Archives: மே 2023

துக்கமும் மகிழ்ச்சியும்

ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12). 

ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள். 

நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம். 

சீர்படுத்தும் தேவன்

நவம்பர் 4, 1966 இல், இத்தாலியின் புளோரன்ஸ் நகரை ஒரு பேரழிவுகரமான வெள்ளம் அடித்துச் சென்றது. ஜார்ஜியோ வசாரியின் புகழ்பெற்ற கலைப் படைப்பான “தி லாஸ்ட் சப்பரை” சேறு, தண்ணீர் மற்றும் கொதி எண்ணெய் ஆகியவைகளால் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூழ்கடிக்கப்பட்டது. அதன் வண்ணப்பூச்சு கரைந்து, அதன் மரச்சட்டம் கணிசமாக சேதமடைந்ததால், அதை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்பினர். இருப்பினும், ஐம்பது வருட கடினமான முயற்சிக்குப் பிறகு, வல்லுநர்களும் தன்னார்வலர்களும் தடைகளை மீறி, மதிப்புமிக்க ஓவியத்தை மீட்டெடுத்தனர். 

பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்தபோது, மரணத்தினாலும் அழிவினாலும் அச்சுறுத்தப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழந்து சீரமைப்பிற்காய் எதிர்பார்த்து காத்திருந்தனர் (புலம்பல் 1). இந்த சூழ்நிலையில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகள் பள்ளத்தாக்கிற்கு கொண்டுபோய், “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று கேட்கிறார். அதற்கு எசேக்கியேல் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்” (எசேக்கியேல் 37:3) என்று பதிலளிக்கிறான். அந்த எலும்புகள் உயிரடையும்படிக்கு தீர்க்கதரிசனம் அறிவிக்கும்படிக்கு தேவன் சொல்லுகிறார். எசேக்கியேல் “தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது” (வச. 7). இந்த தரிசனத்தின் மூலம் இஸ்ரவேலின் மறுசீரமைப்பு எசேக்கியேல் தீர்க்கதரிசியினாலேயே நிகழும் என்பதை தேவன் தெரியப்படுத்துகிறார். 

வாழ்க்கையில் காரியங்கள் உடைக்கப்பட்டு, இனி ஒட்டவைக்கப்படுவது சாத்தியமேயில்லை என்றபோதில், உடைந்த காரியங்களை தேவன் ஒட்டவைப்பதாக உறுதிகொடுக்கிறார். அவர் நமக்கு புதிய சுவாசத்தையும் ஜீவியத்தையும் கொடுக்கிறார்.

தாங்கிப்பிடித்திருக்கும் நம்பிக்கை

“அப்பா எனக்கு பூக்களை பரிசாக அனுப்பியதால் அவர் வீட்டிற்கு வருப்போகிறார் என்பது எனக்குத் தெரியும்.” யுத்தத்தில் என்னுடைய அப்பா காணாமல்போனது தெரியாமல் என்னுடைய ஏழு வயது சகோதரி சொன்ன வார்த்தைகள் இவைகள். அப்பா போருக்கு செல்லுவதற்கு முன்னர், என் சகோதரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவளுக்கு பூக்களை பரிசாக முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்தார். அவர் தொலைந்த பின்பு அவைகள் வந்துசேர்ந்தன. அவள் சொன்னது சரியாகிப்போய்விட்டது. என்னுடைய அப்பா யுத்தத்தில் ஒரு பெரிய ஆபத்தை சந்தித்து, வீடு திரும்பினார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் என் சகோதரி அந்த பூக்களை ஞாபகமாய் வைத்திருந்தாள். அதைப் பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையோடு காத்திருத்தலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வாள். 

உடைந்துபோன இந்த பாவ உலகத்தில் நம்பிக்கையை காத்துக்கொள்வது சாதாரணமானது அல்ல. அப்பாக்கள் எப்போதும் வீடுவந்து சேர்வதில்லை. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் சிலவேளைகளில் நிராசையாகிப் போய்விடுகின்றன. ஆகிலும் கடினமான தருணங்களில் தேவன் நமக்கு நம்பிக்கையை அருளுகிறார். வேறொரு யுத்த காலத்தில், ஆபகூக் தீர்க்கதரிசி, பாபிலோனியர்களால் ஏற்படப்போகிற யுத்தத்தை முன்னறிவித்தார் (ஆபகூக் 1:6; 2 இராஜாக்கள் 24). ஆனாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று உறுதிகூறுகிறார் (ஆபகூக் 1:12-13). தேவன் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்தவராய், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:17-18) என்று அறிக்கையிடுகிறார். 

