கண்டு விசுவாசிக்கும்போது
“நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை!” என் மனைவி, காரி, என்னை ஜன்னலுக்கு அழைத்து, எங்கள் முற்றத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை எங்கள் வேலிக்கு வெளியே உள்ள காடுகளில் ஒரு வயது முதிர்ந்த பெண்மானைக் காட்டினாள். எங்கள் வீட்டு வேலிக்குள் இருந்த பெரிய நாய்கள், வேகமாய் அந்த மானை நோக்கி ஓடின, ஆனால் அவைகளைப் பார்த்து குரைக்கவில்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவைகள் முன்னும் பின்னுமாக நடந்தன. அந்த பெண் மான் நின்று நாய்களைப் பார்த்தபோது, நாய்களும் தங்கள் முன்னங்கால்களை நேராக்கிக் கொண்டு, மீண்டும் ஓடத் தயாரான நிலையில், மீண்டும் குனிந்துகொண்டன. இது வேட்டையாடும் விலங்கினத்தின் வழக்கமான நடத்தை இல்லை. அந்த பெண் மானும் நாய்களும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சகவாசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தன!
காரிக்கும் எனக்கும், அந்த நிகழ்வு வரப்போகிற தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்த காட்சியைக் காண்பித்தது. ஏசாயா தீர்க்கதரிசி, “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” (ஏசாயா 65:17) என்ற வார்த்தைகளுடன் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிவிக்கிறார். மேலும்; “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்” (வச. 25) என்றும் கூறுகிறார். இனி வேட்டையாடுதல் இல்லை. அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருப்பர்.
தேவனுடைய நித்திய ராஜ்யத்தில் மிருக ஜீவன்கள் இடம்பெற்றிருக்கும் என்பதை ஏசாயாவின் வார்த்தைகள் நமக்குக் காண்பிக்கின்றன. தேவன் தனது படைப்பிற்காக, குறிப்பாக “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு” என்னென்ன ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார் என்பதை அவை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன (1 கொரிந்தியர் 2:9). அது எவ்வளவு அழகான இடமாக இருக்கப்போகிறது! விசுவாசத்தின் மூலம் நாம் அவரை நம்பும்போது, அவருடைய சமூகத்தில் நித்திய காலமாய் இளைப்பாறுதலை அனுபவிக்கக்கூடிய யதார்த்தத்தை நாம் காணும்படிக்கு அவர் நம்மை பெலப்படுத்துகிறார்.
குற்றவாளியாயினும் விடுதலை
"நான் அதைச் செய்யவில்லை!" அது ஒரு பொய், தேவன் என்னை இடைமறித்திருக்காவிட்டால் நான் கிட்டத்தட்ட அதிலேயே நிலைத்திருந்திருப்பேன். நான் நடுநிலைப் பள்ளியிலிருந்தபோது, ஒரு நிகழ்ச்சியின் போது எங்கள் இசைக்குழுவினரின் பின்பாக எச்சிலைத் துப்பிய கூட்டத்தில் நானும் இருந்தேன். எங்கள் இயக்குநர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் ஒழுக்கத்திற்கு பேர்போனவர், நான் அவரை கண்டாலே பயப்படுவேன். அதனால் என் சகாக்கள் என்னைக் குற்றத்தில் சிக்கவைத்தபோது, நான் அவரிடம் பொய் சொன்னேன். பிறகு என் தந்தையிடமும் பொய் சொன்னேன்.
ஆனால் பொய்யைத் தொடர்ந்திடத் தேவன் அனுமதிக்க மாட்டார். அவர் எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியைக் கொடுத்தார். பல வாரங்கள் எதிர்த்த பிறகு, நான் மனந்திரும்பினேன். நான் தேவனிடமும் அப்பாவிடமும் மன்னிப்பு கேட்டேன். சிறிது நேரம் கழித்து, நான் எனது இயக்குநரின் வீட்டிற்குச் சென்று கண்ணீருடன் ஒப்புக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, அவர் அன்பாகவும் மன்னிப்பவராகவும் இருந்தார்.
அந்த பாரம் நீங்கினது எவ்வளவு அருமையாக இருந்தது என்பதை என்னால் மறக்கவே முடியாது. நான் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு, பல வாரம் கழித்து முதல்முறையாக சநதோஷப்பட்டேன். தாவீது தனது வாழ்க்கையிலும் குற்றம் சுமந்து அறிக்கை செய்த நேரத்தை விவரிக்கிறார். அவர் தேவனிடம், “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால்” என்றவர் மேலும், "என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்" (சங்கீதம் 32:3-5) என்கிறார்.
நம்பகத்தன்மை தேவனுக்கு முக்கியம். நம்முடைய பாவங்களை அவரிடம் ஒப்புக்கொள்ளவும், நாம் தவறிழைத்தவர்களிடமும் மன்னிப்பு கேட்க அவர் விரும்புகிறார். "தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்" (வ. 5) என்று தாவீது அறிவிக்கிறார். தேவனின் மன்னிப்பால் உண்டாகும் விடுதலையை அனுபவிப்பது எவ்வளவு அருமையானது!
ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது
“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டம் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.
பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.
சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
தாராளமாக கொடுக்கப்பட்டது மற்றும் பகிரப்பட்டது
நானும் என் மனைவியும் எங்கள் உயர்கல்வியை முடித்தபோது, குறைந்த வட்டி விகிதத்தில் ஒருங்கிணைக்க வேண்டிய கடன் நிறைய இருந்தது. நாங்கள் உள்ளூர் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தோம், ஆனால் நாங்கள் நீண்ட காலமாக அந்த நகரத்தில் வசிக்கவோ, வேலையோ செய்யவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டோம். சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் சபையின் மூப்பராக இருந்த என் நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன். "நான் இதை என் மனைவியிடம் குறிப்பிட விரும்புகிறேன்," என்று அவர் போகும்போது சொல்லிவிட்டுச் சென்றார்.
சில மணி நேரம் கழித்து,அலைபேசி அழைத்தது. அது என் நண்பன்தான், “நானும் என் மனைவியும் உனக்குத் தேவையான பணத்தை வட்டியில்லாக் கடனாகக் கொடுக்க விரும்புகிறோம்,” என்று அவர் முன்வந்தார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அதனால், "அப்படி உங்களிடம் நான் கேட்கக் கூடாது" என்று பதிலளித்தேன். "நீ கேட்கவில்லை!" என் நண்பர் தமாஷாகப் பதிலளித்தார். அவர்கள் இரங்கி எங்களுக்குக் கடனைக் கொடுத்தார்கள், நானும் என் மனைவியும் எங்களால் முடிந்தவரை விரைவாகத் திருப்பிச் செலுத்தினோம்.
இந்த நண்பர்களின் தாராள குணத்திற்குத் தேவன் மீதான அவர்களின் அன்பே காரணமென்று நான் நம்புகிறேன். "இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 112:5) என்று வேதாகமம் சொல்வதுபோல, கர்த்தரை நம்புகிறவர்களின் இருதயம் "திடனாயிருக்கும்" ,"உறுதியாயிருக்கும்" (வச. 7-8) .ஆகவே அவர்களின் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் தேவன் தான் ஆதாரம் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
தேவன் நமக்கு வாழ்வையும் மன்னிப்பையும் கொடுப்பதில் தாராளமாக இருக்கிறார். நாமும் அவருடைய அன்பையும் நமக்குள்ளவற்றையும் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தாராளமாக இருப்போம்.
இயேசுவின் அதிகாரம்
பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான்.
அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது.
சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.
துதியின் பள்ளத்தாக்கு
கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே.
கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).
நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார்.
