எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

ஆவியில் நிரம்பி

அமெரிக்க நாட்டு எழுத்தாளரும், புதிய ஏற்பாட்டு அறிஞருமான ஸ்காட் மெக்நைட்; உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, "ஆவியில் நிரம்பிய அனுபவத்தைப் பற்றி" பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு முகாமில் இருந்தபோது, ஆவியானவருக்கு ஒப்புவிப்பதன் மூலம் கிறிஸ்துவை வாழ்க்கையின் சிம்மாசனத்தில் அமர்த்த அதின் பேச்சாளர் அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர், அவ்வறிஞர் மரத்தடியில் அமர்ந்து, "பிதாவே, என் பாவங்களை மன்னியும். பரிசுத்த ஆவியானவரே, என்னுள்ளே வந்து என்னை நிரப்பும்" என்று ஜெபித்தார். ஒரு பெரிய வல்லமையான மாற்றம் ஏற்பட்டது. "அந்த தருணத்திலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாய் மாறியது. பூரணம் அல்ல ஆனால் மற்றம் உண்டானது” என்றார். வேதத்தைப் படிக்கவும், ஜெபிக்கவும், இயேசுவில் உள்ள மற்ற விசுவாசிகளைச் சந்திக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும் அவருக்கு 
உடனே விருப்பம் ஏற்பட்டது. 
  
உயிர்த்தெழுந்த இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு முன், தனது நண்பர்களிடம், "ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்" (அப்போஸ்தலர் 1:5) என்று கட்டளையிட்டார். அவர்கள் பெலனடைந்து, "எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்" சாட்சிகளாயிருப்பார்கள் (அப்போஸ்தலர் 1:8). இயேசுவை நம்பும் ஒவ்வொருவருக்கும், தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தருகிறார். இது பெந்தெகொஸ்தே நாளில் முதலில் நடந்தது (அப்போஸ்தலர் 2ஐப் பார்க்கவும்). இன்றும் யாரெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறார்களோ அவர்களுடைய வாழ்விலும் இது நிகழ்கிறது. 
  
இயேசுவை விசுவாசிக்கிறவர்களை தேவனுடைய ஆவியானவர் தொடர்ந்து தம் ஆவியால் நிரப்புகிறார். ஆவியானவரின் உதவியால் சுபாவ மாற்றங்கள் மற்றும் உன்னதமான விருப்பங்கள் போன்ற கனிகளைத் தருகிறோம் (கலாத்தியர் 5:22-23). தேவன் நமக்கருளும் ஆறுதலுக்கு, உணர்த்துதலுக்கு, உதவிக்கு மற்றும் அன்பிற்காக நன்றியோடு துதிப்போம். 

விசுவாசம் கேள்வியினால் வரும்

பாஸ்டர் பாப், அவரது குரலைப் பாதிக்கும் வகையிலான ஒரு பெலவீனத்தால் பாதிக்கப்பட்டபோது,  பதினைந்து ஆண்டுகள் அவர் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் வாழ நேரிட்டது. பேச முடியாத ஒரு போதகரால் என்ன செய்ய முடியும் என்று அவர் சோர்ந்துபோனார். இந்தக் கேள்வியுடன் அவர் போராடினார். தனது ஏக்கத்தையும் குழப்பத்தையும் தேவனிடம் விண்ணப்பித்தார். “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது ஒன்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று அவர் ஜெபித்தார். அவர் வேதத்தைப் படிக்க நேரம் செலவழித்தபோது, தேவன் மீது அவருக்கு இருந்த அன்பு அதிகரித்தது. அவர், “வேதத்தை உள்வாங்குவதற்கும் அதில் மூழ்கியிருப்பதற்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஏனென்றால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வரும்” என்று அறிக்கையிடுகிறார்.  
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. பவுல், யூதர்கள் அனைவரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்பினார் (ரோமர் 10:9). அவர்கள் எப்படி நம்புவார்கள்? தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் ஏற்படும் விசுவாசத்தினாலும், கிறிஸ்துவைக் குறித்த வார்த்தையினாலுமே அது சாத்தியமாகும் (வச. 17).  
பாஸ்டர் பாப், வேதத்தை வாசிக்கும்வேளையில் கிறிஸ்துவின் செய்தியை பெற்றுக்கொள்ளவும் விசுவாசிக்கவும் முயற்சிக்கிறார். அவரால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பேசக்கூடும். அவ்வாறு பேசும்போதும் அதிக வேதனையை அவர் உணருவார். ஆனால் அவர் வேதத்தில் மூழ்கியிருப்பதின் மூலம் தேவனிடமிருந்து சமாதானத்தையும் திருப்தியையும் தொடர்ந்து காண்கிறார். ஆகவே, நம்முடைய போராட்டங்களில் இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் நம்பலாம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவருடைய செய்தியைக் கேட்கும்போது அவர் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வார்.

