Archives: அக்டோபர் 2024

மிகபெரிய பிளவு

புகழ்பெற்ற "பீனட்ஸ்" என்ற நகைச்சுவை இதழில், தி கிரேட் பம்ப்கின்  மீதான நம்பிக்கைக்காக 'லினஸ்' என்பவரின் நண்பர் அவரைத் திட்டுகிறார். விரக்தியுடன் விலகிச் சென்று, லினஸ் கூறுகிறார், “பிறருடன் ஒருபோதும் விவாதிக்கக் கூடாத மூன்று விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்; மதம், அரசியல் மற்றும்  தி கிரேட் பம்ப்கின்!"

தி கிரேட் பும்ப்கின் என்பது லினஸின் கற்பனையில் மட்டுமே இருந்தது, ஆனால் மற்ற இரண்டு காரியங்கள் மிகவும் உண்மையானவை. அவை நாடுகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களைப் பிரிக்கிறது. இயேசுவின் காலத்திலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. பரிசேயர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்களாகப் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தை அப்படியே பின்பற்ற முயன்றனர். ஏரோதியர்கள் மிகவும் அரசியல் ரீதியானவர்கள், இருப்பினும் இரு பிரிவினரும் யூத மக்களை ரோமானிய அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்பினர். இயேசுவுக்கோ அந்த நோக்கமில்லை, எனவே அவர்கள் அவரை அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டக் குறுக்குக் கேள்வியுடன் அணுகினர்: இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? (மாற்கு 12:14-15). இயேசு ஆம் என்று சொன்னால், மக்கள் அவரை வெறுப்பார்கள். அவர் இல்லை என்று சொன்னால், ரோமர்கள் அவரை கிளர்ச்சிக்காகக் கைது செய்யலாம்.

இயேசு ஒரு நாணயம் கேட்டார். "இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?" என்று கேட்டார் (வ. 16). அது இராயனுடையது என்பது அனைவருக்கும் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: "இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்"  (வ. 17). அவருடைய முக்கியத்துவங்களைச் சீராக வைத்திருந்தார், இயேசு அவர்களின் பொறியைத் மேற்கொண்டார்.

இயேசு தம் பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார். அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றி, நாமும் தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தேடலாம், எல்லா கருத்து வேறுபாடுகளிலிருந்தும் விலகி, சத்தியமானவரை நோக்கி கவனத்தைத் திருப்பலாம்.

அழகான ஓர் ஆச்சரியம்

உழப்பட்ட நிலத்தில் ஒரு ரகசியம் இருந்தது, ஏதோ மறைந்திருந்தது. அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு, லீ வில்சன் தனது எண்பது ஏக்கர் நிலத்தைத் தனது மனைவி இதுவரை கண்டிராத மிகப் பெரிய மலா்கள் பூக்கும் தோட்டத்தை பரிசை வழங்குவதற்காக ஒதுக்கினார். அவர் ரகசியமாக எண்ணற்ற சூரியகாந்தி விதைகளை விதைத்திருந்தார், அது இறுதியில் 1.2 மில்லியன் சூரியகாந்தி செடிகளாக வெடித்தது, அவரது மனைவிக்குப் பிடித்தவை. சூரியகாந்திப் பூக்கள் தங்கள் மஞ்சள் கிரீடங்களை விரித்தபோது, ​​ரெனி லீயின் அழகான அன்பின் செயலால் திக்குமுக்காடி அதிர்ச்சியடைந்தார்.

ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யூதாவின் மக்களிடம் பேசுகையில், தேவன் அவர்களுடன் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர்களால் இப்போது காணமுடியாவிட்டாலும்,  அவர்கள் தமக்குச் செய்த துரோகத்திற்காக  அவர்களுக்கு எதிராக அவர் வாக்களித்த நியாயத்தீர்ப்புக்குப் பிறகு (ஏசாயா 3:1-4:1) ஒரு புதியதும் பொன்னானதுமான நாள் விடியும். "அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்." (4:2). ஆம், அவர்கள் பாபிலோனிய கைகளில் பேரழிவையும் சிறையிருப்பையும் அனுபவிப்பார்கள், ஆனால் ஒரு அழகான “கிளை" அப்போது தரையிலிருந்து ஒரு புதிய தளிராக வெளிப்படும். அவருடைய ஜனங்களில் மீதியாயிருப்பவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு  ("பரிசுத்தனென்று", வ. 4), சுத்திகரிக்கப்பட்டு (வ. 4), மற்றும் அவரால் அன்பாக வழிநடத்தப்பட்டுப் பராமரிக்கப்படுவார்கள் (வ. 5-6).

