அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். ஆதியாகமம் 3:9

“நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே நான் சத்தமாகவும் கடுமையாகவும் அவனுடைய பெயரை அழைப்பதைத் தவிர்த்து, என் இளம் மகன் எப்போதும் என் குரலைக் கேட்க விரும்புகிறான். அவன் ஏதோ குறும்பு செய்து என்னிடமிருந்து மறைக்க முயல்கையில் நான் அவ்வாறு கூப்பிடுவது வழக்கம். என் மகன் எனக்குச் செவிகொடுக்க விரும்புகிறேன், காரணம் நான் அவனுடைய நலனில் அக்கறை கொண்டுள்ளேன், மேலும் அவன் காயப்படுவதை விரும்பவில்லை.

ஆதாமும் ஏவாளும் தோட்டத்தில் தேவனின் குரலைக் கேட்பது வழக்கம். இருப்பினும், அவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசித்து அவருக்குக் கீழ்ப்படியாமல் போன பிறகு, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று அவர் அழைப்பதைக் கேட்டதும் அவர்கள் அவரிடமிருந்து தங்களை ஒளித்துக்கொண்டார்கள் (ஆதி. 3:9). அவர்கள் தேவனை எதிர்கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் தாங்கள் தவறு செய்திருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் அவர்களிடம் செய்ய வேண்டாம் என்று அவர் கூறியதைச் செய்துவிட்டனர் (வ. 11).

தேவன் ஆதாமையும் ஏவாளையும் அழைத்து தோட்டத்தில் அவர்களைக் கண்டபோது, அவருடைய வார்த்தைகளில் அவர்களுக்கான திருத்தமும் பின்விளைவும் இருந்தது (வ. 13-19). ஆனால் அவர்களின் இரட்சகருக்கான வாக்குத்தத்தத்தில் தேவன் அவர்களுக்கு இரக்கம் காட்டினார் மற்றும் மனிதக்குலத்திற்கான நம்பிக்கையையும் அவர்களுக்குக் கொடுத்தார் (வ. 15).

தேவன் நம்மைத் தேட வேண்டியதில்லை. நாம் எங்கே இருக்கிறோம், எதை மறைக்க முயல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஓர் அன்பான தந்தையாக, அவர் நம் இதயங்களுடன் பேசவும், மன்னிப்பு மற்றும் நற்சீரை அளிக்கவும் விரும்புகிறார். நாம் அவருடைய குரலைக் கேட்கவும் கவனிக்கவும் அவர் ஏங்குகிறார்.

 

    1. தேவனின் சித்தம்
    2. அவருடைய சத்தத்தை கேட்பது எப்படி
    3. தேவனின் குரலை அவர் வார்த்தையின் மூலம் கண்டுகொள்ளுதல்
    4. அவர் சத்தத்திற்கு செவிகொடுத்தல்
    5. அவர் சத்தத்தை அறியுங்கள்
    6. தேவனின் குரலை இனங்காணுதல்
    7. தேவக்குரல் கேட்டல்
    8. என்னை அனுப்பும்

banner image

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். சங்கீதம் 62:5

தேவனின் சித்தத்தைப் பின்பற்றுவது சில நேரங்களில் கடினமாக இருக்கும். சரியானதைச் செய்யும்படி அவர் கேட்கிறார். குறை கூறாமல் கஷ்டங்களைச் சகிக்க; அருவருக்கத்தக்க ஜனங்களை நேசிக்க; செய்யாதே என்று உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க; செய்யத் தயங்கும் நற்செயல்களைச் செய்ய, அவர் நம்மை அழைக்கிறார். எனவே, நாம் நாள் முழுவதும் நம் ஆத்துமாக்களுக்கு, “ஆத்துமாவே, கேள். அமைதியாயிருந்து இயேசு உன்னிடம் கேட்பதைச் செய்” என்று சொல்ல வேண்டும்.

