எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

விடுதலையின் தேவன்

ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைத்தனத்திலிருந்த மக்களை விடுவித்தார் ,எதிரிகளும் சரணடைந்தனர். எனினும் டெக்சாஸ் மாநிலம் அடிமைகளின் சுதந்திரத்தை இன்னும் அறியவில்லை. ஜூன் 19, 1865 அன்று, கோர்டன் கிரேன்ஜர் என்ற இராணுவ தளபதி டெக்சாஸில் உள்ள ஒரு நகரத்திற்குள் நுழைந்து, அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களையும் விடுவிக்குமாறு கட்டளையிட்டார். சுதந்திரத்தின் பிரகடனத்தைக் கேட்டபோது, சங்கிலிகள் அறுந்து. அடிமைத்தனத்திலிருந்தவர்கள் அடைந்த அதிர்ச்சியையும் , மகிழ்ச்சியையும் கற்பனை செய்து பாருங்கள்.

தேவன் ஒடுக்கப்பட்டவர்களைக் காண்கிறார், அநீதியால் நசுக்கப்படுபவர்களுக்கு அவர் மெய்யாகவே விடுதலை அளிப்பார். மோசேயின் காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் அது உண்மையாக இருக்கிறது. எரிகிற முட்செடியிலிருந்து அவசர செய்தியுடன் தேவன் அவனுக்கு வெளிப்பட்டு, "எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து(தேன்)" (யாத்திராகமம் 3:7) என்றார். அவர் இஸ்ரேலுக்கு எதிரான எகிப்தின் மிருகத்தனத்தைப் பார்த்தது மட்டுமன்றி, அதைக்குறித்து ஏதோவொன்று செய்யத் திட்டமிட்டுமிருந்தார். "அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி...நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்" (வ.8) என்று தேவன் முழங்கினார். அவர் இஸ்ரேலுக்குச் சுதந்திரத்தை அறிவிக்கச் சித்தம் கொண்டார். மோசே அவருடைய வாயாக இருப்பார்:"நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன்" (வ.10) என்று தன் ஊழியனிடம் கூறினார்.

தேவனுடைய வேளை நாம் எதிர்பார்ப்பதுபோல விரைவாக வரவில்லை  என்றாலும், ஒரு நாள் அவர் நம்மை எல்லா அடிமைத்தனத்திலிருந்தும், அநீதியிலிருந்தும் விடுவிப்பார். ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கையையும். விடுதலையையும் தருகிறார்.

 

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

பட்டணத்தில் மகிழ்ச்சி

 

2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-ம் அர்ஜென்டினாவும் மோதியபோது, அது “வரலாற்றில் மிகப் பெரிய உலகக் கோப்பைப் போட்டி” என்று பலர் அழைக்கும் ஓர் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. கூடுதல் நேரத்தின் இறுதி நொடிகள் நிறைவடைந்தபோது, கோல் 3-3 என சமநிலையில் இருந்ததனால் கால்பந்து அணிகள் பெனால்டி உதைக்கு அனுப்பப்பட்டன. அர்ஜென்டினா வெற்றி இலக்கை எட்டியதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான அர்ஜென்டினா மக்கள் புவெனஸ் அயர்ஸ் நகரில் கூட்டங்கூடினர். இந்த ஆரவாரமான, மகிழ்ச்சியான காட்சியைக் காட்டும் ட்ரோன் கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. ஓர் பிபிசி செய்தியறிக்கை நகரம் மகிழ்ச்சியில் எவ்விதம் மூழ்கியது என்பதை விவரித்தது.

மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற  நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).

நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார்.

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது.

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28).  இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள்  "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே.

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும்

மகிழ்ச்சியான நம்பிக்கை

கருணைக்கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூடியை ஒரு பெண், விலங்குகள் காப்பகத்திலிருந்து மீட்டார். அந்த நாய் அவளுக்கு துணையானது. பத்து ஆண்டுகளாக, ரூடி லிண்டாவின் படுக்கைக்கு அருகில் அமைதியாக தூங்கினது, ஆனால் அது திடீரென்று அவளுக்கு அருகில் குதித்து அவள் முகத்தை நக்க ஆரம்பித்தது. லிண்டா அதை திட்டினார், ஆனால் ஒவ்வொரு இரவும் ரூடி அதேபோல செய்தது. "விரைவில் அவர் என் மடியில் குதித்து, நான் அமரும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை நக்கியது" என்றார் லிண்டா.

