எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

பாதையில் சுதந்திரம்

பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் விளையாடும் “பீப்” ஓசையிடும் பேஸ்பாலில், அதின் சத்தத்தைக் கேட்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் எங்கு செல்லவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றனர். கண்கள் மூடப்பட்ட பந்தை அடிக்கும் நபரும், அதைத் தடுக்கும் பார்வையுள்ள நபரும் ஒரே அணியில் இடம்பெற்றிருப்பர். ஒரு நபர் மட்டையை சுழற்றி, பீப் பந்தை அடிக்கும்போது, அவர்கள் சலசலக்கும் தளத்தை நோக்கி ஓடுவார்கள். அவர் ஓடிவருவதற்கும் அந்த பந்தை யாரேனும் பிடித்துவிட்டால், பந்தை அடித்தவர் தோற்றுவிடுவார். இல்லையெனில், அவருக்கு ரன் கொடுக்கப்படும். “தெளிவான ஓடுபாதையும் திசையும் இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால், “ஓடுவதில் ஒரு பெரிய சுதந்திரம்” அவர்களுக்கு இருக்கிறது என்று ஒரு விளையாட்டு வீரர் குறிப்பிடுகிறார்.

ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம், “மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்” (26:7) என்று தேவனைக் குறித்து அறிவிக்கிறது. இந்த வாக்கியம் உரைக்கப்பட்டபோது, இஸ்ரவேலர்களின் பாதை செம்மையாயிருந்தது. ஆனால் அவர்களின் கீழ்ப்படியாமையினிமித்தம் அவர்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பை அனுபவிக்க நேரிட்டது. “உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும்” (வச. 8) அவர்களின் இருதயத்தின் நோக்கங்களாய் இருந்துள்ளது என்று சொல்லுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது, தேவனைக் குறித்து அறிகிற அறிவில் தேறவும் அவருடைய சுபாவங்களின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் செய்கிறோம். நம்முடைய வாழ்க்கைப் பாதையின் வழிகள் எப்போதும் செம்மையானதாய் தெரியாது. ஆனால் நாம் தேவனை நம்பும்போது, தேவன் நம்மோடு நடந்துவந்து நமக்கு வழியை உண்டுபண்ணுவார். நாமும் தேவனுக்கு கீழ்ப்படிந்து, சுதந்திரமாய் அவருடைய சிறந்த பாதையில் நடப்போம்.

புகழுக்கு உரியவர் யார்?

வீட்டு முகவர் ஒருவர், சுழல் படிக்கட்டு முதல் விரிந்த படுக்கையறை வரை, பளிங்கு தரையிலிருந்து பட்டு விரிப்பு வரை, பிரமாண்டமான சலவை அறை முதல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அலுவலகம் வரை இளம் தம்பதியினருக்கு ஏற்ற ஒரு வீட்டைக் காட்டினார். அவர்கள் திரும்பிய ஒவ்வொரு மூலையிலும் அவ்வீட்டின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, "எங்களுக்கு சிறந்த இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தீர்கள். இந்த வீடு மிகவும் நன்றாக இருக்கிறது!" என்றனர். அதற்கு வீட்டு முகவர், "உங்கள் பாராட்டுக்களை நான் இதை கட்டினவருக்கு தெரிவிக்கிறேன். வீட்டைக் கட்டியவராகிய அவர்தான் பாராட்டுக்குரியவர், வீடோ அதைக் காட்டின நானோ அல்ல" என பதிலளித்தார். இது சற்று விசித்திரமாக இருந்தாலும், அதுதான் உண்மை வீட்டு முகவரின் இந்த வார்த்தைகள் எபிரெய எழுத்தாளரை எதிரொலித்தது. "வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்". (வ.3:3). எபிரெய நிருபத்தின் எழுத்தாளர் தேவ குமாரனாகிய இயேசுவின் உண்மைத்தன்மையை, தீர்க்கதரிசியாகிய மோசேயுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் (வவ. 1-6). மோசே தேவனிடம் நேருக்கு நேர் பேசுவதற்கும், அவருடைய உருவத்தைக் காண்பதற்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் (எண்ணாாகமம் 12:8), அவர் தேவனுடைய வீட்டில் "ஒரு பணிவிடைக்காரனாய்" மட்டுமே இருந்தார் (எபிரெயர் 3:5). கிறிஸ்துவே படைப்பாளர் (1:2, 10). ஆவிக்குரிய "எல்லாவற்றையும் கட்டுபவர்" மற்றும் "தேவனின் வீட்டில்" குமாரன் (3:4, 6) என்ற மரியாதைக்குத் தகுதியானவர். தேவமக்களாகிய நாம்தான் அவருடைய வீடு. 
  