“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது” (சங்கீதம் 62:1), “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு” (சங்கீதம் 62:5) இவ்விரு வசனங்களும் ஒன்றுபோல இருந்தாலும் இரண்டுமே வெவ்வேறானவை. தாவீது தன்னுடைய ஆத்துமாவைக் குறித்து ஒன்றை சொல்கிறார், பின்னர் தனது ஆத்துமாவுக்கு ஒன்றைச் சொல்கிறார். “அமர்ந்திருக்கிறது” என்பது ஒரு தீர்மானம், அமைதியாயிருக்கும் மனநிலை. “அமர்ந்திரு” என்பது தாவீது தனது ஆத்துமாவுக்கு நினைப்பூட்டும் நிலை.

தாவீது அமைதியாய் வாழத் தீர்மானிக்கிறார், அதாவது தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார். இது நமக்கான அழைப்பும்கூட, இதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். “என்னுடைய சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42) என்பதை நாமும் ஏற்றுக்கொள்ளும், நமக்கும் அமைதி உண்டாகும். அவரை நமது தேவனாகவும் நமது மெய்யான ஆனந்தத்தின் ஊற்றாகவும் அவரை ஏற்றுக்கொள்ளும்போது, இதுவே நமது முதன்மையும் உன்னதமுமான அழைப்பு. “உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்கீதம் 40:8) என்று சங்கீதக்காரன் சொல்கிறான்.

நாம் எப்போதுமே தேவனின் உதவிக்காகக் கேட்கவேண்டும், ஏனெனில் நாம் “நம்புகிறது அவராலே வரும்” (62:5). நாம் தேவனின் உதவியை நாடுகையில், அவர் உதவுகிறார். அவரால் செய்ய கூடாததையும் செய்ய முடியாததையும் நாம் செய்யும்படி ஒருபோதும் தேவன் நம்மிடம் கேட்கமாட்டார்.

banner image

முதலாவது, நாம் தேவனின் சத்தத்தைக் கேட்க வேண்டுமாகில், அவருக்குச் செவிகொடுக்க மனதாயிருக்க வேண்டும்.

இதற்கு, இயேசுவை காட்டிலும் சிறந்த உதாரணம் வேறுயாருமில்லை.

இயேசு, அமைதி; தனிமை; காத்திருப்பு ஆகியவற்றிற்கு முன்னுதாரணமாக உள்ளார். அவர் தனது பிதாவினால் பெலனடையவும், உற்சாகமடையவும், அதிகாரம் பெறவும் அடிக்கடி ஜனக்கூட்டத்தை விட்டுவிலகி, மலையில் ஏறினார். நீங்கள் செவிகொடுக்க மனதில்லாதிருந்தால், கேட்கவும் முடியாது. மேலும் இயேசுவே தனது பிதாவிற்குச் செவிகொடுக்கும்படி சீடர்கள், அற்புதங்கள், போதனைகள் போன்ற நெருக்கடிகளை விட்டு சற்றே விலகியிருந்தார்.

இரைச்சல்கள் நிறைந்த நமது உலகில், நாமும் இதையே செய்ய வேண்டும். “தனித்திருத்தலும் அமைதலும்” தேவனின் சத்தத்தை நாம் கேட்க நமக்கு உதவும் மற்றும் உற்சாகமூட்டும் கிறிஸ்தவப் பழக்கம் என்பது திருச்சபை நமக்களிக்கும் மரபு.

எனக்கு இந்த மரபு, அமைதியான காட்டில் எனது முழு மனதோடும், சிந்தையோடும், ஆத்துமாவோடும், எனது ஆய்வுக் கட்டுரையும் ஆகும். நான் கொஞ்சம் ஜெபிப்பேன் அங்கே. எனது நினைவுகள் சற்றே அலைபாயவும், சிந்திக்கவும் நான் அனுமதிப்பேன். பறவைகள், மரங்களின் ஓசைகளைக் கவனிப்பேன். எனது மனம் அமைதலாக இருக்கையில் தேவன் எனக்கருள்வதை போலத் தோன்றும் வாக்கியங்களை எழுதுவேன். குளிர்காலங்களில், என் படுக்கையறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து, சன்னல் வழியே பார்த்துக்கொண்டே இதே வழக்கத்தைச் செய்வேன்.