எஜமானனா அல்லது ஊழியனா
"நான் எஜமானனா அல்லது ஊழியனா?", பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது குடும்பத்திற்கு எது சிறந்தது என்று ஆராயும்போது இந்தக் கேள்வியை தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். திரளான செல்வத்தால் வரக்கூடிய சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்த அவர், அந்த சவாலை தனது வாரிசுகளும் எதிர்கொள்ள விரும்பவில்லை. எனவே அவர் தனது நிறுவனத்தின் உரிமையை கைவிட்டு, தனது அதிகார பங்குகளில் 100 சதவீதத்தையும் ஒரு அறக்கட்டளைக்கு கையளித்தார். தனக்குச் சொந்தமான அனைத்தும் தேவனுக்கே சொந்தமானது என்பதை அவர் புரிந்துகொண்டது, தனது குடும்பம் வேலை செய்து சம்பாதிக்கும்படி தீர்மானிக்க அவருக்கு உதவியது. அதே நேரத்தில் வருங்கால லாபத்தை தேவனின் ஊழியத்திற்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தவும் உதவியது.
சங்கீதம் 50:10 இல் தேவன் தனது ஜனங்களிடம், "சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" என்கிறார். சர்வத்தையும் சிருஷ்டித்தவரான அவருக்கு நம்மிடம் ஒன்றும் தேவையுமில்லை, அவர் யாரிடமும் கடன்பட்டவருமல்ல. "உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை" (வ.9) என்கிறார். நமக்குள்ளவற்றையும், நாம் பயன்படுத்தும் அனைத்தையும் அவர் தாராளமாக வழங்குகிறார். மேலும் வேலை செய்ய பெலனையும் திறனையும் அளிக்கிறார். இப்படியிருக்க, சங்கீதம் சொல்வதுபோல அவரே நமது மனமார்ந்த ஆராதனைக்கு பாத்திரர்.
தேவனே அனைத்துக்கும் சொந்தக்காரர். ஆனால் அவருடைய நற்குணத்தின் காரணமாக, அவர் தன்னைத் தானே கொடுக்கத் தெரிந்துகொண்டார். தம்மிடம் வரும் எவருடனும் உறவை ஏற்படுத்துகிறார். இயேசு "ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்" (மாற்கு 10:45). ஈவுகளை காட்டிலும் ஈந்தவரை நாம் மதித்து ஈவுகளைக் கொண்டு அவருக்கு ஊழியஞ்செய்கையில், அவருக்குள் என்றென்றும் களிகூரும் பாக்கியமடைவோம்.
கிறிஸ்துவின் அடிச்சுவடில்
மன்னர் குடும்பம் அணியும் விலைமிக்க காலணிகளை அணிந்தால் எப்படி இருக்கும்? கப்பல் பணியாளர் மற்றும் செவிலியரின் மகளான ஏஞ்சலா கெல்லி அதை அறிவாள். மறைந்த மகாராணி எலிசபெத்திற்குக் கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகாரப்பூர்வ ஆடை வடிவமைப்பாளராகவும் கெல்லி இருந்தார். வயதான மகாராணியின் புதிய காலணிகளை பழக்குவிப்பதற்காக, அதை அணிந்து அரண்மனை மைதானத்தைச் சுற்றி நடப்பது அவளது பொறுப்புகளில் ஒன்றாகும். அதற்குக் காரணம் இருந்தது; அவர்கள் ஒரே காலணி அளவை உடையவர்கள், மகாராணி சில நேரங்களில் அரண்மனை விழாக்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இருக்கும், கெல்லிக்கு வயதான மகாராணியின் மீதுள்ள இரக்கத்தால் இந்த அசௌகரியத்திற்கு உதவ முடிந்தது.