சில விளக்கவுரையாளர்கள், ஆபகூக் என்னும் பெயருக்கு “பற்றியிருத்தல்” என்று பொருள் கூறுகிறார்கள். அவர் நம்மை விடாமல் பற்றிப் பிடித்திருப்பதால், சோதனைகளின் மத்தியிலும் அவரை நம் ஒரே நம்பிக்கையாய் பற்றிப் பிடித்திருப்போம்.

ஆவியாலே ஆகும்

ஜெர்கன் மோல்ட்மேன் என்ற தொண்ணூற்று நான்கு வயதான ஜெர்மானிய இறையியலாளர் எழுதிய பரிசுத்த ஆவி பற்றிய புத்தகத்தின் விவாதத்தின் போது, பேட்டியெடுப்பவர் அவரிடம், “நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியை செயல்படுத்துகிறீர்கள்? மாத்திரை சாப்பிட்டால் செயல்படுமா? மருந்து நிறுவனங்கள் ஆவியானவரை உற்பத்திசெய்கின்றனவா?” என்று கேலியாகக் கேட்டார். மோல்ட்மேனின் புருவம் உயர்ந்தது. தலையை மெல்லமாக அசைத்து, “நான் என்ன செய்யமுடியும்? எதுவும் செய்யாதீர்கள். ஆவியில் காத்திருங்கள், ஆவியானவர் வருவார்” என்று பதிலளித்தாராம். 

நமது ஆற்றலும் நிபுணத்துவமும்தான் காரியங்களைச் செய்ய வைக்கும் என்ற நம்முடைய தவறான நம்பிக்கையை மோல்ட்மேன் சுட்டிக்காட்டினார். தேவன் காரியங்களைச் செய்கிறார் என்பதை செயல்கள் வெளிப்படுத்துகின்றன. திருச்சபையின் துவக்கநாட்களில், மனித யுக்திகளினாலோ அல்லது திறமையான தலைவர்களோ அது சாத்தியமாகவில்லை. மாறாக, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,” அறையில் அமர்ந்திருந்த அனைவரையும் ஆவியானவர் நிரப்பினார் (2:2). அடுத்து, ஒரு புதிய சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டுவதின் மூலம் அனைத்து இன மேன்மைகளையும் ஆவியானவர் ஒன்றுமில்லாமல் சிதைத்தார். தேவன் தங்களுக்குள் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு சீஷர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை, “அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்(டனர்)” (வச. 4). 

திருச்சபையோ அல்லது பகிர்ந்து செய்யப்படும் எந்த ஊழியமோ நம்முடைய திறமையினால் சாத்தியமாகக்கூடியது அல்ல. ஆவியானவரால் என்ன செய்யமுடியுமோ அதை மாத்திரமே நாம் முழுமையாய் சார்ந்துகொள்கிறோம். இது நம்மை துணிகரமாகவும் இளைப்பாறவும் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளை அநுசரிக்கிற இன்று, ஆவியானவருக்குக் காத்திருந்து செயல்படுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உதவிக்கான அழுகை

டேவிட் வில்லிஸ், வாட்டர்ஸ்டோன்ஸ் புத்தகக் கடையின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பொழுது, விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கடைக்குள் சிக்கிக் கொண்டார்! வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அவர் கீச்சகத்தில் இவ்வாறு பதிவிட்டார். "ஹாய்@வாட்டர்ஸ்டோன்ஸ். உங்கள் ட்ரஃபல்கர் ஸ்கொயர் புத்தகக் கடையில் நான் இப்போது 2 மணி நேரமாக பூட்டப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை வெளியே விடுங்கள்”. அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார். 
  
நாம் சிக்கலில் இருக்கும்போது உதவி பெற ஒரு வழி இருப்பது நல்லது. நாமே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நம் அழுகைக்குப் பதிலளிக்க ஒருவர் இருக்கிறார். என்று ஏசாயா கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எழுதும் போது, தம் மக்கள் தேவபக்தியைப் பொறுப்பற்ற நிலையில் கடைபிடிக்கிறார்கள் என தேவன் குற்றம் சாட்டியதாக எழுதுகிறார். மதம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு, ஏழைகள் மீதான தங்கள் அடக்குமுறையை மறைத்து வெறுமையான சுய சேவையில் ஈடுபடுகின்றனர் (ஏசாயா 58:1-7). இச்செயல்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. "என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்" (1:15) என்றார். தேவன் அவர்களை மனந்திரும்பவும், மற்றவர்களுக்காக கரிசனை கொள்ளும் வெளிப்புறச் செயல்களைக் காட்டவும் கூறினார் (58:6-7). அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களிடம், "அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி" (வ.9) என்றார். 
  
