Archives: செப்டம்பர் 2024

“சிறிய” அற்புதங்கள்

எங்கள் திருமண நிகழ்வில், எங்கள் கூச்ச சுபாவமுள்ள நண்பர் டேவ் ஒரு மூலையில் ஒரு நீள்சதுர, திசுக்களால் மூடப்பட்ட ஒரு பொருளைப் பிடித்தபடி நின்றார். அவரது பரிசை வழங்குவதற்கான முறை வந்தபோது, அவர் அதை முன் கொண்டு வந்தார். இவானும் நானும் அதை அவிழ்த்து, கையால் செதுக்கப்பட்ட மரத் துண்டில் “தேவனுடைய சில அற்புதங்கள் மிகவும் சிறியவைகள்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. சின்னச் சின்ன விஷயங்களிலும் தேவன் கிரியை செய்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், நாற்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் அந்த மரத்தகடு தொங்கவிடப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துதல், உணவை பெற்றுக்கொள்ளுதல், மற்றும் வியாதி குணமாகுதல் போன்ற அனைத்திலும் தேவனுடைய கிரியை இருக்கிறது. 

சகரியா தீர்க்கதரிசியின் மூலம், எருசலேமையும் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவது குறித்த தேவ கட்டளையை யூதேயாவின் ஆளுநரான செருபாபேல் பெறுகிறார். பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய பிறகு, மெதுவான முன்னேற்றத்தின் ஒரு பருவம் தொடங்கியது. இஸ்ரவேலர்கள் ஊக்கம் அடைந்தனர். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” என்று தேவன் ஊக்கப்படுத்தினார் (சகரியா 4:10). அவர் தனது ஆசைகளை நம் மூலமாகவும் சில சமயங்களில் நம்மை மீறியும் நிறைவேற்றுகிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (வச. 6). 

நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் கடவுளின் கிரியையின் வெளிப்படையான சிறியத்தன்மையைக் கண்டு நாம் சோர்வடையும் போது, அவருடைய சில அற்புதங்கள் ‘சிறியதாக" இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம். அவர் தனது பெரிய நோக்கங்களுக்காக கட்டியெழுப்ப சிறிய விஷயங்களை பயன்படுத்துகிறார்.

 

ஆரோக்கியமான இருதயம்

மனித இருதயம் ஒரு அற்புதமான உறுப்பு. இந்த முஷ்டி அளவிலான உறுப்பு 7 முதல் 15 அவுன்ஸ் வரை எடை கொண்டது. தினமும் இது 100,000 முறை துடிக்கிறது மற்றும் 2,000 கேலன் இரத்தத்தை நம் உடலில் உள்ள 60,000 மைல் இரத்த நாளங்கள் வழியாக செலுத்துகிறது! இத்தகைய ஒரு திட்டமிட்டப் பணி மற்றும் அதிக பணிச்சுமையுடன், இதய ஆரோக்கியம் முழு உடலின் நல்வாழ்வுக்கு ஏன் மையமாக உள்ளது என்பது புரிந்துகொள்ள முடிகிறது. நமது இருதயத்தின் நிலையும், ஆரோக்கியத்தின் தரமும் ஒன்றாக இருப்பதால், ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர மருத்துவ அறிவியல் நம்மை ஊக்குவிக்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் நமது உடல் இதயங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகப் பேசுகையில், தேவன் மற்றொரு வகையான “இருதயம்" பற்றி இன்னும் அதிக அதிகாரத்துடன் பேசுகிறார். அவர் நம் வாழ்க்கையின் மனரீதியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமாய் ஆவிக்குரிய மையத்தைக் குறித்து பேசுகிறார். இருதயம் வாழ்க்கையின் மையச் செயலாக்க உறுப்பாக என்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டும்: “எல்லாக் காலலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள் 4:23). நம் இதயங்களைப் பாதுகாப்பது நம் பேச்சுக்கு உதவும் (வச. 24), கண்களால் பகுத்தறியும்படி நம்மை வற்புறுத்தும் (வச. 25), மேலும் நம் கால்களுக்குச் சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவும் (வச. 27) உதவுகிறது. வயது அல்லது வாழ்க்கையின் நிலை எதுவாக இருந்தாலும், நம் இருதயங்கள் பாதுகாக்கப்படும்போது, நம் உயிர்கள் பாதுகாக்கப்படும், நம் உறவுகள் பாதுகாக்கப்படும், மற்றும் தேவன் கனப்படுத்தப்படுகிறார்.