எலிசபெத் மகாராணிக்குத் தனிப்பட்ட முறையில் கெல்லி செய்யும் இந்தக் காரியம், கொலோசேயா் (இக்கால துருக்கியின் ஒரு பகுதி) சபைக்கு பவுல் எழுதின, " . . .இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு " (கொலோசெயர் 3:12) என்ற ஊக்கமான வார்த்தைகளைச் சிந்திக்கச் செய்கிறது. நம் வாழ்க்கை "அவர்மேல் கட்டப்பட்ட(தாக)" (2:6) இருக்கையில், நாம் "தேவனால் தெரிந்துகொள்ளப் பட்ட பரிசுத்தரும் பிரியருமாய்" இருப்போம் (3:12). நம்முடைய "பழைய மனுஷனை" களைந்துபோட்டு, "புதிய மனுஷனை"த் தரித்துக்கொள்ள (வ. 9-10) அவர் நமக்கு உதவுகிறார். எனவே தேவன் நம்மை நேசித்து மன்னித்ததால், மற்றவர்களை நேசிப்பவர்கள் மற்றும் மன்னிப்பவர்களாக வாழலாம் (வ.13-14).
தங்கள் அனுதின போராட்டங்களில் இரக்கம் வேண்டி, தங்களைப் புரிந்து தங்கள் "காலணிகளை" நாம் அணியும்படி தேவையிலுள்ளவர்கள் நம்மைச் சுற்றிலும் உண்டு. நாம் அவ்வாறு செய்கையில், நமக்காக எப்போதும் இரக்கத்துடன் இருக்கும் ராஜாவாம் இயேசுவின் கால்சுவடுகளில் நடக்கிறோம்.
எண்ணிமுடியாத அன்பு
“நான் உன்னை எப்படி நேசிப்பது? அதற்கான வழிகளை யோசிக்கிறேன்.” போர்;ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட எலிசபெத் பாரெட் பிரவுனிங்கினின் அந்த வார்த்தைகள் ஆங்கில மொழியில் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும். அவர்கள் திருமணத்திற்கு முன்பு ராபர்ட் பிரவுனிங்கிற்கு அவ்வாறு கவிதை எழுதினாராம். அக்கவிதையைப் பார்த்து ராபர்ட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அந்த முழு கவிதைத் தொகுப்பையும் பிரசுரிக்குமாறு ஊக்குவித்தாராம். அக்கவிதை தொகுப்பின் மொழியானது மிகவும் மென்மையாக இருப்பதினாலும் தனிப்பட்ட ரீதியில் இருப்பதினாலும், பாரெட் அவற்றை போர்;ச்சுகீசிய எழுத்தாளரின் எழுத்துக்களைப் போல அவற்றை வெளியிட்டாராம்.
மற்றவர்களிடம் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்தும்போது சில சமயங்களில் நாம் சங்கடமாக உணரலாம். ஆனால் வேதாகமம், தேவனுடைய அன்பை பிரபல்யப்படுத்துவதில் சற்றும் தயங்கவில்லை. எரேமியா தீர்க்கதரிசி, “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமியா 31:3) என்று தேவன் தன் ஜனத்தின் மீது வைத்திருக்கும் மென்மையான அன்பை விளங்கப்பண்ணுகிறார். ஜனங்கள் தேவனை விட்டு திரும்பினாலும், தேவன் அவர்களை மீண்டும் தன்னிடமாய் சேர்த்துக்கொள்ளுகிறார். “இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன்” (வச. 2) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார்.
இயேசு, தேவனுடைய மறுசீரமைக்கும் அன்பின் இறுதி வெளிப்பாடாக இருக்கிறார். அவரிடம் திரும்பும் அனைவருக்கும் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அருளுகிறார். தொழுவத்திலிருந்து சிலுவை வரை, வெறுமையான கல்லறை வரை, வழிதப்பிப் போன உலகத்தை தம்மிடமாய் சேர்க்கும் தேவனுடைய சித்தத்தின் திருவுருவமாய் இயேசு திகழ்கிறார். வேதத்தை முழுவதுமாய் படியுங்கள், அப்போது தேவனுடைய அன்பை எண்ணுவதற்கான அநேக வழிகளை தெரிந்துகொள்வீர்கள். அவைகள் நித்தியமானவைகள் என்பதினால், அவற்றை நம்மாய் எண்ணி முடியாது.