சோதனைகள் மூலம் பெலப்படுத்தப்பட்டது

“நான் கண் பரிசோதனை செய்து கொண்டேன்” என்ற ஒரு ஸ்டிக்கரை என்னுடைய மகன் ஒரு கடிதத்தில் ஒட்டியிருந்தை பார்த்த மாத்திரத்தில் என் நினைவுகள் பின்நோக்கி சென்றன. அவனுடைய கண்ணில் அந்த மருத்தை ஊற்றிக்கொண்டு, அந்த ஸ்டிக்கரை அவன் பெருமையோடு ஒட்டிக்கொண்டதை பார்த்து நான் நெகிழ்ச்சியடைந்தேன். பலவீனமான கண் தசைகள் காரணமாக, அவன் நேர்த்தியாய் செயல்பட்ட தனது கண்ணின் மீது ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்களுக்கு ஒரு பேட்ச் அணிய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்வதின் மூலம் அவனுடைய பலவீனமான கண் சரியாகும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவனுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. அவனுடைய பெற்றோர்களாகிய எங்களை ஆறுதலாகவும், ஒரு குழுந்தையின் விசுவாசத்தோடு தேவனையும் சார்ந்துகொண்டு அவன் இந்த சவால்களை ஒவ்வொன்றாய் மேற்கொண்டான். இந்த சவால்களின் மூலம் அவன் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டான்.  
பாடுகளிலும் உபத்திரவத்திலும் நிலைநிற்கும் மக்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களினால் அடிக்கடி மாற்றத்தை அனுபவிக்கின்றனர். பவுல் அப்போஸ்தலர் அதற்கு ஒரு படி மேலே போய், “தேவமகிமையை அடைவோமென்கிற” நம்பிக்கையினாலே, உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது என்கிறார். உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறது என்கிறார் (ரோமர் 5:3-5). பவுல், கப்பல் சேதம் மற்றும் சிறைவாசங்கள் போன்ற சோதனைகளை அனுபவித்தவர். ஆகிலும் ரோமில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அவர் சொல்லும்போது. “நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (வச. 5) என்கிறார். நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, கிறிஸ்துவின் மீதான நம்முடைய நம்பிக்கையை பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துவார் என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார்.  
நீங்கள் எவ்விதமான போராட்ங்களை சகித்தாலும், தேவன் தன்னுடைய கிருபையையும் இரக்கத்தையும் உங்கள் மீது பொழியச் செய்வார். அவர் உங்களை நேசிக்கிறார்.

துக்கமும் மகிழ்ச்சியும்

ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.  
அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12).  
ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள்.  
நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம்.  