தேடி மீட்டெடு

சில நண்பர்கள் புயல் வானிலை முன்னறிவிப்பு மாறும் என்ற நம்பிக்கையில் ஆங்கிலக் கால்வாயில் படகு சவாரி செய்தனர். ஆனால் காற்று உயர்ந்தது, அலைகள் கொந்தளித்து, அவர்களின் கப்பலின் பாதுகாப்பை அச்சுறுத்தியது. எனவே அவர்கள் மீட்புக்குழுவின் (ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன்) உதவிக்கு வானொலி செய்தனர். சில பதட்டமான தருணங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் மீட்பவர்களை தூரத்தில் பார்த்தார்கள். அவர்கள் விரைவில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நிம்மதியுடன் உணர்ந்தனர். அதற்குப் பிறகு எனது நண்பர், “மக்கள் கடல் விதிகளை புறக்கணித்தாலும் இல்லாவிட்டாலும், மீட்புக்குழு அவர்களை காப்பாற்ற எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது” என்று பெருமையுடன் சொன்னார். 

அவர் அந்த கதையை விவரிக்கையில், தேவனுடைய தேடுதல் மற்றும் மீட்பு பணியை இயேசு எவ்வாறு வழிநடத்துகிறார் என்று நான் நினைத்தேன். நம்மில் ஒருவராக வாழ, மனிதனாக பூமிக்கு வந்தார். அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம்முடைய பாவமும் கீழ்ப்படியாமையும் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்தபோது அவர் நமக்கு ஒரு மீட்புத் திட்டத்தை வழங்கினார். கலாத்தியாவில் உள்ள தேவாலயத்திற்கு எழுதும் போது, பவுல் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்... அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி... நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:3-4). கலாத்தியர்களுக்கு இயேசுவின் மரணத்தின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையின் பரிசை பவுல் நினைவுபடுத்தினார். இதனால் அவர்கள் நாளுக்கு நாள் தேவனை கனப்படுத்துவார்கள்.

நம்மைக் காப்பாற்றிய இயேசு, நம்மைத் தொலைந்து போகாமல் காப்பாற்ற மனமுவந்து மரித்தார். அவர் அவ்வாறு செய்ததால், தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது. மேலும் நன்றியுடன் நம் சமூகத்தில் உள்ளவர்களுடன் வாழ்வளிக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

பொறுப்பற்ற தன்மை மற்றும் கவனக்குறைவு

லிண்டிஸ்ஃபார்ன், பரிசுத்த தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்தில் உள்ள ஒரு அலை தீவு ஆகும். இது ஒரு குறுகிய சாலை மூலம் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை, தரைப்பாலத்தை கடல் மூடுகிறது. அதிக அலைகள் ஏற்படும்போது, அதைக் கடக்கும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்துப் பலகைகள் பார்வையாளர்களை எச்சரிக்கின்றன. ஆயினும்கூட, சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வதால் பெரும்பாலும் நீரில் மூழ்கிய கார்களின் மேல் உட்கார்ந்து அல்லது அவர்கள் மீட்கப்படக்கூடிய உயர்ந்த பாதுகாப்பு குடிசைகளுக்கு நீந்தி தப்புகிறார்கள். சூரிய உதயத்தைக் கணிப்பதபோல, அலைகளின் வரவை கணிக்கமுடியும். எச்சரிக்கைகள் எல்லா இடங்களிலும் உள்ளன. நீங்கள் அவர்களை தவறவிட முடியாது. ஆயினும்கூட, ஒரு எழுத்தாளர் லிண்டிஸ்ஃபார்ன் “பொறுப்பற்றவர்கள் அலையை கடக்க முயற்சிக்கும் இடம்" என்று கூறுகிறார். 

