வாசிக்க: மத்தேயு 18:21-35

அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான் (வ. 28).

இரக்கமற்ற ஊழியனின் கதையை நான் வாசிக்கையில், ​​முதலாம் ஊழியனின் செயல்களைக் கண்டிப்பது எனக்கு எளிது (மத்தேயு 18:28). ஆனால் நான் நினைப்பது போல் அவருடைய செயல்கள் நானும் செய்ய முடியாதவைகள் அல்ல. உதாரணமாக, நாம் சாலையில் வாகன சண்டையில் ஈடுபடுகையில் (நாம் வாகனம் ஓட்டும்போது அந்த குறிப்பிட்ட கோபம் நமக்குள் வரும்), முதலாம் ஊழியனைப் போலவே நாமும் செயல்படக்கூடும். அர்த்தமற்ற செயல்களை நாம் செய்யக்கூடும். இவருக்கு என்னவாயிற்று? என்று பிறர் நம்மைக் கண்டு, நம்பமுடியாமல் சங்கடத்துடன் தலையைத் துலுக்குவார்கள். முதலாம் ஊழியனைப் பற்றி நாம் சிந்திக்கும்போது இதே போன்ற விஷயங்களை நாம் நினைக்கலாம்.

இந்த ஊழியன் மிகக் கடுமையாகச் செயல்பட்டதற்குக் காரணம், அவன் தூண்டப்பட்டதே என்பது தெளிவாகிறது. அங்கே கோபம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவன் கோபமடைந்தான் என்பது அவனது செயல்களிலிருந்து தெளிவாகிறது, ஏனெனில் அவன், “தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும்” என்றான் (வ. 28). ஆனால் அந்த வேலைக்காரன் அவனுடைய சொற்பக் கடனைச் செலுத்த முடியாமல் போனபோது, ​​முதலாம் ஊழியன் அவனைச் சிறையில் தள்ளினான் (வ. 30). முதலாம் ஊழியன் கோபமடைந்தான், அவனுடைய பெரிய கடன் ராஜாவால் மன்னிக்கப்பட்ட பிறகும், பிறரின் சொற்ப கடனை மன்னிக்கவில்லை (வ. 27). அவனுடைய கோபம் உண்மையை உணரக்கூடாதபடிக்கு அவனைக் குருடாக்கிவிட்டது.

யோவான் 2:13-16 இல் இயேசு ஆலயத்தைச் சுத்திகரிக்கையில் நாம் பார்க்கிறபடி, நீதியான கோபத்திற்கும் ஒரு நேரமுண்டு. ஆனால் கோபம் நம்மைக் குருடாக்கி, நோக்கத்தையும் இழக்கச் செய்யலாம். மேலும் கோபப்படுவது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அது மன்னிப்பைக் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது. அந்த காரணத்திற்காகவாவது, நாம் அதைத் தவிர்க்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியது போல், “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோசெயர் 3:13).

-பீட்டர் சின்

மேலும் வாசிக்க

தன்னுடைய கோபத்தாலும் ஆத்திரத்தாலும் முறியடிக்கப்பட்ட மற்றொரு மனிதனின் வாழ்விலிருந்து அறிந்துகொள்ள, 1 சாமுவேல் 18:6-17ஐப் படியுங்கள்.

சிந்திக்க

நீங்கள் மூடனாக நடந்து கொள்ளும் அளவுக்குக் கோபமடைந்திருக்கிறீர்களா? அந்தக் கோபத்தைத் தூண்டியது எது? கோபம் நமக்கு மன்னிப்பதைக் கடினமாக்குவது ஏன்?