சிறந்த அன்பு

இயேசுவின் சிலுவை தியாகத்தை நினைவுகூரும் அந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகமான அன்பை நினைவுகூர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலை கொண்டாடும்வேளையில், தென்மேற்கு பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தி  அங்கிருந்த இருவரைக் கொன்றான். பேச்சு வார்த்தைக்கு பின்னர், அவன் தன் கைவசம் பிடித்துவைத்திருந்த மக்களை விடுவித்தான்;. ஆனால் அவனுடைய பாதுகாப்புக்காக அதில் ஒரு பெண்ணை மட்டும் பினையக்கைதியாய் பிடித்து வைத்திருந்தான். ஆபத்தை அறிந்த போலீஸ் அதிகாரி அர்னாட் பெல்ட்ரேம், எதிர்பாராத ஒன்றைச் செய்தார். அவர் அவன் பிடித்து வைத்திருந்த பெண்ணுக்கு பதிலாக, தன்னை பிடித்து வைத்துக்கொள்ளும்படிக்கு முன்வந்தார். தீவிரவாதியும் அதை ஒப்புக்கொண்டு அவளை விடுவித்தான். ஆனால் அதற்கடுத்து நடந்த சண்டையில், பெல்ட்ரேம் காயமடைந்து பின்னர் இறந்துபோனார். 
அந்த போலீஸ் அதிகாரியை நன்கு அறிந்த போதகர் ஒருவர், அவருடைய அந்த துணிச்சலான செய்கையை தேவன் மீதான விசுவாசத்திற்கு ஒப்பிட்டு யோவான் 15:13ஐ மேற்கோள் காண்பிக்கிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” பூமியில் தன்னுடைய கடைசிபோஜனத்தை புசித்த இயேசு இவ்வார்த்தைகளை தன்னுடைய சீஷர்களைப் பார்த்து கூறினார். “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்” (வச. 12) என்று போதித்த அவர், ஒருவர் தன் சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்க துணிவதே அந்த மெய்யான அன்பு என்று கூறுகிறார் (வச. 13). அதைத்தான் அடுத்த நாளில் அவர் செய்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும்பொருட்டு, அவர் சிலுவையில் தன் ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். 
அர்னாட் பெல்ட்ரேம் செய்த அந்த துணிச்சலான தியாகத்தை செய்வதற்கு நமக்கு அழைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கும்போது, நம்முடைய மாம்ச திட்டங்களை விட்டுவிட்டு, அவருடைய அந்த சிறந்த அன்பின் மேன்மையை மற்றவர்களுக்கு அறிவிக்க பிரயாசப்படுவோம்.  

புத்துணர்ச்சியூட்டும் பாலைவனச்சோலை

ஆன்ட்ரூவும் அவனது குடும்பத்தினரும் கென்யாவில் வனப்பயணம் சென்றிருந்தபோது, ஒரு ஏரியை நோக்கிப் பல வகையான மிருகங்கள் செல்வதைக் கண்டு மகிழ்ந்தனர். அவ்வாழ்வு தரும் நீரூற்றை நோக்கி, ஒட்டகச்சிவிங்கிகளும், காட்டு மிருகங்களும், நீர்யானைகளும், நீர்ப்பறவைகளும் பயணம் செய்தன. அக்காட்சியை ஆன்ட்ரூ உற்றுக் கவனித்தபோது, வேதமானது அத்தண்ணீரைப் போல வழிநடத்துதலையும், ஞானத்தையும் தருவதுமின்றி, மனிதர்களுடைய நடைமுறை வாழ்க்கையில், புத்துணர்ச்சியைத் தந்து அவர்கள் தாகத்தைத் தீர்க்கும் தெய்வீகம் சுரக்கும் ஊற்றாய் இருக்கிறதென்பதை நினைவுகூர்ந்தார்.

ஆன்ட்ரூவின் அக்கணிப்பு பழைய ஏற்பாட்டில் தேவனின் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் குறிக்கும் பதமான "தேவனின் வேதத்தில்" பிரியமாயிருந்து, அதை தியானிப்பவர்களை "பாக்கியவான்" என்று சங்கீதக்காரன் அழைப்பதை எதிரொலிக்கிறது. வசனங்களைத் தியானிக்கிறவர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தரும் மரத்தைப் போலிருக்கிறார்கள் (சங்கீதம் 1:3). எப்படி வேறானது மண்ணுக்குள் சேர்ந்து, வளர்ச்சியைப் பெற்றுக் கொள்கிறதோ, அதேபோல், தேவனை உண்மையாய் நேசித்து அவரை விசுவாசிப்பவர்களும், சத்தியத்தில் வேரூன்றி, அவர்களுக்குத் தேவையான பலத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்.

தேவனுடைய ஞானத்திற்குள்ளாக, நம்முடைய ஆதாரங்களை நாம் ஒப்புக்கொடுக்கும் போது, நாம் "காற்றுப் பறக்கடிக்கும் பதரை போல்" (வ.4 ) இருக்க மாட்டோம். தேவன் நமக்கு வேதத்தில் கொடுத்துள்ளவற்றை நாம் தியானிக்கும் போது, நாம் அவருடைய பராமரிப்பையும் வழி நடத்துதலையும் பெற்று நிலைத்திருக்கும் கனி கொடுக்கிறவர்களாய் இருக்க முடியும்.       

