ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.

மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 7. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.~ ஏசாயா 9:1-7

என் குடும்பத்தை விட்டு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் நான் கிறிஸ்துமஸை கொண்டாட நேரிட்டது. நாங்கள் கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகளை பிரித்துக்கொண்டிருக்கிறோம் என்று என்னுடைய கணவர் என்னிடத்தில் சொன்னமாத்திரத்தில், நான் தனிமையாகவும் சோர்வாகவும் உணர்ந்தேன். என் இருதயம் வியாகூலப்படும்போது என்னால் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடியும்?

சூடான தேநீரைப் பருகிக்கொண்டு, உணவு மேஜையில் அமர்ந்துகொண்டு அதற்கு முன்பாக இருந்த கண்ணாடி அறையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே ஆண்டு முழுவதும் மின்னிக்கொண்டிருந்த செதுக்கப்பட்ட பீங்கான் பலகையில் ஏசாயா 9:6 பொறிக்கப்பட்டிருந்தது. “அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு.” அதில் இருந்த ஒவ்வொரு நாமத்தையும் நான் உச்சரித்தபோது, என் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையிலும் இரட்சகரை அறிந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது.

இயேசு பெத்லகேமில் (ஏசாயா 9:6) பிறப்பதற்கு 700க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக ஏசாயா தீர்க்கதரிசி மேசியாவின் வருகையை முன்னறிவித்தார். இயேசுவே ஆலோசனைக் கர்த்தர்- நம்மை வழிநடத்தப் போதுமானவர். அவரே வல்லமையுள்ள தேவன் – சகல வல்லமையும் கொண்ட ஒரே தேவனாய் எப்போதும் இருக்கிறவர். அவரே நித்திய பிதா – நித்தியத்தை ஆளுபவர். அவரே சமாதானப் பிரபு – மனிதனை தேவனோடு ஒப்புரவாக்கியவர்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இப்பிரபஞ்சத்தின் அந்தகாரத்தை மேற்கொள்வது கடினம். இந்த உலகத்தின் ஒளியாகிய தேவனை நோக்கி நம் கண்களை ஏறெடுப்போம். நம் கண்ணீருக்கு மத்தியிலும் கிறிஸ்துவை அறிதலில் நாம் மகிழ்ச்சியடையலாம்.

சோச்சில் டிக்ஸன்

உங்களின் கடினமான சூழ்நிலைகளில் இயேசுவின் நாமங்களை உச்சரிப்பது எவ்விதத்தில் உங்களுக்கு உதவியாயிருந்துள்ளது? உங்களுடைய இருதயம் வேதனையிலிருக்கும்போது, தேவனுடைய எந்த சுபாவம் உங்களை உற்சாகப்படுத்தியது?

அன்பான தேவனே, உம்முடைய தேவையை நான் உணரும்போது, எனக்கு ஒளியாகவும் ஆறுதலாகவும் இருப்பதற்காக நன்றி.