Archives: மே 2024

பீட்ஸா மூலம் இரக்கம்

என் திருச்சபை தலைவர் ஹரோல்ட் மற்றும் அவரது மனைவி பாம் ஆகியோரின் இரவு உணவிற்கான அழைப்பு என் மனதிற்கு இதமாயிருந்தது. ஆனால் அந்த அழைப்பு என்னை பதட்டப்படுத்தியது. ஏனென்றால், வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணான கருத்துக்களைக் கற்பிக்கும் கல்லூரி வேதாகமப் படிப்புக் குழுவில் நான் சேர்ந்தேன். அவர்கள் அதைப் பற்றி ஒருவேளை என்னிடம் பேசுவார்களோ? என்று அஞ்சினேன். 

பீட்சா உட்கொண்டவாறே, அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டனர் மற்றும் என்னுடைய குடும்பத்தையம் விசாரித்து அறிந்தனர். நான் என்னுடைய வீட்டுப்பாடம் எழுதுவது குறித்தும், என் நாய் மற்றும் நான் நேசிக்கும் நபரைக் குறித்தும் அவர்கள் இயல்பாய் பேசினர். அதன் பிறகுதான் நான் கலந்துகொண்ட குழுவைப் பற்றி மெதுவாக எச்சரித்து, அதன் போதனைகளில் என்ன தவறு என்று விளக்கினார்கள்.

அவர்களின் எச்சரிக்கை வேதாகம படிப்பில் வழங்கப்பட்ட பொய்களிலிருந்து என்னை விலக்கி, வேதத்தின் உண்மைகளுக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது. யூதா தனது நிருபத்தில், தவறான போதகர்களைப் பற்றி வலுவான மொழியைப் பயன்படுத்துகிறார். “விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று” (யூதா 1:3) அவர்களை எச்சரிக்கிறார். கடைசிகாலத்திலே பரியாசக்காரர் இருப்பார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவர்கள் ஆவியில்லாத ஜென்மசுபாவக்காரர்கள் என்றும் குறிப்பிடுகிறார் (வச. 18-19). இருப்பினும் யூதா, விசுவாசிகளை “சிலருக்கு இரக்கம் பாராட்டுங்கள்” (வச. 22) என்று அவர்களோடு சத்தியத்தை சமரசம் செய்யாமல் அவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கும்படி சொல்லுகிறார். 

ஹரோல்டும் அவரது மனைவி பாமும் நான் என் நம்பிக்கையில் உறுதியாக இல்லை என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் என்னை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் தங்கள் நட்பை வழங்கினர். பின்னர் தங்கள் ஞானத்தை வழங்கினர். குழப்பத்தில் உள்ளவர்களுடன் பழகும்போது, ஞானத்தையும் இரக்கத்தையும் பயன்படுத்த, இதே அன்பையும் பொறுமையையும் தேவன் நமக்குத் தந்தருளுவாராக.

 

வார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது

கெட்டவார்த்தை உபபோகிப்பதை எவ்வாறு அகற்றுவது? ஓர் உயர்நிலைப் பள்ளி “கெட்ட வார்த்தை பேசுவதில்லை” என்று உறுதிமொழியை எடுத்தது. அந்த பள்ளியின் மாணவர்கள் “நாங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அதின் சுவர்களிலும் எந்தவிதமான கெட்ட வார்த்தைகளையோ தவறான கருத்துக்களை கிறுக்கவோ பேசவோ மாட்டோம்” என்று உறுதிமொழியேற்றனர். இது ஓர் உன்னத முயற்சி. ஆனால், இயேசுவின் கூற்றுப்படி, எந்த விதிமுறைகளும் உறுதிமொழிகளும் ஒருபோதும் தவறான பேச்சின் வாசனையை மறைக்க முடியாது.

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் துர்நாற்றத்தை நீக்குவது நம் இதயத்தை புதுப்பிப்பதில் இருந்து தொடங்குகிறது. பழங்களைக் கொண்டு மரத்தின் வகையை மக்கள் அடையாளம் காண்பது போல் (லூக்கா 6:43-44), நம்முடைய பேச்சு, நம் இருதயம் அவரோடும் அவருடைய வழிகளோடும் ஒத்துப்போகிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அடையாள சின்னமாய் இருக்கிறது என்று இயேசு கூறுகிறார். பழம் என்பது ஓர் நபரின் பேச்சைக் குறிக்கிறது. “இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” (வச. 45). நம் வாயிலிருந்து வெளிவருவதை நாம் உண்மையில் மாற்ற விரும்பினால், முதலில் நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார். 

மறுரூபமாக்கப்படாத இருதயத்திலிருந்து வெளிவரும் தவறான வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வெளிப்புற வாக்குறுதிகள் பயனற்றவை. முதலில் இயேசுவை (1 கொரிந்தியர் 12:3) விசுவாசித்து, பிறகு நம்மை நிரப்ப பரிசுத்த ஆவியானவரை அழைப்பதன் மூலம் மட்டுமே தவறான பேச்சை நாம் அகற்ற முடியும் (எபேசியர் 5:18). தொடர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும் (வச. 20) ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதற்கும் (4:15, 29; கொலோசெயர் 4:6) மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் அவர் நமக்குள் செயல்படுகிறார்.