தனிமை மற்றும் அமைதி என்பது இரைச்சல் அறவே இல்லாத இடம் என்பது பொருளல்ல (என்னைப்போலவே 12 வயதிற்குக் கீழுள்ள பிள்ளைகள் இருக்கும் வீட்டிலிருப்பவர்களுக்கு இது இயலாத ஒன்று). இது இரைச்சல் குறைவாக, கவனச்சிதறல் குறைவாக இருக்கும், கருவிகளின் இடையூறற்ற இடமாகக் கூட இருக்கலாம்.

கண்களை மூடி, நிம்மதி பெருமூச்சுவிட்டு, வெறுமனே செவிசாய்க்கக் கூடிய இடத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

இரண்டாவது, காத்திருத்தல் மிகவும் புத்திசாலித்தனமானது.

சிலசமயம், தேவன் பேசவில்லையென்றால் நாம் காத்திருக்க வேண்டும் என்பது பொருள்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்டேன், ஆனால் எனது சம்பளத்திற்கு நிதிதிரட்ட வேண்டியிருந்தது. தேவனுக்காக ஏதாகினும் செய்ய வேண்டுமென்ற உத்வேகத்தில், எனக்கு அச்சமயத்தில் இருந்த பணியை ராஜினாமா செய்துவிட்டேன். நான் எடுத்த முட்டாள்தனமான முடிவது. எனக்குப் பணம் கிடைக்க மேலும் 8 மாதங்கள் ஆனது. நானும் என் குடும்பமும் மிகவும் சிரமப்பட்டோம், இவையெல்லாம் தேவையற்றது.

நான் திரும்பி பார்க்கையில், தேவன் என்னிடம் வேலையை விட சொல்லவேயில்லை. தேவன் என்னை புதிய வேலைக்கு நேராக நடத்தினார் என்றுதான் நினைக்கிறேன், ஆனால் அவர் கிரியை செய்யும் நேரத்தை பற்றி அவர் அமைதிகாத்தார். அவர் எனக்கு தேவையான பொருளாதார உதவியை செய்யும் வரைக்குமோ அல்லது “இதுதான் நேரம்” என்று அனுமதிக்கும் வரைக்குமோ நான் காத்திருக்காமல், நானே ஒரு மாயையான குளத்தில் விழுந்து வெருங்கையோடு திரும்பினேன்.

நீங்களும் ஒரு முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் இருந்துகொண்டு, அதைப்பற்றி ஒரு தெளிவின்றி இருந்தால் உங்கள் முடிவெடுக்கும் காரியத்தில் தேவன் உங்களோடு இருக்கிறார் என்று உற்சாகம் கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்கு மனமிருந்தால், “தீவிரிக்காதே” என்ற அறிவுரைக்கு செவிகொடுங்கள்.

ஒரு புத்திசாலித்தனமான வழிகாட்டி ஒருவர் என்னிடம் ஒருமுறை, “உனக்கு தற்போது இருக்கும் தகவல்களை கொண்டு உனக்கு முன்னிருக்கும் முடிவே சிறந்தது என்றெண்ணலாம், ஆனால் சிலகாலம் கழிந்து இன்னும் அதிகமான தகவல்களை கொண்டு அது தவறான முடிவு என்று புரிந்துகொள்வாய்” என்றார். இதில்தான் இயேசுவை பின்பற்றுவது எவ்வளவு இன்பமானது என்று புரியும். நாம் தவறினாலும், தவறுகளிலிருந்து நம்மை மீட்கும் தேவனை ஆராதிக்கிறோம், மேலும் அப்படிப்பட்ட தருணங்களை அவரது மகிமைக்காகவும் நமது நலனுக்காகவும் பயன்படுத்துவார் (நான் எனது வேலையை ராஜினாமா செய்தாலும் அவர் என் குடும்பத்தை போஷித்தார்)