நம்முடைய நாட்கள் இருண்டதாகவும் தேவனுடைய வாக்குகளின் நிறைவேற்றம் மறைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றலாம்  ஆனால் விசுவாசத்தினால் நாம் அவரைப் பற்றிக்கொள்ளும்போது, ​​ஒரு நாள் அவருடைய "மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும்" (2 பேதுரு 1:4) அனைத்தும் நிறைவேற்றப்படும். ஒரு அழகான புதிய நாள் காத்திருக்கிறது.

ஜெபிக்கும்படி இடைநிறுத்துங்கள்

மார்ச் 24, 2023 அன்று தனது வானிலை முன்னறிவிப்பின் போது மிசிசிப்பியில் உள்ள ஒரு வானிலை ஆய்வாளர், ஆறு எளிய மற்றும் ஆழமான வார்த்தைகளைப் பேசியதற்காகப் பிரபலமானார். மேட் லௌபன், கடுமையான புயலை ஆய்வு செய்துகொண்டிருந்தார், அமோரி நகரத்தை பேரழிவுகரமான சூறாவளி தாக்கப் போகிறது என்பதை உணர்ந்தார். அப்போதுதான் உலகமெங்கும் கேட்கப்பட்ட, "அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து அவர்களுக்கு உதவும். ஆமென்" என்ற ஜெபத்தை லௌபன் தொலைக்காட்சி நேரலையில் இடைநிறுத்தி ஜெபித்தார். அந்த ஜெபம்தான் தங்களைப் பாதுகாப்பாய் மறைத்துக்கொள்ள உணர்த்தியதாக சில  பார்வையாளர்கள் பின்னர் கூறினர். அவரது தன்னிச்சையான மற்றும் இதயப்பூர்வமான ஜெபம், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற உதவியிருக்கலாம்.

நம்முடைய ஜெபங்களும் மாற்றத்தை ஏற்படுத்தும். அவை நீளமாக இருக்க வேண்டியதில்லை. அவை குறுகியதாகவும் இனிமையாகவும் மற்றும் நாளின் எந்த நேரத்திலும் ஜெபிக்கக் கூடியதாக இருக்கலாம். நாம் வேலையிலிருந்தாலும் சரி, நேரமின்றி இயங்கிக்கொண்டிருந்தாலும் சரி அல்லது விடுமுறையிலிருந்தாலும் சரி, நாம் “இடைவிடாமல் ஜெபிக்கலாம்” (1 தெசலோனிக்கேயர் 5:17).

நாள் முழுவதும் நாம் ஜெபிப்பதைக் கேட்கத் தேவன் விரும்புகிறார். நாம் கவலைக்கும் பயத்திற்கும் அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்முடைய எல்லா கரிசனைகளையும் கவலைகளையும் தேவனிடம் கொண்டு செல்ல முடியும் என்பதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6-7).

நாம் ஒரு வறட்சியான நாளை அனுபவித்தாலும், அல்லது வாழ்க்கையின் உண்மையான அல்லது அடையாளப்பூர்வமான புயல்களால் தாக்கப்பட்டாலும், நாள் முழுவதும் இடைநிறுத்தி, ஜெபிக்க நினைவில் கொள்வோம்.

சுமைகளை அகற்றுதல்

கல்லூரியில், நான் ஒரு பருவ தேர்விற்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்பைப் படித்தேன். வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் எழுதிய அனைத்தையும் கொண்ட மாபெரும் பாடப்புத்தகம் தேவைப்பட்டது. புத்தகம் பல கிலோ எடையுள்ளதாக இருந்தது, நான் அதை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல  சில மணிநேரங்கள் தேவைப்பட்டது. அந்த சுமையைக் கட்டி சுமப்பது  என் முதுகில் காயத்தை ஏற்படுத்தியது, அது இறுதியில் என் புத்தகப்பையில் ஒரு உலோக இணைப்பையும் உடைத்தது!

சில விஷயங்கள் நம்மால் சுமக்க முடியாத அளவுக்கு கனமானவை. உதாரணமாக, கடந்த காலத்தில் உண்டான காயம் கொண்டுவருகிற உணர்வுபூர்மான சுமைகள், கசப்பாலும் வெறுப்பாலும் நம்மை மூழ்கடிக்கலாம். ஆனால், பிறரை மன்னிப்பதாலும், முடிந்தால் அவர்களுடன் ஒப்புரவாவதின் மூலமாகவும் நாம் விடுதலை பெற்றிடத் தேவன் விரும்புகிறார் (கொலோசெயர் 3:13). ஆழமான காயம் ஆற, அதிகமான நேரம் ஆகலாம். பரவாயில்லை. தனது சேஷ்டபுத்திரபாகத்தையும் ,ஆசீர்வாதத்தையும் திருடியதற்காக யாக்கோபை மன்னிக்க ஏசாவுக்கு பல ஆண்டுகள் ஆனது (ஆதியாகமம் 27:36).

