“நீ விண்ணப்பம் பண்ணினதினாலே”

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். – பிலிப்பியர் 4:6

நீங்கள் உங்கள் கவலைகளைக் குறித்து என்ன செய்வீர்கள்? அவற்றை உங்களுடைய உள்ளத்திற்குள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது பரத்துக்கு நேராக திருப்புவீர்களா?

சனகெரிப் எனும் கொடிய அசீரியா தேசத்து ராஜா, எருசலேம் பட்டணத்தை அழித்துப் போடும்படி ஆயத்தம் பண்ணுகையில் எசேக்கியா ராஜாவுக்கு, செய்தி அனுப்பி, பிற தேசங்களைக் கைப்பற்றினது போலவே யூதாவையும் கைப்பற்றுவேன் என்று அறிவித்தான். எசேக்கியா ராஜா, அச்செய்தி அடங்கிய ஓலையை எடுத்துக்கொண்டு, எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய், “கர்த்தருக்கு முன்பாக அதை விரித்து” (ஏசா. 37:14), கர்த்தரை நோக்கி தங்களை இரட்சிக்கும்படி விண்ணப்பம் பண்ணினான்.

வெகு சீக்கிரத்தில், கர்த்தருடைய ஊழியக்காரனாகிய ஏசாயா தீர்க்கதரிசி, தேவனுடைய வார்த்தையை எசேக்கியா ராஜாவுக்கு இவ்வண்ணமாக தெரிவித்தார்: “அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணினதால், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார்” (ஏசா. 37:21-22). எசேக்கியாவின் ஜெபத்திற்கான பதில் அன்று இரவே நிறைவேறினதை வேதத்தில் காணலாம். தேவன் தாமே தலையிட்டு அற்புதவிதமாக எதிரி படைகளைப் பட்டணத்திற்கு வெளியிலேயே வீழ்த்தினார். அசீரியாப் படை ஒரு “அம்பை கூட எய்யாமல்” (வச. 33), எருசலேம் பட்டணத்தை விட்டுப்போய், சனகெரிப் இனி ஒருபோதும் திரும்பி வராதபடி வெளியேற்றினார்.

“நீ விண்ணப்பம் பண்ணினதினால்” என்று தேவன் எசேக்கியாவை குறித்து கூறிய இம்மூன்று வார்த்தைகளின்று, நாம் நம்முடைய கவலைகளை எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது நன்கு விளங்குகிறது. எசேக்கியா தேவனிடம் திரும்பியதால், தேவன் அவனையும் அவன் ஜனத்தையும் விடுவித்தார். நாம், நம்முடைய கவலைகளை ஜெபங்களாக, விண்ணப்பங்களாக ஏறெடுக்கும் பொழுது தேவன் நமக்கு எதிர்பாராத விதத்தில் அற்புத வண்ணமாக பதிலளிக்கிறவராய், உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை கண்டடையலாம்.

ஜெபம், இவ்வுலகத்தையே அசைக்கும் கரத்தை, அசைக்கக்கூடியது. இ.எம் பௌண்ட்ஸ்