ரூடியை பிராணிகள் நலமையத்திற்கு அழைத்துச் செல்ல அவள் திட்டமிட்டிருகையில்; ​​ரூடி எத்தனை பிடிவாதமாக இருக்கிறது என்பதையும், அது தன் தாடையில் அதே இடத்தில் தன்னை எப்படி நக்குகிறது என்பதையும் லிண்டா சிந்திக்க ஆரம்பித்தாள். தயங்கியவாறே, லிண்டா மருத்துவரை அணுகுகையில், அவர் ரூடியிடம் ஒரு நுண்ணிய கட்டி இருப்பதைக் (எலும்பு புற்றுநோய்) கண்டறிந்தார். டாக்டர் லிண்டாவிடம், அவள் தாமதித்திருந்தால், அது அவளைக் கொன்றிருக்கும் என்றார். லிண்டா ரூடியின் உள்ளுணர்வை நம்பினாள், அவ்வாறு செய்ததில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

தேவனை நம்புவது ஜீவனுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது. சங்கீதக்காரன், "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்" (40:4) என்கிறார். சில மொழிபெயர்ப்புகள் இதை இன்னும் மிகைப்படுத்தி, "கர்த்தரை தங்கள் நம்பிக்கையாக கொள்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள்" (வ. 4) என்கிறது. சங்கீதங்களில் குறிப்பிடப்படும் "மகிழ்ச்சி"; மிகுதியாகவும், பொங்குகிற, உற்சாகமான மகிழ்ச்சியாகும்.

நாம் தேவனை நம்புகையில், ​​ஆழமான, உண்மையான மகிழ்ச்சியே இறுதி முடிவு. இந்த நம்பிக்கை எளிதில் வராமல் இருக்கலாம், மேலும் முடிவுகள் நாம் எண்ணியது போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனை நம்பினால், நாம் நம்பியதற்காக மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.

தேவன் தருவதை உபயோகித்தல்

1920களின் வியப்பூட்டும் திட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சிட்டி ஹால் ஆகும். மைக்கேல் ஏஞ்சலோ தனது டேவிட் சிற்பத்திற்குப் பயன்படுத்திய அதே குவாரியில் எடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் வெண்மையான படிக்கட்டுகளை  பெருமைப்படுத்தின. அதின் கோபுரம் வெனிஸின் தூய மாற்கு ஆலய கோபுரத்தின் பிரதி, மேலும் தாமிரத்திலான குவிமாடம் (உருண்டையான கோபுரம்) பூமியின் தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரியது. கட்டிடம் கட்டுபவர்கள் ஒரு பெரிய சமாதான தூதனின் சிலையால் உச்சியை அலங்கரிக்க நினைத்தனர், ஆனால் ஒரு சிக்கல் இருந்தது: பணம் எதுவும் இல்லை. குழாய்களை செப்பனிடும் ஃபிரெட் ஜான்சன் உதவிக்கு வந்தார். அவர் ஒரு கழிப்பறை தொட்டி, ஒரு பழைய விளக்கு கம்பம் மற்றும் பயனற்ற உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி, கோபுரத்தை ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக அலங்கரிக்கும், மகுடம் சூடிய மணிமுடியை உருவாக்கினார்.

ஃபிரெட் ஜான்சன் மற்றும் அவரிடம் இருந்ததைப் பயன்படுத்தினதைப் போலவே, நம்மிடம் உள்ள பெரிய அல்லது சிறிய அனைத்தையும் கொடுத்து தேவனின் பணியை செய்யலாம். இஸ்ரவேலை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியேற்றும்படி மோசேயிடம் கடவுள் கேட்டபோது, ​​மோசே "அவர்கள்.. என் வாக்குக்குச் செவிகொடார்கள்" (4:1) என்று தடுமாறினார். தேவன், "உன் கையில் இருக்கிறது என்ன" (வ. 2) என்று எளியமையான கேள்வியில் பதிலளித்தார். மோசேயிடம் கோலிருந்தது, வெறும் குச்சிதான். தேவன் அதைத் தரையிலே போடு என்றார், "அது சர்ப்பமாயிற்று" (வ. 3). பின்னர் அவர் சர்ப்பத்தை எடுக்க மோசேயிடம் அறிவுறுத்தினார், அது மீண்டும் ஒரு கோலாக மாறியது. மோசே செய்ய வேண்டியதெல்லாம், கோலை எடுத்துக்கொண்டு போவதும் மற்றதைச் செய்யம்படி அவரை நம்புவதுமே என்று தேவன் விளக்கினார். வியப்பூட்டும் வகையில், எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை மீட்க மோசேயின் கையில் இருந்த அந்த கோலை பயன்படுத்துவார் (7:10–12; 17:5–7).

நம்மிடம் இருப்பது நமக்கே பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு நம்மிடம் இருப்பதே போதுமானதாக இருக்கும். நம்மிடம் உள்ள சாதாரண பொருட்களை எடுத்து தன் பணிக்கு பயன்படுத்துகிறார்.