நாம் தேவனை உண்மையாகச் சேவிக்கும்போது, நமது ஆவிக்குரிய ஜீவியத்தைக் கட்டி எழுப்புகிறவராகிய இயேசுவே அந்த கனத்திற்குத் தகுதியானவர். தேவனின் வீடாகிய நாம் பெறும் எந்தப் புகழும் அவருக்கே உரியதாகும். 

உள்ளான சுகத்திற்கான வேட்டை

அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் கார்சன், வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, பைக்குகள் ஓட்டுவது மற்றும் ஸ்கேட்போர்டில் செல்வது என்று எப்போதும் மும்முரமாகவே செயல்படுவார். அவர் வெளியே பொழுதைக் கழிப்பதில் அதிக பிரியப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி விபத்திற்குள்ளானதால், அவருடைய மார்புக்கு கீழ் அனைத்தும் செயலிழந்துபோனது. விரைவில் மனச்சோர்வுக்குள் மூழ்கினார். அவருடைய எதிர்காலம் இருண்டுபோனது. அவனுடைய சிநேகிதர்களில் சிலர் அவனை மீண்டும் வேட்டைக்கு கூட்டிச்சென்றனர். அந்த தருணத்தில் தன்னுடைய துயரங்கள் அனைத்தையும் மறந்து சுற்றியிருக்கும் அனைத்து அழகையும் ரசித்தான். இந்த அனுபவம் அவனுக்கு உள்ளான இருதய சுகத்தை ஏற்படுத்தி, அவனுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவனைப் போல் இருப்பவர்களும் அந்த அனுபவத்தை பெறும் நோக்கத்தோடு, “வேட்டையிலிருந்து சுகத்துக்கு” (ர்ரவெ 2 ர்நயட) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். அவன், “என்னுடைய விபத்தானது எனக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது... நான் எப்போதும் செய்ய விரும்பியதை இப்போது மற்றவர்களுக்கு செய்வதின் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லுகிறான். மிகவும் கடுமையான சரீர குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தேவையான இடவசதியை ஒழுங்குசெய்து அவர்களுக்கு உள்ளான சுகத்தை கொடுப்பதில் இப்போது அவர் மும்முரமாய் செயல்பட்டு வருகிறான்.  
நொருங்குண்ட இருதயங்களை காயங்கட்டும் ஒருவரின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார் (ஏசாயா 61). அவர் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்” கிரியை செய்வார் (வச. 1-2). இயேசு இந்த வேத வாக்கியங்களை தேவாலயத்தில் வாசித்த பின்பு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்றார். இயேசு நம்மை இரட்சிக்கவும் பூரணப்படுத்தவும் வந்தார்.  
உங்களுக்கு உள்ளான சுகம் அவசியப்படுகிறதா? இயேசுவிடம் வாருங்கள், அவர் “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையை” (ஏசாயா 61:3) உங்களுக்குக் கொடுப்பார்.  