banner image

“சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.” — 1 சாமுவேல் 3:7

தனது பெயரை மெல்லிய குரலில் அழைக்கும் சத்தத்தை சாமுவேல் கேட்டான், ஆனால் அது தேவன் என்று அவனுக்கு தெரியவில்லை. அது தேவன்தான் என்று அவனுக்கு ஏலி சொல்லவேண்டியிருந்தது (1 சாமுவேல் 3:9). அதுபோலவே, தேவன் நம்மிடம் பேசினாலும், அவர் குரலை நாம் அறிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆகவே அவரது குரலை அறிந்துகொள்ள நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவர் எப்படி பேசுவார் என்று தெரியாமல் நாம் அதை செய்ய முடியாது. மேலும் தேவன் யாரென்றும் அவர் எப்படிப்பட்டவரென்றும் நமக்கு தெரியாமல் அவர் எப்படி பேசுவார் என்பது மட்டும் எப்படி தெரியும்?

சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை என்று அந்த பத்தி நமக்கு சொல்கிறது. மேலும் தேவனை அறிவதற்கு அவருடைய வார்த்தையை அறிவது எவ்வளவு இன்றியமையாதது என்று நமக்கு சொல்கிறது.

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;” (2 தீமோத்தேயு 3:16) என்று வேதம் சொல்கிறது. தேவன் தன்னை குறித்த வெளிப்பாடுகளை எழுத்தில் கொடுத்ததே வேதாகமம். தன்னை குறித்தும், தன் வழிமுறைகளை குறித்தும் நமக்கு அறிவிக்கும் முதன்மையான வழிதான் வேதாகமம். ஆகவே அவரை அறிந்து அவரை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனில் (எரேமியா 9:24), வேதாகமத்தை நாம் அறிந்து புரிந்துகொள்ளவேண்டும்.

அவருடைய வார்த்தைகளை நான் எவ்வளவு அதிகம் வாசிக்கிறேனோ, அவருடைய சுபாவங்கள் வழிமுறைகள் எப்பேர்பட்டது என்பதை நான் அதிகமாய் அறிந்துகொள்ள அது எனக்கு உதவுகிறது. அவருடைய முழுமையான பிம்பத்தை வேதம் வெளிப்படுத்துவதால், அவருடைய சத்தத்தையும் தெளிவாக அறிந்துகொள்ள என்னால் முடிகிறது.

ஆகவே இச்சை, பொறாமை, பெருமை, சுயநலம் அல்லது வெறுப்பு போன்றவைகளில் நான் ஈடுபடும்படியாக என்னை தூண்டும் குரலை நானே கேட்டால் அது நிச்சயம் தேவன் இல்லை என்று நானறிவேன். ஏனெனில் தேவன் தயவு, நீதி, நியாயம் போன்றவற்றையே விரும்பி அவைகளையே நடப்பிக்கிறார் (எரேமியா 9:24). அது தேவனாக இருக்க முடியாது ஏனெனில், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன் (யாத்திராகமம் 34:5-7) என்ற அவரது சுபாவத்திற்கு விரோதமாக இது உள்ளது.

மேலும் நானே பிதாவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், அவரது அன்பை பிறருக்கு வெளிப்படுத்தவும் (யோவான் 15:10, மத்தேயு 5:16), குமாரனை நேசிக்கவும், அவரைப்போல வாழவும் (யோவான் 14:15, 1 யோவான் 1:7), ஆவியின் கனியிலும் வரங்களிலும் வளரும்படியாக (கலாத்தியர் 5:22-23, ரோமர் 12:6-8; 1கொரிந்தியர் 12:8-10), என்னை தூண்டும் குரலை நான் கேட்டால் அது தேவனுடைய சத்தம் என்று எனக்கு நிச்சயம் தெரியும், ஏனெனில் அவர் யாரென்று வேதம் சொல்லுவதோடு இது ஒத்துப்போகிறது. எனவே வேதாகமமே தேவன் பேசுவதை நாம் பகுத்தறிவதற்கான அளவுகோல்.

