ஜான் பெர்கின்ஸ், மரிப்பதற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கிறார். இன நல்லிணக்கத்தின் போராளியாக அறியப்பட்ட பெர்கின்ஸ், “மனந்திரும்புதலே தேவனிடம் திரும்புவதற்கான ஒரே வழி. நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்கள்” என்று தன் கடைசி வார்த்தைகளை பதிவுசெய்கிறார். 

இதே வார்த்தைகளை வேதாகமத்தில் இயேசுவோடு சேர்த்து அநேகர் பயன்படுத்தியிருக்கின்றனர். இயேசு, “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” (லூக்கா 13:3) என்று சொல்லுகிறார். பேதுரு, “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:20) என்று சொல்லுகிறார். 

வேதாகமத்தில் வெகுகாலத்திற்கு முன்பாகவே அனைத்து ஜனங்களின் மனந்திரும்புதலை விரும்பிய ஒரு மனிதர் இருக்கிறார். தீர்;க்கதரிசியும், ஆசாரியனும், நியாயாதிபதியுமாயிருக்கிற சாமுவேல், “இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி” (1 சாமுவேல் 12:1) சொன்னது என்னவென்றால், “பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பெல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்” (வச. 20) என்று சொல்லுகிறார். தீமையிலிருந்து விலகி முழுஇருதயத்தோடும் தேவனை தேடச்செய்வதே அவருடைய மனந்திரும்புதலின் செய்தி. 

நாமெல்லாரும் பாவம் செய்து தேவனை விட்டு வழிவிலகிப்போனோம். நாமெல்லாருக்கும் மனந்திரும்புதல் அவசியப்படுகிறது. அதாவது, பாவத்தை விட்டு வழிவிலகி, நம்மை மன்னித்து வழிநடத்தும் இயேசுவிடம் திரும்புவது. தேவன் தம்முடைய நாமத்தை கனப்படுத்தும் மனிதர்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்தும் மனந்திரும்புதலின் வல்லமையை அறிந்த ஜான் பெர்கின்ஸ் மற்றும் சாமுவேல் என்னும் இந்த இரண்டு மனிதர்களுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுப்போம்.