மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும் (எபிரெயர் 10: 24-25).

வில்லியம் என்ற கல்லூரி போதகர் ஒரு நகரத்தின் சபையில் பிரசங்கிக்க அழைக்கப்பட்டார். சபை ஆராதனை 2 1/2 மணி நேரம் நீடித்தது. இறுதியாக அது முடிந்ததும், வில்லியம்ஸ் களைத்துப்போய், போதகரிடம், “இவர்களை எப்படி இவ்வளவு நேரம் சபையில் இருக்க வைக்கிறீர்?” என்று கேட்டார். அதற்கு அவரது நண்பர், “இங்கு வேலையில்லா திண்டாட்டம் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், என் ஜனங்கள் வார நாட்களில் வெளியே செல்லும்போது, ‘நீ தோல்வியுற்றவன்; நீ ஒன்றுக்கும் உதவாதவன் காரணம் உனக்கு ஒரு நல்ல வேலை இல்லை; உன்னிடம் வாகனம் இல்லை; உன்னிடம் பணம் இல்லை’ என்கிறவர்களையே அவர்கள் பார்க்கின்றனர், கேட்கின்றனர். ஆகவே, அவர்களின் கண்களை நான் கிறிஸ்துவின் மீது திருப்ப வேண்டும். பாடல்கள், ஜெபங்கள், பிரசங்கங்கள் மூலமாக அவர்களிடம் நான், ‘அது ஒரு பொய்! நீங்கள் ராஜரீகமானவர்கள்! நீங்கள் தேவராஜ்யத்தின் குடிகளாக இருக்கலாம்’ என்கிறேன். உலகம் அவர்களை மிகவும் மோசமாகத் திசைதிருப்புவதால், அவர்களைச் சீர்படுத்த எனக்கு நீண்ட நேரமாகிறது” என்று கூறினார்.

உலகம், அதற்கு ஒத்த வேஷம் தரிக்கும்படி நமக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. நாம் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொள்ளவும், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் அவருடைய குடும்பத்தில் தேவன் நம்மை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதைக் காணவும், தேவனுடைய வார்த்தையை வாசிக்க வேண்டும். திருச்சபைக்கு ஏன் செல்ல வேண்டும்? ஏனென்றால், உலகத்தின் செய்தி பொய்யென்றும் தேவனுடைய நற்செய்தியே மெய்யென்றும் நமக்கு உறுதியளிக்கத் தேவன் கிறிஸ்தவர்களின் அறிவுறுத்தலையும் அன்பையும் பயன்படுத்துகிறார்.

– டென்னிஸ் ஜே. டி ஹான்