 

ஓர் மூத்தவரின் ஆலோசனை

“நான் எதற்கு வருத்தப்படவேண்டும்?” நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பிரபல எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸ் 2013ஆம் ஆண்டு சைராகுஸ் பல்கலைக்கழகத்தில் தனது தொடக்க உரையில் பதிலளித்த கேள்வி இதுவாகும். ஓர் வயதான நபராய் (சாண்டர்ஸ்) தன்னுடைய வாழ்க்கையில் தான் வருந்தும் காரியங்களிலிருந்து இளைஞர்கள் ஏதாகிலும் கற்றுக்கொள்வார்கள் என்று எண்ணி, அவர் வாழ்க்கையின் ஒருசில அனுபவங்களை அவர்களுடன் (பட்டதாரிகளுடன்) பகிர்ந்துகொண்டார். அவர் வருத்தங்களில், ஏழையாக இருப்பது, கடின வேலைகள் செய்வது போன்ற சில விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சாண்டர்ஸ் உண்மையில் அவைகளுக்காக வருத்தப்படவில்லை என்றார். மாறாக, தான் கருணை காண்பிக்கவேண்டிய ஓர் நபரிடத்தில் கருணை காண்பிக்க தவறிவிட்டதாக வருத்தப்பட்டார். 

அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவில் உள்ள விசுவாசிகளுக்கு இந்தக் கேள்விக்குப் பதிலளித்து எழுதுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஓர் குறிப்பிட்ட அரசியல் பார்வையை வைத்திருப்பது, சில புத்தகங்கள் அல்லது திரைப்படங்களைத் தவிர்ப்பது, ஓர் குறிப்பிட்ட விதத்தில் தேவனை ஆராதிப்பது போன்ற நமது பதில்களுடன் விரைந்து செல்ல இது தூண்டுகிறது. ஆனால் பவுல், “கெட்ட வார்த்தை” (எபேசியர் 4:29) மற்றும் “கசப்பும், கோபமும், மூர்க்கமும்” (வச. 31) போன்ற காரியங்களிலிருந்த நம்மை விடுவிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். அவருடைய பேச்சை முடிக்கும் தருவாயில், எபேசியர்களுக்கும் நமக்கும், “கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (வச. 32) என்று ஆலோசனை கூறுகிறார்.

இயேசுவின் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று நாம் நம்பும் எல்லாவற்றிலும் ஒன்று, நிச்சயமாக, இரக்கமாக இருக்கவேண்டும்.

 

உடனடி பாராட்டு

எத்தியோப்பியாவிற்கு ஓர் குறுகிய கால மிஷன் பயணத்தின்போது, எங்கள் குழு ஓர் உள்ளூர் அமைச்சகத்தின் மற்றொரு குழுவுடன் சேர்ந்து, குப்பைக் கிடங்கில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தினைச் சந்திக்கச் சென்றது. அவர்கள் எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் சாட்சிகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் ஜெபங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டோம். அந்த மாலையில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று, உள்ளூர் குழு உறுப்பினர் ஒருவர் தனது கிதார் இசைக்கருவியினை வாசிக்க, நாங்கள் நிலவின் ஒளியில் நின்று தேவனை ஆராதித்தோம். என்ன ஓர் புனிதமான தருணம்! அவர்களின் இக்கட்டான தருணத்திலும், இயேசுவில் மட்டுமே கிடைக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவர்கள் முழுமையாய் அனுபவித்தனர். 

அப்போஸ்தலர் 16ல், மற்றொரு எதிர்பாராத துதிவேளையைப் பற்றி வாசிக்கிறோம். இது பிலிப்பு பட்டணத்தில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. பவுலும் சீலாவும் இயேசுவைச் சேவித்தபோது கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கசையடி பெற்று, சிறையில் அடைக்கப்பட்டனர். விரக்திக்கு ஆளாகாமல், தங்கள் சிறை அறையில் “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்.” “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று” (வச. 25-26). 

மயக்கத்திலிருந்து எழுந்த சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்துகொள்ள விரைந்தான். ஆனால் கைதிகள் தப்பியோடவில்லை என்பதை உணர்ந்தபோது, அவன் கர்த்தருக்கு பயந்து, குடும்பத்தோடு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் (வச. 27-34).

தேவன் நம் துதிகளில் பிரியப்படுகிறார். வாழ்க்கையின் உயர்வான மற்றும் தாழ்வான எல்லா தருணங்களிலும் நாம் தேவனை துதிக்கப் பிரயாசப்படுவோம். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை

“சில நேரங்களில் நான் ஏதோ கண்ணுக்கே தெரியாதவள் போல உணர்கிறேன்" விமலா தன் தோழியிடம் பேசும்போது இந்த வார்த்தைகள் காற்றில் ஊசலாடின. விமலாவை அவள் சிறு குழந்தைகளுடன் கைவிட்டு, அவளது கணவன் வேறொறுவளோடு போய்விட்டான். அவள், "நான் அவருக்கு என் வாழ்விலேயே சிறந்த ஆண்டுகளைக் கொடுத்தேன். இப்போது யாரேனும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்றோ என்னை அறிவதற்கு நேரம் ஒதுக்குவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.