தேவன் இதைத்தவிர்த்து இன்னும் அநேக வழிகளிலும் பேசுவார். உதாரணமாக, நமது இதயம் கேட்கும் அமர்ந்த மெல்லியசத்தத்தில் பேசுவார் (1 இராஜாக்கள் 19:11-13); நம்மை சுற்றிலுமுள்ள ஜனங்கள் மூலமாக பேசுவார் (அப்போஸ்தலர் 21:11); கனவுகளில் (ஆதியாகமம் 40); இயற்கையின் மூலம் (ரோமர் 1:20); சொப்பனங்களில் (அப்போஸ்தலர் 9:10-18); தீர்க்கதரிசனங்கள் மூலம் (அப்போஸ்தலர் 11:27-28); சூழ்நிலைகள் மூலம் (அப்போஸ்தலர் 16:6-7); அற்புத அடையாளங்கள் மூலம், மேலும் இன்னும் பலவுண்டு.

எப்படியாயினும், வேதாகமத்தை வாசிப்பதின்மூலம் தேவன் யாரென்றும் அவரது வழிமுறைகள் எப்படிப்பட்டவைகளென்றும் நாம் அறிந்துகொள்வதில் ஆழமாக வேரூன்றி இல்லாவிடில், அவர் நம்மிடம் பேசும் வேறு வழிமுறைகளை சரியாக விளங்கிக்கொள்ள இயலாது. எப்படி ஒரு நபரின் குணாதிசயத்தை நாம் புரிந்துகொள்ளாவிடில், அவர் பேசுவதையும் தவறாக புரிந்துகொள்வோமோ, அப்படியே உண்மையில் தேவன் யாரென்று நமக்கு புரியாவிடில் அவரது வார்த்தைகளையும் செயல்களையும் தவறாக புரிந்துகொள்வோம்.

“என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்” (யோவான் 10:15) என்றார் இயேசு. மேய்ப்பனை அறிந்தால்தான் மேய்ப்பனுடைய குரலையும் நாம் அறிய முடியும். தேவனுடைய வார்த்தையான (வெளிப்படுத்துதல் 19:13) இயேசுவை அறியவேண்டுமாயின் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை அறியவேண்டும்.

banner image

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. யோவான் 10:27

எனக்கு செவிட்டுத்தன்மை உண்டு, “அவனுக்கு ஒரு காது செவிடு மற்றொன்றால் அவனால் கேட்க முடியாது” என்று என் அப்பா சொல்வார். ஆகவே நான் செவித்திறன் கருவிகள் பொருத்திக்கொள்வேன்.

பெரும்பாலும் அவைகள் சிறப்பாக வேலைசெய்யும், ஆனால் சுற்றுசூழலில் அதிக இரைச்சல் இருந்தால் அவை வேலைசெய்யாது. அதின் அமைப்பின்படி அக்கருவியானது அறையில் உண்டாகும் ஒவ்வொரு சத்தத்தையும் கேட்கும்படி வடிவமைக்க பட்டிருந்ததால் எனக்குமுன் நின்று பேசும் நபரின் குரலை என்னால் கேட்க முடியாது.

இது நமது கலாச்சாரத்திற்கும் பொருந்தும், இரைச்சலின் சத்தங்கள் தேவனின் மெல்லிய குரலை கேட்கமுடியாமல் செய்துவிடும். “வார்த்தை எங்கே கிடைக்கும், வார்த்தை எங்கே தொனிக்கும்? இங்கே இல்லை, இங்கே போதுமான அமைதி இல்லை” என்கிறார் கவிஞர் டி.எஸ். எலியட்.

