ரிஷி புடைத்த தலையுடனும், முகம் முழுவதும் காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு கிராமத்தில் சபை போதகரான அவர், மதவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டபோதும் தன்னை தற்காத்துக்கொள்ளவில்லை. அவரது கதை ஓபன் டோர்ஸில் (கிறிஸ்தவ இணையத்தளம்) பரவலாகப் பகிரப்பட்டது மற்றும் அவர் குணமடைந்த பிறகு, “நான் இரண்டு முறை தாக்கப்பட்டாலும், என் வாழ்க்கையில் தேவனின் பாதுகாப்பை என்னால் உணர முடிகிறது. கர்த்தர் என்னை அனுப்பும் இடமெல்லாம் நான் தொடர்ந்து என் தேவனை நம்பி அவருக்குச் சேவை செய்வேன்” என்றார்.
இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில், வீரர்கள் அவரை கைது செய்ய வந்தபோது, பேதுரு ஒரு பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை வெட்டினார் (வ.10). இது தற்காப்புக்காகச் செய்யப்பட்டது என்று ஒருவர் வாதிடலாம், மற்றவர்கள் இது முட்டாள்தனம் என்று கூறலாம், ஏனெனில் ஆயுதம் தரித்த வீரர்கள் சீடர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். இயேசுவின் எதிர்வினையோ முற்றிலும் வேறுபட்டது. “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?” என்று சொல்லி ஆயுதத்தைக் கீழே போடும்படி பேதுருவுக்கு கட்டளையிட்டார் (வ.11). தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கூட தேவனின் சித்தபடிதான் என்பதை இயேசு புரிந்துகொண்டார். இயேசுவின் வார்த்தைகள், இன்றைய திருச்சபைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், பேதுரு வன்முறையில் ஈடுபடுவதை இயேசு தடைசெய்தபோது, அவர் சபையை என்றென்றும் நிராயுதபாணியாக்கினார்.
நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் நியாயம் இருப்பதாக உணரும் சூழல் ஏற்படலாம், குறிப்பாக நாம் தவறாக அநீதி இழைக்கப்படும்போது. ஆனால் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் பிரதியுத்தரம்; மறு கன்னத்தைக் காட்டுவதாகும் (மத்தேயு 5:29). தவறாகப் புரிந்து கொள்ளப்படும் இக்கட்டில் கூட, இறுதி நியாயத்தின் தீர்ப்பை நம் நீதியுள்ள தேவனின் கரங்களில் விட்டுவிட வேண்டும். நித்தியத்தின் கண்ணோட்டத்தில், அவருடைய திட்டங்கள் எப்பொழுதும் இன்றைய நமது தற்காலிக உணர்வுகளை விட மேலானவை என்பதை நாம் அறிவோம்.
உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவீர்கள்? மறு கன்னத்தைக் காட்டுதல்
என்பதின் பொருள் என்ன?
அன்பு இயேசுவே, உம்மை போல் இருக்க எனக்கு உதவும். என்னைப் புண்படுத்துபவர்களிடமும் அன்பாய் நடந்துகொள்ள எனக்கு கற்று தாரும்.