தேவனின் விசாலமான இடம்

இறையியலாளர் டோட் பில்லிங்ஸ் குணப்படுத்த முடியாத இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தபோது, ​​தனது உடனடி மரணத்தைத் தொலைதூர அறைகளில் உள்ள விளக்குகள் அணைவது அல்லது அணையும்படி மினுமினுப்பது போலவும் இருப்பதாக விவரித்தார். "ஒன்று மற்றும் மூன்று வயதுக் குழந்தையின் தந்தையாக, நான் அடுத்த சில தசாப்தங்களை  ஒரு பரந்த வெளியாக நினைக்க முனைந்தேன். நேட்டியும் நத்தானியேலும் வளர்ந்து முதிர்ச்சியடைவதை நான் பார்ப்பேன் என்று கருதினேன். ஆனால் நோய் கண்டறியப்பட்டதில். ஒரு குறுகல் நடைபெறுகிறது"

இந்த வரம்புகளைப் பற்றிச் சிந்திக்கையில், பில்லிங்ஸ் சங்கீதம் 31 இல், தேவன் தாவீதை எப்படி "விசாலத்திலே" (வ.8) வைத்தார் என்பதையும் அவதானிக்கிறார். தாவீது தனது சத்துருக்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றிப் பேசினாலும், தேவனே தனது பலத்த துருகமும் அடைக்கலமான அரணுமானவர் என்று அவர் அறிந்திருந்தார் (வ.2). இந்த பாடலின் மூலம், சங்கீதக்காரன் தேவன் மீதான தனது நம்பிக்கைக்குக் குரல் கொடுத்தார்: "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" (வ.15).

தேவன் மீது நம்பிக்கை வைப்பதில், பில்லிங்ஸ் தாவீதை பின்பற்றுகிறார். இந்த இறையியலாளர், கணவன், தந்தை தனது வாழ்க்கையில் குறுகலை எதிர்கொண்டாலும், அவரும் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஏன்? ஏனென்றால், கிறிஸ்துவின் பலியின் மூலம் மரணத்தின் மீது தேவன் பெற்ற வெற்றி என்பது, “கற்பனைக்கு எட்டாத விசாலமான இடமான” கிறிஸ்துவில் நாம் வாழ்வதைக் குறிக்கிறது. அவர் விளக்குவது போல், "பரிசுத்த ஆவியானவரால் அவருடைய வாழ்க்கையில் பங்கெடுப்பதை விடப் பரந்த மற்றும் விசாலமானது எது?"

நாமும் புலம்பி அழலாம், ஆனால் நம்மை வழிநடத்தவும் வழிகாட்டவும்  தேவனிடம் அடைக்கலம் புகலாம் (வ.1,3). நாம் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறோம் என்பதை தாவீதுடன் உறுதிப்படுத்த முடியும்.

