கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். ஆதியாகமம் 39:21

ஜூலை 20, 1969 இல், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் இறங்கும் விண்ணூர்தியிலிருந்து வெளியேறி, சந்திரனின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர்கள் ஆனார்கள். ஆனால் அப்பல்லோ 11க்கான கட்டளை பிரிவின் ஊர்தியில் பறந்து கொண்டிருந்த அவர்களின் குழுவில் மூன்றாவது நபரான மைக்கேல் காலின்ஸைப் பற்றி நாம் நினைப்பதில்லை.

சந்திரனின் மேற்பரப்பைச் சோதிக்க அவரது அணியினர் ஏணியில் இறங்கிய பிறகு, காலின்ஸ் சந்திரனின் தொலைதூரப் பக்கத்தில் தனியாகக் காத்திருந்தார். அவர் நீல், பஸ் மற்றும் பூமியில் உள்ள அனைவருடனும் தொடர்பில் இல்லை. நாசாவின் பணிக் கட்டுப்பாடு, “ஆதாமிற்குப்பின் மைக் காலின்ஸ் போலத் தனிமையை எவருமே அறிந்திருக்கவில்லை” என்று கூறியது.

நாம் முற்றிலும் தனியாக உணரும் நேரங்கள் உள்ளன. உதாரணமாக, யாக்கோபின் மகன் யோசேப்பு, இஸ்ரவேலிலிருந்து எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ​​அவனுடைய சகோதரர்கள் அவனை விற்றபின் எப்படி உணர்ந்தான் என்று கற்பனை செய்து பாருங்கள் (ஆதியாகமம் 37:23-28). பின்னர் அவன் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தள்ளப்பட்டதன் மூலம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டான். (39:19-20).

அருகில் எங்கும் குடும்பம் இல்லாத அந்நிய தேசத்தில் யோசேப்பு சிறையில் எப்படி உயிர் பிழைத்தான்? இதைக் கவனியுங்கள்: “அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து” (வச. 20-21). ஆதியாகமம் 39ல் உள்ள ஆறுதலான இந்த உண்மையை நான்கு முறை நினைவுபடுத்தப்படுகிறோம்.

நீங்கள் தனியாக உணர்கிறீர்களா அல்லது மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறீர்களா? “நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்று இயேசுவால் வாக்குப்பண்ணப்பட்ட தேவனின் பிரசன்னத்தின் உண்மையைப் பற்றிக் கொள்ளுங்கள். இயேசு உங்கள் இரட்சகராக இருப்பதால், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை.