நான் மன்னிக்க வேண்டுமா?

கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். – கொலோசெயர் 3:13

ஓர் நிகழ்ச்சிக்காக ஆயத்தம்செய்யும்படி ஆலயத்திற்கு நான் சீக்கிரமாக வந்திருந்தேன். அப்போது ஆலயத்தின் ஓர் ஓரத்திலே ஒரு பெண் நின்று அழுதுகொண்டிருந்தாள். கடந்த காலத்தில் அவள் என்னைப்பற்றி மிகமோசமாக புறங்கூறியதை நான் அறிந்ததினால், அவளைக் கண்டுகொள்ளாமல் ‘வாக்யூம் கிளீனரின்’ (vacuum cleaner) சத்தத்தில் அவள் அழுகையின் சத்தத்தை மூழ்கடித்துவிட்டு இடத்தை சுத்தப்படுத்த தொடங்கினேன். என்னை விரும்பாத ஒருவரைப்பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும் என்று எண்ணினேன்.

ஆனால், தேவன் என்னை எவ்வளவாக மன்னித்திருக்கிறார் என்பதை ஆவியானவர் நினைவுபடுத்தியவுடன், நான் அவளருகே சென்றேன். தன்னுடைய குழந்தை மருத்துவ மனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாக அவள் கூறினாள். நாங்கள் அழுதோம், அரவணைத்துக் கொண்டோம், பின்பு அவளது குழந்தைக்காக ஜெபித்தோம். எங்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகளை நாங்கள் சரிசெய்து கொண்டபின், இப்பொழுது நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம்.

மத்:18ஆம் அதிகாரத்தில், கணக்குவழக்கை சரிபார்க்கத் தொடங்கும் ஒரு ராஜாவுடன் பரலோகராஜ்ஜியத்தை இயேசு ஒப்பிடுகிறார். தன்னிடம் ஒரு மிகப்பெரிய தொகையை கடனாகப் பெற்றிருந்த ஓர் வேலைக்காரன் இரக்கத்திற்காக மன்றாடினபொழுது. ராஜா அவனது கடனை ரத்து செய்தார். ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே சென்று, தன்னிடம் மிக சொற்ப தொகை கடன் வாங்கியிருந்த ஓர் நபரை கண்டுபிடித்து அவனிடம் இரக்கமின்றி மிகக் கடினமாக நடந்து கொண்டான். ராஜாவிடம் இவன் வாங்கியிருந்த கடனோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகவும் சிறிய தொகையே. இதை அறிந்த ராஜா, மன்னிக்காத சுபாவத்தையுடைய அந்த கொடிய வேலைக்காரனை கைது செய்து சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டார் (வச. 23-24).

மன்னிக்கும்படியான தீர்மானத்தை நாம் எடுப்பதினால், பாவத்தை ஆதரிக்கலாம் என்றோ, நமக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும் என்றோ, அல்லது நம்முடைய காயங்களின் வலி குறைந்து போகும் என்றோ நினைக்கக்கூடாது. மன்னிப்பதின் மூலம் நம் வாழ்விலும், நமது உறவுகளின் மத்தியிலும் சமாதனம் உண்டுபண்ணும் அழகிய கிரியைகளை செய்யும்படியாக தேவனை அழைக்கிறோம். மன்னிப்பை அளிப்பதினால் நாம் விடுதலையடைந்து கிருபையினால் தேவன் நமக்களித்த இரக்கத்தினை அனுபவிக்கத் தொடங்குகிறோம்.

பிறரை மன்னிக்கும்பொழுது, சம்பூரணரும் நன்மை செய்கிறவருமாகிய தேவன் நீதியாய் நியாயந்தீர்ப்பார் என்று நாம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்.