கூடியிருப்பது நலம்

ஒரு புகைப்படக் கலைஞர் ஸ்டார்லிங்ஸ் பறவைகளையும் (கருப்பு நிற சிறிய பறவை), ஆயிரக்கணக்கான இந்தப் பறவைக் கூட்டம் வானத்தில் நிகழ்த்தும் பிரமிப்பூட்டும் "மர்மரிங்ஸ்" எனப்படும் தண்ணீர்போன்ற அசைவுகளையும் படம்பிடிக்கப் பல ஆண்டுகள் செலவிட்டார். இதை விண்ணில் பார்ப்பது ஒரு அலையின் அடியில் அமர்ந்திருப்பது போன்றது அல்லது பற்பல வடிவங்களில், கலைஞர்கள் தூரிகையினால் வரையும் கண்கவர் கண்ணாடி ஓவியம் போன்று உள்ளது. டென்மார்க்கில், இந்த ஸ்டார்லிங் பறவைகளின் அனுபவத்தை பிளாக் சன் என்பார்கள். மிகவும் வியப்பூட்டுவது, இந்த பறவைகள் தங்களுடைய இயற்கையான உள்ளுணர்வால் நெருக்கமாக அருகருகே பறப்பதுதான்; ஒரு பறவை கூட நகர்வில் தவறினால், அவைகள் குழப்பமடைந்து, மொத்த கூட்டமும் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்கவே "மர்மரிங்ஸ்" முறை. ஒரு பருந்து அவைகளில் ஒன்றை இரையாக்க இறங்கும்போது, வேட்டையிலிருந்து தப்பிக்க இந்த சிறிய பறவைகள் நெருக்கமான அமைப்பில் கூட்டாக நகர்கின்றன. அவை தனியாக இருந்தால் அவற்றை எளிதாகப் பருந்து வேட்டையாடிவிடும்.

நாம் தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது நல்லது. "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்" என்று பிரசங்கி கூறுகிறார். " ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்;" (பிரசங்கி 4:9-11). நாம் தனிமைப்படுத்தப்பட்டால் எளிதாகப் பலியாகிவிடுவோம். மற்றவர்களின் ஆறுதலோ, பாதுகாப்போ இல்லாமல் பலவீனமடைவோம்.

ஆனால் கூடிவாழும்போது நண்பர்கள் மூலம் உதவிகிடைக்கிறது, நாமும் உதவுகிறோம். "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" (வ12) என்று பிரசங்கி கூறுகிறார். தேவன் நம்மை வழிநடத்திட,  நாம் கூடியிருப்பதே நலம்.

ஆயுதங்களிலிருந்து அணிகலன்கள்

என் மனைவி மிஸ்காவிடம் எத்தியோப்பியாவின் நெக்லஸ் மற்றும் காதணிகள் உள்ளன. அவர்களின் நேர்த்தியான எளிமை, அவர்களின் மெய்யான கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த துண்டுகளைப் பற்றி மிகவும் வியக்கத்தக்கது அவர்களின் கதை. பல தசாப்தங்களாக கடுமையான மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போரின் காரணமாக, எத்தியோப்பியாவின் புவியியல் அமைப்பானது பீரங்கி குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் ஒரு செயலாக, எத்தியோப்பியர்கள் எரிக்கப்பட்ட பூமியைத் துடைத்து, குப்பைகளை சுத்தம் செய்கிறார்கள். மேலும் எஞ்சியிருக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் இருந்து கைவினைஞர்கள் நகைகளை உருவாக்குகிறார்கள்.

இந்தக் கதையைக் கேட்டபோது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை தைரியமாக அறிவிக்கும் மீகாவின் எதிரொலிகளைக் கேட்டேன். அவர் மக்களைக் குறித்து, ஒரு நாள் “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்” (மீகா 4:3) என்று சொல்லுகிறார். தேவனுடைய வல்லமையான கிரியையினிமித்தம், கொல்ல மற்றும் ஊனப்படுத்துவதற்கான பயங்கரமான கருவிகள், வாழ்க்கையை வளர்ப்பதற்கான கருவிகளாக மாற்றப்படுகிறது. வரவிருக்கிற கர்த்தருடைய நாளில், “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” (வச. 3) என்றும் சொல்லுகிறார். 

மீகாவின் காலகட்டத்தைக் காட்டிலும் அதை நம்முடைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவே பார்க்கத் தோன்றுகிறது. பண்டைய காலத்தின் இஸ்ரவேல் தேசத்தைப் போலவே நாமும் வன்முறைகள் மற்றும் யுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலை எப்போதும் மாறாது என்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் தேவன் கிருபையோடும் குணமாக்கும் வல்லமையோடும் இந்த அதிர்ச்சியூட்டும் நாள் வரப்போகிறது என்று நமக்கு வாக்களிக்கிறார். அப்படியானால், இந்த உண்மையை இப்போதே நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். காயப்படுத்தும் ஆயுதங்களை ஆச்சரியப்படுத்தும் அணிகலன்களாய் மாற்றி, அவருடைய செயல்களை இப்போதிருந்தே செய்ய தேவன் நமக்கு உதவிசெய்வாராக.