“மூர்க்கங்கொண்டு துணிகரமாய்” இருப்பது மதியீனம் என்று நீதிமொழிகள் நமக்குச் சொல்கிறது (14:16). ஒரு பொறுப்பற்ற நபர் ஞானம் அல்லது புத்திசாலித்தனமான ஆலோசனையை சிறிதும் பொருட்படுத்துவதில்லை; மற்றவர்களிடம் கவனம் அல்லது விடாமுயற்சியுடன் அக்கறை காட்டுவதில்லை (வச. 7-8). எவ்வாறாயினும், ஞானம் நம்மைக் கேட்கவும் சிந்திக்கவும் தாமதப்படுத்துகிறது. இதனால் நாம் உணர்ச்சிவசப்படுவதில்லை அல்லது அரைகுறையான யோசனைகளால் (வச. 6). நல்ல கேள்விகளைக் கேட்கவும், நம் செயல்களின் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளவும் ஞானம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொறுப்பில்லாத பேதைகள் உறவுகளைப் பொருட்படுத்தாமல் சத்தியத்தை புறக்கணித்து நடக்கிறார்கள், “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” (வச. 15). 

நாம் சில சமயங்களில் தீர்க்கமாகவோ அல்லது வேகமாகவோ செயல்பட வேண்டியிருக்கும் போது, நாம் பொறுப்பற்ற தன்மையை எதிர்க்கலாம். நாம் தேவனுடைய ஞானத்தைப் பெற்று பயிற்சி செய்யும்போது, நமக்கு அவசியப்படும் வேளைகளில் அவர் நம்மை வழிநடத்துவார் (வச. 15).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபிக்க தூண்டப்படல்

ஒரு சக பணியாளரின் ஜெபவாழ்க்கை எங்களது மேலாளரால் வளர்ச்சியடைந்ததாக ஒருமுறை என்னிடம் கூறினார். சற்று கடினமான எங்கள் மேலாளர், அவளுடன் சில ஆவிக்குரிய விஷயங்களை பகிர்ந்து அவள் அதிகமாக ஜெபிக்கத் தூண்டினார் என்று எண்ணி அதனால் நானும் ஊக்கமடைந்தேன். ஆனால் என் யூகம் தவறாயிற்று. எனது சக பணியாளரான தோழி இவ்விதமாக விளக்கினார்: “ஒவ்வொரு முறையும் மேளானா் வருவதைப் பார்த்ததும், நான் ஜெபிக்க ஆரம்பித்து விடுவேன்.” அவருடன் பேசும் முன்பு ஒவ்வொரு முறையும் அவள் ஜெபித்ததால், அவளுடைய ஜெப நேரம் அதிகரித்தது. ஏனெனில், தனது மேலாளருடன் பணியாற்றுவது சவாலானது, சரியான பணி உறவிற்குத் தேவனின் உதவி அவளுக்குத் தேவை என அறிந்திருந்தாள், அதனால் அவள் தேவனை அதிகம் கூப்பிட்டாள்.

கடினமான நேரங்களிலும், உரையாடல்கள் மத்தியிலும் ஜெபிக்கும் எனது சக பணியாளரின் பழக்கத்தை நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். இது வேதாகம பழக்கம்தான், 1 தெசலோனிக்கேயரில் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு பவுல், “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்” (5:17-18) என நினைவூட்டினார். நாம் எதை எதிர்கொண்டாலும், ஜெபிப்பதே சிறந்தது. இது நம்மைத் தேவனோடு இணைக்கவும், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்காக அவரை அழைக்கவும் உதவுகிறது (கலாத்தியர் 5:16). இதனால் நாம் மனித சித்தத்திற்கு இசைவதை தவிர்ப்போம். நாம் எதிர்க்கப்படும்போதும் “ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ” (1 தெசலோனிக்கேயர் 5:13) நமக்கு உதவுகிறது.

தேவனுடைய ஒத்தாசையோடு, அவரில் மகிழ்ந்து, எல்லாவற்றுக்காகவும் ஜெபித்து, அடிக்கடி நன்றி கூறலாம். இயேசுவுக்குள் நம் சகோதர சகோதரிகளுடன் இன்னும் இசைவுடன் வாழ இவை நமக்கு உதவி செய்யும்.