அதிர்ஷ்டவசமாக சுற்றுப்புறத்தின் இரைச்சலை புறக்கணித்து நான் கேட்கவிரும்பும் குரல்களை மட்டும் கேட்கும்படி செய்யும் அமைப்பு எனது செவித்திறன் கருவியில் இருந்தது. அதுபோலவே, நம்மை சுற்றிலும் எவ்வளவு இரைச்சல் இருந்தாலும், நமது ஆத்துமாவை அமரப்பண்ணி செவிகொடுக்க கவனித்தால், தேவனுடைய “அமர்ந்த மெல்லியசத்தத்தை” (1 இராஜாக்கள் 19:11–12) கேட்கலாம்.

அவர் அனுதினமும் நம்முடன் பேசுகிறார், நமது அமைதியற்ற சூழ்நிலை மற்றும் ஏக்கங்கள் மத்தியிலும் அவர் நம்மை தம்மிடம் அழைக்கிறார். நமது ஆழமான சோகங்களினூடும், குறைகளினூடும், நமது பேரின்பங்களும் நமக்களித்த ஏமாற்றங்களினூடும் அவர் நம்மை தம்மிடம் அழைக்கிறார்.

ஆனால் தேவன் தமது வார்த்தையின் வாயிலாகத்தான் முதன்மையாக பேசுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:13). அவருடைய வேதத்தை எடுத்து வாசிக்கையில், நீங்களும் அவர் சத்தத்தை கேட்கலாம். நீங்கள் நினைப்பதை காட்டிலும் அவர் உங்களை அதிகமாக நேசிக்கிறார், அவர் சொல்ல விரும்புவதை நீங்கள் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார்.

banner image

நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன். யோவான் 10:14 -15

கோடை வேதாகம வகுப்புகள் ஆரம்பித்தன, வசனங்களை விளக்க சில நிஜமான விலங்குகளை பயன்படுத்த கென்னின் சபையார் தீர்மானித்தர். தானும் உதவ முன்வந்தபோது, கென் ஒரு செம்மறியாட்டை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான். அதை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக அறைக்குள் அந்த உரோமம் நிறைந்த விலங்கை உள்ளே இழுக்க வேண்டியிருந்தது. ஆனால் வாரம் நகர, அது செவிகொடுக்க ஆரம்பித்தது. வாரத்தின் இறுதியில் அதற்கு கயிறே தேவைப்படவில்லை. அதை பெயர் சொல்லி குரல்கொடுக்க அது பின்தொடர்ந்தது, அவனை நம்பலாம் என்று அது புரிந்துகொண்டது.

புதிய ஏற்பாட்டில், இயேசு தன்னை ஒரு மேய்ப்பனோடு ஒப்பிடுகிறார். தன்னுடைய ஜனங்கள் ஆடுகளென்றும், அவர் சத்தத்தை அவைகள் அறிந்துள்ளபடியால் அவரை அவை பின்தொடரும் என்றும் குறிப்பிடுகிறார் (யோவான் 10:4). ஆனால் அதே ஆடுகள் அந்நியனிடமிருந்தும், திருடனிடமிருந்தும் விலகி ஓடும் (வ. 5). அந்த ஆடுகளை போலவே தேவனின் பிள்ளைகளான அவருடனான உறவின்மூலம் மேய்ப்பனின் சத்தத்தை கேட்க முடியும். அவ்வாறு செய்கையில், நாம் அவரது சுபாவத்தை கண்டு அவரை நம்ப கற்றுக்கொள்வோம்.

நாம் தேவனை அறிவதிலும் நேசிப்பதிலும் வளர வளர, நாம் அவருடைய குரலைப் பகுத்தறிந்து, “திருடவும் கொல்லவும் அழிக்கவும் மட்டுமே வரும் திருடனிடமிருந்தும்” (வ. 10), நம்மை வஞ்சித்து அவரிடமிருந்து வழிவிலக்க முயல்பவர்களிடமிருந்தும் தப்பிக்க முடியும். அந்தக் கள்ளபோதகர்களைப் போலல்லாமல், நம் மேய்ப்பனின் குரல் நம்மைப் பாதுகாப்பிற்கு அழைத்துச் செல்லும் என்று நம்பலாம்.

banner image

இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும்
உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள
வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். –
அப்போஸ்தலர் 20:32

பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு, ஓநாய்களால் ஒன்றோடொன்று தகவல் பரிமாறத் தனித்துவமான குரல்களைப் பயன்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஒரு குறிப்பிட்ட அடையாளக் குறியீட்டு ஊளையின் குரலில் உள்ள சப்த அளவுகள், சுருதிகளை வைத்து ஒரு ஓநாய் மற்றொரு குறிப்பிட்ட ஓநாய்களைத் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டதை விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்தார்.