இருவரும் இறுதியாக மீண்டும் இணைந்தபோது, ​​​​ஏசா கருணையுடன் தனது சகோதரனை மன்னித்து, "அவனைத் தழுவினார்" (33:4). அவர்கள் இருவரும் கண்ணீர் வடிக்கும்வரை ஒரு வார்த்தை கூட பரிமாறிக்கொள்ளவில்லை. காலப்போக்கில், கொலை செய்யக்கூட தூண்டும் கோபத்தை ஏசா விட்டுவிட்டார் (27:41). அந்த ஆண்டுகளில், யாக்கோபு தனது சகோதரனுக்கு இழைத்த பொல்லாங்கு எப்பேர்பட்டது என்பதை உணர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் இணைகையில், முழுவதும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார் (33:8-11).

இறுதியில், இரு சகோதரர்களும் மற்றவரிடமிருந்து எதுவும் தேவைப்படாத நிலைக்கு வந்தனர் (வ. 9, 15). மன்னிக்கவும் மன்னிக்கப்படவும் மற்றும் கடந்த காலத்தின் கனமான சுமையிலிருந்து விடுபட்டு நடப்பது மட்டுமே போதுமானதாயிருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒவ்வொரு நொடியும் முக்கியம்

ஏப்ரல் 1912 இல் டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதியபோது, போதகர் ஜான் ஹார்பர் தனது ஆறு வயது மகளுக்கு, உயிர்காக்கும் சிறிய படகுகளிலிருந்த மிகக்குறைந்த காலியிடங்களில் ஒன்றைப் பெற்றார். அவர் சக பயணிக்குத் தனது உயிர் காக்கும் மிதவை ஆடையைக் கொடுத்து, கேட்கும் எவருடனும் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கப்பல் மூழ்கியது . நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு சாத்தியமற்ற மீட்புக்காக காத்திருந்தபோது, ஹார்பர் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நீந்தினார், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31) என்றார்.

கனடாவின் ஒன்டாரியோவில் டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்களுக்கான சந்திப்பு கூட்டத்தில், ஒருவர் தன்னை “ஜான் ஹார்பரின் கடைசி மாற்றம்” என்று குறிப்பிட்டார். ஹார்பரின் முதல் அழைப்பை அவர் நிராகரித்தாலும்,ஹார்பர் மீண்டும் அவரிடம் வேண்டிக்கொண்ட பின்னர், அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். தாழ் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு பனிக்கட்டி நீாில் மூழ்குவதற்கு முன்பும், இயேசுவைப் பகிர்ந்துகொள்வதற்காக ஹார்பர் தனது வாழ்க்கையின் கடைசி தருணங்களை அர்ப்பணித்ததை அவர் பார்த்தார்.

தீமோத்தேயுவிடம் பொறுப்பளிக்கையில், அப்போஸ்தலன் பவுல் தன்னலமற்ற சுவிசேஷ பணியில் இதேபோன்ற அவசரத்தையும் அர்ப்பணிப்பையும் ஊக்குவிக்கிறார். தேவனின் நிலையான பிரசன்னத்தையும், இயேசுவின் தவிர்க்க முடியாத வருகையையும் உறுதிசெய்து, நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணிப் பிரசங்கிக்குமாறு தீமோத்தேயுவுக்கு பவுல் கட்டளையிடுகிறார் (2 தீமோத்தேயு 4:1-2). சிலர் இயேசுவை நிராகரித்தாலும், இளம் பிரசங்கிக்குக் கவனம் செலுத்தும்படி அப்போஸ்தலன் நினைவூட்டுகிறார் (வ.3-5). நம் நாட்கள் குறுகியவை, எனவே ஒவ்வொரு கணமும் முக்கியம். “இயேசு இரட்சிக்கிறார்!” என்று நாம் அறிவிக்கையில், நம்முடைய பிதா பரலோகத்தில் நமக்கான இடத்தை உறுதிப்படுத்தினார் என்பதில் நாம் நிச்சயம் கொள்கிறோம். 

 

உதாரத்துவமாய் கொடுத்தல்

பள்ளி பாடங்களுக்குப் பின் வேதாகம படிப்பு என்ற நோக்கத்தில் இயங்கும் ஒரு குழுவில், வாரத்திற்கு ஒருமுறை என் மனைவி சுமதி ஊழியம் செய்கிறாள். அதிலே, போரினால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காகப் பணத்தை நன்கொடையாக அளிக்கும்படி குழந்தைகளிடம் கேட்கப்பட்டது. சுமதி எங்கள் பதினொரு வயது பேத்தி ரஞ்சனியிடம் இத்திட்டத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாரத்திற்குப் பிறகு, அவளிடமிருந்து எங்களுக்கு ஒரு கடித உறை கிடைத்தது. அதில் சுமார் ரூ. 250 இருந்தது: “உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்காக என்னிடம் இருப்பது இதுதான். மேலும் பின்னர் அனுப்புகிறேன்” என்ற குறிப்புமிருந்தது.