தேவனின் அன்பு கரங்களில்

மற்றுமொரு வியாதிக்குப்பின், எனக்கு புரியாத என் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு காரியத்தைக் குறித்து நான் அதிகம் பயந்தேன். ஒருநாள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரையில், “பூமியின் சுழற்சி வேகம்” அதிகரித்துள்ளதால் , பூமி “தடுமாறுகிறது” மற்றும் “வேகமாக சுழல்கிறது” என்பதாக விஞ்ஞானிகள் எழுதியிருந்ததை வாசித்தேன். “உலக கடிகார நேரத்திலிருந்து ஒரு விநாடியை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள். ஒரு விநாடி இழப்பு பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், பூமியின் சுழற்சி மாறக்கூடும் என்பது எனக்கு ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. சிறிய உறுதியற்ற தன்மை கூட என் விசுவாசத்தைத் தடுமாறச் செய்யும். இருப்பினும், தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை அறிவது, நாம் அறியாதவை எவ்வளவு பயமுறுத்துகிறதாயினும் அல்லது நம் சூழ்நிலைகள் எவ்வளவு நிலையற்றதாயினும், தேவனை நம்ப எனக்கு உதவுகிறது.

சங்கீதம் 90-ல் மோசே சொன்னார், “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” (வ. 2). எல்லா படைப்பின் மீதும் தேவனின் எல்லையற்ற வல்லமை, கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவராக, காலம் தேவனைக் கட்டுப்படுத்த முடியாது என்று மோசே அறிவித்தார் (வ.3-6).

தேவனையும் அவர் உருவாக்கிய அற்புதமான உலகத்தையும் அறிய நாம் முயலும்போது; அவர், காலத்தையும் அனைத்து படைப்பையும் தொடர்ந்து நேர்த்தியாக ஆளுவதைக் கண்டுகொள்ளலாம். நமது வாழ்விலும்கூட புரியாத மற்றும் புதிதாக அறிந்த ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும், தேவனை நம்பலாம். அவருடைய அனைத்துப் படைப்புகளும் அவரின் அன்பான கரங்களில் பாதுகாப்பாக உள்ளன.

இயேசுவில் வளா்தல்

நான் சிறுவனாயிருக்கும் போது, பெரியவர்களை ஞானிகளென்றும் தோற்கடிக்கப்படாதவர்களென்றும் நினைத்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும், எனக்கும் நான் வளர்ந்த பிறகு, அன்றன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும் என்று நினைத்தேன். இப்படி, “ஒரு நாள்” என் வாழ்வில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்தது, அது எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், பல முறை, எனக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதே. குடும்பத்தில் நோய், வேலையில் பிரச்சினைகள் அல்லது ஒரு உறவில் மோதல் வந்தபோது, அந்த நேரத்தில் அவைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால், நான் போராட வேண்டியதாயிருந்தது, இவை எனக்கு விட்டு சென்ற ஒரே ஒரு வழி, நான் என் கண்களை மூடி, “ஆண்டவரே, என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவி செய்யும்” என்று மனதில் ஜெபிப்பது மட்டமேயாகும்.

அப்போஸ்தலன் பவுல் இந்த உதவியற்ற உணர்வை அனுபவித்தார். அவர் வாழ்விலிருந்த “முள்” அது சரீர நோயாக இருந்திருக்கலாம், அது அவருக்கு மிகுந்த வலியையும் தவிப்பையும் கொடுத்தது. ஆனால் இந்த முள்ளின் மூலம்தான் பவுல் தேவனின் அன்பும், வாக்குத்தத்தங்களும், மற்றும் ஆசீர்வாதங்களும் தனது பலவீனத்தினால் பாடுகளைச் சகிக்கவும், மேற்கொள்ளவும் போதுமானதாக இருந்ததை அனுபவித்தார் (2 கொரிந்தியர் 12:9). தனிப்பட்ட பலவீனமும் உதவியற்ற தன்மையும் தோல்வி அல்ல என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை நம்பி அவரிடம் நம்மை அர்ப்பணிக்கையில், இந்த சூழ்நிலைகளில் அவர் கிரியை செய்யும் கருவிகளாக அவைகளை மாற்றுகின்றார் (வ. 9-10).

நாம் வளர்ந்துவிட்டதால், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, வயதுக்கேற்ற ஞானத்தில் வளர்கிறோம், ஆனால், நமது பலவீனங்கள் நிஜத்தில் நாம் எவ்வளவு பெலனற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய உண்மையான பெலன் கிறிஸ்துவில் இருக்கிறது: “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;” (வ.10). உண்மையிலேயே “வளர்வது” என்பது நமக்குத் தேவனின் உதவி தேவை என்பதை உணரும்போது வரும் வல்லமையை அறிவது, நம்புவது மற்றும் கீழ்ப்படிவது.