தமது பிரியமான படைப்புகளின் பிரெத்யேகமான குரல்களைத் தேவன் அடையாளங்கண்டதை வேதத்தின் பல உதாரணங்களில் பார்க்கலாம். தேவன் மோசையே பெயர் சொல்லி அழைத்து அவனோடு நேரடியாகப் பேசினார் (யாத்திராகமம் 3:4–6). “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்.” (சங்கீதம் 3:4) என்று சங்கீதக்காரன் தாவீது அறிவித்தார். தேவனுடைய ஜனங்கள் அவருடைய குரலை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார்.

எபேசுவின் மூப்பர்களால் வழிவிட்டனுப்பப்படுகையில், பவுல் “இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.” (அப்போஸ்தலர் 20:22) என்றதில் பவுல் தேவனின் குரலுக்குக் கீழ்ப்படிவதிலுள்ள தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். மேலும், சபைக்குள்ளிருந்தும் கூட “கொடிதான ஓநாய்கள்” எழும்பி “மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று” (வ. 29–30) எச்சரித்தார். பின்னர், தேவனுடைய சத்தியத்தைப் பகுத்தறிவதைக் குறித்து விழிப்பாயிருக்கும்படி மூப்பர்களுக்கு ஊக்கமளித்தார் (வ. 31).

தேவன் நமக்குச் செவிசாய்த்துப் பதிலளிப்பார் என்பதை அறிந்துகொள்ளும் சிலாக்கியம் இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் உண்டு. பரிசுத்த ஆவியின் வல்லமையும் நம்மிடம் உள்ளது, அவர் தேவனின் குரலை அடையாளம் காண உதவுகிறார், அந்த சத்தம் எப்போதும் வேத வார்த்தைகளுடன்

banner image

அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். – 1 சாமுவேல் 3:10

நான் நீருக்கடியில் இருப்பதைப் போல உணர்ந்தேன், சளி மற்றும் ஒவ்வாமையால் சத்தம் மௌனமாகி ஒலித்தது. வாரக்கணக்கில் தெளிவாகக் கேட்க முடியாமல் தவித்தேன். நான் எந்தளவுக்கு என் செவிப்புலனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறேன் என்பதை என் நிலை எனக்கு உணர்த்தியது.

தேவனின் கூடாரத்தில் இருந்த இளைஞன் சாமுவேல், தன் பெயரின் அழைப்பின் பேரில் தூக்கம் களைந்து தவித்துக்கொண்டிருந்தபோது அவன் என்ன கேட்டான் என்று யோசித்திருக்க வேண்டும் (1 சாமு. 3:4). மூன்று முறை அவன் பிரதான ஆசாரியனாகிய ஏலியின் முன் ஆஜரானான். மூன்றாவது முறைதான் சாமுவேலிடம் கர்த்தர் பேசுகிறார் என்பதை ஏலி உணர்ந்தார். அந்த நேரத்தில் கர்த்தருடைய வார்த்தை அரிதாக இருந்தது (வச. 1), மற்றும் மக்கள் அவருடைய குரலுக்கு இசைவாக இல்லை. ஆனால் சாமுவேலுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று ஏலி அறிவுறுத்தினார் (வ. 9).