சேவை செய்யும் சவால்

பதிமூன்றே வயது நிரம்பிய டேஏவியன் மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவாலை மேற்கொண்டான். கோடை விடுமுறையின் போது, தன்னுடைய ஐம்பது புல்வெளிகளை இலவசமாக வெட்டும்படி குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை அவனும் அவனது அம்மாவும் கேட்டிருக்கிறார்கள். இராணுவ வீரர்கள், ஒற்றை அம்மாக்கள், ஊனமுற்றவர்கள், அல்லது உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவதே அவர்களின் நோக்கம். அந்த புல்வெளிகளின் சொந்தக்காரர், வேலையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதின் அவசியத்தையும் அவர்களுக்கு விளங்கச்செய்தார். கோடையின் வெயில் சுட்டெரிக்கும் போதும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதை விரும்பிய டேஏவியன் 
அடிக்கும்போது அந்த சவாலை நேர்த்தியாய் செய்து முடித்தார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும் சவால் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர்சீஷர்களோடு பந்தியிருந்தார் (யோவான் 13:1-2). அவர் கடந்துபோகப்போகிற உபத்திரம் மற்றும் மரணம் என்னும் பாதையைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் ஒரு துண்டை எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு சீஷர்களின் பாதங்களை கழுவினார் (வச. 3-5). மேலும் "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் 
(໙. 14). நம்முடைய தாழ்மையான மாதிரியாகிய இயேசு மக்களிடம் கரிசனை காண்பித்தார். அவர் குருடருக்குப் பார்வையும், வியாதியஸ்தருக்கு சுகமும் கொடுத்து இராஜ்யத்தின் நற்செய்தியைப் போதித்து, தன் சிநேகிதருக்காகத் தன்னுடைய ஜீவனையும் கொடுத்தார். கிறிஸ்து உங்களை நேசிப்பதால், இந்த வாரத்தில் யாருக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர்விரும்புகிறார் என்று அவரிடத்தில் கேளுங்கள். 

முற்றிலும் தனிமையா?

ஸ்வேதாவின் குடும்பம் பிரிவதை அவள் தன் கண்முன்னே பார்த்தாள். அவளுடைய கணவர் ஒருநாள் திடீரென வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் அவளும், அவளுடைய குழந்தைகளும், குழப்பத்துடனும் கோபத்துடனும் இருந்தனர்‌. அவள் அவனைத் திருமண ஆலோசகரிடம் செல்லுமாறு கூற, அவன் தவறு முழுவதும் மனைவியிடம்தான் இருக்கிறதென்று சொல்லி, அதை மறுத்து விட்டான். அவன் திரும்பிவர வாய்ப்பில்லை என்பதை நினைக்கும்போது, அவள் பயத்தாலும் நம்பிக்கையின்மையினாலும் பாதிக்கப்பட்டாள். அவளால் தன்னையும், தன்னுடைய குழந்தைகளையும் தனியே கவனித்துக் கொள்ள முடியுமோ?

ஆபிரகாம் மற்றும் சாராளின் வேலைக்காரியாகிய ஆகாரும் இத்தகைய சூழலை எதிர்கொண்டாள். தேவன் தாம் வாக்குப்பண்ணினபடி (ஆதியாகமம் 12,15) ஒரு குமாரனைத் தருவாரென்பதற்குப் பொறுமையாய் காத்திராமல், சாராய் தன்னுடைய வேலைக்காரியாகிய ஆகாரை தன்னுடைய கணவருக்குக் கொடுத்தமையால், ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்தான் (ஆதியாகமம் 16:1-4,15). ஆனால் தேவனுடைய வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கு பிறந்தபோது, குடும்பத்திலுள்ள பதற்றம் அதிகரித்து, ஆபிரகாம் ஆகாரையும், இஸ்மவேலையும், சிறிது உணவு மற்றும் தண்ணீரைக் கொடுத்து அனுப்ப வேண்டியதாயிற்று (ஆதியாகமம் 21:8-21). அவளுடைய விரக்தியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சீக்கிரத்தில் அவ்வுணவெல்லாம் தீர்ந்து வனாந்தரத்தில் தவித்தனர். ஆகார் செய்வதறியாமல் இஸ்மவேலை ஒரு புதரின் அடியில் வைத்துவிட்டு, தன் மகன் சாவதை காணவேண்டாமென்பதற்காக தூரமாக நடந்து சென்றாள். இருவரும் அழுதனர். ஆனால் தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார் (வ.17). தேவன் அவர்களுடைய அழுகையைக் கேட்டு, அவர்கள் தேவைகளைச் சந்தித்து, அவர்களோடே இருந்தார்.               