பெருமதிப்புமிக்க பயம்

“எனக்கு மரண பயத்தைப்பற்றி கொஞ்சம் தெரியும். ஏழு ஆண்டுகளுக்குமுன் எனக்குக் குணமாகாத புற்றுநோய் இருப்பதை நான் அறிந்தபோது.. கடுமையான, அலைக்கழிக்கிற, நிலைகுலையச்செய்து மூழ்கடிக்கும் பயத்தை உணர்ந்தேன்" என்று ஜெரமி எழுதுகிறார். ஆனால் தேவனுடைய பிரசன்னத்தைச் சார்ந்துகொள்ளவும், தனது மரணபயத்திலிருந்து தேவனுக்கேற்ற பயபக்திக்குக் கடந்துபோகவும் அவர் கற்றுக்கொண்ட பிறகு, தனது பயத்தைக் கையாள அறிந்துகொண்டார். ஜெரமியை பொறுத்தமட்டில் அதின் பொருள், “மரணத்தை ஜெயமாக விழுங்கு(ம்)வார்” (ஏசாயா 25:8) இந்த அண்ட சராசரத்தின் சிருஷ்டிகரைப் பற்றின வியப்போடு இருப்பதும், அதேநேரம் தேவன் தன்னை அறிந்து நேசிக்கிறார் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதுமே.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்; அதாவது நமது பரிசுத்த தேவனைக் குறித்த ஆழமான மரியாதையும், வியப்புமே. வேதாகமம் முழுவதும் இழைந்தோடும் கருப்பொருள் இதுவே. நீதிமொழிகள் எனும் தொடர்ச்சியான ஞான வார்த்தைகளால் தனது மகனைக் கர்த்தருக்குப் பயப்படும்படி சாலொமோன் ராஜா அறிவுறுத்தினார். தனது மகன், அவனுடைய “செவியை ஞானத்திற்குச் சாய்த்து” அதை “புதையல்களைத் தேடுகிறதுபோல்” தேடும்போது, அவன் “கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று.. உணர்ந்து,  தேவனை அறியும் அறிவை” (நீதிமொழிகள் 2:2,4-5) கண்டடைவான். ஞானம் மற்றும் அறிவோடும், நல்யோசனையையும் புத்தியையும் பெறுவான் (வ.10-11).

நாம் பலவகையான சவால்களைச் சந்தித்து, நடுக்கத்தையும் பயத்தையும் அனுபவிக்கும்போதுதான் நாம் பெலவீனர்களென்று நினைவூட்டப்படுகிறோம். ஆனால் நாம் தேவனிடம் திரும்பி, அவரிடம் உதவி கேட்டு, அவருக்கு முன் நம்மைத் தாழ்த்தி, அவரை பயபக்தியோடு பணிந்துகொள்ளுகையில்; நாம் நமது பயத்தைக் கடந்து அவரைப்பற்றிய ஆரோக்கியமான பயத்திற்கு நேராக நடக்க அவர் நமக்கு உதவுவதைக் காண்போம்.

 

தேவனின் கரம்

1939 ஆம் ஆண்டில், பிரிட்டன் சமீபத்திய போரில் ஈடுபடுகையில், அரசர் ஆறாம் ஜார்ஜ் தனது கிறிஸ்துமஸ் தின வானொலி ஒலிபரப்புரையில் ஐக்கிய இராச்சியம் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிகள் தேவன் மீது நம்பிக்கை வைக்குமாறு ஊக்குவிக்க முயன்றார். அவரது தாயார் விலைமதிப்பற்றதாகக் கண்ட ஒரு கவிதையை மேற்கோள் காட்டி, அவர் கூறினார்: “இருளை எதிர்கொண்டு, தேவனின் கரத்தில் உன் கரத்தை ஒப்புவி. அதுவே உனக்கு வெளிச்சத்தைக் காட்டிலும் சிறந்ததும், நீ அறிந்த பாதையைக் காட்டிலும் பாதுகாப்பாகவும் இருக்கும்". புத்தாண்டில் என்ன நடக்கும் என்பதை அவர் அறியார், ஆனால் வரப்போகும் துக்கமான நாட்களில் அவர்களை "வழிகாட்டி, நிலைநிறுத்த" அவர் தேவனையே நம்பினார்.

ஏசாயா புத்தகம் உட்பட வேதாகமத்தில் பல இடங்களில் தேவனின் கரம் காணப்படுகிறது. இந்த தீர்க்கதரிசி மூலம், தேவன் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய சிருஷ்டிகராக, “முந்தினவரும்.. பிந்தினவருமா(க)மே” (ஏசாயா 48:12) இருப்பவர் அவர்களுடன் தொடர்ந்து இடைப்படுவார் என்று நம்பும்படிக்கு அழைத்தார். அவர் சொல்வது போல், "என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது" (வ.13). அவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், திராணியற்றவர்களை நோக்கக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்" (வ.17).

புத்தாண்டை எதிர்நோக்கி இருக்கும் நாம் எதை எதிர்கொண்டாலும், அரசர் ஜார்ஜ் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசி அளித்த ஊக்கத்தைப் பின்பற்றி, தேவன் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கலாம். அப்போது, ​​நமக்கும், நமது சமாதானம் நதியைப் போலும், நமது சுகவாழ்வு சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும் (வ.18).