சாமுவேலின் நாட்களை விடக் கர்த்தர் இப்போது அதிகம் பேசுகிறார். எபிரேயருக்கு எழுதிய நிருபம் கூறுகிறது, “தேவன் நம் முன்னோர்களிடம் தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார். . . இந்த கடைசி நாட்களில் அவர் தம்முடைய குமாரன் மூலமாக நம்மிடம் பேசினார்” (1:1-2) என்று. மேலும் அப்போஸ்தலர் 2ல் பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வருவதைப் பற்றி வாசிக்கிறோம் (வ. 1-4), கிறிஸ்து நமக்குக் கற்பித்த காரியங்களில் நம்மை அவரே வழிநடத்துகிறார் (யோவான் 16:13). ஆனால் நாம் அவருடைய குரலைக் கேட்கவும், கீழ்ப்படிதலுடன் பதிலளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். என் சளித்தொல்லையுடன் போராடின என்னைப் போலவே, நாம் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல் கேட்கலாம். வேதாகமத்திலும் மற்ற முதிர்ந்த கிறிஸ்தவர்களிடமும், கர்த்தருடைய வழிகாட்டுதல் என்று நாம் எண்ணுவதை நாம் சோதிக்க வேண்டும். தேவனின் அன்புக் குழந்தைகளாகிய நாம் அவருடைய குரலைக் கேட்கிறோம். அவர் நமக்குள் ஜீவனைப் பேச விரும்புகிறார்.

banner image

பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். ஏசாயா 6:8

ஸ்வீடன் நாட்டு மிஷனரி எரிக் லண்ட் 1890 களின் பிற்பகுதியில் ஸ்பெயினுக்குச் சுவிசேஷ வேலையைச் செய்யத் தேவனால் அழைக்கப்பட்டதை உணர்ந்தபோது, அவர் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். அவர் அங்குச் சிறிதளவுதான் வெற்றியைக் கண்டார், ஆனால் தேவனின் அழைப்பில் அவர் உறுதியாக இருந்தார். ஒரு நாள், அவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிராலியோ மணிகனைச் சந்தித்து, அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். லண்ட் மற்றும் மணிகன் இருவரும் சேர்ந்து, வேதாகமத்தை உள்ளூர் பிலிப்பைன் மொழியில் மொழிபெயர்த்தனர், பின்னர் அவர்கள் பிலிப்பைன்ஸில் முதல் பாப்டிஸ்ட் மிஷன் ஸ்தாபனத்தை தொடங்கினர். ஏசாயா தீர்க்கதரிசியைப் போலவே லண்ட் தேவனின் அழைப்புக்குப் பதிலளித்ததால், பலர் இயேசுவிடம் திரும்பினார்கள்.

ஏசாயா 6:8-ல், தற்காலத்திற்கான தம்முடைய நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையூட்டுவதற்கும் இஸ்ரவேலுக்குச் செல்ல விரும்பும் ஒருவரைத் தேவன் கேட்டார். “இதோ நான் இருக்கிறேன். என்னை அனுப்பும்!” என்று ஏசாயா தைரியமாக முன்வந்தார்: “நான் அசுத்தமான உதடுகளை உடையவன்” (வ. 5) என்று அவர் முன்பே ஒப்புக்கொண்டதால், அவர் தகுதியானவர் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர் தேவனின் பரிசுத்தத்தைக் கண்டார், அவருடைய சொந்த பாவத்தை உணர்ந்தார், மேலும் அவர் சுத்திகரிக்கப் பெற்றார் (வ. 1-7).

தேவன் உங்களை ஏதாவது செய்ய அழைக்கிறாரா? நீங்கள் பின்வாங்குகிறீர்களா? அப்படியானால், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் தேவன் செய்த அனைத்தையும் நினைவில் கொள்ளுங்கள். நமக்கு உதவவும் வழிநடத்தவும் அவர் பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்துள்ளார் (யோவான் 14:26; 15:26-27), மேலும் அவருடைய அழைப்புக்குப் பதிலளிக்க அவர் நம்மை தயார்ப்படுத்துவார். ஏசாயாவைப் போலவே, “என்னை அனுப்பும்!” என்று பதிலளிப்போமாக.

banner image