தனிமையான நேரங்களில் விரக்தியுற்று நாம் தேவனிடம் அழுகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம்முடைய வாழ்வில் அவர் கேட்கிறவராகவும், தேவைகளைச் சந்திப்பவராகவும், நம்முடன் கூட இருப்பவராகவும் இருக்கிறாரென்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது.

நீங்கள் இயேசுவிடம் என்ன கேட்பீர்கள்?

"இந்த காலையில் இயேசு நம்முடன் மேஜையில் பிரத்தியட்சமாக அமர்ந்திருந்தால், நீங்கள் அவரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?" ஜோ, தனது குழந்தைகளிடம் காலை உணவின்போது விசாரித்தார். அவர் வீட்டுச் சிறுவர்கள் தங்களுக்கான கடினமான கேள்வியைக் குறித்து யோசித்தார்கள். அவர்கள் மிகவும் கடினமான கணித புதிர்களை இயேசுவிடம் கேட்க வேண்டும் என்றும், பிரபஞ்சம் உண்மையில் எவ்வளவு பெரியது என்று அவர் சொல்லிக் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அப்போது அவரது மகள், "நான் அவரை அணைக்கும்படி கேட்பேன்" என்றாள்.

இந்த பிள்ளைகளுக்காக இயேசுவின் கண்களில் இருக்கும் அன்பை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லையா? அவர்களின் வேண்டுகோள்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் இணங்குவார் என்று நான் நினைக்கிறேன், இல்லையா? அவர் சிறுவர்களுக்கு வேடிக்கை காட்டுவதாகவும், சிறுமியிடம் தனது கரங்களைத் திறப்பதாகவும் நான் கற்பனை செய்கிறேன். தன்னை அணைக்கும்படியான ஜோவின் மகளின் ஆசையைக் குறிப்பாக அவர் விரும்பலாம், இது அவரது அன்பிற்காக ஏங்கும் மற்றும் அவரை நேசிக்கும் இதயத்தையும் வெளிப்படுத்துகிறது.

சிறுவர்கள் சார்ந்துகொள்ளுகிறவர்கள், மேலும் இயேசு வலிமையானவர் மற்றும் அன்பானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். "எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் " (லூக்கா 18:17) என்று அவர் கூறினார். அவருடைய கிருபை, மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்கான தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று கிறிஸ்து ஏங்குகிறார். அவருக்கு அருகில் இருக்க விரும்பும் தாழ்மையான இதயங்களை அவர் விரும்புகிறார்.

நீங்கள் இயேசுவிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? நாம் அனைவரும் நிச்சயமாக நமக்கான கேள்விகளைக் கொண்டிருப்போம்! அல்லது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா? அந்த அணைப்பிற்காகவும், உங்களுக்குத் தேவையான பலவற்றிற்காகவும் இப்போது அவரிடம் ஓடுங்கள்.