"நான் இங்கே இருக்கிறேன்" என்று சொல்லி, ஏழைகளிடம் நெருங்கிப் பழகுவோம். ஏனென்றால், உதவிக்காக நாம் இடும் கூக்குரல்களைக் கேட்டு, "நான் இங்கே இருக்கிறேன்" என்று தேவன் கூறுவதால். 
  

  

ஆவியில் விடுதலை

ஆர்வில்லுக்கோ, வில்பர்ரைட்டுக்கோ விமான ஓட்டிக்கான உரிமம் இல்லை. இருவரும் கல்லூரிக்கும் செல்லவில்லை. அவர்கள் பறக்க வேண்டுமென்ற லட்சியமும்,தைரியமும் கொண்ட மிதிவண்டி பழுதுபார்ப்பவர்கள். டிசம்பர் 17, 1903ல், அவர்கள் "ரைட் ஃப்ளையர்" என்ற பறக்கும் இயந்திரத்தை நான்கு முறை மாறி மாறி பறக்க செய்தனர். அவற்றில் நீண்ட பயணம் ஒரு நிமிடமே நீடித்தது, ஆனால் அது நமது உலகையே மாற்றிவிட்டது. 
  
பேதுருவுக்கும், யோவானுக்கும் பிரசிங்கிக்கும் உரிமம் இல்லை. இருவரும் வேதாகமக் கல்லூரிக்கு சென்றதும் இல்லை. அவர்கள் மீனவர்கள், இயேசுவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தைரியமாக நற்செய்தியை அறிவித்தனர். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர் 4:12). 
  
ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் உடனடியாக அவர்களின் சாதனையைப் பாராட்டவில்லை, அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அவர்களின் கதையை நம்பவில்லை; உண்மையாக இருந்தாலும், அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் உண்மையிலேயே என்ன செய்தார்கள் என பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். மதத் தலைவர்களுக்கு பேதுருவையும், யோவானையும் பிடிக்கவில்லை, மேலும் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். பேதுரு, "முடியவே முடியாது" என்றான். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" (வ.20). 
  
நீங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களால் தூற்றப்பட்டிருக்கலாம். பரவாயில்லை. இயேசுவின் ஆவி உங்களிடம் இருந்தால், அவருக்காக தைரியமாக வாழ விடுதலையுடன் நீங்கள் இருக்கிறீர்கள்! 
  

  

சாக்லேட் பனி துகள்கள்

சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரில் வசிப்பவர்கள், நகரம் முழுவதும் சாக்லேட் சீவல் மழை பெய்ததால் ஆச்சரியமடைந்தனர். அருகிலுள்ள சாக்லேட் தொழிற்சாலையில் காற்றோட்ட அமைப்பு பழுதடைந்ததால், கோகோவைக் காற்றில் பரப்பியது. சாக்லேட் நன்மையால் அப்பகுதி நிறைந்தது. சாக்லேட் விரும்பிகளின் கனவு நனவாகியது. 
  
சாக்லேட் ஒருவரின் ஊட்டச்சத்துக்கு தேவையான சக்தியைத் தராது, ஆனால் தேவனோ இஸ்ரவேலருக்கு தேவையான ஊட்டச்சத்தான பரலோக மழையை அளித்தார். அவர்கள் பாலைவனத்தின் வழியாகப் பயணிக்கும்போது, எகிப்தில் விட்டுச் சென்ற பலவகையான உணவைப் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அதனால் தேவன் அவர்களை நிலைநிறுத்த, "நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்றார். ஒவ்வொரு நாளும் 
காலைப் பனி வற்றியபோது, ஒரு மெல்லிய துளி உணவு எஞ்சியிருந்தது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்கள் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். நாற்பது வருஷங்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அவர்கள், தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாகிய மன்னாவால் போஷிக்கப்பட்டனர். 
  
மன்னாவைப் பற்றி அதிகக் குறிப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், "அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (வ.31). மன்னா என்பது சாக்லேட்டை போல சீரான ருசிகரமான உணவாக இல்லாமல் இருந்தாலும் தனது ஜனங்கள் மீதான தேவனின் முன்னேற்பாடு அப்பட்டமாக தெரிந்தது. மன்னா என்பது தன்னை "ஜீவ அப்பம்" (யோவான் 6:48) என வெளிப்படுத்திய இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (வ. 51).