அவளுடைய தோழி பதிலளித்தாள்: "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பாவும் போய்விட்டார். அது எங்களுக்கு, குறிப்பாக அம்மாவுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில் அவள் என்னைத் தூங்கவைத்த போது, நான் மறக்கவே இல்லாத ஒன்றைச் சொன்னால்: 'தேவன் தன் கண்களை மூடுவதேயில்லை'. நான் வளர்ந்த பிறகு, ​​தேவன் என்னை நேசிப்பதையும், எனக்கு எப்போதும் தூங்கும்போதும் கூட காவலாய் இருப்பதையும் அவள் எனக்குக் கற்பிக்க முயன்றதை விலக்கினாள்".

சீனாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஒரு சவாலான நேரத்தில் தமது ஜனங்களுடன் பகிர்ந்துகொள்ள மோசேக்குத் தேவன் அருளிய வார்த்தைகளை வேதாகமம் முன்வைக்கிறது: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). இந்த ஆசீர்வாதமானது ஜனங்கள் மீது ஆசாரியர்களால் மொழியப்பட வேண்டும்..

யாராவது நம்மைப் பார்க்கிறார்களா அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா என்று நாம் ஏங்குகிற நிலைமையான வாழ்க்கையின் வனாந்தரங்களில் கூட தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவனின் தயவான அவரது பிரகாசிக்கும் முகமும் மாறிடாத அன்பும் அவரை நேசிப்பவர்களை நோக்கித் திரும்புகிறது, நம்முடைய வலியினிமித்தம், அவரை நம்மால் உணர முடியாவிட்டாலும் கூட, தேவனுக்கு மறைவானவர்கள் என்று யாரும் இல்லை.

நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்

பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.

சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், ​​​​என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால்,  "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், ​​தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).

 

தேவன் நம் பின்னே ஓடி வருகிறார்

பல ஆண்டுகளாக, சஞ்சய் ஒரு அடிமைத்தனத்துடன் போராடினார், அது அவரை தேவனிடம் நெருங்கவிடாமல் தடுத்தது. அவருடைய அன்புக்கு நான் எவ்வாறு தகுதியுடையவனாக இருக்க முடியும்? என்று அவர் குழம்பினார். எனவே, அவர் தொடர்ந்து சபைக்குச் சென்றபோதும், ​​தேவனிடம் தன்னை இணைக்கக் கூடாதபடிக்கு ஒரு பெரும் பள்ளம் இருப்பதாக உணர்ந்தார்.

ஆனாலும், சஞ்சய் எப்பொழுது ஊக்கமாய் ஜெபித்தாலும், தேவன் அவருக்குப் பதிலளிப்பதாகத் தோன்றியது. கடினமான காலங்களில் அவரை உற்சாகப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் தக்கவர்களைத் தேவன் அனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு, தேவன் தன்னைத் தொடர்ந்து விரட்டி வருவதையும், அவர் எப்போதும் தன்னை நேசிப்பதையும் அக்கறை காட்டுவதையும் சஞ்சய் உணர்ந்தார். அப்போதுதான் தேவனின் மன்னிப்பிலும் அன்பிலும் அவர் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். "இப்போது, ​​நான் மன்னிக்கப்பட்டேன் என்பதை அறிவேன். மேலும் நான் இன்னும் என் அடிமைத்தனத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும், அவரிடம் நெருங்கும்படிக்கு என்னைத் தேவனுக்கு விட்டுக்கொடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.

எசேக்கியேல் 34:11-16 தம் மக்களைப் பின்தொடர்ந்த ஒரு தேவனைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்" என்று அவர் கூறினார், அவற்றை மீட்பதாகவும், அவற்றுக்கு அபிரிதமானவற்றை வழங்குவதாகவும் வாக்களித்தார் (வ.11). அவர்களுடைய மனுஷீகமான தலைவர்கள் அவர்களைக் கைவிட்ட பிறகும், அவர்களும் தங்கள் மெய்யான மேய்ப்பருக்குக் கீழ்ப்படியாமல் போனபோதும் (வ.1-6) இது நிகழ்ந்தது. நாம் உதவியற்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய சொந்த பாவத்தின் விளைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாலும் சரி, தேவன் நம்மை அன்பினால் பின்தொடர்கிறார். அவருடைய இரக்கத்தாலும், கிருபையாலும், அவர் நம்மை மீண்டும் அவரிடமாய் இழுக்கிறார். நீங்கள் தேவனை மறந்திருந்தால், அவரிடம் திரும்புங்கள். பின்னர், அவர் வழிநடத்துவதற்கேற்ப, ​​ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்ந்து நடங்கள்.