ரஞ்சனி உதவ வேண்டும் என்று சுமதி பரிந்துரைக்கவில்லை, ஆனால் ஆவியானவர் அவளைத் தூண்டியிருக்கலாம். மேலும் இயேசுவை நேசித்து அவருக்காக வாழ முற்படும் ரஞ்சனி செயல்பட்டாள்.

ஒரு தயாள மனதிலிருந்து வந்த இந்த சிறிய பரிசை சிந்திக்கையில், நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். கொடுத்தல் குறித்து 2 கொரிந்தியர் 9ல் பவுல் வழங்கிய சில அறிவுரைகளை இது பிரதிபலிக்கிறது. முதலாவது அப்போஸ்தலன், நாம் பெருக விதைக்கும்படி அறிவுறுத்துகிறார் (வ. 6). “என்னிடம் இருப்பதெல்லாம்” என்பது நிச்சயமாகவே பெருக விதைப்பதாகும். நாம் “கட்டாயத்தினால்” (வ. 7) அல்ல, தேவன் வழிநடத்தும் விதமாகவும் நம்மால் இயன்றதைப் போலவும் நம்முடைய ஈவுகள் மகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பவுல் எழுதினார். மேலும் சங்கீதம் 112:9ஐ மேற்கோள் காட்டி, “ஏழைகளுக்கான ஈவுகளின்” (வ. 9) மதிப்பைக் குறிப்பிட்டார்.

கொடுக்கும்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று கேட்போமாக. அவர் நம்மை வழிநடத்தும் போது, தேவைப்படுபவர்களுக்கு நம்முடைய ஈவுகளை வழங்குவதில் நாம் தாராளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது, “தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும்” (2 கொரிந்தியர் 9:11). அதுவே தாராள மனதுடன் கொடுப்பது. 

 

வீட்டு தெய்வங்கள்

அந்த வேதபாட குழுவிலிருந்த ஆண்கள் கிட்டத்தட்ட எண்பது வயதுடையவர்கள். அவர்கள் இச்சையோடு போராடுவதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். இளமையில் தொடங்கிய அந்த யுத்தம் இன்னும் நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் இந்த பகுதியில் இயேசுவைப் பின்பற்றுவதாக உறுதியளித்தனர். அவர்கள் தோல்வியுற்ற தருணங்களுக்காக மன்னிப்பு கேட்டார்கள்.

தேவமனிதர்கள், வாழ்க்கையில் இன்னும் அடிப்படை சோதனைகளுக்கு எதிராக போராடுவது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை. நம் வாழ்வில் தேவனுடைய இடத்தைப் பிடிக்க எத்தனிக்கும் எதுவும் விக்கிரகமே. இதுபோன்ற காரியங்கள் முடிந்துவிட்டன என்று நாம் நினைக்கையில் மீண்டும் அவை தலைதூக்கலாம்.

வேதத்தில், தனது மாமனாகிய லாபானிடமிருந்தும், சகோதரன் ஏசாவிடமிருந்தும் யாக்கோபு காப்பாற்றப்படுகிறார். அவர் தேவனை ஆராதிக்கவும், அவருடைய பல ஆசீர்வாதங்களைக் கொண்டாடவும் பெத்தேலுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய குடும்பம் யாக்கோபு அடக்கம் செய்ய வேண்டிய அந்நிய தெய்வங்களை இன்னும் வைத்திருந்தது (ஆதியாகமம் 35:2-4). யோசுவா புத்தகத்தின் முடிவில், இஸ்ரவேல் தங்கள் எதிரிகளைத் தோற்கடித்து கானானில் குடியேறிய பிறகு, “அப்படியானால் இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்” (யோசுவா 24:23) என்று அவர்களை அறிவுறுத்த வேண்டியிருந்தது. தாவீது ராஜாவின் மனைவி மீகாள் விக்கிரகங்களை வைத்திருந்தாள், அவனைக் கொல்ல வந்த வீரர்களை ஏமாற்றுவதற்காக அவனுடைய படுக்கையில் ஒன்றை வைத்திருந்தாள். (1சாமுவேல் 19:11-16).

நாம் நினைப்பதை விட விக்கிரகங்கள் மிகவும் பரவலாக காணப்படுகின்றன. தேவன் நம் தகுதியைக் காட்டிலும் அதிக பொறுமையுடன் இருக்கிறார். விக்கிரகங்களிடம் திரும்புவதற்கான சோதனைகள் வரும், ஆனால் தேவனின் மன்னிப்பு பெரியது. நாம் இயேசுவுக்காகப் பிாித்தெடுக்கப்பட்ட வாழ்வை மேற்கொள்வோம். நம்முடைய பாவங்களை விட்டு விலகி, அவரில் மன்னிப்பைக் கண்டடைவோமாக.