர்ந்து “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங்கீதம் 90:14) என்று ஜெபிப்போம்.

காலத்தின் விதைகள்

1879 ஆம் ஆண்டில் வில்லியம் பீலுடைய செய்கைகள் பார்ப்பவர்களுக்கு முட்டாள்தனமாய் தெரிந்தது. ஏனெனில் தாவரவியல் பேராசிரியரான அவர் இருபது பாட்டில்களில் விதைகளை நிரப்பி, அதை மண்ணில் புதைத்து வைத்தார். ஒரு விதையின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் பீலின் இந்த முயற்சியானது நூற்றாண்டுகள் நீடிக்கக்கூடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இருபது வருடங்களும் ஒரு பாட்டிலை தோண்டியெடுத்து அது முளைத்திருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

விதைக்கிறதைக் குறித்து இயேசு அநேக போதனைகளை செய்திருக்கிறார். விதைக்கிறதை கர்த்தருடைய வார்த்தையை பறைசாற்றுவதோடு ஒப்பிடுகிறார் (மாற்கு 4:15). சில விதைகளை சாத்தான் கெடுத்துப்போடுகிறான்; சில விதைகள் வேரூன்றுவதில்லை; சில விதைகள் முள்ளுகளுக்கிடையே சிக்கி வளராமல் போய்விடுகிறது (வச. 15-19). நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, எந்த விதை பலன்  கொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய வேலை விதைப்பது, அதாவது, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது: “உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (16:15).

2021ஆம் ஆண்டு, பீலின் மற்றுமொரு பாட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், 142 ஆண்டுகளுக்கு மேலாக விதைகள் உயிர்பிழைத்திருக்கிறது கண்டறியப்பட்டது. நம்முடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்படிக்கு தேவன் நம் மூலமாய் கிரியை செய்தால், நாம் பகிர்ந்துகொள்ளும் வார்த்தை எப்போது வேரூன்றும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்முடைய நற்செய்தி விதையானது, ஒரு நாள் நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு, “ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாக” (4:20) பலன் கொடுக்கும்.

பயணிக்கும் கருணை

இந்தியா முழுவதுமான சாலைப் பயணம், சில ஆபத்தான சாலைகளில் உங்களை அழைத்துச் செல்லும். முதலில், ஜம்மு காஷ்மீரில் “கில்லார்- கிஷ்த்வார் சாலை” உள்ளது. வடமேற்கு நோக்கிச் சென்றால், குஜராத்தின் டுமாஸ் கடற்கரைக்கு அருகில் நீங்கள் ஒரு பயங்கரமான அதிர்வை அனுபவிக்கக்கூடும். மத்திய இந்தியாவை நோக்கி மேலும் பயணிக்கும்போது, சத்தீஸ்கரின் பஸ்தாரில் ஓய்வெடுப்பதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது ஒரு  ஆபத்தான இடம். நீங்கள் தெற்கு நோக்கிச் செல்லும்போது, தமிழகத்தின் பயங்கரமான கொல்லிமலைச் சாலையை அடைவீர்கள். நீங்கள் ஒருவேளை பயணம் செய்யாவிட்டாலும், இவைகள் இந்திய தேசத்தின் புவியமைப்பில் இருக்கக்கூடிய அபாய சாலைகள்.  

சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் இப்படித்தான் இருக்கும். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களின் கடினமான வாழ்க்கையை நாம் எளிதாக அடையாளம் காண முடியும் (உபாகமம் 2:7). வாழ்க்கை கடினமாக இருக்கலாம். அதற்கு இணையான மற்ற காரியங்களை நாம் காண்கிறோமா? நாம் நமது சொந்த பயணத்திட்டத்தை உருவாக்குகிறோம். தேவனின் வழியிலிருந்து திசை மாறுகிறோம் (1:42-43). இஸ்ரவேலர்களைப் போலவே, நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பற்றி நாம் அடிக்கடி முணுமுணுக்கிறோம் (எண்ணாகமம் 14:2). நமது அன்றாட கவலையில், நாமும் தேவனின் நோக்கங்களை சந்தேகிக்கிறோம் (வச. 11). இஸ்ரவேலர்களின் கதை நம் சொந்தக் கதையில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.

நாம் அவருடைய வழியைப் பின்பற்றினால், ஆபத்தான சாலைகள் நம்மை அழைத்துச் செல்லும் இடத்தை விட மிகச் சிறந்த இடத்திற்கு அவர் நம்மை அழைத்துச்செல்வார் என்று தேவன் நமக்கு உறுதியளிக்கிறார். நம் தேவைகள் ஒன்றும் குறைவுபடாது (உபாகமம் 2:7; பிலிப்பியர் 4:19). இதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தும், அதைச் செய்யத் தவறிவிடுகிறோம். நாம் தேவனின் பாதையை பின்பற்ற வேண்டும்.

இன்னும் சில மணிநேரம் காரில் பயணம் செய்தால், பயமுறுத்தும் கொல்லி மலையிலிருந்து “கடவுளின் சொந்த நாடு" என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள பசுமையான மற்றும் அமைதியான வயநாடுக்கு உங்களை அழைத்துச் செல்லும். தேவன் நம் பாதைகளை வழிநடத்த அனுமதித்தால் (சங்கீதம் 119:35), அவருடன் மகிழ்ச்சியுடன் பயணிப்போம். இது ஆசீர்வாதமான ஒரு பாதை!