மழைக்காடு ஒன்றின் மிக உயரமான இடத்திலிருந்து கம்பியில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி பயணிக்க திட்டமிட்டு நான் புறப்பட தயாரானபோது எனக்குள் பயம் பரவியது. நான் அதற்கான மேடையில் இருந்து குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்ற என்னுடைய அச்சம் அதிகரித்தது. ஆனால் நான் முழு தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு அதின் கயிற்று பிடிமானத்தை விடுவித்தேன். காட்டின் உச்சியில் இருந்து கீழே விழுந்து, பசுமையான மரங்கள் வழியாக நான் பயணித்தேன். காற்று என் தலைமுடியை வேகமாக வருடியது. என் கவலைகள் மெதுவாக மறைந்தன. காற்றின் புவியீர்ப்பு விசை என்னை இழுத்துச்சென்ற திசை வழியாக நான் நகர்ந்தபோது, அடுத்து நிறுத்தம் வந்துவிட்டது என்பதை என்னால் தெளிவாக பார்க்கமுடிந்தது. நான் பாதுகாப்பாக வந்துசேர்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். 

அந்த கயிற்றின் மூலம் நான் ஏறெடுத்த அந்த அபாயகரமான பயணமானது, தேவன் நம்மை வழிநடத்திக் கொண்டுபோகும் புதிய சவால்களை எனக்கு நினைவுபடுத்தியது. நம்முடைய குழப்பமான சூழ்நிலைகளில் நாம் நம்முடைய “சுயபுத்தியின்மேல் சாயாமல்” தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படிக்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (நீதிமொழிகள் 3:5). நம்முடைய சிந்தை பயத்தினாலும் சந்தேகத்தினாலும் நிறைந்திருக்கும்போது, நம்முடைய பாதைகள் தெளிவில்லாமலும், உடைக்கப்பட்டதாயும் தெரியும். ஆனால் நாம் நம்முடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்புவிக்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும்போது, “அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச. 6). ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் நாம் நேரம் செலவழிக்கும்போது, விசுவாச அடிகளை எடுக்க நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம். 

நாம் தேவனை பற்றிக்கொண்டு, நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் நம்மை வழிநடத்த அனுமதிக்கும்போது வாழ்க்கையின் சவால்களில் சுதந்திரத்தையும் அமைதியையும் காணலாம்.