 

நன்மைக்காகத் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

விமல் ஒரு புதிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தார், அவர் ஆராதிப்பதற்கு ஒரு சபையையும் விரைவில் தேடிக்கொண்டார். அவர் சில வாரங்கள் ஆராதனைக்குச் சென்றார். பின்னர் ஒரு ஞாயிறன்று, அவர் போதகரிடம் ஏதாவது ஒரு முறையில் ஊழியம் செய்திட விரும்புவதைப் பற்றிப் பேசினார்.  "நான் துடைப்பத்தால் சுத்தம் செய்யவே விரும்பினேன்" என்றார். ஆராதனைக்கு நாற்காலிகள் அடுக்குவது, கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது என்று அவர் துவங்கினார். விமலின் திறமை போதிப்பதில் இருப்பதைச் சபை குடும்பத்தினர் பின்னர் கண்டுபிடித்தனர், ஆனால் அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.

இயேசு தம்முடைய சீஷர்களில் இருவரான யாக்கோபு, யோவான் மற்றும் அவர்களது தாயாருக்கு ஊழியத்தைக் குறித்ததான பாடத்தைக் கற்பித்தார். கிறிஸ்து தமது ராஜ்யத்தோடு வருகையில்,  அவளுடைய மகன்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் முக்கியமான இடம் வேண்டும் என்று அவர்களின் தாய் கேட்டுக் கொண்டாள் (மத்தேயு 20:20-21). மற்ற சீஷர்கள் இதைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது கோபம் கொண்டார்கள். ஒருவேளை அவர்களும் தங்களுக்காக அந்த பதவிகளை விரும்பினார்களா? பிறர் மீது அதிகாரம் செலுத்துவது வாழ்வதற்கான வழி அல்ல (வ. 25-26), மாறாகப் பணிவிடை செய்வதே மிக முக்கியமானது என்று இயேசு அவர்களிடம் கூறினார். "உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்" (வ. 26).

"துடைப்பத்தால் சுத்தம் செய்தல்" என்ற விமலின் வார்த்தைகள்; கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய, நம் சமூகங்களிலும் சபைகளிலும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்திடலாம் என்பதற்கான நடைமுறை பாடம். விமல்  தனது வாழ்க்கையில் தேவன் மீதான கொண்டுள்ள ஆர்வத்தை இவ்வாறு விவரித்தார்: "நான் தேவனின் மகிமைக்காகவும், உலகின்  நன்மைக்காகவும், என் சொந்த மகிழ்ச்சிக்காகவும் ஊழியம் செய்ய விரும்புகிறேன்." தேவன் நம்மை வழிநடத்துகையில்,  நீங்களும் நானும் எவ்வாறு "துடைப்பத்தைக் கையிலெடுப்போம்"?

தற்போது கிருபை

எனது நண்பன் ஜெரியின் வேலை ஸ்தலத்தில் சிறிய இடைவேளையில் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவதற்காக ஒரு துரித உணவு விடுதிக்கு விரைந்தோம். அதே நேரத்தில் வாசலில் வந்த ஆறு இளைஞர்கள் எங்களுக்கு முன்னால் உள்ளே நுழைந்தனர். எங்களுக்கு அதிக நேரம் இல்லை என்பதை அறிந்து, உள்ளுக்குள் முணுமுணுத்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் முதலில் ஆர்டர் செய்யலாம் என்பதை உறுதிப்படுத்த இரு வரிசைகளிலும் ஒரு குழுவாக நின்றார்கள். “இப்போது கிருபை காண்பியுங்கள்” என்று ஜெரி தனக்குத்தானே கிசுகிசுப்பதை நான் கேட்டேன். ஆஹா! நிச்சயமாக, முதலில் எங்கள் தேவைகள் சந்திக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு நலமானதாக இருந்திருக்கும். ஆனால் என்னுடையது மட்டுமல்ல, மற்றவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு ஒரு சிறந்த நினைவூட்டலாக அத்தருணம் அமைந்தது. 

அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது” (1 கொரிந்தியர் 13:5) என்று வேதம் போதிக்கிறது. “அடிக்கடி . . . மற்றவர்களின் நலன், திருப்தி, நன்மை ஆகியவற்றைத் தனக்கென விரும்புகிறது,” என்று இந்த அன்பைப் பற்றி வேத விளக்கவுரையாளர் மேத்யூ ஹென்றி எழுதுகிறார். தேவனுடைய அன்பு மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நம்மில் பலர் எளிதில் எரிச்சலடையும் ஒரு உலகில், மற்றவர்களிடம் பொறுமையாக இருப்பதற்கும் கருணை காட்டுவதற்கும் தேவனிடத்தில் உதவி மற்றும் கிருபையை அடிக்கடி கேட்கிறோம் (வச. 4). நீதிமொழிகள் 19:11, “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்று கூறுகிறது. 

அதுதான் கடவுளுக்கு கனம் தரும் அன்பான செயல், மேலும் அவர் தனது அன்பைப் பற்றிய எண்ணங்களை மற்றவர்களுக்குக் கொண்டு வர அதைப் பயன்படுத்தலாம்.

தேவனுடைய பலத்துடன், இப்போது மற்றவர்களுக்கு கருணை காண்பிக்க ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம். 

 

தேவனுடைய தட்டில் வைத்துவிடுங்கள்

பல ஆண்டுகளாக, ஒரு தாய் வியாதிப்பட்டிருந்த தனது வாலிப மகளுக்கு மருத்துவ ரீதியாக உதவி, நல்ல ஆலோசனை மற்றும் சிறந்த மருந்துகளைப் பெற்றுத் தந்து, அவளுக்காக ஜெபித்துக் கொண்டுமிருந்தாள். மகளுடைய சரீரத்தின் ஏற்ற தாழ்வான நிலையற்ற தன்மை, அம்மாவின் இதயத்தை  நாளுக்கு நாள் கணமூட்டியது. அடிக்கடி சோகத்தால் சோர்வடைந்து, தனக்கும் பராமரிப்பு வேண்டும் என்பதை உணர்ந்தாள். ஒரு நண்பர் அவளது கவலைகளையும், தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களையும் சிறிய காகிதத் துண்டுகளில் எழுதி, "தேவனுடைய தட்டில்" வைத்து அவளது படுக்கையில் வைக்குமாறு பரிந்துரைத்தார். இந்த எளிய நடைமுறை அனைத்து மன அழுத்தத்தையும் அகற்றவில்லை, ஆனால் அந்தத் தட்டைப் பார்க்கும்போது அவளுக்கு அந்த கவலைகள் தேவனுடைய தட்டில் இருப்பதை நினைவூட்டுகிறது, அவை அவளுடையது அல்ல.

ஒரு விதத்தில், தாவீதின் பல சங்கீதங்கள் அவனுடைய உபத்திரவங்களைப்  பட்டியலிட்டு, அவற்றை 'தேவனுடைய தட்டில்' வைப்பதற்கான வழியாக இருந்தன (சங்கீதம் 55:1, 16-17). அவரது மகன் அப்சலோமின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது இங்கே விவரிக்கப்பட்டிருக்குமானால், தாவீதின் "நெருங்கிய நண்பன்" அகித்தோப்பேலும் உண்மையில் அவருக்குத் துரோகம் செய்து அவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபட்டான் (2 சாமுவேல் 15-16). எனவே "அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் (தாவீது) கூக்குரலிட்டார்"  தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டார் (சங்கீதம் 55:1-2, 16-17). அவர் "கர்த்தர்மேல் பாரத்தைவைத்துவிட" தெரிந்துகொண்டார் மற்றும் அவரது பராமரிப்பை அனுபவித்தார் (வ. 22).

கவலைகளும் பயங்களும் நம் அனைவரையும் பாதிக்கின்றன என்பதை நாம் உண்மையாக ஒப்புக் கொள்ளலாம். தாவீதைப் போன்ற எண்ணங்கள் நமக்கும் இருக்கலாம்: “ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்” (வ. 6). தேவன் அருகில் இருக்கிறார், சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றல் உள்ளவர் அவரே. அனைத்தையும் அவரது தட்டில் வையுங்கள்.